Thursday, January 25, 2007

கூன் விழுந்த சூனியக்காரியொருத்தி என் பெருங்கனவாயிருந்தாள்..!


கூனல் விழுந்த
எம் பொழுதுகளை
நிமிர்த்த வல்ல மகிழ்ச்சி
எதுவும் எவரிடமும் இல்லை
எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக்கொண்டும்..
இறந்துகொண்டும்..
இருப்பவர்க்கிடையே
எனது நம்பிக்கைகளுடன்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்,
நான்.
- சிவரமணி

இதுகளுக்கெல்லாம் நான் விலையாக் குடுக்கத் துணிஞ்சது என்ட படிப்பையும், எதிர்காலத்தையும் தானென்றதை - அது எப்படி என்னால முடிஞ்சது என்ட கேள்விகளுக்குமப்பால் - என்னால நம்பவே முடியேல்ல.. என்ட இலக்கு எது, எனக்கு என்ன வேணுமென்பது எனக்கே தெரியாம இருக்கிற நேரம் நீங்களெப்படி உங்கள் இஷ்டத்துக்கு முடிவெடுப்பீங்கள்.. எல்லாமே தட்டையா, சம தளத்தில பயணிக்கிறதெப்படியென்டு தெரியுமா.. எப்பவாவது உணர்ந்திருக்கீங்களா.. தட்டையாவே மனசை வைச்சிருக்கிறது எப்படியென்டு.. அது ஏலாட்டி பிடுங்கிப் போடுறது எப்படியென்டாவது..


எனக்கு நிறைய நாளாவே இப்படியொரு ஆசையிருந்ததுதான்.. மனச அதுபாட்டுக்கு கதைக்க விடனும்.. அது கதைக்கிற ஒவ்வொன்டையும், அதுட ஒவ்வொரு கதறலையும் அதுட பாஷைல பதிஞ்சு வைக்கனும்.. எந்தளவுக்கு சாத்தியமென்டு தெரியாட்டியும் இப்படியும் ஆசையிருந்தது என்னட்ட.. என்டக்காவது என்ன முழுசா புரிஞ்சுகொள்ளுறதுக்கு ஆம்பிளையோ, பொம்பிளையோ யாராவது வருவினமென்டும், கடைசி வரைக்கும் என்னோடயே இருப்பினமென்டும் எப்படியொரு நம்பிக்கை அடிமனசுக்குள்ள இருந்திச்சோ அதுமாதிரித்தான் இதுவும்..

வெளியில சொல்லாட்டியும், எப்படி என்ன பற்றின ஸ்மார்ட் ஆன விம்பங்கள மற்ற ஆக்களிட்ட உருவாக்கப் பார்த்தாலும்.. எனக்குள்ள நான் எனக்கு பிடிச்ச ஒருத்தனோட எனக்கு பிடிச்ச மாதிரி.. சின்ன சண்டைகளோடயும், செல்லக் கோபங்களோடயும், அன்பு, காதல், காமம், இன்னும் என்னத்தோடயுமோ வாழ்ந்துகொண்டுதானிருந்தன்.. வெளியுலகம் என்னை வெறுப்பேத்துற நேரங்களில, எரிச்சல் எரிச்சலா வாற நேரங்களில நான் கட்டிலில கிடந்துகொண்டு எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை.. எனக்கு பிடிச்சவனோட வாழத் தொடங்கிடுவன்.. எங்களை யாரும் பிரிக்க ஏலாது.. யாராலயும் பிரிக்க முடிஞ்சதுமில்லை.. ஒவ்வொரு நாளும் விதவிதமா..

ஒருநாள் நாங்க மாடமாளிகையில இருப்பம்.. மற்றநாள் ஓலைக்குடிசைக்குள்ள இருப்பம்.. ஒருநாள் எங்களுக்குள்ள சண்டை வந்து அவன் என்னைவிட்டு எங்கேயோ போக, நான் மனசுடைந்து தற்கொலை பண்ண போவன்.. ஆனா அவன் எங்கிருந்தாவது எப்படியாவது ஓடி வந்து என்னை காப்பாத்திடுவான்.. சினிமா ஹீரோக்களைப்போல.. ஒருநாளும் என்ட கனவு வாழ்க்கையில நான் செத்ததில்லை.. அவனையும் சாக விட்டதில்லை.. வாழுறதுக்கு கனவு காணுவாங்களா மனுசர் சாகிறதுக்கு காணுவாங்களா.. எப்படியோ, அது எல்லாம் வெறும் கனவு இல்லாட்டி என்ட நினைப்பு மட்டும்தான் என்டு என்னால நினைச்சு கொள்ளமுடியேல்ல.. படுக்கிற நேரம் மட்டும்தானென்டு இருந்த அவனுடனான அந்த வாழ்க்கை பிறகு நான் விழிப்போட இருக்கிற நேரமும் தொடர்ந்தது.. எனக்கு அது பிடிச்சிருந்தது.. கொஞ்சம் இடைவெளி கிடைச்சாலும் நாங்கள் வாழத் தொடங்கிடுவம்.. அதுலயிருந்து எப்ப படுக்க போவமென்டு இருக்கும்.. அவனோட வாழுறதுக்கு.. என்ட தனிமையை யாரும் கலைச்சு போடுறது எனக்கு பிடிக்கேல்ல.. ஏனென்டா என்ட தனிமைய குழப்புற நேரம் அவங்கள் அவனையும் என்னட்டயிருந்து கலைச்சு போடுறாங்கள்.. உலகத்துல வேற எதையும்விட அவனை நேசிச்சன் என்டும் சொல்லலாம்.. இந்த இறுகிப்போன வாழ்க்கைலயிருந்து அவன் என்னைக் காப்பாத்தினான் என்ட ஒரு நன்றியுணர்வே போதுமாயிருந்தது அவன நேசிக்க..

அப்படி இறுகிப்போற மாதிரியோ, வெறுத்துப் போற மாதிரியோ என்ட வாழ்க்கைல என்னதான் நடந்ததென்டு சத்தியமா எனக்கென்டால் விளங்கேல்ல.. எனக்கு தெரிஞ்ச எத்தனையோ பேரை விடவும் எனக்கு அருமையான வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. நானும் சந்தோஷமாத் தானிருக்கிறன்.. இல்லாட்டியும் அப்படி பாவனை பண்ணிக்கொண்டிருக்க முடியுது என்னால..

எனக்கு ஏதாவது பெரிய வருத்தம் வாறமாதிரியும் என்ன சுத்தியிருக்கிற எல்லாரும் எனக்காக கலங்கிற மாதிரியும், நான் சாகக் கிடக்கிற நேரம் அழுறமாதிரியும் கனவு காணுறதில் அப்படியொரு விருப்பம் எனக்கு.. அதெல்லாம் உண்மையா நடக்கப் போறதில்லையென்டது தெரிந்ததால் சரி கனவாவது காணுவமென்டுதான்.. எல்லாரையும் அழவைச்சு பார்க்க அப்படியொரு விருப்பம்.. நான் வருத்தம் வந்து செத்து போனா நீங்க எனக்காக கவலைப்படுவீங்களா என்டு பழகுற எல்லாரிட்டயும் கேட்க வேணும் போல இருக்கும்.. சிலவேளை அவங்க செத்துப்போனா நான் எப்படியிருப்பனென்டும் நினைச்சு பார்க்கிறனான்.. நினைக்கிற நேரம் அழுகையொன்டும் வாறதில்லை.. யாருக்கு தெரியும் உண்மையா நடந்தால் வருமோ என்னமோ..

என்ட எல்லாத்தையும் ஒருத்தர் வந்து மாத்தி போட்டார்.. நம்பவே முடியேல்ல.. என்ட கனவுல என்னோடயே வருஷக்கணக்கா கூட இருந்தவனை முதல் வேலையா துரத்திப் போட்டார்.. உண்மையா நினைச்சு பார்க்கிறனான்.. கடைசியா அவனோட எப்ப வாழ்ந்தன்.. கடைசியா நாங்கள் இரண்டு பேரும் எப்படியிருந்தமென்டெல்லாம்.. ஒன்டும் நினைவுக்கு வருதில்ல.. இப்ப அந்த இடம் முழுவதையும் அவர் பிடிச்சுக் கொண்டிருக்கிறார்.. எல்லாத்துக்குள்ளயும் அவரத்தான் பார்க்கிறன்.. எப்பவும் அவரோடதானிருக்கிறன்.. சிலவேளை பைத்தியக்காரத்தனமா தோணும்.. ஆனா ஒவ்வொரு நிமிஷமும் நானும் அவரும் கதைச்சு கொண்டுதானிருக்கிறம்..

என்ட எல்லா இயலாமைகளையும், உணர்வுகளையும் தூக்கி தூக்கி அவருக்கு முன்னுக்கு எறிஞ்சு கொண்டிருக்கிறன்.. என்னட்ட வச்சிருக்க பிடிக்காததுகளையெல்லாம் சேர்த்து.. ஆக பயமாவுமிருக்கும் சிலவேளை.. அவரும் ஒரு மனுசர்தானென்றதை ஏன்தான் அடிக்கடி மறந்து போறனோ.. அவருக்கும் எத்தனையோ உணர்ச்சிகளிருக்கும். அது என்னோடதுக்கு எதிராய் போய்ட்டால்... எனக்கு எல்லாமே நான்தான்.. நான் மட்டும்தான்.. என்ட உலகம் தொடங்குறது என்னிலருந்துதான்.. எவ்வளவு சுயநலவாதி நான்.. (ஆனா அப்படியிருக்கிறதுலயும் என்ன தப்பு.. இங்க இருக்கிற சில நாசமா போனவங்களை விடவும் நான் சுத்தமா தானிருக்கிறன்...!) ஆனா அவர் அப்படியில்லையென்டுறதுதான் கஷ்டமாயிருக்கு.. அவரைப் பார்க்க பார்க்க பயமாயிருக்கு.. அவருக்கு நான் பொருத்தமானவளா.. அவர்ட அக்காவுக்கு, அவர் உலகத்துல அப்படி நேசிக்கிற அவாவுக்கு என்னை பிடிக்குமா.. என்ன செய்தால் அவாக்கு பிடிக்கும்.. அப்படி பிடிக்காமல் போனால் நான் என்ன செய்ய.. முதல் என்ட இந்த சின்னபிள்ளைத்தனங்களை விட்டு நான் கொஞ்சம் வளர வேண்டியிருக்கு.. எப்படி வளர்றது..

எனக்குத் தெரியும்.. என்ட விசர்த்தனங்கள்.. உலகத்துக்காக நான் போடுற வேஷங்கள்.. முகமூடிகள்.. திமிர்த்தனங்கள்.. அடிமைக்குணங்கள்.. எப்படிப் பார்த்தாலும் உள்ளுக்குள்ள நானுமொரு சாதாரண மனுசிதானென்ற உணர்வு என்னை சரியா காயப்படுத்துது.. அடியே விசரி.. என்டு யாரும் பேசினாலுமேகூட நீங்கல்லாம் எதிர்பார்க்கிற ஒருத்தியா நானில்லையென்டுதான் எல்லாரிட்டயும் சொல்லத் தோணுது.. உங்களுக்கு ஒருத்தி எப்படியிருக்கோணும்.. ஒண்டில் பவ்வியமான 'பொம்பிளை' மாதிரி அடங்கியொடுங்கி இருக்கோணும்.. இல்லாட்டில், எல்லாத்தையும் எதிர்த்துக்கொண்டு போராளியாய் இருக்கோணும்.. நான் ரெண்டாவுமில்லை..

எங்கையோ வாசிச்சனான்.. 'நான் உறுதியானவளாயிருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் நிச்சயமாக நான் அப்படியிருக்கப் போவதில்லை..' நான் நானாத்தானிருப்பன்.., உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ.

...........

றோட்டில நடந்துவந்து கொண்டிருந்தன். யாரோ கொச்சையா பேசிக்கொண்டிருந்தினம், என்னைப் பார்த்துத்தான். எவனடா அவன் என்ட மாதிரி தோரணையோட திரும்பிப் பார்த்தன். அஞ்சு விரல்களக் காட்டிக்கொண்டு, வாறியாடி.. என்டு கேட்டான். அந்த அஞ்சுக்கு என்ன அர்த்தம் ஐநூறு ரூபாயா.. ஐயாயிரம் ரூபாயா.. போயும் போயும் ஐநூறோ, ஐயாயிரமோ பெறுமதியான உடம்புதானா இது.. சீ.. என்டு போனது.. அவ்வளவுதானா என்ட மதிப்பு.. ஒருக்கா குனிஞ்சு என்னை நல்லாப் பார்த்தன், அப்படிப்போலத்தான் தெரிந்தது. இல்லையில்லை, இந்தக் கேடுகெட்ட உடம்புக்கு இந்த ரேட்டே ஓவர்.. நல்லகாலம் கெதியா அங்கயிருந்து விலகிவந்துட்டன்.. அவன் வீசின அஞ்சு ரூபா சில்லறை உடம்பிலை 'படக்கூடாத' இடத்திலை பட்டு கீழை விழுந்திருந்தால் அவனுகள் இன்னும் கெக்கலிச்சு சிரிச்சிருப்பானுகள். பிறகு, அந்த சில்லறைக்கும் மவுசு கூடியிருந்திருக்கும்.

5' 9".. 5' 8".. 5' 7"....... 29, 28, 27...... இலக்கங்களெல்லாம் மலைப்பாம்பா மாறி கழுத்தை நெரிச்சுக் கொண்டிருக்கிறதாயொரு பிரமை. இன்னும் கொஞ்சம் உயரமா இருந்திருக்கலாம், நான். அப்பத்தான் சரியா, வடிவா இருந்திருக்கும். திரும்பத் திரும்ப டேப்பை வைச்சு அளந்து பார்க்கிறன்.. எல்லாம் ஒரு நப்பாசைதான்.. மூண்டாம் தரம் அளந்தா சிலவேளை கொஞ்சம் உயரமா காட்டுமோ என்டு.. ம்ஹூம்.. 5 அடிக்கு மேலை ஒரு சென்ரிமீற்றர் கூடப் போகுதில்லை.. இந்த அஞ்சடி வந்ததே அப்படி இப்படியென்டு ஆட்டித்தான். சரி இடுப்பைப் பார்க்கலாமென்டால் அது முப்பதிலை நிக்குது.. ஏங்கித்தான் போனன்.. கடைசியா பார்க்கிற நேரம் 29 ஆயெல்லோ இருந்தது.. இன்னும் கொஞ்சம் மெல்லிசாய் இருந்திருக்கலாம், நான். அப்பத்தான் சரியா, வடிவா இருந்திருக்கும். ஒருநாளைக்கு 100 தடவை ஸ்கிப்பிங் அடிச்சுப் பார்ப்பமே.. இந்த ஸ்கிப்பிங் அடிக்கிற நேரத்துக்கு படுத்துத் தூங்கினாலும் ஒரு கொஞ்சநேரம் கஞ்சா அடிச்ச மாதிரி நிம்மதியாய் கவலையெல்லாம் மறந்துட்டு இன்னொரு உலகத்திலை போயிருந்திடலாம். தூக்கம் என்னைப் பொறுத்தவரை கஞ்சா இல்லை கடவுளென்டும் சொல்லலாம். உடம்பைக் கொண்டாடோனுமென்டு சொல்லித் தந்தவனே நக்கலடிக்கேக்குள்ளை இப்படியெல்லாம் யோசிக்காமல் வேறென்னத்தைத்தான் யோசிப்பதாம்..?

பிறந்த ஊர் துரத்திப்போட்டுது.. வாழவந்த ஊரை வேறெவனோவெல்லாம் சொந்தங்கொண்டாடுறான்.. சொந்த நாட்டிலயே அந்நியமாப் போனம். என்ட பெயர் எனக்கு சொந்தமில்ல.. அப்பாட பெயருக்குப் பின்னாலதான் என்ட பெயரும் ஒளிஞ்சு நிக்குது, இன்னார்ட மகளென்ட மாதிரி.. நாளைக்கு அது இன்னார்ட மனுசியென்டு மாறிப்போகும். எதுவுமே எனக்கென்டில்லை, இந்த உடம்பைத் தவிர. பொக்கிஷமா நினைச்சுக் கொண்டிருக்கிற அதையும் வந்து கிண்டலடிச்சுக் கொண்டிருந்தா, அதுட பெயரை / ஒவ்வொரு உறுப்பையும் சொல்லி அவமானப்படுத்தினா எப்படியிருக்குமெனக்கு.. என்ட உடம்பு என்ட சொத்து. அத அழிக்கிறதும், மாத்துறதும், எவனுடனாவது பகிர்ந்துகொள்றதும் என்ட விருப்பம். எவனையும் அதில சொந்தங்கொண்டாட விடமாட்டன், எவனும் அதை கேவலப்படுத்துறதையும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டன்.

காலாகாலத்துக்கும் அடிமையைப்போல, அதை யாராவது ஒருத்தனுக்கு மாத்திரம் தானமா கொடுத்துக் கொண்டிருக்கிற பொம்பிளைகளை விடவும்.., தன்ட உடம்பை முதலீடாக்கி பணம் சம்பாதிக்கிற.. அதுட பெறுமதியையும், மதிப்பையும் உணர்ந்த பொம்பிளைகளை என்னால அதிகமா நேசிக்க முடியுறதும் இதனாலதானாக்கும்.

.........

மஹாஸ்வேதா தேவி எழுதின ஒரு சிறுகதை 'திரோபதி' என்டு அந்தமாதிரி பிடிக்கும்..

"இதெல்லாம் என்ன?" என்று கேட்கத் தொடங்கிய அவர் (ராணுவ அதிகாரி) மௌனமாகி விடுகிறார். திரௌபதி அவர் முன்னால் வந்து நிற்கிறாள். நிர்வாணமான தொடையிலும் அல்குலிலும் தோய்ந்து உறைந்துபோன ரத்தம். இரண்டு முலைகளிலும் ரணங்கள்.
"இதெல்லாம் என்ன..?" அவர் அச்சுறுத்தப் பார்க்கிறார்.


திரௌபதி மேலும் அருகில் நெருங்குகிறாள். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். "நீ தேடிக்கிட்டு இருந்தியே அந்த தோப்தி மேஜேன் நான்தான்..! கவனிச்சுக்கன்னு சொன்னேயில்ல? அவங்க எப்படி கவனிச்சாங்கன்னு நீ பார்க்க வேண்டாமா..?"

"இவ துணியெல்லாம் எங்கே..?"

"உடுத்த மாட்டேங்கிறா சார்! கிழிச்சுப் போட்டுட்டா.."

திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச் சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. இந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள்: "துணி என்ன துணி..? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும். ஆனா என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால? சீ... நீ ஒரு ஆம்பிளையா..?"

நாலா பக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் இரத்தம் கலந்த எச்சிலைத் 'தூ..' என்று துப்புகிறாள்.

"நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பள இங்க யாருமில்ல. என்மேல துணியைப்போட எவனையும் விடமாட்டேன். அப்போ என்ன செய்வே? வா.. என்னை கௌன்ட்டர் பண்ணு.. வா.. கௌன்ட்டர் பண்ணு.."

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல்முறையாக ஒரு நிராயுதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.

வாசித்தபோது ஒன்டு மட்டும் விளங்கினது : நிர்வாணம் எனதும் - என்னைப்போன்ற இன்னும் பலரினதும் - மாபெரும் விருப்பு!

..........

இப்படியெல்லாம் பேசத்தொடங்கினா எங்கயிருந்தாவது எவனாவது கிளம்புவான். எல்லாரும் அணி சேர்ந்துட்டீங்க.. கொடி பிடிக்கிறீங்க என்டு.. எனக்கு முக்கியமாப் போனதைப்பற்றித்தான் என்னால பேசமுடியும். இண்டைக்கு கிடைக்கிற அனுபவங்களெல்லாம் சேர்ந்து, நாளைக்கு 'கணவன்' என்டுற அந்தஸ்தோட யாராவது தொடவந்தா கூட அருவருத்து நெளிவனோ என்ட எனக்கேயுரிய பயங்களெல்லாம் இந்த மரத்துப்போன மனுசங்களுக்குப் புரியுமென்டும் எதிர்பார்க்க ஏலாதுதான்.

ஒரு பொம்பிளையா இல்லை.. நானொரு சூனியக்காரியாப் பிறந்திருக்கோணும்.. தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை ஒரு துவக்கோட ஊரூரா அலையோணும். யாராவது என்னைப் பார்த்து, இதெல்லாம் வன்முறை.. அஹிம்சை வழியில் போராடு.. என்டெல்லாம் அட்வைஸ் பண்ணினாங்களென்டா அவங்க நானாகப் பிறந்து, நான் அனுபவிச்சதெல்லாத்தையும் அனுபவிக்கோணுமென்டு - அஹிம்சை நெறியில் - சாபமிடுவன். அதுக்குப் பிறகு பாருங்கோ.. எத்தனை சூனியக்காரிகள் தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை துவக்கோட அலையினமென்டு.

Friday, January 19, 2007

அம்ரிதா ப்ரீதம் - கவிதைகள்

முதல் படைப்பு

நான்
வடிவம் பெறாத நானாக இருந்தேன்

அந்த நான்
தனது காட்சித்தெளிவால்
தண்ணீராய் உருமாறியது

நீ
உனது காட்சித்தெளிவால்
தீப்பிழம்பானாய்

தீ அலகொன்று நீர்மீது மிதந்தது
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக் கதை

இந்த மண்ணுலகத்தைச் சேர்ந்த 'என்'னின் தாகம்
ஆறென ஓடிய 'உன்'னில்
தாகசாந்தியடைந்தது.

இந்த மண்ணுலகத்தைச் சேர்ந்த 'என்'னின் கனவுதான்
உன்னை
அந்த மரச்செறிவில் கண்டது.

நமது
எனது உனது
உடலின் நறுமணம்-
படைத்தல் என்பதன் மெய்ப்பொருள் இதுதான்

இந்தப் பேரண்டம் படைக்கப்பட்டது
இதற்குப் பிறகுதான்.


முதல் நூல்

நான் அங்கிருந்தேன்
நீயுங்கூட இருந்தாயோ என்னவோ
உன் மூச்சுக்காற்று என் காதில் படும் தூரத்தில்-
அல்லது
ஒரு அரிய தரிசனத்தின் இருளில்-
சூழலும் சித்தத்தைச் சுழட்டும் புள்ளியில்-
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக் கதை.

நமது
உனது எனது
இருப்பாக இருந்ததுதான்
உலகத்தின் முதல் மொழியானது.
'என்'னை 'உன்'னை
அடையாளங்காணவே சொற்கள் உருவாயின.
அவை
அந்த முதல் மொழியில் முதல் நூலை எழுதின.

நமக்கு விதிக்கப்பட்ட சந்திப்பு, நமது சந்திப்பு
இதுதான்
கற்படுக்கையில் நாம் உறங்கினோம்
நமது கண்கள், உதடுகள், விரல் நுனிகள்
உனது உடலின்
எனது உடலின்
சொற்களானது.
பிறகு அந்த ஆதிநூலை
மொழிபெயர்த்தார்கள்

ரிக் வேதம் இயற்றப்பட்டது கூட
இதற்குப் பிறகுதான்.


முதல் சமயம்

உனது இருப்பை
ஆடையென சுற்றிக்கொண்டவுடன்
நமது உடல்கள் உள்நோக்கி
தியானத்தில் அமர்ந்தன.

ஆன்மாவின் சந்நிதியில்
பின்னிப்பிணைந்திருந்த நமது கைகளும் கால்களும்
மாலையாகக் கோர்க்கப்பட்ட மலர்களாக-
நானும் நீயும்
வேள்வித்தீயில் கரையும் கற்பூரமாக

நமது உதடுகளிலிருந்து தப்பியோடிய
நமது பெயர்கள்
திருவாசகங்களாயின

அது
எனக்கும் உனக்குமான
புனிதச் சடங்கு

ஏனையச் சமயச்சடங்குகளும்
பிறகு வந்தவைதான்.


முதல் ஓவியம்

அங்கு நானிருந்தேன்
நீயுங்கூடத்தான்

அங்குமிங்கும் அலைந்துதிரிந்த நிழலுருவங்களில்
நானும் ஒரு உருவமாக
ஒருவேளை நீயும் ஒரு மெல்லிய நிழலாக
அன்று அலைந்தாயோ என்னவோ

எங்கும் போர்த்தியிருந்த இருட்டில்
சாம்பல் பூத்த நிழல்களாக நாம்
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக்கதை.

இரவுகளில், மரஞ்செடிகளில்
அப்பியிருந்த இருட்டுதான்
நமது
எனது உனது ஆடையானது.

சூரியனின் ஒளிக்கீற்று உள்ளே நுழைந்து
நமது உடலினூடாக
உனது எனது உடலினூடாக
மின்னிப் பாய்ந்தது

அதன் ஒளிச்சிதறல்கள்
கற்களின்மீது விழுந்து
அவற்றைச் செதுக்கியெடுத்தது.

அச்சமயம்
ஒளியேறிய இந்த வடிவான கைகளும் கால்களும்தான்
இந்தப் பேரண்டம் தீட்டிய முதல் ஓவியம்.

அந்த ஓவியத்துக்கு
இலைகள் தமது பசுமையை வழங்கின
வானம் தனது சாம்பல் நிறத்தை
மலர்கள்
சிவப்பை
இரத்தச் சிவப்பை
மஞ்சள் நிறத்தை வழங்கின.

ஓவியக்கலை உருவானது இதற்குப் பிறகுதான்.


முதல் இராகம்

அங்கு நான்
நீயும்தான்
வரம்பற்ற மௌன அமைதி
நம்முடன்
காய்ந்த உலர்ந்த சருகாய்
கடற்கரை மண்துகள்களாய்
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக்கதை.

பாதைகள் சந்திக்கும் இடத்தில்
உன்னை நோக்கிக் குரல் கொடுத்தேன்
நீயும் பதில் ஒலி அளித்தாய்

காற்றின் தொண்டையில் ஒரு நடுக்கம்
மண்துகள்கள் உயிர்பெற்றன.
நீரோடைகள் இசைக்கத்தொடங்கின

மரக்கிளைகள் இறுகின
இலைகளில் சலனம்
சிறிய மொட்டொன்று கண்சிமிட்டியது
பறவையொன்று சிறகுகளை உசுப்பி விறைத்திருந்தது

செவிகளுக்கு எட்டிய முதல் பாடல் இதுதான்
யாழ் இசைக்கும் சப்தஸ்வரங்கள் பிறந்ததெல்லாம்
இதற்குப் பிறகுதான்.


- அம்ரிதா ப்ரீதம் (தமிழில்: வ.கீதா)

Wednesday, January 10, 2007

தூவானமாய்ப் பொழியும் தாரகைகள்...


புரிகிறது நீ அருகிலில்லையென
என்றென்றைக்குமான கனவாய்
எதையெதையோ யாசித்து
யதார்த்தம் பெருநெருப்பாய்
பொசுக்கிடும்போது
எங்கிருந்தோ வந்துவிடுகின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
அனல் பறக்க

நீயற்ற கணங்களிலிருந்து
தப்பியோடி தப்பியோடி
காலமற்ற வெளிநோக்கி
தொடருமென் பயணம்
உன் வாசலில் வந்துமுடியக் கூடுமென
எதிர்பார்ப்பதும் வேடிக்கைதான்

எழுத்துக்கள்
வார்த்தைகள்
வாக்கியங்கள்
இடமாற்றி இடமாற்றி
அபத்தமான விளையாட்டொன்றின்
ஈவிரக்கமற்ற பிடியில்
தவிர்க்கவே முடியாது
சிக்குண்ட இருப்பு
புரிகிறதா உனக்கு..

வார்த்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து
கனவுகளை சுவைத்து
ரசித்தும்
சிலிர்த்தும்
பெருமூச்சுவிட்டும்
இன்னும் எத்தனை காலத்துக்கு...

விஷ அம்பு குத்தித் துளைத்த
ஆழ்நெஞ்சத்து ரணத்திலிருந்து
ரத்தமும் சீழுமாய்
வடியும் ஆன்மாவுக்கும்
புன்னகைக்கத் தெரியும்
வட்டமாய் வளையங்களாய்
கோளமாய் கோர்வைகளாய்
யாக்கை தேடியலையும்
பொழுதுகளிலும் தயங்காமல்

கதகதப்புத் தேடி
காற்றில் அலைவுறும் கை
வெறுமைகளின் பரிகசிப்பில்
சூம்பிப்போக
உள்ளம்
ஊசிதுளைத்த பலூனாயும்
திருவிழா சனக்கூட்டத்தினிடை
தொலைந்த சிறுமியாயும்

எனது சலனங்கள் உனக்குப் புரியக்கூடுமா... தெரியவில்லை. இதே வெறுமைகளை, வேதனையை, விரக்தியை நீயும் அனுபவித்திருப்பாயா.. தெரியவில்லை. கசிந்துருகும் காதலின் வலியை இதேபோல் உணர்ந்திருப்பாயா.. தெரியவில்லை. ஏன் அடிக்கடி காரணங்களற்றுக் கண்ணீர் வருகின்றதென்றும், ஏன் தனிமையில் புன்னகைக்கிறேனென்றும், வகுப்பறையில் பாடங்களில் ஆழ்ந்திருக்கும்போது ஏன் எனையறியாமலேயே பெருமூச்சு விடுகிறேனென்றும், இருந்தாற்போல உள்ளம் கனத்துப் போவது ஏனென்றும்.. இப்படியான எனது இன்னுமின்னும் பல கேள்விகளுக்கும் உன்னிடம் பதிலிருக்குமா.. அதுவும் தெரியவில்லை.

மௌனித்திருந்தாலும்
புறவுலகம் வானமாய்
உச்சந்தலைமேல் கவிந்திருந்தாலும்
பேதைப் பெண்ணுக்குப் புரிவதெல்லாம்
நீ அருலில்லையென்பது
மட்டும்தான்...

.........

புன்னகைகளை மதித்திருந்த காலமுமிருந்தது.. அதுவோர் கனாக்காலம் போல.. அந்தக்காலத்துத் தேவதைக் கதைகளில் வருகின்ற இனிய முடிவுகளைப் போல.. சாயம் பூசிக்கொண்ட வெளிறிய புன்னகைகளைக் கண்ணுற நேர்ந்ததன் பிற்பாடு எல்லாவற்றையும் போல அதுவும் கசந்து போனது. இன்றைய பொழுதில் அர்த்தமில்லாப் பல்லிளிப்புக்களுக்கு மத்தியில் நான் மட்டும் புன்னகைத்து என்னவாகப் போகிறதென்ற எனது தயக்கங்களை ஒற்றை வார்த்தையில் துடைத்தெறிந்து விடுகிறாய்..

இதழோரங்களில் கசியும்
உனக்கான புன்னகை
சோப்பு நுரையைப்போல
காற்றில் அலைவுண்டு
உன் கரைகளை வந்தடையும்
கருவுக்குள் சுருண்டிருக்கும்
பச்சிளங்குழந்தையின்
கதகதப்பிற்கான தேட்டம்
முற்றுப்பெறுவதை
தவிப்புடன் நோக்குமுந்தன்
சின்னஞ்சிறு தேவதைகளிரண்டும்
எமது கடமையை நீ செய்தாயோவென
கடுஞ்சினங்கொள்ளுமெந்தன்
புன்னகை மீது...

ஒரு கவிதை எழுதிடத்தான் வேண்டும்.. உன்னைப்போல் நெக்குருகிக் கசிதல் சாத்தியமாகப் போவதில்லையெனினுமே கூட.. எப்படி எழுதுவது.. எங்கிருந்து தொடங்குவது..

நீயின்றி பூரணமடையப் போவதில்லை
எனது எந்த இருப்பும்
எல்லாப் பொழுதுகளிலும்
உனக்காகவே உன்னோடே
காலங்களின் விறைத்த கணங்களினூடு
நானும் உயிர்த்திருப்பேன்
குட்டி அலிஸாய்
உன் மனக்காடுகளில் துள்ளியோட
போதாது இப்பிறவி ஒருசிறிதும்...

அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன், எனை நானே.. எப்படி.. எப்படி.. முழுதாய் எடுத்துரைப்பது.. நேசிக்கிறேன் நேசிக்கிறேனென நிமிடத்துக்கு நூறு முறை கூறிடினும் ஆதங்கம் நிறைவேறிடுமோ.. படுக்கையை விட்டு எழுந்ததும் உன் நினைவு.. முதல் நாள் அனுப்பிய மடல்களின் ஒரு சில வார்த்தைகள் நெஞ்சோடு தங்கிவிட்டவை நினைவில் விரிந்து அந்நாள் பிரகாசிக்கும்.. குளிக்கையில், சாப்பிடுகையில், நடக்கையில், படிக்கையில், கண்மூடித் தலைசாயும் போதெல்லாம் உன் நினைவு.. உன்னுடனான என் எதிர்காலங்கள் இன்னுமின்னும் என்னவோ எல்லாம் மனத்திரையில் தொடர்ந்தோடும்.. தன்னையறியாமல் விழி கசியும்.. புன்னகைகள் எனைக் கேட்காமல் வழிந்தோடும்..

இளம்பரிதி மேற்கில் சாய்கையில்
மனதெங்கும் கவிந்துகொள்ளும்
அந்தியின் மந்தாரம்
தொலைதூரத்துக் கேவல் சீண்டிட
விழித்தெழும் தாய்மை
பகற்கனவு கலைவுற்று
மேகத்தினின்றும் பொசிந்த
சிறுதுளியின் ஸ்பரிசத்தில்
உணர்வு கிளர்ந்து உதடு சிலிர்க்க
தலைக்கு மேலால் விரையும்
கருஞ்சிட்டின் நிழலைப்போல
நினைவுக் குவடுகளில்
ஒரு குழந்தை குறும்புப் புன்னகையோடு
மறுபடியும்...

.........

மனப் பொந்துகளில்
விழியோரக் கசிவினில்
துளிர்விடும் நினைவொன்று
பீதிகளை வாரியிறைத்துப் போகும்
மழைமேகமென
உருத்திரனைக் கண்ட ஒற்றைக்கால் நாரை
மோனம் கலைந்து
வரங்கள் கிட்டா விரக்தியில்
கணப்பொழுதில்
கடந்துவிடும் காலவடுக்குகளை
சூன்யங்களை விழுங்கிடும்
உன் பிரியங்களின் கதகதப்பில்
பின்மாலைப் பொழுது தோறும்
என் சாம்பர் வானினின்றும்
தூவானமாய்ப் பொழிகின்றன தாரகைகள்


(இன்மைகளை நிரப்பிடத் தெரிந்தவொரு உறவுக்காக..)

Monday, January 08, 2007

'லங்கா ராணி: A Land Like No Other'


'எங்களைவிட எளிமையானவர்களாயும், எங்களைவிட அதிகப் பெருமிதத்தோடும், அல்லது குறைவான கண்ணீர்த்துளிகளோடும் இருப்பவர் யாருமில்லை'

நம்முடைய இதயங்கள் அதை ஒரு 'தாய'த்தாக
அணிந்துகொள்ளவில்லை.
கவிஞரின் கையின் கீழ் அது தேம்பியழவில்லை.
நம்முடைய கசப்பான தூக்கத்திலும் மறக்கவியலாத
அந்தக் காயங்களை எரிச்சலூட்டுவதும் இல்லை.
'அது உறுதியளிக்கப்பட்ட தேவலோகம்' அல்ல.
நம்முடைய ஆன்மாக்கள் அதன் மதிப்பை
விற்கவும், வாங்கவுமான ஒரு நுகர்பொருளாய்
கணக்கிடுவதில்லை.
நோய்மையும், ஏழ்மையுமாய், இந்த பூமியில்
மௌனமாய் இருந்துவரும் 'அதை'
பல நேரங்களில் நாம்
பொருட்படுத்தாமலே இருந்து வருகிறோம்,
ஆம், நம்மைப் பொறுத்தவரை அது எமது
புதைமிதியடிகளின் மீதான அழுக்கு,
ஆம், எம்மைப் பொருத்தவரை, அது எம்முடைய
பற்களுக்கு இடையிலான நறநறப்பு.
புழுதி, நாம் அதை அழுந்த மிதிக்கிறோம்.
நொறுக்குகிறோம், தேய்த்துப் பொடியாக்குகிறோம்,
மென்மையானதும், சிக்கலற்றதுமான பூமியை.
ஆனால் நாம் அதில் அமிழ்ந்திருப்போம்.
அதன் கிளைகளாகவும், மலர்களாகவும் மாறுவோம்,
ஆகவே அவமானமின்றிக் கூறுகிறோம் அதை -
நம்முடையதென்று.
- அன்னா அக்மதோவா


தற்பிரலாபங்களும் பின்புலத்துப் பரிகாசங்களும்

கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான காலிமுகத்திடலிலிருந்து இலங்கையின் மற்றுமொரு பிரபல்யமான தென்கரையோரத்து நகரமாகிய காலி வரை நீளும் காலிவீதியின் நெடுகே பயணிக்கையில் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் கழிந்து இன்னும் சில கட்டடங்களைத் தாண்டினால் ஒரு உயர்ந்த கட்டடம் - முகப்பில் சிகிரியா ஓவியம், 'A Land Like No Other' என்ற வார்த்தைகள் மற்றும் அழகிய நாவல் நிற மலரொன்றின் உருவத்துடனுமான - மாபெரும் சுவரோவியமொன்றுடன் நிமிர்ந்திருப்பதைக் காணலாம். இதுதான், Ceylon Tourist Board.

காலி வீதி கொழும்பு மாநகரின் பரிதாபத்திற்குரிய வீதிகளுலொன்று. நெரிசலான நேரங்களில் அவ்வீதியின் பதினைந்து நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தைத் தாண்ட சமயங்களில் ஒன்றரை மணிநேரமும் எடுக்கலாமென்பதால் எமது காவல்துறையினர் - அந்நெரிசலினூடே தலைநகரின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையில் என்னவும் நடந்துவிடக் கூடுமென்ற பயத்தில் - போக்குவரத்து விதிகளை வாரத்துக்கொன்று என்ற நிலை மாறி, தற்போது நாளுக்கொன்றாய் மாற்றிவருகின்றமை வேறுகதை. இந்தச் சுற்றுலாச் சபையைக் கடக்கும்போதெல்லாம் கொட்டையெழுத்துக்களில் தெரிகின்ற A Land Like No Other என்ற வார்த்தைகள் முகத்தில் புன்னகையை நிரப்பிவிடத் தவறுவதில்லை.., 'துன்பம் வருங்கால் நகுக..' வென எவரோ கூறிவிட்டுச் சென்றமைக்கு இயைபாக.


1.

சதாமின் மரணம்: உலகை உலுக்கிவிட்டதென்பதெல்லாம் வெறும் மிகைப்பேச்சு.., எதிர்பார்த்ததுதான். எவருக்கும் இலகுவில் வளைந்து கொடுக்காத, கொள்கையுறுதியுடைய, உலகறிந்த (தேசியப் பற்றின் பொருட்டு சொந்த மருமகன்மாரையே கொலைசெய்த) தேசியவாதியொருவரின் இறப்பு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல ஆளாளுக்கு
அபிப்ராயம் கூறுமளவுக்கு கேலிக்கூத்தாய்ப் போனதுதான் வேதனை. சரி, பிழைகள் பற்றியதான வாதப் பிரதிவாதங்களுக்கு முன் அத்தீர்ப்பின் நியாய / அநியாயங்கள் குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டியமை இங்கு தவிர்க்க முடியாததாகின்றது.., இன்னும் சில பின்புலக் காரணிகள் / மறைவுண்டுபோன சாராம்சங்கள் குறித்தும். ஈராக்கில் நிலவுவது அமெரிக்காவின் தலைமையிலான பொம்மையரசாங்கமென்ற வகையில் ஈராக்கிய நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின் திரைமறைவில் அமெரிக்காவின் அழுத்தமிருந்தமை அனைவருக்கும் தெரிந்ததே. சதாமிற்குத் தண்டனை வழங்க புஷ்ஷிற்கு யார், என்ன அதிகாரத்தைக் கொடுத்ததென்ற கேள்வி எழுவதும் இங்கு இயல்பானதெனினும் ஆழ நோக்குவோமானால், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியின்போது இலங்கை உயர்நீதிமன்றம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட 'ஆயுள்' தண்டனை வழங்கியமைக்கு சற்றும் சளைத்ததல்ல இத்தீர்ப்பும்.

சதாமிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னணியிலான சில (அ)நியாயங்கள்:

- தன்னுடைய நாட்டின் இறைமைக்கு நேரடியாகப் பங்கமேற்படுத்தாத நாடொன்றை அமெரிக்கா ஆக்கிரமித்தமை. ஈராக்கில் இரசாயன ஆயுதங்களிருப்பதாகக் குற்றச்சாட்டுகளிருந்தாலுமேகூட அது ஐ.நாவின் பொறுப்பு. தவிரவும், ஈராக்கிற்கு அவை எப்படிக் கிடைத்தனவென்பதையும்.. வளைகுடா யுத்தத்தினையும் தற்போதைக்கு மறந்துவிடல் நலம்.

- ஈராக் மக்களை சதாமின் கொடூர ஆட்சியிலிருந்து விடுவிக்கும் ஒரு இரட்சகனாக - ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி - அமெரிக்கா கிளம்பியிருந்தால் அந்தத் தலையாய கடமையைப் பொறுப்பளித்தது யாரென்ற கேள்வி.. (சதாம் செங்கோலனோ, கொடுங்கோலனோ) உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குள் அமெரிக்கா தலையிட வேண்டுமென எந்தவொரு ஈராக்கியனாவது
வெள்ளைமாளிகையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தானாவென்ற சந்தேகம்..

- ஒரு நாட்டின் முன்னாள் தலைவரை, அவர் எத்தகைய படுகொலைகளுக்குக் காரணமாயிருந்தாலும், விசாரிக்கவென சர்வதேச மன்னிப்புச் சபை தோற்றுவிக்கப்பட்டிருக்க, (அதன் தீர்ப்பு எந்தளவு நியாயமாயிருக்கக்கூடுமென்ற கேள்விகள் எழுந்தாலும், அதுவே முறையென்றவகையில்) ஈராக்கிய நீதிமன்றம் இது உள்நாட்டுப் பிரச்சனையென்றபடி தான் பொறுப்பெடுத்தமை எந்தளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது..


இவை வெறுமனவே தீர்ப்பு பற்றிய விசனங்கள் மட்டும்தான். தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக இன்னும் பல கேள்விகளை எழுப்பலாம், எம்மால் முடிந்ததெல்லாம் அவ்வளவும்தானென கையாலாகாத்தனத்தை நொந்தபடி. மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களில் மதவாதத்திலிருந்து விடுபட்ட தேசியவாதத்துடன், தாம் கொண்ட கொள்கை நெறியினின்றும் இறுதிவரை விலகாதவர்கள் யசீர் அரபாத், சதாம் ஹ¤சேன், கேணல் கடாபி மூவருமே. இருப்பினும், முன்னவர்களின் மரணத்துடன் (யசீர் அரபாத்தின் இறப்பின் பின்னணியில் சதிமுயற்சியொன்றிருப்பதாக ஊகங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தகுந்தது) கேணல் கடாபி நெகிழத் தொடங்கியுள்ளார்.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, கொழும்புத் தெருக்களில் சில நாட்களாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், கண்டனப் பேரணிகளும், சுவர்களை நிறைக்கும் போஸ்டர்களும்.. உத்தியோகபூர்வமாக அரசாங்கம் கண்டனமெதுவும் தெரிவிக்காத போதும் (இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையென யாரும் வருந்தவும் போவதில்லைதானெனினும்..) அரசியல் தலைவர்கள் பலர் சதாமின் கொலையைக் கண்டித்திருந்தனர். உண்மைதான், சதாம் இலகுவில் விலைபோகாத, தேசியத்திற்காக எதையும் செய்யத்துணிகின்ற, ஈராக்கின் நலனையே ஒரே இலக்காகக்கொண்ட தேசியத்தலைவர். குர்திஷ் இனப்படுகொலைகளை மேற்கொண்டமைகூட ஈராக்கைக் காப்பாற்ற தனக்கு வேறு தெரிவுகளில்லாமற் போனமையினாலேதானென ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறவும் செய்தார். தூரத்திலிருந்த ஒரு தேசியவாதியை எம் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியும்.., அவரது இழப்புக் குறித்து வருந்தவும் தெரியும்.., அதற்குக் காரணமானவர்களை வசைபாடவும் தெரியும்.. ஆனால், பக்கத்திலேயே இருப்பவர்கள் குறித்து எதுவித சலனமுமில்லை. ஏனெனில், அவர்கள் பயங்கரவாதிகள்!

வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினாலும், பட்டினியினாலும் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் குறித்து கண்டனம் தெரிவிக்க யாருமில்லை. இலுப்பைக் கடவையில் இறந்துபோன குழந்தைகள் பற்றிய கரிசனை எவருக்குமில்லை. ஆனால், சதாமின் கொலை மகா அநியாயம். இலுப்பைக் கடவையில் தாம் இலக்குவைத்துத் தாக்கியது விடுதலைப் புலிகளின் நிலைகளை மட்டுமேயென இராணுவப் பேச்சாளர் செய்திவெளியிட்டுள்ளார். தமது தளங்களுக்கு அருகே மக்களையும் அவர்கள் குடியமர்த்தி வைத்திருக்கிறார்களெனவே இழப்புக்கள் தவிர்க்க முடியாதனவாம். தாக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்கருகே விடுதலைப் புலிகளின் தளமெதுவுமில்லையென யாழ்.ஆயர் கூறியிருந்தும், அதற்கான பதில் தென்னிலங்கையிடமில்லை. சிலவேளைகளில், மேலேயிருந்து பார்க்கும்போது குடிசைகள் 'காம்ப்' கள் போலத் தோற்றமளித்தனவென இராணுவப்
பேச்சாளர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


2.

தொடர் பேருந்து குண்டுவெடிப்புக்கள் நிட்டம்புவவிலும், காலி ஹிக்கடுவையிலும். தலைநகரில் பதற்றம் அதிகரித்து அனைத்து வண்டிகளும் சல்லடையிட்டுச் சோதிக்கப்படுகின்றனவெனினும் என்னதான் பயன்? கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துள்ளடங்குகின்ற லிபர்ட்டி சதுக்கத்திற்கருகில் இரண்டடிக்கொரு இராணுவத்தினரை வேகாத வெயிலுக்குள் நிறுத்தி வைத்திருந்தாலும், குண்டுவெடிப்புகளுக்கொன்றும் குறைச்சலில்லை. பாகிஸ்தானியத் தூதுவர் முதல் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷ ஈறாக அனைவரையும் இலக்குவைத்து அங்கேதான் தாக்குதல் நடாத்தப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலையின்போதும் இப்படித்தான் விழிவிரிக்க நேர்ந்தது. பத்தடிகொரு பரிசோதனை நிலையத்தை அமைத்து அப்படி எதைத்தான் சோதிக்கிறார்கள்?
குண்டுகளையும், துவக்குகளையும் தவிர மிச்சமனைத்தையுமாக்கும். பற்றாக்குறைக்கு துப்புத் துலக்க ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரின் தயவு தேவைப்படுகிறதாம். நாளைக்கு அவர்கள் தரும் அறிக்கை பாதுகாப்பலுவலகத்தின் குப்பைத் தொட்டிக்குள் கண்டுபிடிக்கப்படும். ஆக மொத்தத்தில் அனைத்துமே வெறும் கண்துடைப்புத்தான். இதையும் நம்பிக்கொண்டுதானிருக்கிறார்கள், அப்பாவிச் சிங்களவர்கள்.

பேருந்துகளில் தொடர்ந்து குண்டுவெடித்ததைத் தொடர்ந்து தென்னிலங்கையின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் திசையெங்கும் பரவுகின்றன: பிரபாகரனுக்கு இரத்த வெறி அதிகரித்து விட்டது.. சமாதானப் பாதையில் தொடர்ந்து நின்றுவரும் அரசாங்கத்தின் பொறுமையைப் புலிகள்
சோதிக்கிறார்கள்.. மக்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிசெய்யும் பொருட்டு சர்வதேசம் அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்..
இன்னபிற...

கடந்த ஞாயிறன்று, கொழும்பின் பிரசித்தி பெற்ற தேவாலயமொன்றில் பிரார்த்தனைக்குப் பின்னரான பிரசங்கத்தின் இறுதியில் பாதிரியார் கூறுகின்றார்: எல்லாம் வல்ல இறைவன் இரத்தவெறி பிடித்தலையும் இந்தப் பாவிகளை மன்னித்து அவர்களுக்கு இரக்க சிந்தையைக் கொடுத்தருள்வாராக...


3.

சில நாட்களாக கொழும்பைப் பரபரப்பிற்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன, அரசாங்கத்தின் திடீர் நடவடிக்கைகள். 20 மைக்ரேனுக்குக் குறைந்த பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. தடுமாறிப் போனவர்கள், பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும்தான். தற்போதைக்கு இருப்பிலிருப்பவற்றை ஒன்றும் செய்ய இயலாதாகையால் மூன்றுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சூழல் மாசடைதலைக் கருத்திற்கொண்டால் இதுவொரு நல்ல தீர்மானம்தான். என்றாலும், நாடு கிடக்கும் கேட்டிற்கு இதொன்றுதான் குறைச்சலென்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.

நாட்டில் பணவீக்கம் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. பச்சைத்தாளென ஒருகாலத்தில் வாய்பிளந்த ஆயிரம் ரூபாய்த்தாள்கூட சட்டென்று பெறுமதியிழந்துவிட்டது. சிலகாலங்களுக்கு முன்புவரை, பேருந்துகளில் நூறு ரூபாய்த்தாளை நீட்டினால் நடத்துனர் சினந்துகொண்டு சமயங்களில் நடுவழியில் இறக்கியும் விடுவார்.. இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக
வாங்கி மாற்றிக் கொடுக்குமளவுக்கு பேருந்துக் கட்டணங்களும் எகிறிப் போயின. போதாக்குறைக்கு பேருந்துகளில் கட்டாயம் பயணச்சீட்டு வழங்கப்படவேண்டுமெனவும் சட்டம் கொண்டுவரப்பட்டதில் நடத்துனர்களின் நிலைதான் பாவம். பேப்பர் விற்கும் விலை அரசாங்கத்திற்கெங்கே தெரியும்.. மிச்சம் பிடிக்கவென்றிருந்த கடைசி மார்க்கமும் கைநழுவிப்
போயிற்று. கொழும்பு, நீர்கொழும்புப் பகுதிகளில் பயணச்சீட்டு கொடுக்காத 81 பேருந்துகள் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை கொசுறுத் தகவல்.

இத்தகைய அல்லல்களுக்கு மத்தியிலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வுப் (அடிப்படைச் சம்பளமான 120 ரூபாயை 300 ரூபாயாக உயர்த்த வேண்டி) போராட்டம் முடக்கப்பட்டமையானது அரசியல் தலைவர்களின் சாதனைதான். இலங்கை உண்மையிலேயே வனப்பு மிக்கதோர் நாடுதான். எழில்கொஞ்சும் கடற்கரைகள் மற்றும்
பசுந்தேயிலைத் தோட்டங்களுடன். நாட்டின் அந்நிய செலாவணியைப் பொறுத்தவரை இரண்டாவது அதிகூடிய ஸ்தானத்தைப் பெற்றிருப்பது தேயிலை ஏற்றுமதியே. முதலிடத்தை தைத்த ஆடைகள் பெற்றிருப்பதும், அடுத்தடுத்த இடங்களை தேயிலை ஏற்றுமதி மற்றும் மத்திய கிழக்குப் பணியாளர்கள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தகுந்தன. கோட்டா
முறை முடிவடையத் தொடங்கியதிலிருந்து தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம் தளம்பலடையத் தொடங்க இலங்கையின் பொருளாதாரம் பெருமளவு தேயிலை உற்பத்தியினையே சார்ந்திருக்கின்றது.

இருந்தபோதுமே கூட இத்தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நிலை குறித்த அக்கறை அரசியல்வாதிகளுக்கோ ஏன் தொழிற்சங்கங்களுக்கோ கூட இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் வர்க்க ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகும் இவர்கள் போதாக்குறைக்கு
மலையகத் தமிழர்களென்ற வகையில் இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றார்கள். மலையகத்தின் புவியியலமைவே இம்மக்களது ஒன்றுபடலுக்கும், எழுச்சிக்கும் பெருந்தடையாக அமைகின்றது. அதையும் மீறி போராடப் புகுந்தால் எங்கிருந்தாவது வந்து நுழையும் அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக மக்களது வாழ்வாதாரத்தை விலைபேசி
அமுக்கிவிடுவார்கள். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளே பூர்த்தி செய்யப்படாத நிலையில் சுதந்திர இலங்கையின் மிகக் கேவலமான அடிமைகளாக வாழ்ந்திருக்கும் இவர்கள் கேட்பதென்னமோ ஒரு முந்நூறு ரூபாய்தான். ஒரு இறாத்தல் பாண் 23 ரூபா.. ஒரு கிலோ அரிசி (மிக மட்டமானதுகூட 40 ரூபாய்க்குக் குறையாது) 45 ரூபாய்.. எந்தவொரு
மரக்கறியுமே கால்கிலோ 20 ரூபாய்க்குக் குறைத்து வாங்கிவிட முடியாது. ஐந்துபேர் கொண்ட சிறிய குடும்பமாயிருந்தாலும், ஒருவேளை உணவுக்கு இவையனைத்தும் போதாதென்பது ஒருபுறமிருக்க, நூற்றிருபது ரூபாயைக்கொண்டு கஞ்சி கூடக் காய்ச்சமுடியாதென்பதுதான் உண்மையிலும் உண்மை.

உணவுப் பிரச்சனைக்கும், எகிறிவரும் விலைவாசிக்கும் வழிகாணமுடியாதவர்களுக்கு தேவைதான்... பொலித்தீன் பையால் விளையும் சூழல் மாசடைவும், பயணச்சீட்டுகளும்.., தமது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காவது.


............


எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலை கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் சஞ்சரிக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின்
அடித்தளத்திலிருந்து பிறக்கின்றனவோ
எங்கே உலகம் சாதி மதப் பிளவுகளால்
உடையாமலிருக்கிறதோ
எங்கே இரக்கமும் செயல் முயற்சியும்
முழுமையை நோக்கி கைகளை நீட்டுகின்றனவோ
எங்கே தெள்ளிய நீரோடைகள்
மாண்டொழிந்து போன பழக்கவழக்கமெனும்
பாலைநிலம் வழியே செல்லாமலிருக்கின்றனவோ
அந்த சொர்க்கபூமியை நோக்கி - என் தந்தையே
என் நாடு விழித்தெழட்டும்!
- ரவீந்திரநாத் தாகூர்


கனவுலகப் பொருண்மைகளைப் பிதுக்கி வெளியேறும் யதார்த்தம்

சமீபத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன் அருளரால் எழுதப்பட்ட 'லங்கா ராணி' நாவல் வாசிக்கக் கிடைத்தது. 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது பாதிக்கப்பட்டு கொழும்பின் அகதிமுகாம்களில் நிறைந்துவழிந்த தமிழர்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த கப்பலின் பெயரே இது. நாவலும் அக்கப்பலின்
மூன்று நாள் பயணத்தின்போதான நிகழ்வுகளை விழிமுன் நிறுத்துவதாகவும், இனப்பிரச்சனையின் வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. கடந்த காலங்களிலிருந்து எவற்றையும் கற்றுக்கொள்ளுமளவுக்கு எமது
வரலாறுகள் உவப்பானதாகவில்லையெனும் யதார்த்தம் மறுபடியுமொருமுறை மனதிலறைந்துவிட்டுச் செல்ல.. 58, 77 இனக்கலவரங்களை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தால் 83 த் தவிர்த்திருக்கலாமென பெருமூச்சுவிட மட்டுமே முடிந்தது.

ஆங்கிலேயரின் வருகையிலிருந்துதான் அனைத்துமே ஆரம்பிக்கின்றன. தமது செலவுகளைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு கோட்டை, கண்டி, யாழ்ப்பாணமென்ற மூன்று பெரும் பிரதேசங்களையுமிணைத்து ஒரே நிர்வாகத்திற்குக் கீழ் அவர்கள் கொண்டுவந்தனர். சிறுபான்மையினரான தமிழர் அரசாங்கத்தின் பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றிக்
கொள்ள, 1948ல் ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போனதும் முறுகல் வலுக்கத் தொடங்குகின்றது. இது கலிங்க மகான், எல்லாளன் காலத்து அத்துமீறலென்ற உணர்வு சிங்களவர் மத்தியில் புகட்டப்பட.. தமிழ்த் தலைவர்கள் பராக்கிரமபாகுவும்,
துட்டகைமுனுவும் இறந்துவிட்டனரென்ற நம்பிக்கையுடன் வாளாவிருந்தனர்.

மனிதர்கள் எப்போதுமே மனிதர்கள்தான். இந்தியாவில் நிகழ்ந்ததைப் போன்றதோர் விடுதலைப் போராட்டம் பிரித்தானியர்களுக்கெதிராக இலங்கையில் நடவாதமைக்கான காரணமென்ன..? ஆராயப் புகுந்தால் தெளிவாகும் பல. இண்டர்லெக்ஷ¤வல் வியாபாரிகள் தமது சுயநலன்களுக்காக மக்களது போராட்டத்தையே விலைபேசக் கூடியவர்கள்.
அன்றைய அருணாசலம், இராமனாதன் தொடக்கம்.. இன்றைய அறிவுஜீவிகள் பலரும் செய்துகொண்டிருப்பது அதைத்தான். படித்தவர்களுக்கு சித்தாந்த ரீதியாக ஆயிரம் கேள்விகளிருக்கும்.. பத்தாயிரம் சந்தேகங்களிருக்கும்.. எனினும், சாதாரண
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, 'இன்னுமொரு துட்டகைமுனு..' என்ற சிங்கள வாசகங்களுடன் கொழும்பு நகர மண்டபத்து சுற்றுவட்டத்தில் காணப்படும் ஜனாதிபதி மகிந்தவின் தென்னைமர உயரத்து போஸ்டரை சமயங்களில் பேருந்தில் கடந்து செல்ல நேர்கையில்.., A Land Like No Other ம், லங்கா ராணியும் நினைவுக்கு வருவதை மட்டும் ஏனோ தவிர்க்கவே முடிவதில்லை.

இறுகிப்போன கணங்களை முன்னிட்டு...

நன்றி: தமிழ்நதி (அன்னா அக்மதோவாவுக்காக..)