Monday, December 31, 2007

அரியத்திலுருளும் உணர்வுகள்

பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்
வலியெடுத்துக் கதறுமோர்
குழந்தையின் குரலில்
செய்தவைக்காகவும்
செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்
கதைத்தவைக்காகவும்
சமயங்களில்

கதைக்க மறுத்ததற்காகவும்
சுற்றியிருக்கும் அனைவருக்கும்
வெறுப்பினையே பரிசளித்தமைக்காக
பிறர் முதுகில் சுமையிறக்கி
ஆறுதலாக இளைப்பாறியமைக்காக
புன்னகைகளைக் கிழித்தெறிந்து
கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக
இன்னமும் எனதன்பே,
விரல்கள்
நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
வெளிறச் செய்தமைக்காக.

Thursday, December 13, 2007

உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல

காலம்: இறுதித் தீர்ப்பு நாள்
இடம்:
நியாய சபை
நேரம்: விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்பு



நாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,
தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..
மௌனம் எமக்கிடையே
ஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்தது
எத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*
தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடி
காலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்
நான் கத்தியழ விரும்பினேன்
'நீ எனதும் அம்மாதானில்லையா?'
ஒரு பிடி நேசம்
சில கொத்து புன்னகை
சிறு துளி இடம் உன் மடியில்
வேறென்ன கேட்டேன் உன்னிடம்..
கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை
புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய்
இல்லாதுவிட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்திருக்க மாட்டாய்
உன்னிடத்திலோர் அரக்கி இருந்திருந்தாலும்..
ஆனால், இன்று அவர்களுன்னை அரக்கியென்கிறார்கள்
கைப்பற்றிக் கொண்டதை தங்களதாம்..
தீர்ப்பு வழங்கப்பட்டு உரலில் தலையிடிபட
சிதறும் சதைத்துணுக்குகளை தேங்காய்த் துருவலென
பொறுக்கியெடுத்து ஏப்பமிடுகின்றனர் உனது குழந்தைகள்
இது ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வேளையல்ல என்பது மட்டும் புரிகிறது


*குவேனி - இலங்கை பூர்வீகக்குடியொன்றின் அரசி. விஜயன் அவளைத் திருமணமுடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளைக் கைவிட்டு நாயக்க வம்ச அரசியொருத்தியை மறுபடி திருமணம் செய்கிறான். குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள தனது குடியினரிடம் திரும்பிச் செல்பவள் காட்டிக்கொடுத்த துரோகியெனக் கருதப்பட்டு அவர்களால் கொல்லப்படுகிறாள்.

(for the country I love, and for a life that demands us much more than it deserves..)


தலைப்பு நன்றி : அருந்ததி ரோய் - 'The silence sat between grandniece and baby grandaunt like a third person' (pg.22), The God of Small Things

Friday, December 07, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 3

See No Evil, Hear No Evil, Speak No Evil..!

Funny Boy
- Shyam Selvadurai

குழந்தைகள் தொலைந்து கொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்...

(இளங்கோ - நாடற்றவனின் குறிப்புகள்)


1.

Right and wrong, fair and unfair had nothing to do with how things really were. I thought of Shehan and myself. What had happened between us in the garage was not wrong. For how could loving Shehan be bad? Yet if my parents or anybody else discovered this love, I would be in terrible trouble. I thought of how unfair this was and I was reminded of things I had seen happen to other people, like Jegan, or even Radha Aunty, who, in their own way, had experienced injustice. How was it that some people got to decide what was correct or not, just or unjust? It had to do with who was in charge; everything had to do with who held power and who didn't. If you were powerful like Black Tie or my father you got to decide what was right or wrong. If you were like Shehan or me you had no choice but to follow what they said. But did we always have to obey? Was it not possible for people like Shehan and me to be powerful too? I thought about this, but no answer presented itself to me.
(Selvadurai, Shyam - Funny Boy pg.274)


பேசுவதற்கும் சொல்வதற்கும் எதுவுமற்றுப் போன பொழுதொன்றில், அனுமானங்கள்.. போலிகள்.. வாதங்கள்.. வாய்ப்புக்கள்.. என நீண்டுகொண்டே போகும் பரீட்சைக் குறிப்புகளைத் தூக்கியெறிந்து கட்டிலில் கால் நீட்டியபடியமர்ந்து சுவாரசியமாய் எதையும் வாசிக்க ஆரம்பித்தாலும்.., இப்படித்தான் எங்காவதோர் புள்ளியில் வாசிப்பின் தொடர்ச்சி அறுபட்டுவிட, சாளரங்களுக்கப்பால் வெளிறலாய் விரிந்திருக்கும் வானத்தை வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்துவிட வேண்டியிருக்கிறது. வீட்டினருகில் நின்ற மாமரம் வெட்டப்பட்டதில் இப்போதெல்லாம் யன்னல் முழுவதையும் நிறைத்திருப்பது அந்த வெளிறிப்போன வானம் மட்டும்தான். அம்மாமரத்துக் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சு இப்போது எங்கே தஞ்சமடைந்திருக்கும்? மயில்நீலநிற செண்பகமொன்று வந்து குரலெழுப்பியபடியிருக்குமே, அது எங்கே போயிருந்திருக்கும்? காகங்கள், குயில்கள், புழு பூச்சிகள்.. எத்தனைக்கு உறைவிடமாயிருந்திருக்கும் அம்மரம்? இன்று அதன் இருப்பைப் பறைசாற்றிப்போக எஞ்சியிருப்பது, அது இருந்த இடத்தை இப்போது நிறைத்துக் கொண்டிருக்கும் வெறுமை.. வெறுமை மட்டுமே. எதிர்வீட்டுக்காரர்கள் மரத்தை ஏன் வெட்டினார்கள், எதற்கு வெட்டினார்களென்பது பற்றி நாம் கேள்விகேட்க முடியாது.. இஷ்டத்துக்கு வெட்டித்தள்ள அதென்ன உங்கள் தனிப்பட்ட சொத்தா என வாதிடவும் முடியாது.. வாழைப் பொத்திகளாய் மனிதவுடல்கள் அறுபட்டுவிழும் தேசமொன்றில் வாழ்ந்துகொண்டு மரத்தைப் பற்றிக் கேள்வியெழுப்ப எமக்கு எந்த அருகதையுமில்லை.. ஆமாம், எதற்குமொரு தகுதி/ அதிகாரம் வேண்டும்.

Funny Boy வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்தப் புள்ளியில்தான் என் வாசிப்பு அறுபட்டது.

கொழும்பின் உயர்மட்டத் தமிழ்க் குடும்பமொன்றில் பிறந்த அர்ஜூன் (அர்ஜி) எனும் சிறுவனின் பார்வையில் 70 மற்றும் 80 களில் கொழும்பின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை - அவற்றின் அபத்தங்களை - ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சித்திருக்கிறார் ஷ்யாம் செல்வதுரை. Funny Boy என குறிப்பிடப்படும் அர்ஜி தனது Homosexuality யுடனும், இனங்களுக்கிடையே கடும் முறுகல் நிலை காணப்படும் சமூகத்தில் தனது இருப்பினை நிலைநாட்டவுமான போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறானென நீள்கிறது கதை.

பால்/ பாலினம் ஆகிய கருத்தாக்கங்கள் தொடர்பான போதிய விளக்கம் கதையுடன் தொடர்வதற்கு அவசியமாகின்றது. பால் வேறுபாடானது உயிரியல் ரீதியாகவும், பாலின வேறுபாடானது சமூக ரீதியாகவும் பெண்களையும் ஆண்களையும் வேறுபடுத்துவது இங்கு கவனிக்கத்தக்கது. பால் வேறுபாடெனப்படுவது உயிரியல் ரீதியாக, இனப்பெருக்க உறுப்புக்களின் வேறுபாடுகளினடிப்படையில், பிறப்பின் மூலம் தீர்மானிக்கப்படுவது. இங்கு உறுப்புக்களே பெண்/ ஆண் ஆகிய அடையாளங்களைத் தோற்றுவிப்பனவாக இருப்பதுடன், இவை வெறும் உடல்சார் வேறுபாடுகளாக மட்டுமே காணப்படுகின்றனவே தவிர, இக்கருத்தாக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமிருப்பதில்லை. ஆனால், நடைமுறை வாழ்வில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் அவனை விடத் தாழ்ந்தவளாகவும் காணப்படுவதான மனநிலையைக் கட்டியெழுப்புவதில் பாலினம் என்ற கருத்தாக்கத்தின் பங்கு அளப்பரியது. இது சமூகத்தில் பெண்/ ஆணின் நிலையினைத் தீர்மானிப்பதாக அமைவது. பெண்பிள்ளை காலை அகட்டி உட்காரக் கூடாது, சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது.. ஆண்பிள்ளை அழக்கூடாது.. என்பவற்றில் தொடங்கி, பெண் குழந்தைக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஆண் குழந்தைக்கு நீலநிறத்திலும் உடுப்பு தைப்பது முதல்.. சமைத்தல், கூட்டுதல், துவைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தலாகிய இன்னபிற வேலைகள் பெண்களுக்கானவை.. வேலைக்குப் போதல், சம்பாதித்தல், காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு பத்திரிகை வாசித்தல் போன்ற வேலைகள் ஆண்களுக்கானவையென்பது வரையான அனைத்தும் பாலின வேறுபாட்டுக்குள் உள்ளடங்குபவை. இதனடிப்படையில் தான், பெண்ணியமென்பது 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியதென அ.மங்கை எடுத்துக்கூறுகிறார். அந்தவகையில் ஷ்யாம் செல்வதுரையின் அர்ஜி, இந்தப் பாலின அடிப்படையில் செயற்படும் ஒட்டுமொத்தச் சமூகத்தினை கேள்விக்குள்ளாக்குமொரு கதாபாத்திரமாக விளங்குகிறான். ஆழ்ந்து சிந்திக்கையில், எமது சமூகத்தின் உயிர்நாடியான இந்தப் பாலின ஒடுக்குமுறை சார் மனப்பான்மையை வேரோடு களைவதற்கான மாற்று வழியாக (An alternative way) Homosexuality யினை முன்வைக்கலாமெனவும் எண்ணத் தோன்றுகிறது.

சிறுவயதிலேயே அர்ஜிக்கு பெண்களின் விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகம். அண்ணன்மார் விளையாடும் கிரிக்கட்டை விடவும், பெண்பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அதிகளவு புதிதாக்கும் ஆற்றலுடையதாகக் (creative) காணப்படுவது அவனை ஈர்க்கிறது. அவர்கள் விளையாடும் bride - bride (மணப்பெண்) விளையாட்டில் கற்பனைக்கு இடம் அதிகம். ஒரு திருமண வீடு எப்படியிருக்குமென கற்பனை செய்து, அதேபோல அலங்கரிப்பதும், வெளிக்கிடுவதும், அதை அப்படியே - ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக - செய்துபார்ப்பதும் என்றும் சுவாரசியமானவை. தேங்காய் சிரட்டைகளையும், காலியான தகர டின்களையும் கொண்டு திருமண கேக் ஒன்றை அலங்கரிக்கும் விதத்தை அர்ஜி கண்டுபிடிப்பதோடு, தனது கண்டுபிடிப்பு குறித்து பெருமையும் அடைகிறான். அண்ணன்மாரின் கிரிக்கட் அவனைப் பொறுத்தவரை வெறும் வறண்டுபோன விளையாட்டே, ஒரே பந்தை மாறி மாறி அடிப்பதும், பிடிப்பதுமென.. அதில் கற்பனைக்கு இடமில்லை.. சுவாரசியமுமில்லை.

சிறுவயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றன. அக்கா, நான், இன்னும் எங்கள் ஒழுங்கையில் வசித்த இரண்டு மூன்று தோழிகள் சேர்ந்து விளையாடுவதில் எனக்கு அதிகம் பிடித்தது செத்தவீடு கொண்டாட்டம். இப்போது யோசிக்கத்தான் அந்த வயதிலேயே நாங்கள் எவ்வளவு குரூரமானவர்களாக இருந்திருக்கிறோமென்பது மனதில் உறைக்கிறது. மண்ணைக் கிண்டி எறும்பு, புழு, பூச்சியெல்லாம் பிடித்து அவற்றைக் கொன்று தீப்பெட்டிகளில் அடைப்போம். இது அக்காவினதும், வயதில் மூத்த மற்ற தோழிகளினதும் வேலை. பிறகு, எல்லாருமாகச் சேர்ந்து தீப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒழுங்கை முழுக்க ஊர்வலம் போய் ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து, மலர் தூவி, ஈர்க்குக் குச்சியால் சிலுவை செய்து வைத்து, சுற்றிவர நின்று அழுவோம். யார் கூடவாய் அழுவதென்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். இப்போது நினைக்க, இந்த நாட்டில் வாழ்வதற்குத் தகுந்த விதத்தில்தான் சிறுவயதிலேயே பயிற்சி (training) எடுத்திருக்கிறோமென்பது புரிகிறது. அதுதான் இன்றும், மரணங் குறித்த எச்சலனமுமில்லாமல் நீரோ மன்னனாய் பிடில் வாசித்துக் கொண்டிருக்க முடிகிறது போலும்.

மணப்பெண் விளையாட்டில் அர்ஜி தான் மணப்பெண். சாரி உடுத்துவதும், பெண்ணாய் வெளிக்கிடுவதும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்களது விளையாட்டில் மணமகனுக்குத்தான் கடைசி இடம். யாரும் அந்தப் பாத்திரத்தை வகிக்க விரும்புவதில்லை.. அவரைச் சீண்டுவதுமில்லை. மணமகன் இல்லாமலேயே இவ்விளையாட்டைக் கொண்டுநடத்த அர்ஜி விரும்பினாலும், திருமணத்தின்போது மிகவும் இன்றியமையாத ஒருவராக மணமகன் விளங்குவதால், அது தவிர்க்க முடியாததாவது, குழந்தைகளின் உலகில் வளர்ந்த ஆண்களின் இடத்தை தெளிவாகப் புலப்படுத்துவதாக அமைகிறது. அம்மாவின் நகைகளோடு விளையாடுவதும், மாமியின் மேக்கப் சாதனங்களை பரீட்சித்துப் பார்ப்பதுமென அர்ஜியின் 'பெண்தனங்கள்' (ஏனைய உறவினர்கள் குறிப்பிடுவதுபோல) குடும்பத்தினரின் கடும் விசனத்துக்கு அவனை ஆளாக்குகின்றன. இதன் விளைவாக பெண்களுடன் விளையாடக் கூடாதெனவும், அண்ணன்மாருடன் விளையாடும்படியும் அவன் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.


மாற்றுப் பார்வையில்.., இவ்விடத்தே வெறுப்புக்காளாவதும், கேலிக்குள்ளாவதும் அர்ஜியெனும் சிறுவனோ அல்லது அவனது ஆளுமையோ அன்றி, பெண் தன்மையே எனலாம். பெண்களுக்கான தன்மையைக் கொண்டிருப்பதென்பது - அது பெண்ணாயிருக்கும் பட்சத்திலேயே Girly Girlish என கிண்டலுக்காளாகும் நிலையில் - ஒரு ஆணை சமூகத்தில் (இன்றளவும்) மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. பொண்ணையன், ponds.. இன்னபிற பட்டப்பெயர்கள் காத்துக்கொண்டிருக்க, இந்தப் பெண் தன்மையினை நிர்ணயித்தது யார்/ எதுவென்ற கேள்வி - அத்தன்மை சமயங்களில் ஆண்களுக்கானதாகவும் இருக்கையில் - எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அர்ஜியின் மற்றுமொரு சகோதரி மீனா ஆண்பிள்ளைகளுடன் கிரிக்கட் விளையாடுவதைக் கண்டுகொள்ளாத சமூகம் அர்ஜியை மட்டும் பெண்பிள்ளைகளுடன் விளையாடுவதைக் கண்டித்தது ஏன்? ஒரு பெண், ஆணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது (அதாவது சமூகம் நிர்ணயித்த வீரம், கம்பீரம், etc. etc.) பொதுவாக பெருமைக்குரியதாகவே - பாரதியாரால் கூட - கருதப்பட்டிருக்க, ஒரு ஆண், பெண்ணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது கேலிக்குள்ளாக்கப்படும் பட்சத்தில் இங்கு உண்மையில் கீழ்த்தரமாக மதிக்கப்படுவது அந்த ஆணோ, வேறெதுவுமோ அல்ல. மாறாக, பெண்களுக்குரியதென கூறப்பட்டிருக்கும் பண்புகளே. 'பெண்'ணாக இருத்தலென்பது கேவலம்.. ஆணாக இருத்தல் பெருமை.. என்றவகையில் முடிவு பெறப்படுமானால், இந்த பெண்/ ஆண்தனங்கள் இருபாலாருக்குமிடையே விரவிக்காணப்படும் பட்சத்தில் இன்னவின்னது, இன்னாருக்கானதென இவற்றை வகைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமெனவும் நினைக்கத் தோன்றுகிறது.

அன்றாட உரையாடலில் இடம்பெறும், 'அவளொரு ஆம்பிளை மாதிரி..' என்பது பாராட்டு/ ஒரு compliment ஆகவும், 'அவனா.. அவனொரு பொம்பிளை..' என்பது அதற்கெதிரான நக்கல் தொனியைக் கொண்டிருப்பதும் ஏனென்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. சராசரி மனிதர்களை விடுத்துப் பார்த்தாலும், ஆனானப்பட்ட அறிவுஜீவிகளாக, பெண்விடுதலையில் அக்கறை கொண்டவர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் பலரின் மத்தியிலும் இவ்வார்த்தைப் பிரயோகங்கள் சர்வசாதாரணமாகவிருக்க (உ+ம்:- ஆம்பிளைகள் மாதிரி ஸ்மார்ட்டாயிருக்கிறாள்), மனிதர்கள் எத்துணை சாமர்த்தியமாக தங்களது குரூர முகங்களையும், அறிவீனங்களையும் அறிவெனும் திரைக்குள் மறைத்துக்கொண்டு விடுகிறார்களென யோசிக்கையில், அறிவையே மறுதலிக்க வேண்டியிருக்கிறது. அவனொரு பொம்பிளையென எவரையாவது சுட்டிக்காட்டி எவரும் கூறுவார்களாயின், நரம்புகளைப் புடைத்துக்கொண்டு சீறியெழும் எனது கோபம் நியாயமானதுதானென அர்ஜி உணர்த்தி விட்டிருக்கிறானென்றே கூறவேண்டும். (அந்தக் கோபம் குறித்த ஆணின் மீதான பரிவினால் எழுந்ததல்ல; மாறாக, பெண்ணாய் இருப்பதென்பது அவ்வளவு கேலிக்குரியதாய்ப் போனதாவென்ற விசனத்தோடு எழுந்ததென்பதையும் கவனிக்க).

இத்தகைய - சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிகளினடிப்படையிலான - பிறழ்வுநிலைக் குணாம்சங்கள் மிக இயல்பானதும், அதிகாரத்தினை எதிர்க்கும் மாற்றுவெளியை நோக்கியதுமானதென Funny Boy எடுத்துக் காட்டுகின்றது. எமது இயல்பு அதுதானென்றால், அப்படியிருப்பதற்காக நாங்கள் வருந்தத் தேவையில்லை.., குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டியதில்லையென அர்ஜிக்கு உணர்த்தும் நண்பனாக ஷெஹான் அறிமுகமாகிறான். ஷெஹானுக்கும் தனக்குமிடையிலான உறவு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.. குடும்பத்தவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாகுமென்பது புரிந்தாலும், அவர்களைப்போல தன்னால் இருக்கமுடியாதென்ற தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது.

சரிகள் எதுவுமே எப்போதும் சரிகளாகவேயிருப்பதில்லை. அவற்றைப் பிழையாக்குவதற்கான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை பிழையாகியே தீரும். சரி பிழைகளும், நியாய அநியாயங்களும் எப்போதும் அதிகார வர்க்கத்துக்கு சார்பானவையே. சரிகள் பிழைகளாவதும், பிழைகள் சரிகளாவதும் அதிகாரத்திலிருப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டது அர்ஜிக்கு நினைவு வருகிறது. அவனது மாமி ராதா, சிங்களவர் ஒருவரை நேசிக்கிறார். இருதரப்புப் பெற்றோரின் எதிர்ப்பும், நாட்டின் முறுகல் சூழ்நிலையும் இனங்களின் பெயரால் அவர்களைப் பிரிய நிர்ப்பந்திக்கின்றன. அடுத்து, அப்பாவிடம் வேலைபார்க்கும் அவரது பால்யகாலத்துத் தோழனின் மகனான ஜெகன். முன்னர், இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததைக் காரணம் சாட்டி கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர், எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்படுகிறார். எனினும், வேலைத்தளத்தில் ஜெகனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் கூட (சிங்களவர்) அவரையோ, அவரது வார்த்தைகளையோ மதிக்கத் தயாரில்லை. அறைக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைக் கிண்டுவது, தகாத வார்த்தைகளை சுவர்களிலும், கதவுகளிலும் எழுதிவைப்பதென 'தமிழ்ப் பயங்கரவாதி' (?!) ஒருவருக்குக் கீழே வேலை பார்ப்பதற்கான தமது மறுப்பை வெளிப்படுத்துகின்றனர். தனது வியாபாரம் முடங்கிவிடுமென பயந்த அப்பா ஜெகனை வேலையிலிருந்து நீக்கி, மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கிறார். தமதேயான வழிகளில் இவர்கள் அதிகாரத்தினால் பாதிக்கப்படுகின்றனர். தமது வாழ்க்கை, தமது விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.



2.




வேறெதனையும் விட ஷ்யாம் செல்வதுரையின் இப்பிரதி உணர்வுகளோடு மிக ஒன்றித்துப் போனமைக்கு மற்றுமொரு காரணம், கொழும்பு நகரைக் களமாகக் கொண்டு இக்கதை இயங்குவது தானென்பேன். பசுமையான பின்னணியுடனான அழகிய கிராமத்துக் கதைகள் நகரங்களில் வளர்ந்த எம்மைப் போன்றவர்களுக்கு கனவுலகப் பிரதிமைகளாக மட்டுமே தோற்றமளிப்பன. நகர வாழ்வினையும், அதன் இறுக்கங்களையும், சாதக பாதகங்களையும் எடுத்தாளும் கதைகள் தமிழில் எழுந்தது மிகக்குறைவு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையோ, பெரும்பாலும் மேலைத்தேய நகரங்களைச் சார்ந்தனவாக அமைந்திருப்பதால் - எமது நகரங்களுக்கும் அவர்களுக்குமிடையேயான - பாரிய பண்பாட்டுப் பொருளாதார வேறுபாடு அவற்றுடன் அதிகம் நெருங்க அனுமதிப்பதில்லை. ஆனால், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இக்கதையில் காணும்போது - அர்ஜி நடந்த தெருக்களில் நானும் நடந்திருக்கிறேன்.. British Council, Cinnamon Gardens க்கு நானும் போயிருக்கிறேன்.. Chariot ல் அமர்ந்து Lamprais (special preparation of rice and curry that is baked in a banana leaf) சாப்பிட்டிருக்கிறேன் என - உணரும் பரவசம் எல்லையற்றது.

கதை நிகழ் காலத்தைய கொழும்பின் பதட்டமான சூழ்நிலை யதார்த்தபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இன்று அதனை மறுபடியும் வாசிக்கையில், இன்றைக்கு இரண்டு அல்லது மூன்று தசாப்தகாலத்துக்கு முன்னரிருந்த கொழும்புக்கும்,
இப்போதைக்கிருக்கும் கொழும்புக்கும் பொருளாதார தகவல் தொழினுட்ப முன்னேற்றங்களுக்கப்பால், பெரிய வேறுபாடுகளெதுவுமில்லை. அன்றைய பதட்டமும் முறுகல்நிலையும் இன்றுவரையும் தொடர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

கொழும்பு நகரம் பல்லினக் கலாசாரங்களையும் ஒன்றிணைக்குமொரு தளம். நகரங்களுக்கேயுரிய எந்திர வாழ்க்கைக்கு இது மட்டும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்டளவுகாலம் இங்கு வசிக்கும் எவரும் சக மொழியுடன் ஓரளவாவது பரிச்சயம்கொள்ளும் சூழ்நிலையை அது வழங்கிவிடும். சக இனத்தவரைப்பற்றிய குறைந்தபட்சப் புரிதலுக்காவது இது உதவக்கூடும். ஆனால், யுத்தமும் அதன் தீவிரம் நாட்டின் கேந்திர ஸ்தானம் வரை நீட்சியடைந்தமையும் ஒருவித தடித்த திரையென இனங்களைச் சூழ நிரந்தரமாக கவிந்துகொண்டு விட்டதது.

50 களில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களில் அர்ஜியின் அம்மாச்சியின் அப்பாவும் (great grand father) கொல்லப்படுகிறார். அந்தச் சம்பவம் அம்மாச்சியை சிங்களவர்களையே வெறுக்கும் தீவிர இனவாதியாக மாற்றுகிறது. வடக்கே விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்று தனித்தமிழீழம் சாத்தியமாகும் நாளில் அங்கு செல்லும் முதல் ஆளாக நானிருப்பேன் என்கிறார் அவர். தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக பிற்காலத்தில் வேலைவாய்ப்புப் பெறுவதைக் கருதி அர்ஜியை சிங்கள மொழிமூலத்தில் அவனது அப்பா படிக்க அனுமதிக்கும்போது, அவர் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதாகக் குற்றம்சாட்டவும் செய்கிறார் அம்மாச்சி. ராதா மாமியின் காதலும் அம்மாச்சியால் இவ்விதமே நிராகரிக்கப்படுகிறது. இதே காழ்ப்புணர்வு அவர்களைச் சுற்றியிருந்த சிங்களவர்கள் மத்தியிலும் காணப்பட்டபோதும், 83' கலவரத்தில் அர்ஜியின் வீடு காடையர்களால் தாக்கப்பட்டபோது அவர்களுக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பதும் சிங்கள நண்பர்களே.. மிக எளிதாக எதனையும் (இனங்களுக்கிடையிலான உறவை/ புரிதலைக்கூட) பொதுமைப்படுத்திவிட முடியாதென்பதற்கு இதுவொரு தக்க சான்று.

கலவரம் நீடித்திருந்த நாட்களின் நிகழ்வுகள் நாட்குறிப்புப் பதிவுகளாக - நேரடி சாட்சியமாக இடம்பெற்றுள்ளன. வீடுகள் முற்றுமுழுதாக தாக்கியழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டமையும், தெருக்களில் கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்பட்டுக் கிடந்தமையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் உணர்வுகளைஅதிரச் செய்வதாகவுள்ளது. கலவரத்தைத் தூண்டிவிட்டது அரசுதானென்பது தெருக்களில் தமிழர்களின் கடைகள், வீடுகள் மட்டும் சரியாகக் குறிபார்த்துத் தாக்கப்படுவதிலிருந்தும் (வாக்காளர் பதிவிலிருந்து தகவல் திரட்டியதாகக் கூறப்படுகிறது), மிக நீண்டநேரத்துக்கு அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டமையிலிருந்தும், இராணுவத்தினரும், பொலிஸாரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் தெருவில் வேடிக்கை பார்த்தபடியிருந்தமையிலிருந்தும் தெளிவாகிறது. 78' ல் சிறிமாவின் அரசாங்கம் கவிழ்ந்து ஐதேக ஆட்சியைக் கைப்பற்றியபோது நிலைமை சீரடையுமென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த அர்ஜியின் அப்பா இனியும் இந்த நாட்டில் வாழ முடியாதென முடிவெடுத்து குடும்பத்துடன் கனடாவுக்குப் புலம்பெயர முடிவெடுக்கிறார். கலவரம் தொடங்குவதற்கு சிலகாலங்களுக்கு முன்னரேயே நாட்டைவிட்டு வெளியேறுவோமென அர்ஜியின் அம்மா அடிக்கடி வலியுறுத்தி வந்தபோதும், வெளிநாட்டில் போய் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்வதா என மறுத்திருந்த அப்பா, பின்னர் அம்மா சூழ்நிலையின் தீவிரத்தை ஆரம்பத்திலேயே முன்னுணர்ந்ததை வலியுடன் வியந்து கொள்கிறார்.

புலம்பெயர்கையிலும் அவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்பா பெரிய தொழிலதிபர், ஹோட்டலொன்றும் நடாத்தி வருபவர். ஆனால், தனது சொத்துக்களையெல்லாம் கைவிட்டு வெறுங்கையோடு நாட்டைவிட்டு வெளியேற நேர்கிறது. பணமாக மாற்றிக் கையில் கொண்டுசெல்லவும் அரசாங்கம் தடைவிதித்ததுடன், ஒருவர் குறிப்பிட்டளவு பணம் மட்டுமே கையில் கொண்டுசெல்லலாமெனவும் சட்டமியற்றியிருந்தது. அனைத்தையும் கடந்து, பயணிப்பதற்கு முதல்நாள் ஷெகானைச் சந்தித்துவிட்டு வரும்வழியில் எரிந்து சேதமாகிக் கிடந்த தனது வீட்டைப் பார்க்கச் செல்கிறான் அர்ஜி. பெரும்பகுதி தீயில் கருகிக்கிடக்க, எரியாதிருந்த அனைத்துமே களவாடப்பட்டு வீடு நிர்வாணமாய் நின்றுகொண்டிருந்தது. பிறந்ததிலிருந்து இத்தனைகாலம் வாழ்ந்த அவ்வீட்டின் நிலை அவனைக் கதறச் செய்கிறது.

How naked the house appeared without its door and windows, how hollow and barren with only scraps of paper and other debris in its rooms. I felt hot, angry tears begin to well up in me as I saw this final violation. Then for the first time, I began to cry for our house. I sat on the verandah steps and wept for the loss of my home, for the loss of everything that I held to be precious. I tried to muffle the sound of my weeping, but my voice cried out loudly as if it were the only weapon I had against those who had destroyed my life.
(pg.311)

ஷ்யாம் செல்வதுரை முன்வைக்கும் அரசியல், சாதாரண மக்களுள் ஒருவராக நின்று நிகழ்வுகளை விமர்சிப்பதாலேயே அதிக கவனிப்புக்குரியதாகிறது.


3.

Sometimes I wonder if it was all worth it in the end. To have made all those sacrifices. Life is a funny thing, you know. It goes on, whatever decisions you make. Whether you married the person you loved or not seems to become less important as time passes.
(pg.81)

சுவாரசியமான கதாபாத்திரமாக இடைநடுவே வருபவர் Aunty Doris - ராதா மாமி நடிக்கும் 'The Kind and I' நாடகத்தை நெறியாள்கை செய்யும் Burgher சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை. தமிழரொருவரைத் திருமணம் முடித்து தற்போது கணவனையிழந்து வயதாகிவிட்ட நிலையில் இத்தகைய நாடக நெறியாள்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ள இவர் திருமணங்கள் குறித்து முன்வைக்கும் கருத்து குறிப்பிடத்தகுந்தது.

தமிழரொருவரை விரும்பித் திருமணம் முடித்ததால் Aunty Doris ன் அப்பா கடுங்கோபங்கொண்டு மகளுடனான தொடர்புகளை முறித்துக்கொள்ளுமாறு குடும்பத்தினரையும் நிர்ப்பந்திக்கிறார். சில காலங்களில் குடும்பத்தினர் அனைவரும் சொல்லிக்கொள்ளாமலேயே இங்கிலாந்துக்குச் சென்றுவிட, அம்மா இறந்ததைக்கூட நண்பரொருவரின் வாயிலாகவே Aunty Doris அறிந்துகொள்ள நேர்கிறது. அப்பா இறந்ததன் பிற்பாடு தனது சகோதரிகளுடன் அவரால் தொடர்புகொள்ள முடிந்தாலும், காலம் அவர்களை அந்நியர்களாக்கி விட்டமையால் முன்புபோல் நெருக்கமாகப் பழக முடியாத தனது இயலாமையையும் நொந்துகொள்கிறார். கணவரும் இறந்துவிட, வயதான காலத்தில் தனியே இருக்கும்போது, நானும் அவர்களுடன் இங்கிலாந்துக்குச் சென்றிருந்திருக்கலாமோ, இருந்தால் எனது வாழ்க்கை இன்று வேறுவிதமாக இருந்திருக்குமென்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது அவருக்கு. காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தும் இறுதியில் அவை பெறுமதியானவையா என்ற சந்தேகமும் எழுகிறது. காலப்போக்கில், நாங்கள் திருமணம் முடித்தது நாம் விரும்பியவரையா, இல்லையா என்பது முக்கியமற்றதாகவே போய்விடுமென்ற அவரது கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதே.

திருமணம் பற்றியதை விடுத்துப் பார்த்தால், இக்கதாபாத்திரத்தினூடாக மிகக் கூர்மையான அரசியல் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.


4.

இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய பாடப்பரப்பில் Funny Boy ஒரு Text book ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை - அதன் அரசியலைக் கருத்திற்கொண்டு நோக்கின் - அதிசயம்தான். அண்மைய இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு நடந்தது, அவர்கள் நடாத்தப்பட்ட விதம் அனைத்தையும் அறிந்துகொள்வதற்கான ஒரு புனைவியல் (முழுக்க முழுக்கப் புனைவல்லாத போதும்) சாட்சியமாக இதனைக் கொள்ளலாம்.

The araliya tree was bare of its flowers. They, too, must have been stolen. I was struck then by a bitter irony. These araliya flowers would probably be offered to some god as a pooja by the very people who had plucked them, in order to increase their chances of a better life in the next birth.
(pg.311)


குருடராய், செவிடராய், ஊமையாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் இதனை விடவும் அழகாக அதிகார மையங்களை, அதன் நியாய அநியாயங்களை, சமூகத்தின் முரண்நகைகளைக் கேள்விக்குட்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது.