Monday, October 22, 2007

புகையெனப் படரும் பிணங்களின் வாசம்


1.

எந்தச் சந்தர்ப்பத்திலும் நீ அதை எதிர்கொள்ள நேரலாம்
காலப்புதைகுழியின் செவ்விய மண் மூடுண்ட
சிதைந்த சில உடலங்களைப் பற்றிய கதையொன்று
ஊர் நெடுக உலாவித் திரிந்தது தன் தலை சிலுப்பி
இழுத்து விரித்து என் படுக்கையில்
போர்த்தப்பட்டிருந்த ஒரு சவம்
தொண்டைக்குள் நுழைந்துகொண்டு
வார்த்தைகளை வடிகட்டியது
உடல் தின்று செரித்த கவிதை
வடக்கில் பொய்த்த மழை பேய்த்தூறல் தூவ
நீளும் விரல்களைத் தட்டிவிட்டபடி
கடந்து கொண்டேயிருக்கிறாய்,
எழுதப்படாத வார்த்தைகளுள்
உறைந்து கிடக்கும் என் பிணங்களை


2.

விரகம் புலியென வெறிகொண்டெழும் இரவுகளில்
இறுக்கிய தொடைகளின் இடுக்கில்
குரல்வளை நெரித்துக் கொன்ற தாபம்
பற்றைகளின் ஆழங்களில் புதையுண்டு கிடக்கிறது
ஒரு நெடுங்கால மர்மத்தைப் போல
யோனியெனுமொரு பாம்பு நீட்டிய நாக்குடன்
கால்களினூடு கசிய
என் கனவுகளெங்கும் பிணவாசம்
புகையெனப் படர்ந்தது
இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென

எதிர்பாலினப் படிமங்கள்

1.

நீண்டு வளரும் தெருவில்
அனாதையாக யாருமற்று
அலையும் தருணங்களில் உய்த்துணர்கிறேன்
உனது உதடுகளில் சிலபொழுது
கமழ்ந்த என் அன்னையின்
மஞ்சள் குங்கும நெற்றியின் வாசனையை
*(பக்.25)

உனது அணைப்பில்
கஞ்சாவின் மணம்..

நேற்றைய இரவில்
துரும்பாய் உனை மதித்து
தூக்கியெறிந்த குறட்டைகளின் நீட்சியில்
நான் தூங்கி வழிந்தது பொறுக்காமல்
அரைகுறையாய் நீ புகைத்துப் புகைத்து
வீணாக்கிய சிகரட்டின்
சாம்பல் மணம்..

உனது குட்டி போட்ட பூனை நடையில்
அதிர்ந்ததிர்ந்து ஓய்ந்த
இரவின் மணம்..
நிலவின் மணம்

உனது கரங்கள்
பேஸ்போல் மட்டை
கணம் ஒரு விந்தையுடன் இறுக்கும்
வார்ப்பிரும்புச் சங்கிலி

கதறிக் கதறி நெக்குவிட்டுருகும்போதும்
ஒருபோதும் உய்த்துணர முடிந்ததில்லை..,
எந்தையின் மடியிலிருந்து கசியும்,
நான் விரும்பும்
காம்போதியின் குழைவுகளை..


2.

பச்சைக்கிளியின் வளர்ந்த இறகு
வழியில் கிடக்கிறது
இறகை எடுத்துப் பார்க்கும்போது
முழுப் பறவையும் தெரிகிறது
*(பக்.32)

தத்துவவியல் சொன்னது:
இறகை வைத்து பறவையை மதிப்பிடாதே
வாய்ப்புக்கள் அபத்தமாகிப் போகும்
பறவையைக் கொண்டு இறகை மதிப்பிடாமல் விடாதே
முடிவுகள் சாத்தியமற்றுப் போகும்

காற்றில் தவழ்ந்து கூந்தல் சிக்கிய வானம்பாடி இறகு சொன்னது:
பறவையுடன் இருப்பதால்
நானும் பறவையாவதில்லை
என்னைச் சுமப்பதால்
பறவை இறகாவதில்லை

எனது ஒவ்வொரு அணுவும் அது 'நான் தான்'
'நான் தான்'
'நான் மட்டுமே தான்'
நீயற்ற எதுவும் நானாவதில்லை
என்னைப் பிரிந்த நீயும்..


3.

விழுங்கிய நாவல் பழம்
நான் பயந்தபடி வயிற்றில்
முளைத்துவிட்டிருக்கிறது
நாவல் பழக் கண்களோடு
என் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள்
இக்கவிதையை
*(பக்.33)

விழுங்கும் எதுவும்
வயிற்றில் முளைக்குமாமெனில்
வெண்ணிலவை பிடுங்கித் தின்பேன்
நீலக்கடலை அள்ளிப் பருகுவேன்
சுட்டெரிக்கும் தீயை..
விசும்பை..
நெஞ்சை அள்ளிப் போன
ஹரஹரப்பிரியாவின்
ஜன்யமொன்றை..



*சக்கரவாளக் கோட்டம் (ரமேஷ்-பிரேம்)


(இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்பு - ஏறத்தாழ ஒரு வருடமாகிறது - பழக்கதோஷத்தில் வேடிக்கையாய் எழுதிவைத்தது.. ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக் கோட்டம்' தொகுப்பிலிருந்த ரசித்த/ முகஞ்சுளித்த சில கவிதைகளின் உணர்வுகளை ஒரு பெண்ணாய் மீளப் பதிதல்..)

Monday, October 15, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 1

-The God of Small Things

1.

மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்க முடியாது. காரணம், இந்தக் கதை காலங்களுக்கிடையே முன்னும் பின்னுமாக மிக மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பது, சில அபாயகரமான இராட்டினங்களைப் போல.

அண்மையில், அவிசாவளையில் அமைந்திருக்கும் Leisure World க்கு தோழிகள் சிலர் போயிருந்தோம். Space Ship என்ற பெயரில் ஒரு இராட்டினம். விஷயம் தெரிந்தவர்கள் புத்திசாலித்தனமாக நழுவிக் கொண்டார்கள், தலைசுற்றுகிறதென்று. பெயருக்கேற்ற மாதிரி ஒரு கூண்டு. முழுக்க முழுக்க கம்பிகளால் அடைக்கப்பட்டு, போதாக்குறைக்கு இறுக்கமான சீட் பெல்ட்களுடன். இரண்டு கூண்டுகள். ஒன்று கீழேயிருக்கும். மற்றையது பனையளவு உயரத்தில் இதற்கு நேர்மேலே இருக்கும். ஒரு கூண்டில் நான்கு பேர் வீதம் (இருவர் இருவராக) ஒரே நேரத்தில் எட்டுப்பேர் பயணிக்கலாம். அந்தக் கூண்டு பூமியைப்போல தன்னைத்தானேயும் சுற்றும் (அப்படி சுற்றும்போது நாங்கள் தலைகீழாக இருப்போம் கூண்டுக்குள்), மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றும்.

இருக்குமிடத்திலிருந்து மெதுவாக முன்னேறுவதைப் போலிருக்கும், திடீரென்று வேகமெடுத்து ஒரு உலுக்கு உலுக்கி திசைதிரும்பி மறுபடியும் வேகம் குறையும். அடுத்தகணம், ஒரே வீச்சில் பின்புறமாக சுழலத்தொடங்கும். இடம் வலம் மறந்து திசைகள் பற்றிய பிரக்ஞையற்று தலைசுழல அமர்ந்திருப்போம். அதே அனுபவம் இப்பிரதியை வாசிக்கும்போதும்.. நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, கடந்தகாலங்களுக்குச் சட்டென்று தாவி, நிகழ்காலத்துக்கும், கடந்தகாலத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களுக்குமிடையே ஊடாடி மாறி மாறிப் பயணித்து, இறுதியாக கடந்தகாலத்தின் ஏதோவொரு புள்ளியில் சடுதியாக வந்து நின்றுவிடுகிறது.

அது அருந்ததி ரோயின், The God of Small Things.

2.
Once he was inside her, fear was derailed and biology took over. The cost of living climbed to unaffordable heights; though later Baby Kochamma would say it was a Small Price to Pay.
Was it?
Two lives. Two children's childhoods.
And a history lesson for future offenders.

(pg.318)

இறுதி அத்தியாயத்திலிருந்து தொடங்குவதுதான் மிகப் பொருத்தமாயிருக்கக்கூடும். சிறிய குடும்பம், சிறிய விடயங்கள், சிறிய தவறுகள்.. ஆனால், அவற்றுக்கு விலையாகக் கொடுக்க நேர்ந்ததோ, இரண்டு உயிர்களும், இரு குழந்தைகளின் குழந்தைமையும்.

Estha, Rahel - ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பிய (ஆண்,பெண்) இரட்டைக் குழந்தைகள், அவர்களது விவாகரத்துப் பெற்ற அம்மா மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களாகவும், கேரளாவின் Ayemenem எனும் ஊரைக் களமாகவும் கொண்டு நகர்கிறது கதை. இங்கு, The God of Small Things எனக் குறிப்பிடப்படும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அம்மாவுடன் தொடர்புவைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்நண்பராகிய Velutha வும் முக்கிய இடம்பெறுகிறார். பிரதியைப் புறக்கணித்து, காலமாற்றங்களின் அகரவரிசைப்படி கதையைச் சுருக்கமாகக் கூறுவதானால்,

பரம்பரை பரம்பரையாக ஊரில் பேரும் புகழும் பெற்ற ஒரு கிறிஸ்தவக் (Syrian Christians) குடும்பம். அதில், கதையின்படி நான்காவது தலைமுறை அம்மாவும், Chacko வும். அம்மா சிறிய வயதிலேயே வீட்டை விட்டுப்போய் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து கல்கத்தாவில் குடியேறுகிறார். அளவுமீறிய குடிப்பழக்கமுடைய கணவன், ஏதோவொரு தவறில் வேலையை இழக்கும் நிலைக்காளாகிறார். கணவரது மேலதிகாரி, அவரது அழகான மனைவியின் மீதுள்ள நெடுநாள் நாட்டத்தில் வேலை இழப்பைத் தவிர்ப்பதாயின் மனைவியைச் சிலகாலம் தன்னுடன் தங்க அனுமதிக்கும்படி யோசனை கூறுகிறார். கணவரும் இதே யோசனையை அம்மாவிடம் எடுத்துரைக்க, இயலாத கட்டத்தில் அம்மா விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோரின் ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆண்குழந்தையை கணவரிடமே விட்டுவிட அம்மா விரும்பினாலும், பிள்ளைகள் எப்போதுமே தாயின் பொறுப்பாக (சட்டரீதியான குழந்தையாயிருந்தாலென்ன, சட்டத்துக்குப் புறம்பானதாயிருந்தாலென்ன) மட்டுமே கருதப்படுமொரு சமூகத்தில் அது இயலாததாகிவிடுகிறது.

அம்மாவின் அண்ணா Chacko, Oxford பல்கலைக்கழகத்தில் பட்டதாரிப் படிப்பு முடித்து, அங்கேயே ஆங்கிலேயப் பெண்ணொருவரையும் திருமணம் முடித்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்த நிலையில், மனைவி விவாகரத்து வேண்டிவிட ஊருக்குத் திரும்பி வந்து, தனது அம்மாவின் ஊறுகாய், மற்றும் பதப்படுத்திய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் (Paradise Pickles & Preserves) பொறுப்பேற்று நடத்துகிறார்.

அது கம்யூனிஸம் கேரளாவில் பரவத் தொடங்கியிருந்த காலகட்டம். Chacko நிறுவனமொன்றின் முதலாளியெனினும், Oxford காலத்திலிருந்தே கம்யூனிஸத்தின் தீவிர ஆதரவாளர். சாதி வேறுபாடுகளை மறுப்பவர் (ஆனால், தனது வீட்டுக்குள் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்க மாட்டாதது வேறுவிடயம்). பாட்டி, Baby Kochamma, வேலைசெய்யும் Kochu Maria உட்பட 7 பேரைக்கொண்ட குடும்பத்தில் நாட்கள் வெகு சாதாரணமாக நகர்ந்து கொண்டிருக்க, திடீர் திருப்பம் Chacko வின் ஆங்கிலேய மனைவி Margaret மற்றும் மகள் Sophie Mol வருகையுடன் நிகழ்கிறது. Margaret தனது இரண்டாவது கணவர் விபத்தொன்றில் இறந்ததையடுத்து, அதனை மறப்பதற்காகவும், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்கும் நோக்கிலும் மகளுடன் கேரளா வருகிறார். அவர்கள் வந்து சில வாரங்களில் அம்மாவுக்கும், தச்சுவேலை செய்துவரும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த Velutha வுக்குமிடையிலான தொடர்பு வீட்டாருக்குத் தெரியவருவதுடன் (இது Velutha வின் மரணத்துக்கு வழிகோலுகிறது), எதிர்பாரா விபத்தொன்றில் Chacko வின் மகள் Sophie Mol இறக்கவும் நேரிடுகிறது. உயிருக்குயிராய் நேசித்திருந்த மகளை இழந்த Chacko வின் துயரம், ஒருவகையில் அம்மாதான் அதற்குக் காரணமென Baby Kochamma நம்பவைத்துவிட அம்மாவின் மீதான கோபமாக மாறி, அம்மாவையும் குழந்தைகளையும் வீட்டை விட்டுத் துரத்த வைத்துவிடுகிறது.

தொடர்வது, அழகிய குடும்பமொன்றின் சிதைவு. தம்மை ஒருவரிலிருந்து மற்றொருவரென வேறுபிரித்துப் பார்த்திராத, எப்போதும் நான், அவள்/ன் எனக் கருதாது 'நாம்' எனவே சிந்தித்துப் பழக்கப்பட்ட Estha வும், Rahel ம் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். Estha அப்பாவிடம் கல்கத்தாவுக்கு அனுப்பப்படுகிறான். Rahel ஊரிலேயே தங்க அனுமதிக்கப்படுகிறாள். அம்மா வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். குழந்தைகளைப் பராமரிக்கப் போதுமான ஊதியத்தைத் தரக்கூடிய வேலையொன்றை அம்மா பெற்றுக்கொண்டதன் பின்னர் அனைவரும் மறுபடியும் ஒன்றாக வாழலாமென்ற நம்பிக்கையுடன் மூன்றுபேரைக்கொண்ட அச்சிறிய அன்பால் பிணைக்கப்பட்ட குடும்பம் பிரிகிறது.

அவர்கள் மறுபடியும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிட்டுவதற்கு முன்னரே அம்மா - 31 வயதளவில்.. Not old. Not young. But a viable die-able age. இறந்துவிடுகிறார் (இறுதிவரை அப்படிப்பட்டதொரு வேலை அவருக்குக் கிடைக்கவேயில்லை, பாடசாலையொன்றை நடாத்த வேண்டுமென்ற அவரது கனவும் நிறைவேறவில்லை).

Rahel திருமணம் முடித்து அமெரிக்காவில் குடியேறுகிறாள். ஏறத்தாழ இருபது, இருபத்துமூன்று வருடங்கள் இப்படியே கடந்து போக, இவர்களின் அப்பா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர், இனியும் தனது மகனைத் தன்னால் பராமரிக்க முடியாதெனக் கூறி திரும்ப ஊருக்கு அனுப்பி விடுகிறார். Estha ஊருக்கு வந்ததை அறிந்துகொண்ட Rahel (தற்போது கணவரை விட்டுப் பிரிந்தாயிற்று) அமெரிக்காவிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்து காலவோட்டத்தில் அசாதாரணமான முறையில் அமைதியாகிப்போன சகோதரனைக் காண்கிறாள். தற்போது அவர்கள் - two-egg twins - முற்றிலும் மாறுபட்டவர்கள், அவள் மீள்நிரப்பமுடியா வெறுமையுடனும், அவன் அசாதாரணமான அமைதியுடனும்.

இது சிக்கார்ந்த கதையின் மிக மிக எளிமையாக்கப்பட்ட சுருக்க வடிவம். உண்மையான பிரதி இப்படித் தொடங்கி, இதேபோல முடிவதல்ல; இது மட்டுமேயல்ல.


3.
வியக்க வைக்கும் அம்சம் பாத்திர வடிவமைப்பும் வர்ணனையும். ஒவ்வொரு மனிதரையும் செதுக்கியெடுத்திருக்கிறார் ரோய். அவர்களது தோற்றம், நடத்தை, சிந்தனைகளென்பன உருவத்துடன் மறுவிம்பமாக மனதில் விரியும் அதேவேளை உருவமற்ற எண்ணங்களின் அதிர்வுகளுக்கு வடிவங்கொடுத்தவாறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அம்மாவின் கனவில் வந்த ஒற்றைக்கை மனிதனைப் பற்றிய விவரணையில்,

The God of Loss.
The God of Small Things.
The God of Goosebumps and Sudden Smiles.
He could do only one thing at a time.

If he touched her, he couldn't talk to her, if he loved her he couldn't leave, if he spoke he couldn't listen, if he fought he couldn't win.
(pg.312)


அம்மாவையும், சகோதரனையும் விட்டு விலகியிருந்த நாட்களில் Rahel பல பாடசாலைகளுக்கு தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறாள். ஆசிரியையொருத்தியின் வாசலுக்கு வெளியே பசுமாட்டின் சாணத்தை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தமைக்காகவும், கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தமைக்காகவும், மூத்த மாணவிகளுடன் முரண்பட்டமைக்காகவும், தலைமையாசிரியையால் கண்டிக்கப்படுகிறாள். காரணம் கேட்டபோது, தனது மார்புகள் நோகுமா என்பதைப் பரிசீலிப்பதற்காகவே அப்படிச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். கிறிஸ்தவ நிறுவனங்களைப் பொறுத்தவரை மார்புகளின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையாதலாலும், புகை பிடித்தமைக்காகவும், வகுப்பாசிரியையின் பொய்த் தலைமுடியை எரித்தமைக்காகவும் பாடசாலையை விட்டு விலக்கப்படுகிறாள்.

She remained free to make her own inquiries: into breasts and how much they hurt. Into false hair buns and how well they burned. Into life and how it ought to be lived.
(pg.18)


இருந்தபோதும், காலம் அவளை வெறுமையின் உறைவிடமாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்து வளர்ந்த பெண்ணாக வெறுமையையும் கூடவே அழைத்துக்கொண்டு அவள் திரும்பி வருகையில், அவளது சகோதரன் Estha ஒரு கிழவனின் வாயுடன் கூடிய இளைஞனாக வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறாள்.

He carried inside him the memory of a young man with an old man's mouth. The memory of a swollen face and a smashed, upside-down smile. Of a spreading pool of clear liquid with a bare bulb reflected in it. Of a bloodshot eye that had opened, wandered and then fixed its gaze on him. Estha.
(pg.32)


காலமும், அனுபவங்களும், தொலைந்துவிட்ட குழந்தைமையும் அவர்களை அவ்விதம் மாற்றிவிட்டிருந்தன. The Quietness & The Emptiness.

அம்மாவின் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படும் விதமும் மிகச் சிறப்பானது. தன் குழந்தைகளின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்த போதும், சமயங்களில் தனது உணர்வுகளை முன்னிலைப்படுத்துவதில் அவள் தயக்கம் காட்டவில்லை. பகல் கனவொன்றின் போது ஒற்றைக் கை மனிதனுடன் கடற்கரையோரத்தில் அவள் தனித்து அலைகிறாள், அந்தக் கனவில் தனது குழந்தைகளை விட்டு அவள் வெகுதூரம் விலகிவிட்டிருந்த போதும் அந்தக் கனவு மனிதனின் மீதான நேசத்தையும் விட்டுக்கொடுத்தாளில்லை. குழந்தைகள் அவளது வயிற்றின் பிரசவக் கோடுகளையும், தையல் தடங்களையும் தடவிக்கொடுத்து முத்தமிடுகையில்கூட அதை மூர்க்கமாகப் புறக்கணிக்கிறாள்.

Ammu grew tired of their proprietary handling of her. She wanted her body back. It was hers. She shrugged her children off the way a bitch shrugs off her pups when she'd had enough of them.
(pg.211)


இது அம்மாமாரின் மற்றும் தாய்மையின் புனிதம் பற்றி காலங்காலமாக நாம் கொண்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிவதாகவுள்ளது. தனது உடல் குறித்தான கரிசனை கொண்டவளாக Estha, Rahel ன் அம்மா சித்தரிக்கப்படுகிறாள்; ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிடவும்படுகிறாள். அம்மாமாரைக் கடவுளரின் மறுவுருவமாகவல்லாது (தந்தைவழிச் சமூகத்தின் நலன்களைப் பேணுவதும், பெண்களின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதுமே இந்தக் கடவுளர் மயமாக்கலின் அடிப்படை நோக்கம்), சராசரி உணர்வுகளுடன் கூடிய மனுசியாக அணுகுமிந்தப் பார்வை இன்னமும் விரிவாக நோக்கப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான உறவு வீட்டாருக்குத் தெரியவந்து அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொழுதில் நடந்தது புரியாமல் திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து அவள் கத்துகிறாள்:

If it wasn't for you I wouldn't be here. None of this would have happened. I would have been free. I should have dumped you in an orphanage the day you were born. You're the millstones round my neck.
(pg.240)


அவளது இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வே இங்கு முக்கியம் பெறுகிறது. நீங்களில்லாவிடில் இந்த இடத்தில் நானிருந்திருக்கவும் மாட்டேன்; இப்படியெல்லாம் அவமானப்பட்டிருந்திருக்கவும் மாட்டேன்; சுதந்திரமாக இருந்திருப்பேன் என்கிறாள். குழந்தைகளைப் பொக்கிஷமாகக் கருதும் எமது ideal தாய்மாருடன் ஒப்பிடுகையில் குழந்தைகளைச் சுமையெனத் திட்டும் இவளை எங்கே கொண்டுபோய் வைப்பது? ஆனால், யதார்த்தம் பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறது. குழந்தைகள் தாயின் பொறுப்பாக சுமத்தப்படுவது அவளது சுதந்திரத்துக்கான தடைக்கல்லாக அக்குழந்தைகளை மாற்றிவிடுகிறது. அதேயிடத்தில் ஆனானப்பட்ட தாய்மையின் 'புனிதம்' வெறும் myth ஆகிவிடுகிறது. But, she's the real woman.

4.

நாவலில் அதிகம் ரசிக்க வைப்பது அருந்ததி ரோயின் மொழிநடையும் கதை சொல்லும் பாணியும். சிறுவர்களின் உலகை மிக மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் அல்லது வாழ்ந்து காட்டியுள்ளாரெனலாம். சமயங்களில், சிறுவர்களது சிந்தனை வியக்க வைப்பது. நாம் சற்றும் எதிர்பார்த்திராத அதிக கவனம் பெற்றிராத மிகச் சிறிய விடயங்கள் கூட சிறுவர்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. அவர்களுடன் பழகுவதை நாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அவர்களது கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொல்கிறோம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் எமக்கு பலதையும் கற்றுக் கொடுப்பவர்களாகவும், தம் சந்தேகங்களால் எம்மை அசைத்துவிடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது கேள்விகளை சிடுசிடுத்துக்கொண்டு புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான பதில் எமக்குத் தெரிந்திராமைதான். சிறுவயதில் அத்துணை சாமர்த்தியசாலிகளாகவிருப்பவர்கள் வளர்ந்ததும் வெகு சாதாரண மனிதர்களாகி விடுகின்றமைக்கு அவர்களது அலட்சியத்துடன் எதிர்நோக்கப்பட்ட கேள்விகளும் பெரியவர்களது புறக்கணிப்புக்களுமே காரணமாகவிருக்கலாம். அல்லது 'சின்னத்தனங்களிலிருந்து' விடுபட்டு பெரியவர்களின் உலகுக்குள் நுழையும் பேரவாவில் தாமாகவே தமது சிந்தனையைச் சுருக்கிட்டுக் கொண்டதாகவும் கருதலாம். எம்மால், சிறுபிள்ளைத்தனங்கள் எனக்குறிப்பிடப்படுபவை உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவையா என்ற கேள்வியும் எழுகிறது.

Sopie Mol ஐ ரோய் இப்படி விபரிக்கிறார்,

The seeker of small wisdoms: Where do old birds go to die? Why don't dead ones fall like stones from the sky?
The harbinger of harsh reality: You're both whole wogs and I'm a half one.
The guru of gore: I've seen a man in an accident with his eyeball swinging on the end of a nerve, like a yo-yo
(pg.17)

மற்றையது, சில விடயங்களை அவர் எடுத்துச் சொல்லும் பாணி,

While other children of their age learned other things, Estha and Rahel learned how history negotiates its terms and collects its dues from those who break its laws. They heard its sickening thud. They smelled its smell and never forget it.
History's smell.
Like old roses on a breeze.
It would lurk forever in ordinary things. In coat hangers. Tomatoes. In the tar on roads. In certain colors. In the plates at a restaurant. In the absence of words. And the emptiness in eyes.
(pg.54)
வரலாற்றின் தன்மை, Estha, Rahel ன் அம்மா சமூகத்தின் (வரலாற்றின்) விதிகளை மீறியதை அந்தக் குழந்தைகள் உணரும் விதம்..

அவர்களது வாழ்வு இப்படித் தடம்புரண்டு போனமைக்கு Sopie Mol ன் வருகையும், அவள் இறந்தமையும்தான் காரணமென்பது வெறுமனவே ஒருபக்கத்தால் மட்டும் அவ்விடயத்தை அணுகுமொரு முறைதான். உண்மையில் இவையனைத்தும் இந்தக் கதை நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதிக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டிருந்தன.

That it really began in the days when the love laws were made. The laws that lay down who should be loved, and how. And how much.
(pg.33)


யார், எப்படி, எந்தளவு நேசிக்கப்பட வேண்டும் என்ற அன்பின் விதிகள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பிரச்சனைகள் முளைவிடத் தொடங்கிவிட்டிருந்தன. அம்மா இந்த விதிகளை மீறினார். யார் யார் நேசிக்கப்படத் தகுந்தவர்களென்ற பட்டியலில் இடம்பெற்றிராத தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவரை அவர் நேசித்தார். அத்தகையவர்களை எப்படி நேசிக்கவேண்டுமென்ற விதிகளைக் கடந்து, எந்தளவு நேசிக்கவேண்டுமென்ற அளவு கடந்து எல்லைதாண்டி நேசித்தார். அவரது அந்த நேசம் அவரால் நேசிக்கப்பட்டவரின் உயிரையும், அவர் குழந்தைகளின் குழந்தைமையையும் விலையாகப் பெற்றுக்கொண்டது. ரோய் சொல்வது போல, however, for practical purposes, in a hopelessly practical world... (pg.34)

ஆண்குழந்தை Estha தியேட்டரொன்றில் வைத்து குளிர்பான விற்பனையாளனொருவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக்கப்படுகிறான். அவ்விற்பனையாளனின் ஆணுறுப்பைக் கையில் பிடித்திருப்பதற்குப் பரிசாக குளிர்பானமொன்று அவனுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தான் துஷ்பிரயோகத்துக்காளாவது புரியும் வயதில் அவனில்லையெனினும், அந்த அருவருப்பு, அச்சம்பவம் அவனில் ஏற்படுத்திய தாக்கம், இது தெரியவந்தால் அம்மா தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயம் (குழந்தைகள் எப்போதும் தாம் நேசிக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள்), அந்த மனிதனை மறுபடியுமொருமுறை சந்திக்க நேருமோ என்ற கலக்கம், அதேநேரம் தனது சகோதரியை அந்த மனிதனிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அனைத்துமிணைந்து வீட்டை விடப் பாதுகாப்பானதோர் இடத்தை ஆற்றுக்கு அப்பால் தேர்ந்தெடுக்க அவனை வழிநடத்துகின்றன. ஒருவகையில் இதுவே Sopie Mol ன் மரணத்துக்கும் காரணமாயமைகிறது. பிற்காலத்தில் அவனது ஆளுமையிலும் பாரிய மாற்றத்தையேற்படுத்துகிறது. சிறிய, சாதாரணமாகத் தோற்றமளிக்கின்ற விடயங்கள் எப்போதும் அதனையொத்த விளைவுகளை மட்டுமே தந்துவிடுவதில்லையென்பதை இது உணர்த்திச் செல்கிறது.

சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் நடாத்தும் விதத்திலுள்ள பாரிய வேறுபாட்டையும் இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. விவாகரத்துப் பெற்றுக்கொண்ட Chacko வின் Men's needs னைப் புரிந்துகொண்ட அவரது அம்மா (மம்மாச்சி) பெண்கள் தொந்தரவின்றியும், யார் கண்ணிலும் படாமலும் அவரது அறைக்கு பின்புறமாக வந்து செல்லக்கூடியவாறு புதிய வாயிலொன்றையும் அமைக்கிறார். உணவுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளையும், குடிகாரக் கணவன்மாரையும் கொண்ட தொழிற்சாலைப் பெண்கள் பணத்துக்காக தாராளமாக அங்கு வந்து போயினர். ஆனால், அதேவேளை அதேபோல விவாகரத்துப் பெற்ற அம்மாவின் Women's needs புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியத்துக்குரியதே. அம்மாவுக்கும் வேலுதாவுக்குமிடையேயான தொடர்பு தெரியவந்ததும் சீறிப்பாயும் மம்மாச்சி அம்மாவை அறையொன்றினுள் அடைத்து வைக்குமளவு கோபம் கொண்டமையும், இது வெளியில் தெரியவந்தால் குடும்பத்தின் மானம் மரியாதை என்னாகுமென்று வருந்துவதும் கவனிக்கத்தக்கது. குடும்பத்திலுள்ள ஆண் என்ன செய்தாலும் தொலையாத மானமும், மரியாதையும் பெண் என்றவுடன் கண்காணாத் தொலைவுக்குப் பறந்து விடுகின்றன. இங்கு மறுபடியும் 'அன்பின் விதிகளின்' (யார் நேசிக்கப்பட வேண்டும், எப்படி & எந்தளவு) ஆட்டம் தொடங்குகிறது.


5.

கேரளாவில் அப்போது பரவிக்கொண்டிருந்த மார்க்ஸிஸம் மற்றும் பூகோளமயமாக்கலுக்கெதிரான வலிமையான விமர்சனம் நாவலினூடு முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் வேறெந்தப் பாகத்தையும்விட கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகளவு பலம் பொருந்தியதாக விளங்கியமைக்கு அங்கு கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழ்ந்தமையையும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. மார்க்ஸிஸத்தை கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும் ரோய் கிறிஸ்தவமும் மார்க்ஸியமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்த தன்மைகளைக் (similar characteristics) கொண்டிருப்பதனால், இந்துக்களை விட கிறிஸ்தவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு வாய்ப்புண்டாகியிருக்கலாமென்கிறார்.

Marxism was a simple substitute for Christianity. Replace God with Marx, Satan with the bourgeoisie, Heaven with a classless society, the Church with the Party, and the form and the purpose of the journey remained similar. An obstacle race, with a prize at the end.
(pg.64)


ஆனாலும், இந்தக் கோட்பாட்டிலிருந்த குழப்பம் யாதெனில் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் யாவரும் பெரும்பாலும் தோட்டங்கள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்களான நிலப்பிரபுக்களாகவே இருந்தமை; மரணத்தை விடப் பயங்கரமான விடயமாக கம்யூனிஸத்தைக் கருதும் இந்தக் கிறிஸ்தவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தும் வந்தமை. கேரளாவில் கல்வியறிவு உயர்நிலையில் காணப்பட்டமையும் கம்யூனிஸத்தின் பரவலுக்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது. ஆனாலும் உண்மையில், சாதிப்பாகுபாடுகளுக்குள்ளான, மரபார்ந்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகத்தை ஒருபோதும் கேள்வி கேட்காத மறுசீரமைக்கும் அமைப்பாக மட்டுமே கம்யூனிஸம் கேரளாவில் அறிமுகமானதெனலாம். அதன் ஆதரவாளர்களும் சாதிப் பாகுபாடுகளுக்குட்பட்டே செயற்பட்டமையும் குறிப்பிடத்தகுந்தது.

The Marxists worked from within the communal divides, never challenging them, never appearing not to. They offered a cocktail revolution. A heady mix of Eastern Marxism and orthodox Hinduism, spiked with a shot of democracy.
(pg.64)

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கிய நம்பூதிரிபாட் தேர்தல்களில் பங்குபெறுவதிலும், தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தமையும், அதன் விளைவாகக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டமையும், தீவிரவாதப் பிரிவினர் நக்ஸலைட்டுகளாகச் செயலாற்றத் தொடங்கியமையும் மேலும் கவனத்திற்கொள்ளத்தக்கன.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக (card holding member) இருந்த வேலுதாவின் மீது அம்மாவின் குடும்பத்தினர் பொய்யான குற்றப்பதிவு தாக்கல் செய்தபோது, தனிப்பட்ட விடயங்களில் தலையிட முடியாதென கட்சியும் அவனைக் கைவிட்டு விடுகிறது. இறுதியில் பொலிசாரினால் அடித்து நொறுக்கப்பட்டு இறக்கும் தறுவாயில், இதுவரைகாலமும் கடவுளாலும், வரலாற்றாலும் கைவிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவனை இப்போது மார்க்ஸும் கைவிட்டுவிட்டாரென்கிறார் ரோய்.

பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்குச் சிறந்த உதாரணமாக, கதைநிகழ் காலத்தைய Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் திகழ்கின்றனர். செய்மதித் தொலைக்காட்சி மூலம் உலகத்தில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்வுகளையும் நாள் முழுதும் அறைக்குள்ளிருந்தே கண்டுகளிப்பதுடன், அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு இரு தடவை வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் இருவரும். Baby Kochamma தனது வீட்டிலிருக்கும் தளபாடங்கள் பொருட்கள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர்.அவரது மார்க்ஸிய - லெனினிஸம் மற்றும் புரட்சி பற்றிய பழைய பயங்கள், BBC யில் ஒளிபரப்பப்படும் வறுமை, யுத்தங்கள் பற்றிய செய்திகளால் மீள்வடிவம் பெறுகின்றன. வறுமையும், படுகொலைகளும் அவருக்குத் தனது வீட்டுத் தளபாடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கும் காரணிகளாகவே தோற்றமளிக்கின்றன. எந்தக் கணத்திலும், தொலைக்காட்சியில் தென்படும் யாரேனுமோர் வறியவன் தனது பொருட்களைத் திருடிக்கொண்டு விடலாமென்ற பயத்தில் யன்னல்களைக் கூட எப்போதும் மூடியே வைக்கிறார். மெய்மறந்து தொலைக்காட்சியை இரசிக்கும் நேரங்களில் Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் ஒரே கிண்ணத்திலிருந்து வேர்க்கடலையை அள்ளியெடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வது, பூகோளமயமாக்கமும், செய்மதித் தொலைக்காட்சி நிகழ்வுகளும் அந்தப் பழைய வீட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவந்து விட்டனவெனக் கிண்டல் தொனியுடன் குறிப்பிடப்படுகிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின், அருந்ததி ரோயின் இந்த நாவல், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததும், தன்னால் போற்றப்பட முடியாததுமானவற்றை அழிப்பதற்கு மனிதருக்குள்ள தீராத ஆவலை எடுத்து விளம்புவதாகவுள்ளது.

Feelings of contempt born of inchocate, unacknowledged fear - civilization's fear of nature, men's fear of women, power's fear of powerlessness.
Man's subliminal urge to destroy what he could neither subdue nor deify.
Men's Needs.

(pg.292)


இங்கு விலையாகக் கொடுக்கப்பட்டவை (மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு மீள்கிறோம்):

இரு குழந்தைகளின் குழந்தைமை
பெண்ணின் நேசம்
மற்றும், The God of Small Things


வரலாற்றின் விதிகளை மீறுபவர்களுக்கு இது மிகச் சாதாரணமான தண்டனையாக/ விலையாகத் தோன்றலாம்.
ஆனால்..,
நிச்சயமாக அது சாதாரணமானது தானா??


(நன்றி:- புத்தகத்தை அன்பளித்த தோழனுக்கு...)

Friday, October 12, 2007

ஒரு துண்டும் சில தகடுகளும் குறித்து...

'நச்சுப் பொய்கையொன்றின் நடுவே ஒரு செந்நிறத் தாமரை பூத்தது. அதுக்கு தான் *வெடிபலவன் மாதிரி இருக்கவேண்டுமென்று விருப்பம். தன்ரை கண்ணைக் குத்துற சிவப்பு அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி வெள்ளையாய் இருக்கோணும். தன்ரை கால் சேத்துக்குள்ளை புதைஞ்சிருக்கிறதும் அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி கால்கள் பற்றின உணர்வேயில்லாமல் பறந்து திரியோணும்.

தண்ணியில் கழுவிக் கழுவி தன்ரை சிவப்பில் கொஞ்சத்தை ஒருவழியா போக்கிக் கொண்டது. சரியா நொந்ததென்டாலும் தன்ரை காலை சேத்துக்குள்ளையிருந்து பிடுங்கியும் கொண்டது அந்தப் பிடிவாதம் பிடிச்ச தாமரை.

இப்ப அது வெள்ளையில்லை, ஆனா சிவப்பாவும் இல்லை. இப்பவும் அதாலை பறக்க முடியேல்லை, ஆனா ஒரே இடத்தில் முந்திமாதிரி புதைஞ்சும் இல்லை.

அது முக்கியம்.

தண்ணிக்குள்ளை தன்ரை பாட்டுக்கு மிதந்து திரிய முடிஞ்சது. அந்தமட்டில் அதுக்கு சந்தோஷம்தான்.'


ஏதோவோர் புள்ளியிலிருந்து தொடங்கியாகத்தான் வேண்டும், அல்லது கோட்டிலிருந்தாவது. ஒரு கதையெழுதவென உட்கார்ந்தேன்.. அந்தக் கதை என் மூளையிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது.

..................

மேசையின் மேலிருந்த அழைப்பிதழை அவள் வெறித்துக் கொண்டேயிருந்தாள். கணங்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வருடங்கள் யுகங்களாகி காலம் அவள் கண்ணெதிரே ஒரு நீர்த்திவலையென உருண்டோடிக் கொண்டிருந்தது.

இந்தத் திருமணத்துக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா?

'வேண்டும்' என்பதற்கான காரணங்கள்:
- அது மிக மிக நெருங்கிய தோழியின் திருமணம்.
- பாடசாலைக் காலத்துக்கு முன்பே அறிமுகமாகி இன்றுவரையும் வாழ்வின் மேடு பள்ளங்கள், கோணல்மாணல்கள், இன்பதுன்பங்கள் அனைத்திலும் பங்குகொண்டவள்.
- கட்டாயம் வர வேண்டுமென்று நேற்றும் தொலைபேசியில் தனியாக அழைப்பு விடுத்திருந்தாள்.
- அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணமொன்றில் நான் கூடவிருந்தாக வேண்டியது கட்டாயம்.
- போகாவிட்டால் ஒருபோதும் என்னை மன்னிக்க மாட்டாள்.
- ஒரு அருமையான நட்பை இழந்து விடுவேன்.
- என்னில் அதிகம் அக்கறை கொண்டிருப்பவளை மனம் வருந்தச் செய்துவிடுவேன்.
- etc. etc.

'வேண்டாம்' என்பதற்கான காரணங்கள்:
- அந்த இடத்தில் நான் நானாக இருக்க மாட்டேன்.
- சாறி உடுத்த வேண்டும், அது என்னால் முடியாது.
- காது கழுத்துக்கு ஏதாவது போட்டுக்கொண்டு போகவேண்டும், அதுவும் என்னால் முடியாது.
- ஆக மொத்தத்தில், என் சுயத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும்.

'நீ ஒன்டும் போடாமல் வந்தாலும் நான் எதுவுமே சொல்ல மாட்டன், வந்தால் காணும், எனக்கென்னமோ யோசனையாவேயிருக்கு வர மாட்டியோ என்டு'' (நன்றாகவே புரிந்து கொண்டிருப்பவள்).
'எனக்கும் ஒன்டும் போடாமல் வர விருப்பம்தான்.. பிறகு உன் மாப்பிள்ளை மயங்கி எனக்குப் பின்னால் வந்தாரென்டால்.., வேண்டாம், என்னாலை ஏன் ஒரு கல்யாணம் குழம்ப வேணும்'

வேடிக்கையாகப் பேசுவதொரு வித்தைதான். இக்கட்டான சந்தர்ப்பங்களிலிருந்து அவ்வப்போது நழுவிக்கொள்வதற்கான சிறந்த உபாயம். யாரையும் காயப்படுத்தாமலும், அதேநேரம் பிடிகொடுக்காமலும் கேள்விகள், மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துக்கொள்ளலாம், அந்த நேரத்துக்கு மட்டும். அதுவொரு தற்காலிக தப்பித்தல்.

சாறி கட்டத்தானே பிடிக்காது; சல்வார் இல்லாட்டி குர்தா ஏதும் போட்டுக்கொண்டு போகலாம். ஆனால், திருமண வீட்டில் அவள் மட்டுமொரு விநோதப் பிராணியாகிப் போவாள். ஆண்களை கோட் சூட்டுக்குத் தாவ அனுமதித்த திருமணங்களில் கூட பெண்களுக்கு சாறியிலிருந்து விடுதலையே இல்லை. 'எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குடைய பெண்கள் மட்டும் ஆவதேயில்லை' எங்கேயோ வாசித்திருந்த கவிதை அவள் நினைவுக்கு வந்தது. எல்லாம் ஒன்றுதான். பண்பாடும், மரபும் பெண்களாலேயே கட்டிக் (சாறி கட்டி, தாலி கட்டி) காப்பாற்றப்பட வேண்டும். ஆண்கள் அனைத்தையும் மொனிட்டர் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

சாறி கட்ட, நகை போட ஏன் பிடிக்காது? இது அவள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பதில் (கேள்வியின் தோரணையைப் பொறுத்து) அவள் கைவசமிருக்கும்.

அதிகாரத்துடன் அல்லது இளக்காரத்துடன் மூன்றாம் பேரால் கேட்கப்பட்டால்:
'என் உடம்பு.. எதுவும் போடுவதும் போடாததும் என் இஷ்டம்.. நீங்கள் யார் அதைப்பற்றிக் கவலைப்பட'

அக்கறையுடன், உண்மையாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் (மூன்றாம் தரவழி):
'நானொரு உயிருள்ள மனுசி.. ஷோக்கேஸ் பொம்மையில்லை.'

மிக நெருங்கிய யாரும் எந்தத் தோரணையுடன் கேட்டாலும்:
'விருப்பமில்லை'
வேறென்ன, மௌனம்ம்ம்...

ஒருமுறை அப்பாவின் நண்பரொருவர் 'ஏன் தோடு போடுவதில்லை?' எனக் கேட்டபோது, இதே கேள்வியைப் பல்லாயிரம் முறை எதிர்கொண்ட சலிப்பில் அமைதியாக அவரை நோக்கி 'ஏன் போட வேண்டும்?' எனத் திருப்பிக் கேட்டாள். சுவரில் மோதுண்ட பந்தைப் போல எதிர்பாராத மறுகேள்வியில் ஒருகணம் அதிர்ந்துபோய் வாயைப் பிளந்தார் அவர். 'she's really a smart girl..' அவரது வியப்பு வார்த்தைகளில் தொனித்தது. 'அது எங்கடை tradition என்டதுக்கும் அப்பாலை இந்தக் கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. அடுத்தமுறை உங்களைப் பார்ப்பதற்கு முதல் இதுக்கு பதில் கண்டுபிடித்து விடுகிறேனா பார்ப்போம்' என்றுவிட்டுப் போனார். அந்தக் கணத்தில் அவளுணர்ந்த சந்தோஷம், அது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. மிக மிக நுணுக்கமான முறையில் அவளை விளங்கிக்கொண்டவர் அவர் மட்டும்தான். மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன். எ+கா 4 அபத்தம்: ஆண்கள் கோட்சூட் போட்டாலும் தொலையாத பண்பாடு சேலை கட்டியவுடன் காப்பாற்றப்பட்டு விடும்) காரணங்களுக்கு அப்பால் எதற்காக சாறி உடுத்தவும், தோடு போடவும் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.

பெண்களுக்கான அடையாளங்களாய் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைப் புறக்கணித்து வாழ்வதன் சிரமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். 'என்ன தைரியம் உனக்கு இப்படிப் பண்ண' என்ற அதிகாரப் பார்வைகள், 'ஐயோ பாவம் அவ்வளவு வசதியில்லை போல' என்ற அங்கலாய்ப்புக்கள், 'வடிவாய் வெளிக்கிடத் தெரியாத பெட்டை' என்ற இளக்காரங்கள் கூடப் பரவாயில்லை. 'நீ இப்படியிருப்பதெல்லாம் மற்றவர்களிடமிருந்து உன்னை வித்தியாசமாய்க் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களது attention ஐ உன் பக்கம் திருப்பவும்தான், எல்லாரும் உன்னிடம் வந்து நீ ஏன் இப்படியென்று கேட்பதில் உனக்கு ஒருவித சந்தோஷம்' என்பதான அல்லது 'மற்றவர்களுக்கு முன்னால் உனது இமேஜை விட்டுக்கொடுக்காமலிருக்கத்தான் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய், மற்றபடி உண்மையில் உனக்கு விருப்பமில்லாமலில்லை' என்பதான 'நான் இப்படி' களை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவளுக்கு உண்மையில் 'தான் எப்படி' என்பதே ஒருவித குழப்பமாகிப் போனது.

இருந்தாலும் அருமையான குடும்பமொன்று அவளுக்கு வாய்த்திருந்தது. 'இப்படி தோடு கூட போடாமலிருந்தால் கல்யாணத்துக்கு வாற சனமெல்லாம் எங்களுக்கென்னமோ வசதியில்லையென்டு நினைக்கும்' என அங்கலாய்த்தாலும், 'நாங்கள் வசதியாயிருக்கிறமா இல்லையா என்டதை ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன.. வசதியில்லாட்டியும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கிக்கொண்டு போட்டு அழகு காட்டுற ஆக்களைப் பார்த்த பிறகுமா இப்படிக் கேட்கிறீங்கள்' என திருப்பிக் கேட்கும் மகளை நினைத்து உள்ளூரப் பெருமைகொள்ளும் அம்மா. சாமத்தியப்பட்டபோது இதெல்லாம் ஒன்றுமேயில்லையென்டு உடனேயே வெளியில் திரிய அனுப்பினவா, இவ்வளவுக்கும் அவளின் தோழிகளெல்லாம் ஒரு மாதம் வரை அறையை விட்டே எட்டிப்பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சுதந்திரமாகச் சிந்திக்கப் பழக்கிய அப்பா. 'என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறீங்கள்' என்று விடுப்புக் கேட்பவர்களுக்கெல்லாம், 'என் பிள்ளையை நான் சராசரி பொம்பிளையா வளர்க்கவில்லை' என்று அடிக்கடி சொல்பவர். உண்மைதான்.., திருமணச் சந்தையில் விலைபோக தன் பிள்ளையை அவர் வளர்க்கவில்லைதான்.

ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிடிவாதங்களும் இந்தக் குடும்பத்துக்குள் இருக்கும்வரை மட்டும்தானென்பதும் அவளுக்குத் தெரிந்துதானிருந்தது. திருமணம் போன்ற சட்டகங்களுள் அடைபட்டால் அதற்கேயான விதிகளுடன் தான் (அவரின் விருப்பம், பிள்ளைகளின் விருப்பம், இனசனத்தின் விருப்பமென்று - அவளது விருப்பத்தை யார் பொருட்படுத்துவார் - சுயம் துண்டு துண்டாய்ச் சிதறி திசைக்கொன்றாய்ப் பறக்க) தொடர்ந்து வாழவேண்டிவரும், எமது விதிகளையும் ஒழுக்கங்களையும் தொலைத்துவிட்டு. 'நானும் விழுமியங்களுடதான் வாழ்கிறேன். ஆனால், எனக்கான விழுமியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் நானே உருவாக்கிக் கொள்கிறேன்' (-அருந்ததி ரோய்?) எங்கேயோ வாசித்தது போல வாழ்ந்துவிட விருப்பம் தானெனினும், அதற்காகத் தனித்திருக்கவும் தயாரில்லை. ஏன் மனிதராய்ப் பிறந்த அனைவரும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், துணை தேடவும் சபிக்கப்பட்டிருக்கிறோம்..? நேசம் அவளது மாபெரும் பலவீனம்!

எப்படிப் பார்த்தாலும் அவள் இன்று திருமணத்துக்கு போய்த்தானாக வேண்டும். தனது சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஒரு உறவை இழந்துவிட முடியாது. போகத்தான் வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கினால் பின்னும் அவள் முன் இரு தெரிவுகள்:
1. சாறி உடுத்திக்கொண்டு, நகையணிந்து போவது (சமூகத்துடன் ஒன்றிவாழும் முயற்சி. ஆனால், விருப்பமில்லாத ஒன்றை வருந்திச் செய்ததில் இயல்பாக இருக்க முடியாமற் போகும்)
2. வேறேதாவது இயல்பு குலையாமல் அணிந்து கொண்டு தான் தானாகவே போவது (ஆனால் நிறைய விநோதப் பிராணி பார்வைகளையும், கேள்விகளையும் எதிர்கொள்ள நேருமாகையால் அங்கும் இயல்பு குலையாமலிருக்குமா என்பது சந்தேகமே)

உறவுகள் வேண்டுமென்றால் 'என்'னை இழக்கவேண்டிவரும். எனது 'என்' வேண்டுமென்றால் உறவுகளை இழக்கவேண்டி வரும். நான் நானாக.., இதே மனிதர்களுக்கு மத்தியில் அவர்களை நேசித்துக்கொண்டு வாழ்வது எப்படி???


மனம் இவ்வளது தூரம் வட்டமிட்டு வரும்வரை அவள் அழைப்பிதழை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாளென்று எழுதிக்கொண்டு அவசர அவசரமாக கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறேன்.

.....................

கேரளாவில் ஆதித்தாய்வழிச் சமுதாயம் நிலவியதன் எச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள் அங்கு பெண்கள் பெரும்பாலும் வெள்ளை நிற சேலை கட்டுவதைக் குறிப்பிடலாம் என்கிறார் ஜெயமோகன் (ஆழ்நதியைத் தேடி-கட்டுரைத் தொகுப்பு). வெள்ளை நிறச் சேலைக்கும் ஆதித்தாய்வழிச் சமுதாயத்துக்குமான தொடர்பு என்னவென்ற கேள்வியெழலாம். தாய்வழிச் சமுதாயத்தில் பெண்களுக்குப் பாலியல் சுதந்திரமிருந்தது. அங்கு அவர்கள் எவரையும் கவர்ந்திழுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. கண்கவர் வண்ணங்களில் ஆடை அணிவதும், தம்மை அலங்கரித்துக் கொள்வதும் எதிர்பாலாரைக் கவர்ந்திழுக்க வேண்டிய, பெண்களுக்குப் பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட, தந்தைவழிச் சமுதாயத்திலேயே அறிமுகமாகியிருக்கலாமெனும் ரீதியில் தொடர்பை நிறுவுகிறார் அவர்.

பெண்ணுடம்பு மிக மிக இயல்பாய்ப் பண்டமயமாதல் எனவும் தலைப்பிட்டிருக்கலாமோ?



*வெடிபலவன் - ஒருவிதத் தாவரம். பஞ்சைப்போல காற்றில் பறந்து செல்லும் கீழே ஒரு சிறிய விதையுடன்.