Thursday, November 08, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 2

Baudolino
by Umberto Eco


1.

வரலாறு நமக்குத் தேவைதான், ஆனால் அறிவின் தோட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றித் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும் விதத்தில் அல்ல.
- நீட்ஷே (Nietzsche, Of The Use And Abuse Of History)


இந்த வரலாற்று மற்றும் மர்ம நாவல்கள் மீதான மோகம் அக்காவிடமிருந்து தொற்றிக் கொண்டதாயிருக்க வேண்டும். பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கப் பழகியிராத வயதுகளில், விழிகளை உருட்டி உருட்டி அக்கா கதைசொல்லும்போது வாய் பிளந்தபடி நானுமொரு கதாபாத்திரமாய் அந்தக் கதைகளுக்குள் வாழ்ந்திருக்கிறேன். அவளொரு சிறந்த கதைசொல்லி. சம்பவங்களை விழிமுன் படமென விரியச் செய்வதிலும், வரைபடங்கள் வரைந்து சமயங்களில் நடித்தும் காட்டுவதிலும் அவளை மிஞ்ச யாருமில்லை. கதை கேட்கும் ஆர்வத்துக்காகவே புத்தகம் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்து, கதை சொல்லி முடியும்வரை நல்ல பிள்ளையாக சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு காலம்.

ஒன்பதோ பத்து வயதில் வாசித்த பொன்னியின் செல்வனிலிருந்து வரலாறும் அதன் மர்மங்களும் மிகவும் ஈர்க்கத் தொடங்கின. ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து அக்காவுடனும், தோழிகளுடனும் மணிக்கணக்காய் விவாதித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அதைத் தொடர்ந்து வாசிக்க நேர்ந்த வரலாற்று நாவல்களில் மனதில் இன்னும் நிலைத்திருப்பது Paul Doherty யின் The House of Death - மாவீரன் அலெக்ஸாண்டரினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகையைப் பற்றியது. மன்னர்களின் பலவீனங்களை, தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் ஒரு மர்ம வரலாற்று நாவல். மற்றும் சில படங்கள் - ராஜராஜசோழன் வகையறா தமிழ்ப்படங்களல்ல - First Knight, Brave Heart, Troy போன்ற ஹொலிவுட் வணிகப் படங்களும், The Grief of The Yellow River (2ம் உலகமகாயுத்தத்தின் போதான சீனாவைக் கதைக்களமாகக் கொண்டதோர் படம்), Les miserables, Anna and The King போன்ற கொஞ்சம் நடுத்தரப் படங்களும், Europa Europa, Sabiha Sumar ன் Silent Waters, Lumumba போன்ற குறிப்பிடத்தக்கனவும், இன்னும் பெயர் நினைவுக்கு வராத சிலவும் ஏதோவொரு வகையில் வரலாறும் மானுடமும் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்தன.

இவை அனைத்திலுமிருந்து வரலாறு குறித்த சில முடிவுகளுக்கு வர முடிந்தது:
- மானுட குல வரலாற்று அத்தியாயங்கள் பெரும்பாலும் கறைபடிந்தவை. அல்லது, கறைபடிந்தவை மட்டுமே அழியாக் காவியங்களாக வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கின்றன.
ஒன்று மட்டும் புரியவில்லை. எல்லாமே அழிந்து கொண்டிருக்க அழிவு மட்டும் எப்படி அழியாது நிலைத்திருக்கிறது? வரலாற்றின் இந்தக் கறைபடிந்த அத்தியாயங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? அவை எமக்கு எதைப் போதித்தன? ஆக்கத்தைவிட - மாபெரும் நகரங்களின், நாகரிகங்களின், கணக்கற்ற மானிடவுயிர்களின் - அழிவுதான் புகழ்ந்து போற்றப்படுகிறது; வீரமென்று மதிக்கப்படுகிறது. இந்த 'வீரம்' என்பதன் வரைவிலக்கணம் என்ன? 'அழிவு' என்பதா? அதில் பெருமைப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் என்ன இருக்கிறது?

- வரலாறென்பது பாதி புனைவும், மீதி உருட்டுப் புரட்டுகளும் கலந்தது.
இந்தப் பொறுப்பு வரலாற்றாசிரியர்களைச் சார்ந்தது. வரலாறும், கடந்தகாலமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவையென்கிறார் ஜோன்.எச்.அர்னோல்ட் (History: A Very Short Introduction). வரலாறு கடந்தகாலத்தை முழுமையாக வெளிப்படுத்தாது ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கும் அதேவேளை, கடந்தகாலமென்பது எண்ணற்ற ரகசியங்களின் புதைகுழியென வரலாற்றின் எல்லைகளைத் தாண்டியும் விசாலமான வெளியினை நோக்கி விரிந்திருப்பது. அதிகார வர்க்கத்தினரின் நலன்களைச் சார்ந்தவையும், அவற்றுடன் முரண்படாதவையும் மட்டுமே பெரும்பாலும் வரலாற்றில் தொகுக்கப்படுகின்றன. எங்கிருந்தாவது ஒன்றிரண்டு ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒடுக்கப்பட்ட குரல்களைக் கணக்கிலெடுக்காது பார்த்தால், இன்று எம்மால் வரலாறெனப்படுவது ஒருவகையில் அதிகார வர்க்கத்தினரின் வரலாறு மட்டுமேயெனலாம். அதிலும் திணிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் அநேகம். இலங்கையின் வரலாறு இதற்குத் தக்க சான்று.

உம்பர்த்தோ ஈகோவின் Baudolino வினை இவ்வாறு வரலாற்றின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் அதே 'வரலாற்று' நாவலாகக் கொள்ளலாம். இக்கதையினூடாக ஆசிரியர் மத்தியகாலத்து வரலாறென நாம் அறிந்ததை/ நம்பிக் கொண்டிருப்பதைக் கட்டுடைக்கிறார்.


2.


"It's not the truth, but in a great history little truths can be altered so that the greater truth emerges. You must tell the true story of the empire of the Romans, not a little adventure that was born in a far-off swamp, in barbarian lands, among barbarian peoples..."

"It was a beautiful story. Too bad no one will find out about it."

"You surely don't belive you're the only writer of stories in this world. Sooner or later, someone - a greater liar than Baudolino - will tell it."
(pg.521)


பிரதியின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள எப்போதும் இறுதிப் பக்கத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது, இதுவே இந்நாவலை இதுவரை வாசித்திராதவர்களின் சுவாரசியத்தை போக்கி விடக்கூடுமென்றாலும்..

1204ம் ஆண்டின் ஏப்ரல் மாதம். பட்டு மற்றும் வாசனைத் திரவியங்களின் பாதையில் (Silk and Spice Route) கேந்திர நிலையமான கொன்ஸ்தாந்து நோபிள் நகரம் 4வது சிலுவைப்போரை முன்னின்று நடத்தும் தளபதிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கீழை ரோமப் பேரரசின் (Byzantine Empire) முக்கிய வரலாற்றாசிரியரொருவரை (Niketas) போர்வீரர்களிடமிருந்து காப்பாற்றும் Baudolino தனது சுய வரலாற்றினை அவரிடம் சொல்லத் தொடங்குகிறான்.

இத்தாலியின் பின்தங்கிய கிராமமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த Baudolino வுக்கு இரண்டு அற்புதமான வரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன: ஒன்று, எந்த மொழியினையும் இலகுவில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், மற்றையது பொய் சொல்லும் திறமை. சிறு வயதிலேயே இவனது துடிதுடிப்பையும், ஆற்றலையும் கண்டு வியந்து பேரரசர் Frederick Barbarossa அவனைத் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டு பாரிஸுக்கு அனுப்பி கல்விகற்கச் செய்கிறார்.

இடைநடுவே தனது வளர்ப்புத் தந்தையின் துணைவியாரின் மீது Baudolino காதல் கொள்வதும், சிலுவைப் போர்களும், தனது பிறந்த கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களால் பேரரசருக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட நகரமொன்றை அழிக்கவென முற்றுகையிடும் அரசரிடமிருந்து அதனை தனது அசாத்தியத் திறமையால் காப்பாற்றுவதும், அரசரின் பெரு விருப்புக்குரியவனாக விளங்குவதால் வரலாற்றையே புரட்டிப்போடும் வல்லமையை நண்பர்களுடனிணைந்து பரீட்சித்துப் பார்ப்பதுமென நகர்கிறது கதை. இவையனைத்துக்குமிடையில் அரசர் ஜெருசலேம் மீதான படையெடுப்பின்போது வழியில் தற்செயல் விபத்தொன்றில் இறந்துவிட, Baudolino மன்னருக்களித்த வாக்குறுதியின் பேரில் தனது நண்பர்களுடன் Prester John எனும் மதகுருவால் ஆளப்படும் கனவுத் தேசமொன்றைத் தேடி (இந்தியா) கீழை நாடுகளை நோக்கிப் பயணிக்கிறான்.

உயர்ந்த அறிவும், ஞானமும் கொண்ட பெண்கள் மக்களது மத நம்பிக்கையைக் கெடுத்து விடுவார்களென்ற பயத்தில் சூனியக்காரிகளென முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டமையும் நாவலில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட Hipatia எனும் பெண்ணொருவரின் சிஷ்யைகள் கீழைத்தேசத்துக்கு தப்பியோடி, தமது குருவின் வழிநின்று பெண்களால் மட்டுமேயான சமூகமொன்றைக் கட்டமைத்து வாழ்ந்து வருவதும் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது. இனப்பெருக்கத்துக்கு அவர்கள் வேறேதோ creatures ஐ நாடுவதால் தனி மனிதப் பிறவிகளாயல்லாமல், மனிதவுருவமும் இடுப்புக்குக் கீழே ஆட்டினையொத்த உருவத்துடனும் காணப்படுகின்றனர். Prester John ன் தேசத்தைத் தேடிப்போகும் நண்பர்கள் தலைகளற்ற, ஒற்றைக் கால்களுடனான, முழந்தாள் வரை தொங்கும் காதுகளையுடைய மனிதவுருவங்களைக் காண்கின்றனர். அம்மனிதர்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக - சிலர் இயேசு மனிதவுயிராக அவதரித்தாரென்பதை நம்புபவர்களாகவும், சிலர் அதை மறுப்பவர்களாகவும், சிலர் தூய ஆவி வடிவத்தினை மட்டுமே நம்புபவர்களாகவும் - காணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் மேற்குலகு குறித்த அற்புதக் கனவுகளுடனும், அளப்பரிய ஆர்வத்துடனுமிருப்பதைக் காணும் நண்பர்கள் கீழைத்தேசம் குறித்து தாம் கொண்டிருந்த கனவுகளையும் அதன் இயல்பு நிலையினையும் நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர்.

பயணம் வெற்றியென்றும், தோல்வியென்றும் கூறமுடியாத நிலையில் முடிந்துவிட, பன்னிரண்டு நண்பர்களில் ஆறுபேரை இழந்து மீதி ஆறுபேர் மட்டுமே ஊர் திரும்ப முடிகிறது. சில சச்சரவுகளால் நண்பர்கள் பிரிய நேர்ந்துவிட்டாலும், Niketas இடம் கதைகூறி முடிந்ததும், தனது சில வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பொருட்டு தனியொருவனாக Baudolino மீண்டும் கீழை நாடுகளுக்குப் பயணமாகிறான்.

இங்கு Baudolino வின் உள்ளார்ந்த சிக்கல்களையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் நேசித்த தன் வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்கு ஒருவகையில் தான் தான் காரணமென்ற உண்மை அவனைப் படுமோசமாக உறுத்தியமையே தந்தைக்காக, மறுபடியும் அந்தக் கனவு தேசத்தினை நாடிப் போவதற்கு அவனைத் தூண்டியதெனலாம். தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் ஒரு உண்மையான மகனாக அவனால் இருக்க முடியாமற் போனமை, தாய் இறக்கும் தறுவாயில் கூட அவளருகே நிற்க முடியாமற் போனமை தனது கடமையிலிருந்து தவறிவிட்ட குற்றவுணர்ச்சிக்கு அவனை ஆளாக்குகிறது. மறுபுறம் அவனது பிரியத்துக்குரிய பெண்கள் மூவர்: முதலாவது பெண், அவனது வளர்ப்புத் தந்தையின் துணைவி. பதின்மங்களில் ஆரம்பித்த அவள் மீதான மோகம் பின்னர் தந்தைக்கு துரோகம் செய்கிறோமோவென கவலைப்பட வைத்ததில் நீர்த்துப் போனது. அடுத்தவள், அவனது மனைவி. அவனை விட மிகவும் இளையவள். கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு விபத்தில் உயிர்துறக்கிறாள். தன்னை முழுமையாக நேசித்த ஒரு பெண்ணுக்கு நல்ல துணைவனாகத் தானிருக்கவில்லையே என்பது இறுதிவரை அவனை வாட்டுகிறது. மூன்றாமவள், கீழைத்தேசத்தில் அவன் கண்ட Hipatia சமூகத்தைச் சேர்ந்தவொரு பெண். அவன் மறுபடியும் கீழைநாடுகளுக்கு பயணிப்பதற்கு அவளும் காரணமாகிறாள்.

இவ்வாறு, அவன் கூறிய கதையில் எது உண்மை எது பொய்யென என குழப்பமடையும் Niketas அவனது வரலாற்றையும் கதையாக எழுத விரும்பி நண்பருடன் உரையாடும் பகுதியே மேற்குறிப்பிட்டது.


3.

மத்தியகாலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், அரசர்களுக்குமிடையே நிலவிய அதிகாரம் சார் போட்டியினை கதையோட்டத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது. அரசு பற்றிய கோட்பாடுகள் மாறுதலடையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை முன்வைத்து அரசர்களும் திருச்சபையும் முரண்படத் தொடங்கினர். அரச அதிகாரமானது இறைவனிடமிருந்து மன்னனுக்கு நேரடியாக வழங்கப்படுகிறதென மன்னர்கள் எடுத்துக்கூற, அதிகாரம் இறைவனிடமிருந்து திருச்சபைக்கும் திருச்சபையின் வழியே மன்னர்களுக்கும் கடத்தப்படுவதாக திருச்சபையினர் எதிர்க்கருத்தினை முவைக்கலாயினர். இங்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இறைவனுக்கும் தமக்குமிடையிலான நெருக்கத்தினை நிரூபிக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் மன்னர்களுக்கும், திருச்சபைக்கும் அவசியமாயிற்று. இதற்குச் சிறந்த உபகரணமாகப் பயன்பட்டவை திருச்சின்னங்கள்/ வரலாற்றுச் சின்னங்கள் (Relics). புனிதர்களின் உடலின் பகுதிகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், இயேசுவுக்குச் சொந்தமானதென நம்பப்பட்ட பொருட்களையும் வைத்திருப்பது அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்கும், மக்களது நம்பிக்கையைத் தம்பால் இழுப்பதற்கும் இவர்களுக்கு உதவியது (இலங்கை வரலாற்றில் புத்தரின் புனித தந்ததாதுவுக்கு நேர்ந்த அதே கதி). இதன் விளைவாக பல போலிப் பிரதியெடுப்புக்களும் உலாவத் தொடங்கியதுடன், உண்மையான நினைவுச் சின்னத்துக்கும் போலிச் சின்னங்களுக்குமிடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாதளவு அவை பரவலாகவும் தொடங்கின.

கைப்பற்றப்பற்ற இத்தாலிய நகரமொன்றின் தேவாலயத்திலிருந்து, இயேசு பிறந்தவன்று அவரைச் சந்தித்த மூன்று அறிஞர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் Baudolino வுக்கு கிடைக்கப் பெறுகிறது. அதை மக்களுக்கு காட்சிப்படுத்தவெனக் கிளம்பும்போது அரசரின் தலைமை மதகுரு தடுத்து, இவ்வுடல்களைப் போர்த்தியிருக்கும் உடைகள் சற்று தராதரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றனவெனக் கூறியதையடுத்து கீழ்த்திசையிலிருந்து வந்த அந்த அறிஞர்களுக்கு இத்தாலிய தலைமைக் குருமார் (Archbishops) அணியும் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியில் அந்த 'அறிஞர்கள்' கீழை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருக்களாகிப் போகின்றனர்.

இதற்கிடையில் போப்பாண்டவருக்கும் Frederick Barbarossa வுக்குமிடையே கடும் போட்டி உருவாகிறது (இந்தவிடத்தில் கதை சற்றுத் தெளிவாகப் புரியவில்லை. Anti-Pope என இன்னுமொருவர் குறிப்பிடப்படுகிறார். இவரைத் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கென அரசரது தலைமை மதகுருவே இரகசியமாக நியமித்ததாகவும் கூறப்படுகிறது). போப்பாண்டவரையும் விட மன்னரை அதிகாரம் மிகுந்தவராக எடுத்துக்காட்டும் பொறுப்பு Baudolino விடம் ஒப்படைக்கப்படுகிறது. Baudolino வின் ஆரம்பகால குரு Otto தான் இறக்கும் தறுவாயில், Prester John இன் சாம்ராஜ்யத்தை Frederick கண்டுபிடித்து அந்த மன்னருடன் தொடர்புகொள்வதன் மூலமே அவர் எதிர்பார்க்கும் உயரிய நிலையை அடைய முடியுமெனவும், அதற்கு உதவும்படியும் Baudolino விடம் கூறுகிறார். அப்படியொரு சாம்ராஜ்யம், பொன்னும் மணிகளும் தவழும், பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் வளம் பொருந்திய கனவுத் தேசமொன்று மிகத் தொலைவில் கீழைநாடுகளில் காணப்படுகின்றதென்ற நம்பிக்கை, அது இறைவனின் நேரடி வரம் பெற்ற கத்தோலிக்க மதகுரு/ அரசரொருவராலேயே ஆளப்படுகிறதென்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.

இதை மனதிற்கொண்ட Baudolino தனது நண்பர்களுடனிணைந்து Prester John, Frederick க்கு அனுப்புவதாக ஒரு கடிதமொன்றைத் தயாரிக்கிறான். இக்கடிதம் மன்னருக்கு பெரும் புகழையும், மதிப்பையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஏனைய அரசர்கள் மத்தியிலும் பெற்றுத்தரக்கூடும். போப்பாண்டவரும் கூட தவிர்க்கவே முடியாமல் மன்னரை மதிக்க வேண்டி நேரிடும். ஆனால், அக்கடிதம் Baudolino வின் கவனயீனத்தினால் பைசாந்திய (Byzantine) உளவாளியொருவரின் கையில் அகப்படுகிறது. அதை உண்மையான கடிதமென அவ்வுளவாளி நம்பியதன் விளைவு, Baudolino வின் கற்பனைத் திறமையில் உருவான அக்கடிதத்தை Frederick பகிரங்கப்படுத்துவதற்கு முன்பே, பைசாந்திய மன்னரிடமிருந்து Prester John தனக்கெழுதியதாக இதே கடிதம் அச்சு அசலாக Frederick க்கிடம் திரும்பி வருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள், போப்பாண்டவரும் Prester John தனக்கெழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பித்து, அதற்குத் தானனுப்பிய பதிலையும் காட்சிப்படுத்துகிறார். அத்தகைய சாம்ராஜ்யமொன்றின் இருப்பே சந்தேகத்திற்காளாகியிருந்த நிலையில், இக்கடிதப் பரிமாற்றம் நிகழ்வது Baudolino வுக்கு பெரும் வேடிக்கையாகத் தோன்றுகிறது.

கடிதமனுப்பும் முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மன்னரின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டு வழி தேடியலையும் நண்பர்களின் கவனத்தையீர்க்கிறது, இறுதி இராப்போசனத்தன்று இயேசு மதுவருந்திய கிண்ணம். அது பாலஸ்தீனிய அரசரொருவரின் வசமிருந்ததாகக் கேள்விப்பட்டு நண்பர்கள் அதைத் தேடத் தொடங்க, Baudolino தனது சொந்தத் தந்தையிடம் அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் கிண்ணத்தை விவரிக்கிறான். அது ஆயிரம் மணிகளின் ஒளிபொருந்திய பிரகாசத்துடனும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணத்துடனும் திகழுமென இவன் கதைசொல்ல இடைமறித்த அந்தக் கிழக்குடியானவத் தந்தை, ஒரு தச்சனின் மகன் மணிகள் பதிக்கப்பட்ட கிண்ணமொன்றில் மதுவருந்தியதாக எனக்குக் கதை சொல்கிறாயா எனத் திட்டத் தொடங்குகிறார். அந்தவுண்மை அப்போதுதான் உறைக்கிறது அவனுக்கும். தனது தந்தை இறந்த பிற்பாடு அவர் உபயோகித்திருந்த பழைய கிண்ணமொன்றைத் துடைத்தெடுத்து அதுதான் இயேசு பயன்படுத்திய Holy Grasal என்று மன்னர் தொடக்கம் அனைவரையும் நம்பவைத்து விடுகிறான். சிலர் அதிலிருந்து ஆயிரம் சூரியன்களின் ஒளி பரவுவதைக் கண்டதாகவும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ்வதாகவும் கூறித் திரியத் தொடங்கினர். இது அதனை உரியதாக்கியிருந்த மன்னரின் புகழை ஒரேயடியாக உயர்த்தி விடுவதுடன், அரும் பெரும் பொக்கிஷமாக தான் செல்லுமிடமெங்கும் அதனைக் காவிச்செல்லுமளவு மன்னரும் அதை மதிக்கிறார். பிற்காலங்களில் ஏராளம் மனக்கசப்புகளுக்கும், பிரச்சனைகளுக்கும் அக்குடியானவனின் வெறும் கிண்ணமே காரணியாவது வேறுவிடயம்.

Prester John ன் சாம்ராஜ்யத்தைக் கண்டடைய முடியாது திரும்பும் நண்பர்கள் ஊர் திரும்புவதற்கு முதல் பணமும் புகழும் சேர்க்க, திருச்சின்னங்களைத் தாமே உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தொழுநோயாளியின் முகம் பதித்த துணி, இயேசுவின் திருமுகம் பதித்த திரைச்சீலையாகிறது; கொல்லைப்புறத்தில் கிடக்கும் சாதாரண துருவேறிய ஆணி இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணியாகிறது; இடுகாடொன்றில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புத் துண்டு புனிதரொருவரின் உடலின் ஒரு பகுதியாகிறது. கத்தோலிக்க தேவாலயங்களும் உயர் குடும்பத்தினரும் இத்தகைய நினைவுச் சின்னங்களை வாங்குவதற்குப் பெரும் பணத்தினைச் செலவளிக்கத் தயாராகவிருந்த நிலையில் இது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்கிறது.

இவையனைத்தும் வரலாற்றுச் சின்னங்களதும், சம்பவங்களதும் நம்பகத்தன்மை குறித்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்ற நாவலின் சில பகுதிகள் மட்டுமே.


4.

மிக எளிய வார்த்தைகளுள் கூறுவதானால், 'ஒரு பொய்யை நாம் தீவிரமாக நம்பத் தொடங்கும் போது அது உண்மையாகி விடுகிறது' என்பதே இந்நாவலின் தத்துவசாரமென நினைக்கிறேன். கதையின் ஒவ்வொரு சிறுசிறு சம்பவங்களிலும், கதையோட்டத்திலுமே கூட அதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

"Believing a relic true, you catch its scent. We believe that we, only we, need God, but often God needs us. At that moment I believed it was necessary to help him. That cup must truly have existed, if Our Lord had used it. If it had been lost, it had been through the fault of some worthless man. I was restroing the Grasal to Christianity. God would not have contradicted me."
(pg.280)

திருவள்ளுவரும் இதைத்தான் சொல்லிப் போனார் போலும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

(அதி.292)

ஆனால், தத்துவங்கள் இடம்பார்த்து பிரயோகிக்கப்பட வேண்டியது அவசியம். இது வரலாற்றிலும் பிரயோகிக்கப்படும்போது அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்? ஆடம்பரமான கற்பனைகளையல்ல, திடமான உண்மைகளுக்கிடையேயுள்ள உறவுகளை முதன்மைப்படுத்துவதே வரலாற்றின் நோக்கமாயிருக்க வேண்டும். இது வரலாற்றாசிரியர்களின் கடமையும் கூட. அதிலிருந்து தவறுமிடத்து, வருங்காலத்தையே ஒரு தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதைத் தவிர அது சாதிக்கப் போவது வேறொன்றுமில்லை. வரலாறென்பது வெறும் கட்டுக்கதைகளின் மூட்டையெனக் கருதப்படுமிடத்து, வரலாற்று முதல்வாதம் போன்ற அணுகுமுறைகளின்மீதும் ஐயங்கொள்ள வேண்டியதாகிறது. விடயமொன்றன் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமே அவ்விடயங் குறித்த தெளிந்த ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற அரிஸ்டோட்டிலின் கருத்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுமென்றே தோன்றுகிறது.