Sunday, August 20, 2006

திரை எழுப்பும் அலை

சுவர்க்கம் - குழந்தைகள் - யதார்த்தம்:
வி(ழிப்/ளிம்)பு நிலை அணுகல்


எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ - சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்
- லிவ் உல்மன்



'..என் எந்த வெற்றியும் அவளைத் திருப்தி செய்வதில்லை. என் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பு ஊட்டுவதில்லை. பல அதிகாலை நேரங்களில் விழிப்பு வந்ததும் இனிமேல் 'அவளுடைய' வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானம் உருவெடுக்கும். படுக்கையில் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் என் செல்ல மகளின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச் சிறுமியின் வாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன்..'

ஹோர்மோன்களும் என்னை வஞ்சித்துவிட்ட நாளொன்றில் சாளரத்தினருகேயமர்ந்து சலசலக்கும் மாமரத்து இலைகளையும், அதன் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சையும் ஏக்கத்துடன் ரசித்துக் கொண்டிருக்கையில்தான் உணர்ந்தேன், உள்ளத்தை அழுத்தும் பெண்மையின் கனத்தை. அன்று, நிர்மலமான ஆகாயத்தில் நான் வெறித்திருந்த இனம்புரியாத புள்ளியொன்றிலிருந்து தொடங்கிற்று, குழந்தைகளின் உலகத்தினிடமிருந்தான என் அந்நியப்படல். அதன்பின்னரான பொழுதுகளில்.., முடிந்ததில்லை; ஒருபோதும் முடிந்ததில்லை.. அவளது வாழ்க்கையினை வாழ்தலென்பது என்றென்றைக்குமான கனவாகிப் போயிற்று.

'..ஜன்னலருகே நின்றபடி நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அச்சமயங்களில் எனக்குத் தெரிந்த எதையும்விட நான் உனக்கு நெருக்கமானவளாகிறேன்.

நீ என்னுடைய பகுதி - முழுச்சுதந்திரம் பெற்ற பகுதி. இன்னும் கூடவேயிருந்து இன்னும் நெருக்கமாக உன்னைக் கவனித்து எப்படி உன் சுதந்திரம் உனக்குள் வாழ்கிறது என்பதை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.

நீ மற்ற குழந்தைகளோடு சிரிக்கும்போது - தனியே உன் ரகசிய விளையாட்டுக்களில் ஆழ்ந்துவிடும்போது - விதவிதமான வண்ணங்களும் வாசனைகளும் அழகுகளும் இன்னும் உன் உலகமாக இருக்கும்போது நான் எல்லாவற்றையும் விட்டு உன்னிடம் ஓடிவந்து உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கின்றேன்.

நான் இடைவிடாது தேடிக்கொண்டிருக்கிற - தொலைத்துவிட்ட பால்யகாலத்து சாம்ராஜ்யம் அதுவாகவே இருக்கலாம்...'

(நன்றி:- 'நான் பேச விரும்புகிறேன்' - ச.தமிழ்ச்செல்வன்)

பெரியவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டதோர் சாம்ராஜ்யம் அது.. வாழ்தலின் வன்மங்களின் உச்சாணிக் கொம்பிலேறி கிடுகிடு பள்ளத்தினை நோக்கிப் பலவந்தமாகத் தள்ளப்படுகையில், தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கும் - யுகங்களாகத் தோன்றும் - அந்தக் கணத்தில் கறைபடிந்துவிட்ட பால்யகாலங்கள் நினைவெங்கும் விரிந்து சிறகடித்துப் பறக்கத்தொடங்கும். பிஞ்சுக்குழந்தையின் மாசுமறுவற்ற அறியாமையின் உலகத்தின் இதயத்தில் மௌனங்களால் நிரம்பி வழியுமொரு மூலையினைப் பெற்றுக்கொள்தல் சாத்தியமாகுமெனில்.., அதன் கபடமற்ற மனதில் நெளிந்து வளையும் பாதைகளினூடாக பயணித்தல் முடியுமெனில்.., இதம் தராத கடந்தகாலத்து நினைவுகளைச் சுமந்தபடி, வதைத்துக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தினூடு.. நினைப்புக்கும் நடப்பிற்குமிடையேயான இடைவெளிகளை அளந்தபடி நீண்டிருக்கும் எமது பயணங்களும் பசுமையின் முதல்துளியால் ஆசீர்வதிக்கப்படக்கூடும்.

குழந்தைகள் சுவர்க்கத்திலிருந்து தருவிக்கப்படவில்லை; மாறாக, தமது இருத்தலின்.. நடத்தைகளின் மூலம் சுவர்க்கங்களை அவர்களே உருவாக்குகிறார்கள்.

1.
சிலதினங்களுக்கு முன்னர், மற்றுமொரு பௌர்ணமி தினத்தில் - இப்போதெல்லாம் பௌர்ணமிகள் முன்னைவிடவும் அழகாகத் தோன்றுகின்றனவென்பதையும் இங்கே குறிப்பிட்டுத்தானாக வேண்டும் - கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் (niharifilmcircle@gmail.com) திரையிடப்பட்ட Majid Majidi யின் Children Of Heaven எனும் மற்றுமொரு ஈரானியத் திரைப்படமொன்றைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. மேலைத்தேயத் திரையுலகின் மெத்தனங்களுக்குச் சவால்விடுக்கும் வகையில் புதிய புதிய திரையம்சங்களுடனும் பண்பாட்டுப் பின்னணிகளுடனுமான ஈரானியப் படங்களின் வடிவமைப்புப் பாங்கு (patterns) மனதைச் சிலிர்க்கவும், பெருமிதங்கொள்ளவும் வைப்பதுடன், இவர்களது திரைப்படத் தொழினுட்ப உத்திகள் மேலைத்தேயனவற்றிலும் எந்தவிதத்திலும் சளைத்தனவல்ல என்பதற்குமப்பால் நவீன தொழினுட்பங்களை மட்டும் நம்பிக்கொண்டு படங்களையெடுத்து ஆஹா.. ஓஹோவென்ற பாராட்டுதல்களையும், கைதட்டல்களையும் பெற்றுவிடும் ஹொலிவுட்டையும், அதன் தீவிர இரசிகர்களின் இரசனைகளையும் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. சினிமாவும் மற்றுமொரு கலையூடகம் அல்லது கலைத்துறையென்றவகையில் - இன்னவின்ன மட்டுமே கலைகளெனக் கருதப்படக் கூடியவையென எமக்கு நாமே வரையறைகளை விதித்துக்கொள்தல் அபத்தமென்பதால் - பரந்ததோர் நோக்குடன் விமர்சனங்களுக்கப்பால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டும் இரசித்துக்கொண்டும் நகரவேண்டியதுதான்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் 1959ம் ஆண்டு பிறந்த மஜித் மஜீதி தனது 14வது வயதிலேயே அமெச்சூர் நாடகக் குழுக்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் நாடகக் கலை தொடர்பான கல்விநிறுவனமொன்றில் சேர்ந்து பயின்றார். ஈரானில் 1978ல் இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்ததுடன் சினிமாவை நோக்கி அவரது ஈடுபாடு திசைதிரும்பலாயிற்று. அவர் முதலில் எழுதி நெறியாள்கை செய்த Baduk (1992) பல்வேறு விருதுகளையும் பெற்றது.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து..

உரையாடலுக்கான மிகவும் பலவீனமானதோர் ஊடகமென்றவகையில், ஒரு சிறந்த திரைப்படத்தினை இரசிப்பதற்கு மொழியொன்றும் அத்தியாவசியமான நிபந்தனையல்ல. காட்சியமைப்புக்களும், கமராக் கோணங்களும், பாத்திரங்களின் நடிப்பும் பேசாத வார்த்தைகளை வேறெந்த ஆனானப்பட்ட செம்மொழியினாலும் உணர்த்திவிட முடியாது. சகோதரர்களான அலியும், சாராவும், அவர்களுக்கிடையே கால்மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலணிகளும்தான் Children Of Heaven படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகவமைய, படம் முழுக்க உரையாடிக் கொண்டிருப்பது அச்சிறுவர்களின் பார்வைப் பரிமாற்றங்களும், அந்த அழுக்குக் காலணிகளுமேயொழிய அங்கு மொழியின் பிரயோகம் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டது.

சிறுமி சாராவின் ரோஸ் நிறக் காலணிகள் தைக்கப்படுவதிலிருந்து தொடங்கும் படம், அக்காலணிகள் அண்ணனான அலியின் கவனக்குறைவினால் தொலைந்து போக.. காலணியில்லாமல் பாடசாலைக்குச் செல்லவழியில்லாது அலியின் காலணிகளையே இருவரும் மாற்றி மாற்றிப் பாவிப்பதும், தொலைந்துவிட்ட காலணியைத் தேடும் படலம் தொடர்வதும், இனியும் அதனால் பயனில்லையெனத் தெரிந்து குற்றவுணர்ச்சியோடு புதுக்காலணி வாங்குவதற்கான வழிவகைகளை அலி திட்டமிடுவதுமென நீள்கின்றது.

சாதாரணத் தொழிலாளியான அப்பா, நோய்வாய்ப்பட்ட அம்மா, நினைத்தமாத்திரத்தில் புதிதாக காலணிகள் வாங்கவியலாதளவு வறிய குடும்பப் பின்னணி... இவற்றினூடு வெளிப்பட்டுத் தெரியும் குழந்தை மனத்தின் கபடமற்ற சகோதர பாசம் மனதை நெகிழவைத்தது. காலணிகள் தனது கவனக்குறைவினால் தொலைந்தமை வீட்டிற்குத் தெரியவந்தால் அப்பாவிடம் திட்டு வாங்க நேரிடுமென்பதால் எவரிடமும் சொல்லவேண்டாமென்றும், தனது காலணிகளைப் பயன்படுத்தும்படியும் அலி சாராவைக் கெஞ்சுவதும்.. வேறுவழியின்றி அவள் ஒத்துக்கொள்வதும்.. தங்கையின் சீவிச் சீவிக் குட்டையாகிப்போன பென்சிலுக்குப் பதிலாக அலி நீண்ட பென்சிலொன்றை அவளுக்குக் கொடுப்பதுமென காட்சிகளெங்கும் மேவித் தெரிந்தவை அக்குழந்தைகளின் மாசுமறுவற்ற உலகம்தான். அண்ணனின் காலணிகளோடு பாடசாலை செல்ல நேரும் முதல்நாளில் சாரா உணரும் குறுகுறுப்பையும், வெட்கத்தையும் இயக்குனர் பதிவுசெய்திருந்த விதம் இரசிக்கவைத்தது. தனது பாடசாலை முடிவடைந்தவுடன் மூச்சிரைக்க ஓடிவந்து அலியிடம் காலணிகளை ஒப்படைப்பதும், அலி அதனை மாற்றிக்கொண்டு மூச்சிரைக்க தனது பாடசாலைக்கு ஓடுவதுமென ஒருவித படபடப்புடனேயே படம் நகர்வது குறிப்பிடத்தக்கது.

மனதை மிகவும் கவர்ந்த, மூச்சைப்பிடித்துக் கொண்டு பார்க்கவைத்த காட்சி: இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.. சாராவிற்கு அலியின் காலணிகள் அளவிற் பெரிதாகையால், ஒருநாள் அவள் அவசரத்துடன் பஹ்ரைன் தெருக்களில் ஓடி வருகையில் காலணியொன்று நழுவி நீர்நிறைந்த வாய்க்காலொன்றினுள் வீழ்ந்து நீரோட்டத்துடன் ஓடத் தொடங்குகையில் நெஞ்சம் அதிர்ந்து போனது. நீரோட்டத்துடன் சேர்ந்து காலணியும் ஓட ஓட, இதயத்தின் படபடப்பு எல்லை கடந்துவிட்டிருந்தது. நாற்காலியின் நுனியில் அமர்ந்து கைகளைக் குவித்துக்கொண்டு, அந்தக் காலணி மறுபடி கிடைத்துவிட வேண்டுமென்று கெஞ்சிக்கொண்டேயிருந்தேன். அன்றைய தினம் படம் பார்த்துக்கொண்டிருந்த எவரையும் அந்தக் காட்சி அப்படித்தான் உணரவைத்திருக்கும்; இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருந்திருக்க வேண்டும். வாய்க்காலில் ஓரிடத்தில் சிக்கிக்கொண்ட காலணியை சிறுமிக்குதவும் நோக்கில் ஒரு பெரியவர் எடுத்துவிட முயற்சிக்கும்போது மனம் ஆசுவாசத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அடுத்த கணம் அவரது கைகளிலிருந்து நழுவி அது மறுபடியும் நீரோட்டத்துடன் இணைந்து கொண்டபோது மூச்சு ஒருகணம் நின்றே போயிருந்தது. பின்னர் வாய்க்கால் சுத்திகரிப்பவரொருவரால் அக்காலணி காப்பாற்றப்பட்ட போது, சாராவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்த அதே சந்தர்ப்பத்தில் எமது கண்களையும் பனிக்கவைத்த - காட்சிகளினதும் கதாபாத்திரங்களினதும் ஒவ்வொரு அசைவினூடும் எம்மையும் கரைந்துபோக/இரண்டறக் கலக்க வைத்த - இயக்குநரின் அசாத்தியத் திறமை வியக்கவைத்தது. படத்தில் பிரமிக்க வைக்கும் மற்றுமொரு விடயம், அக்குழந்தைகளின் நடிப்பு. போலித்தனங்களின் சாயல்களேதுமில்லாமல் இயல்பாக அக்கதாபாத்திரமாகவே அவர்கள் வாழ்வதைப் பார்த்தபின்னும், தமிழ்ச்சினிமாவின் சில 'நடிப்பு வீரர்' களின் சாகசங்களைச் சகித்துக்கொள்தலென்பது சந்தேகமேயில்லாமல் இயலாமைக்கு அப்பாற்பட்டதே.



தங்கைக்கு எப்படியாவது ஒரு காலணியைப் பெற்றுத்தந்துவிட வேண்டுமென்ற முனைப்பிலிருக்கும் அலியின் கண்களில் ஒரு மரதனோட்டப்போட்டி - அதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொள்பவருக்கு காலணிகள் பரிசாக வழங்கப்படுமென்ற - அறிவிப்பு தென்படுகின்றது. அதைத் தங்கையிடம் வந்து தெரிவிக்கும் காட்சியும், இருவரும் குதூகலத்துடன் சோப்பு நுரைகளைக் கொண்டு விளையாடுவதும் இரசிக்கவைத்தன. ஓட்டப்போட்டியும் மிக அருமையாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். முடிவை நாம் முன்கூட்டியே ஊகிக்கக்கூடியதாகவும், எப்போதுதான் முடியுமோவென பொறுமையின்றிச் சலித்துக்கொள்ள வைப்பனவாகவுமமைந்த - எமது தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறுவதைப் போன்ற - மற்றுமொரு போட்டியல்ல இது. அக்காட்சி சிறிது நீண்டநேரம் நீடித்திருந்த போதும், ஒவ்வொரு கணத்திலும் சிறுவன் அலியுடன் கூடவே நாமும் ஓடிக்கொண்டிருப்பதானவோர் உணர்வு மனதை நிறைத்திருந்தது. ஒருகட்டத்தில் தான் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தும் மூன்றாவது இடத்தைத்தானே பிடிக்கவேண்டுமென்ற நினைப்பு வந்து தாக்க, வேண்டுமென்றே தனது வேகத்தைக் குறைத்து இருவரைத் தன்முன்னே அனுமதிக்கும்போது, கவலை உள்ளத்தில் கவிந்துபோனது.., கூடவே ஒரு பதட்டமும்.. ஒருவேளை மூன்றாவது ஸ்தானம் கிடைக்காமல் போகுமானால்...

இறுதியாக, போட்டியில் முதலிடம் வென்று கோப்பையைத் தூக்கும்போது அலி எவ்வித சந்தோஷமுமில்லாது விக்கி விக்கி அழும்.. மூன்றாவது பரிசான காலணிகளைப் பார்த்து ஏங்கும் - அவன் போட்டியிட முன்வந்ததே சாராவுக்காகத்தானென்பதால் - காட்சி மனதைப் பிசைந்தது. இதைத்தானோ குழந்தையுள்ளம் என்கிறார்கள்..?

2.
Children Of Heaven படம் நேரடியாக எவ்வித அரசியலையும் பேசியிருக்கவில்லையெனினும், இத்தகைய படங்கள் அரசியலைப் பேசாதிருப்பது அபூர்வமே. இதன் காட்சி நகர்வுகளினூடு சாரம்சமாக மறைந்திருந்தது, பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் வறுமைதான். உயர்வர்க்கத்துக் குடும்பங்களின் செழிப்பையும், நகர்ப்புறத்தின் முன்னேற்றங்களையும் பஹ்ரைனின் கீழ்வர்க்கத்து மக்களின் அன்றாடப்பாடுகளின் அல்லல்களுடனும், குச்சு ஒழுங்கைகளுடனும் ஒருங்கே ஒப்புநோக்குகையில் மனதையுறுத்துவது இரு வர்க்கங்களுக்கிடையேயான பாரிய இடைவெளிதான். மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் ஒருபுறமிருக்க, மறுபுறத்தே இடிந்த வீடுகளும் சாதாரணக் காலணிகளுக்காக துன்பப்படும் குழந்தைகளும். முதலாளித்துவ சமுதாயத்தில் பணக்காரர்கள் இன்னுமின்னும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்க.., ஏழைகள் இன்னுமின்னும் ஏழைகளாவது உண்மைதான் போலும்.

காலணிகளைத் தாமதமாகக் கொண்டுவந்து சேர்த்ததற்காகத் தங்கையைக் கடிந்து கொள்ளும் அண்ணன் பின்னர் அவளைச் சமாதானப்படுத்துவதற்காகவும், தன்னால்தானே அவள் சிரமப்படுகிறாளென்ற குற்றவுணர்ச்சியோடு அவளை மகிழ்விப்பதற்காகத் தனக்கு ஆசிரியரிடமிருந்து பரிசாகக் கிடைத்த விலையுயர் பேனாவை தங்கைக்குக் கொடுப்பதும்.., அப்பேனாவை சாரா தொலைத்துவிட, அதைக் கண்டெடுக்கும் விழிப்புலனற்ற பிச்சைக்காரரொருவரின் குழந்தை - அதைத் தானே வைத்துக்கொள்ளப் போகின்றதென்ற எமது எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கியபடி - பேனாவை மறுபடியும் சாராவிடம் ஒப்படைப்பதும்.. இத்தனை சிரமங்களுக்கிடையேயும் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத்தான் இருந்துவருகிறார்களென நிரூபித்து விடுகின்றன.

3.
"You may give them your love
But not your thoughts,
For they have their own thoughts…
You may house their bodies
But not their souls,
For their souls dwell
In the house of tomorrow,
Which you cannot visit,
Not even in your dreams.."

- Kahlil Gibran

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, எமதிந்தச் சுவர்க்கத்தின் சிருஷ்டிகர்த்தாக்களுக்குச் சமூகத்தில் நாம் வழங்கியிருக்கும் ஸ்தானம் யாதென ஆராயப் புகுவோமாயின் வெறுமையே மிஞ்சும். யுத்தம் தொடக்கம் வறுமை வரை சமூகத்தின் அத்தனை இயலாமைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் / பாலியல் தொழில் போன்ற சமூகத்தின் அதீத வக்கிர மனப்பான்மைகளுக்கும் முதலில் பலியாவது குழந்தைகள்தான்.

இலங்கையின் மிக மோசமான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்படுவது (வட-கிழக்கில்) அவர்களை ஆயுதமேந்த வைத்தலும், படையில் சேர்த்தலும்தான். சர்வதேசரீதியாகவும் இதுசார்ந்த பிரச்சாரம் இன்றளவும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (அமெரிக்காவில் இராணுவத் தேவைகளின் நிமித்தம் பராயமடைந்தவர்களுக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமை தொடர்பில் எதுவும் பேசாதிருத்தல் நலம்.., அவற்றைக் கேள்விகேட்பதற்கு எமக்கு அருகதையில்லாததால்..?!). பராயமடையாதவர்களைப் படையில் இணைத்தலென்பதன் நியாய/அநியாயங்களை ஆராய்வதற்கு முன்னர் - பெண்களுக்கு ஆயுதமேந்துதல் மறுக்கப்பட்டிருந்த காலங்களில் பூலான்தேவி கொள்ளைராணியானதை எந்தளவு நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொள்கிறோமோ / மறுக்கிறோமோ அதேபோல - அதன் பின்னணி குறித்தும் கவனஞ்செலுத்தியேயாக வேண்டும். பலவந்தப்படுத்தல்களை விடுத்து நோக்கினால்.. தனது சகோதரி சிதைக்கப்படுவதையோ, தனது உறவினர் அல்லது நண்பர் கொல்லப்படுவதையோ நேருக்கு நேர் பார்க்கும் எந்தவொருவரும் உளவியல்ரீதியாக கடும்தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு.. ஆயுதத்தினைத் தீர்விற்கானவோர் வழியாகத் தேர்ந்தெடுத்தல் தவிர்க்கமுடியாதது. அடிப்படை மூலகாரணியான இனமுரண்பாடு தீர்க்கப்பட்டாலேயொழிய இத்தகைய வன்மங்களைத் தடுத்துநிறுத்த முடியாது.

இவ்வடிப்படை யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சர்வதேச சமூகமும் மற்றவர்களும் பராயமடையாத ஆயுததாரிகளின் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களேயொழிய, தென்னிலங்கைச் சிறாரின் அவலநிலையை யாரும் கருத்திற்கொண்டபாடில்லை. வடகிழக்கில் ஆயுதமேந்துவதன் மூலம் 'உரிமை மறுக்கப்பட்ட' சிறுவர்களைவிடவும் பலமடங்கானோரின் உரிமை தென்னிலங்கையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துமே உரிமை மறுப்புகள்தான்.., அங்கே யுத்தத்தின் பெயரால்; இங்கேயோ வறுமையின் பெயரால். எண்ணற்ற சிறுவர்கள் வறுமையின் காரணமாக - வயிற்றுப் பிழைப்பிற்காக - தமது கல்வியையும் துறந்து வீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். உடல், உளரீதியான பாதிப்புகளின் படி நோக்குவோமாயின் துவக்கு ஏந்துவதற்கும், துடைப்பங்கட்டை ஏந்துவதற்குமிடையிலொன்றும் பாரிய வேறுபாடுகளில்லை.

அதைவிடவும் வருந்தவைப்பது பாலியல் துஷ்பிரயோகங்களதும், பராயமடையாத பாலியல் தொழிலாளர்களதும் அபரிமிதமான அதிகரிப்பு. இவற்றிற்குப் பலியாவது சிறுமிகள் மட்டும்தானென நினைத்தால், நீங்கள் ஏமாந்துபோக வேண்டியதுதான். விகிதாசார அடிப்படையில் சிறுமிகளை விடவும், சிறுவர்களே அதிகமதிகம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பராயமடையாத பாலியல் தொழிலாளர்களுக்கும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான வேறுபாடு / முரண்பாடு குறித்தும் - பொதுவாக இவ்விரண்டு பதங்களும் ஒன்றுடனொன்று சிக்கார்ந்த நூலிழை வேறுபாட்டினைக் கொண்டுள்ளநிலையில் - நாம் இங்கு கவனஞ்செலுத்த வேண்டியதாகின்றது. பாலியல் தொழிலினைத் தனது வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை முறையாகவுமேற்றுக்கொண்டவரே பாலியல் தொழிலாளியென அடையாளப்படுத்தப்படுகின்றார். ஒரு ஆண் / பெண் சுயவுணர்வுடனோ அல்லது சுயவுணர்வற்ற நிலையிலோ, இத்தகைய வாழ்க்கைமுறையினை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே அவரது / அவராகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்தலாகவும், தொழிலாகவும் மாற்றமடைகின்றது. ஆயினும், சிறுவர்கள் / பராயமடையாதவர்களின் நிலையினையெடுத்து நோக்கின் பலவந்தமாகவோ, சூட்சுமமாகத் திட்டமிடப்பட்ட முறையிலோ, வன்முறையினூடாகவோ அல்லது வேறுவழிகளேதுமற்றுப்போன காரணத்தினாலோ அவர்கள்மீது இத்தகைய வாழ்க்கைமுறை வளர்ந்தோரினால் திணிக்கப்படுகின்றது. பணம், வருவாய் போன்ற பொருளாதாரக் காரணிகளும், சில சமூகக் காரணிகளுமே கூட இதற்கான ஊக்குவிப்பான்களாகவமைகின்றன.

ஆனால் பாலியல் துஷ்பிரயோகத்தினைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பராயமடையாதவரொருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்களுக்குள்ளாவதையே அது குறித்து நிற்கின்றது. ஆனால் அவர் பாலியல் தொழிலாளியொருவரைப் போல 'பால்' இனை தனது வாழ்வாதாரமாகவோ, வாழ்க்கை முறையாகவோ ஏற்றுக்கொண்டவரல்ல. இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான அத்துமீறலானது பிற்பட்ட காலங்களில் சிக்கார்ந்த, மோசமான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதேவேளை ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியமை நாளடைவில் பாலியல் தொழிலாளியாக உருவெடுப்பதில் தாக்கம் செலுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை பராயமடையாதோரின் பாலியல் தொழிலானது - இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், ஆயுர்வேத சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்குச் சமானமாக - ஒரு மறைமுக Tourist Attraction ஆக வளர்ந்து வரும்நிலையில் அதுதொடர்பான அடிப்படை விழிப்புநிலைசார் அறிவு எத்தனை பேருக்கு இருக்கக்கூடுமென்பது சந்தேகத்திற்குரியதே. இதுபற்றிய பகிரங்கக் கருத்தாடல்கள் - அதுவும் அறிவுஜீவிகள் மட்டத்தினைவிடத் தாழ்ந்த மட்டங்களில் / சராசரி மக்கள் மத்தியில் - இடம்பெறுவது மிகக்குறைவு. அரசியல், பணம் மற்றும் இன்னபிறக் காரணிகளின் பின்னணியில் திட்டமிட்ட முறையில் அவை மூடிமறைக்கப்படுகின்றன. இது வெறுமனவே சமுதாயத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய சபிக்கப்பட்டவொரு பிரிவினரின் உரிமைகள் பற்றிய கரிசனையல்ல. மாறாக, ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பின் - தவிர்க்க முடியாததோர் அங்கமாக விளங்கிவருபர்களாதலால் - போக்கினைக் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவையை இந்நிலைமை உருவாக்குகின்றது.

சமூகத்துக் கயமைகளை ஊடறுத்து உள்நுழைய வழிசமைக்காதவரையில், குழந்தைகளுக்கும் சுவர்க்கத்திற்குமிடையிலான உறவு/முரண் குறித்து நாமெல்லோரும் அலட்டிக்கொண்டிருத்தல் - குழந்தைகள்=சுவர்க்கம் எனக் கொள்வோமாயின்.. அதுவே உண்மையாயினும் - அபத்தமானதில்லையா..?


(ஒரே கணத்தில் தாயாகவும், குழந்தையாகவும் உணர்தலை சாத்தியமாக்கிப்போன என் பிரிய மாதுளங்கொளுந்திற்காக..)

நன்றி: படங்கள்


Saturday, August 12, 2006

*சிறகெனக் கனக்கும் காலங்கள்


நானுமொருகாலத்தில் உயிர்த்திருந்தேனென்றால் எவரும் நம்புவார்களோ என்னமோ..?!

1.

என் தாயுமானவளுக்கு...

நெற்றிப்பொட்டில் முகிழ்த்தெழுந்து
வேர்கொண்டகன்று
நீண்டு
வளர்ந்து
கிளைவிரித்து உயர்ந்துயர்ந்து
தலை முழுதும் சுழன்றுபரவும்
வலி...
நீயில்லா வலி.

சிந்தனைகளின் அழுத்தலில்
கேள்விகளின் குடைதலில்
தலைக்குள் குருதி,
தறிகெட்டு தடைதகர்த்து குமுறிப்பாய
நரம்புகள் பின்னிப் பிணைந்து
இறுகித் தெறித்து
வெடித்துச் சிதறக்கூடும்.

நானும் சிதையக்கூடும்.

சீக்கிரம் வந்துவிடு.

.............

அடிக்கடி
நீ அருகிலிருப்பதாய் தோன்றுவதெல்லாம்
பொய்பொய்யென
பிரமைதானென
உணர்ந்துணர்ந்து உள்குறுகும்போது
கண்முன்னே மயிர்பிடுங்கும் வேதனையில்
மனசு மறுகுகின்றது.

சீக்கிரம் வந்துவிடு.

...........

நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்குருகி - உடல்நடுங்கி
நீயில்லா ஏக்கம் நிரம்பி
வழிய
நிற்கிறேன்.

சீக்கிரம் வந்துவிடு.

...........

ஒற்றைக்குயிலின் அழுகையின் நீட்சியில்
எழுகிறது என் சோகம்
பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்
வழிகிறது என் கண்ணீர்

தனிமை தனிமை தனிமை
தனிமை தலைவிரித்தாடுகிறது

சீக்கிரம் வந்துவிடு.

...........

விரக்தி மிகுந்த வெறுமையும்
வெறுமை நிறைந்த விரக்தியும்
விரவி நிற்கும் -
கையறு நிலையில்
மெய்யது தவிக்க
எற்றுண்டு கிடக்கிறேன்,
கணங்களின் கரையோரம்...

சீக்கிரம் வந்துவிடு.

..........

தாங்கவொண்ணாத் துயரமாயிருக்கிறது
உன் பிரிவு...

சீக்கிரம் வந்துவிடு.

சீக்கிரம் வந்துவிடு.
- தமிழினி


2.

போர்த்துண்டது கருமை, என்றென்றைக்குமாய்...

'..நான் உன்மீது வைத்திருப்பது அன்பில்லை, ஒருவிதமான வெறியென்றும் சொல்லலாம். நீ எனக்கு வேண்டும். வாழ்நாள் முழுவதுக்குமாக நீ எனக்கு வேண்டும். என்னை விட்டு விலகிச் செல்ல நினைத்தாயானால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன். ஆனால், கொலை செய்ய மாட்டேன். ஹி..ஹி..ஹீ..'

எமது இறுதிச் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? அதுவொரு ஜூலை மாதத்துப் பிற்பகல் பொழுதாகத்தானிருந்திருக்க வேண்டும். நாட்காட்டி 23 என குறித்துக் கொண்டிருந்ததாகவும் நினைவு. மறுநாள் நீ என்னை நீங்கி காததூரம் போகப்போவதை அறியாதவளாய் நான் மட்டும் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தேன், வழமையாகக் கலகலக்கும் நீயோ மௌனித்திருந்தாய்.

அன்றைக்கு வானம் எப்படியிருந்தது..?

சாம்பல்நிற ஒளிக்கீற்றொன்று
அன்றும் தென்பட்டிருக்கக் கூடுமோ..

வெண்பஞ்சு மேகமொன்று
தனதேயான விஷமத்தனங்களுடன்
அதனை எனது பார்வையிலிருந்து
மறைத்து விட்டிருக்குமோ..

சூரியன்
முகில்க்கூட்டங்களினிடை
மறைந்து வெளிவந்து
ஜாடைகாட்ட முற்பட்டிருந்திருக்குமோ..

ஏன் என் அடிமனம் எதனையும் உணரத் தவறிவிட்டிருந்தது..?

மரணங்கள்
சொல்லிக்கொண்டு
வருவதில்லை..,
பிரிவுகளும் கூடத்தான்.
உனது பிரிவும்
அப்படித்தான் நிகழ்ந்தது..,
அதனைத் தொடர்ந்த
எனது மரணமும்.

எல்லாம் தெரிந்திருந்தும் அடி பெண்ணே..,

நிர்த்தாட்சண்யமாய்
என்னுள் ஊடுருவித் துளைத்த
உன் விழிகளின் ஆழங்களில்..
எத்தனை நூற்றாண்டு காலத்துக்
கண்ணீர்த்துளிகளை
உயிரோடு சிதையேற்றியிருந்தாய்?

பாறையாய் இறுகிக்கிடந்த
இதயத்தில்..
எத்தனை கோடானுகோடி
மூதாதைகளின் துயரங்களைப்
பதுக்கியிருந்தாய்?

உள்ளத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் தொண்டைக்குழியை அடைய முன்னமே தற்கொலை செய்துவிட்டிருந்தன போலும். கருமை போர்த்தவந்நாளில்.., என்றென்றைக்குமான எமது பிரிவினைப்பற்றி நீ எதுவுமே பேசத்துணியவில்லை.

கத்திக் குளறியிருக்க மாட்டேன்..
அழுது புலம்பியிருக்க மாட்டேன்..
வேதனையில்,
விரக்தியில்
உன்னை சபித்துமிருக்க மாட்டேன்..

இன்னும் சில நிமிடங்கள்.. ஒரு சில நிமிடங்கள் உன்னோடு கழித்திருப்பேனடி என் கண்ணே.. ஏன் பேச மறுத்தாய்?

அந்தச் சில நிமிடங்களுக்குள் இத்தனைகாலம் சொல்லாமற் போன என் பிரியங்களையும், கேட்க நினைத்திருந்த மன்னிப்புக்களையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறி.. இறுதியாய் ஒருமுறை உன்னை ஆரத்தழுவி.. விடைகொடுத்திருப்பேன்.. ஏனடி சொல்லாமற் போனாய்?

கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, வருடிவிட்டு அவசர அவசரமாக உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில் பிரதிபலித்திருந்த ஏக்கத்தினை.. காலாகாலத்திற்குமான வேதனையை ஏன் என்னால் புரிந்துகொள்ள இயலாமற் போனது?

என் உள்ளுணர்வு ஏன் அந்தக்கணத்தில் மரத்துப் போனது?

உன்னை என்றென்றைக்குமாகப் பிரியப் போகிறேனென்று ஏன் எனக்கு தோன்றாமல் போனது?

ஏன்.. ஏன்.. ஏன்..???

தெருவோரத்தின் வளைவில் என் நிழலும் போய் மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாயா? அந்தக் கணத்தில் என்ன நினைத்துக்கொண்டாய்? அடி அவசரக்காரியே.. என்று என்னைக் கடிந்து கொண்டிருப்பாயா? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போவென மனதுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தாயா? இல்லையெனில், உனது தயக்கத்தினையும் துணிவின்மையையும் எண்ணியெண்ணி உன்னை நீயே நொந்துகொண்டிருந்தாயா?

ஜூலைகள் கறுத்துப் போனவைதான்; மறுப்பதற்கில்லை.


3.

உயர்கின்றன மதில்கள், என்னைக்கூட கேளாது...

'..உன் பேச்சில் மழலைத்தனமிருந்தது. அந்தவொரு குறும்புத்தனம் வீதியில் செல்லும்போது.., உனக்குள்ளே நீ பேசிக்கொள்வது, சிரிப்பதென்று. உனதந்தச் சிரிப்பில் எனது கவலைகளை மறந்திருக்கின்றேன். உன் வருகையை எதிர்பார்த்து எத்தனையோ நாள் என்வீட்டு வாசலில் கண்மூடாமல் காத்திருந்திருக்கிறேன். உன்னுடன் பழகும்போதெல்லாம் என்னுள்ளிருக்கும் பாரங்களத்தனையும் வெறும் தூசு போல் தெரியும்; உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்றும் தோன்றும்..'

காரிருள் மேகமாய்
சுற்றிலும் கவிந்துகொண்டு,
போகுமிடமெல்லாம்
என்னைப் பின்தொடர்கின்றது..,

பார்க்கும்,
கேட்கும்,
ஸ்பரிசிக்கும் அனைத்திலும்
படர்ந்து பரவி
எல்லைகளற்ற மதில்களாய்..
தடித்த திரையாய்
என்னை ஆக்கிரமித்தபடி எழுகின்றது..,

காற்றினுள் கலந்திருக்கும்
அவள் விட்டுச்சென்ற
களங்கமற்ற நேயத்தின் வாசம்.

நூலகத்திலிருந்து வீடு திரும்பும் எனது நீண்ட பயணத்தில் வழித்துணையாக வந்தது அவள் நினைவுகள்தான். கூடவே வெறுமையும், உயிர்கொல்லும் தனிமையும்.

தலை கனக்கத் தொடங்கியது.. இந்தவுடலை இனியும் சுமந்துகொண்டு அலைதல் சாத்தியமில்லையென மனம் எண்ணமிடத் தொடங்கிற்று.

அமைதியை விரும்புபவள்..,
நிச்சலனத்தை வேண்டுபவள்..,
இப்போதோ,
அவள் விட்டுப்போன
மௌனத்தை உடைத்தெறிய
செவிப்பறைகளைக் கிழித்தெறியும்
இரைச்சல்களை
நேசிக்கத் தொடங்குகிறேன்.

அடிமனத்து ஓலங்கள்
எல்லை கடக்குமொரு பொழுதில்
வீங்கிப் பெரிதாகி
என் மண்டை
வெடித்துப் பிளந்தால்தான்
ஆசுவாசமாக உணர்வேனாக்கும்.

மதில்கள் பொருட்படுத்துவதில்லை.., சிறையுண்ட ஆன்மாவின் விருப்பு வெறுப்புக்களை.


4.

கடந்து விட்டிருந்த காலம், கேவல்களைச் செவிமடுத்ததோ...

'..உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனால், எம்மிருவரது வீட்டிலும் அதனை அனுமதிக்கப் போவதில்லை. அவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகின்றது? அவர்கள் தங்களது சுயநலம் கருதித்தானே எம்மைப் பெற்றெடுத்ததும். உறவுகளென்பது பொய். ஒருநாளும் அவை உண்மையானதாக இருக்கமுடியாது. ஒருகாலத்தில் என்னைச் சுற்றியிருப்பவர்களைக் கேள்விகேட்டே என் கவலைகளைக் குறைப்பேன். அவர்களது குற்றவுணர்ச்சியைக் கூட்டுவேன்..'

மகத்தானவள் நீ...

எதிர்பார்ப்புகளற்ற அன்பைச்
சாத்தியமாக்கிப் போனவள் நீ...

அடையாளங்களைத் துறந்து,
சுயம் தொலைத்து
எல்லைகளற்ற நேசத்தில்
கரைந்துவிடப் பழக்கியவள் நீ...

என் ஆணவங்களை
அடியோடு சாய்த்தவள் நீ..
என் ஆன்மாவை
உயிரோடு சிதைத்தவள் நீ..

கட்டுக்கடங்காமல் அன்பை வாரி வழங்கத் தெரிந்திருந்தது உனக்கு. அனைத்தையும், அனைவரையும் உன் கட்டுக்குள் வைத்து ஆண்டுகொண்டிருக்கத் தெரிந்திருந்தது உனக்கு. நட்ட நடுக்காட்டில் தவிக்கவிட்டு தடயங்களேயில்லாமல் மறைந்துவிடும் நெஞ்சழுத்தமும் வாய்த்திருந்தது உனக்கு.

ஆனாலுமென்ன, உன்னைச் சுற்றியிருந்தவர்கள் எவருமே உன் தனித்துவங்களைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்தனர்.., என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நீ தந்த அன்பை அதே நிறைவுடனும், முழுமையுடனும் திருப்பித்தர ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை. உனதன்பை உள்ளது உள்ளபடி உள்வாங்கவும் நான் கொடுத்து வைத்திருக்கவில்லை.

அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு
நீ புறப்பட்ட போது..,
இனியும்,
என் வாழ்வில் நீயில்லையென்பது
அடிமனதில் உறைத்த போது..,

காலம் கடந்துவிட்டிருந்தது
என் பெண்ணே..
உன் அருமை புரியத் தொடங்குகையில்
காலம் யுக யுகாந்தரங்களைக் கடந்துவிட்டிருந்தது.

அண்டசராசரங்களும் அதிர பெருங்குரலெடுத்து கதறியழத் தோன்றுகின்றது. கையில் கிடைக்கும் அனைத்தையும் வீசியெறிந்து, உடைத்து நொறுக்கி.. நானும் களைத்து விழும்வரை.. தெறித்துச் சிதறும்வரை ருத்ர தாண்டவமாட வேண்டும் போலிருக்கிறது. எழுதப்படாமலேயே போய்விட்ட எத்தனையோ மடல்கள் நினைவில் விரிந்து என் உலகை நிறைக்கின்றன. வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்குண்டிருந்து என்னை மூச்சுத்திணறச் செய்கின்றன.

மறுபடியொருமுறை உன்னைக் காண்பேனா, என் கண்ணே?


*(நன்றி:- குட்டிரேவதி)

Thursday, August 03, 2006

மானுடவுயிரும் மகத்தானதோர் ஆயுதமே!


- மேல்புலத் தோற்றப்பாடுகளும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சாராம்சங்களும்



'When everybody wants to fight there's nothing to fight for. Everybody wants to fight his own little war, everybody is a guerilla'
- James Ahmed

விலகி நின்று பார்க்கையில் விசித்திரமானதாகவிருக்கிறது உலகத்தின் போக்கு. ஓரிடத்தில் போற்றப்படுபவை மற்றுமோர் இடத்தில் இகழப்படுகின்றன. ஒரு சாராருக்கு இயல்பாகத் தோன்றுகின்றவை இன்னோர் சாராருக்கு அசாதாரணமாகிப் போகின்றன. அரசியல் நடத்தைகளிலும், பண்பாட்டுப் படிமங்களிலுமே இம்முரண்நகை அதிகமதிகம் வெளிப்பட்டுத் தெரிகின்றது.


யார் 'தீவிரவாதிகள்'..?


என்றென்றைக்குமாக செத்துப்போனவர்கள் நாங்கள்.. மீண்டும் சாகிறோம் இப்போது வாழ்வதற்காக.
- கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

உண்மையில் எவர்தான் தீவிரவாதிகளல்லரென தொடுக்கப்பட்டிருக்க வேண்டும் இவ்வினா. பொருட்பயன்பாடு / வார்த்தைப் பிரயோகத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்குவோமாயின் தனக்கான கொள்கைப் பிடிப்புக்களிலிருந்து சற்றும் வழுவாமல், இரட்டை வேடமணியாமல் இறுதிவரை தனதேயான தனித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போரிடுபவர்களனைவருமே - நஞ்சூட்டப்பெற்று மரணித்த சோக்ரடீஸிலிருந்து இந்தக் கணத்தில் உலகின் எங்கோவோர் மூலையில் தான் கொண்ட இலட்சியத்தின் பொருட்டு உயிர்துறந்து கொண்டிருக்கின்றவோர் போராளிவரை - ஒருவகையில் தீவிரவாதிகள்தான். காந்தியை 'மகாத்மா' என்கிறார்கள்; 'அஹிம்சாவாதி' என்கிறார்கள்; அவரைப்போல அமைதியாகப் போராடக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள். காந்தியம் குறித்து கடும் விமர்சனமிருந்தாலும் அவருமொரு தீவிரவாதிதானென்பதை எத்தனைபேரால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

அப்படியேயாகுமெனில் (அப்படியாகாதெனினும்) 'பயங்கரவாதி' களென அடையாளப்படுத்தப்படுவோர் யார்? புறநிலைப் பொருட்களாலான ஆயுதங்களை / கருவிகளைத் தரித்தபடி, தம்மைத் தவிர்ந்த ஏனைய உடைமைகளுக்கு - அவை உயிராகட்டும், சொத்தாகட்டும், வேறேதேனும் பொருளாகட்டும் - சேதம் விளைவிப்பவர்களேயென பொதுமைப்படுத்தப்படுவதில் சிக்கல்களிலிருக்கின்றன. அப்படியெனின் அவர்களைச் 'சேதவாதிகள்' அல்லது 'உடைமைப் பறிப்பாளர்கள்' என அழைப்பது வேண்டுமானால் பொருத்தமாயிருக்கக்கூடும்.

ஆயுதங்களென எவற்றை வரையறுக்கிறார்கள்? இன்றைய காலத்தில் (பயங்கரவாதிகளின்) ஆயுதங்களென்றாலே எவரது நினைவிற்கும் முதன்முதலில் வருவது துடைப்பங்கட்டையளவிலான துவக்கும், கண்ணிவெடிகளும், இன்னுமின்னும் பல 'கறுப்பு' பொருட்களும்தான். தொழினுட்பம் முன்னேறிவிட அணுவாயுதங்களும், உயிரியல் ஆயுதங்களுமே கூட இன்று முக்கிய பேசுபொருளாகின்றனதான். ஆனால், இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்கிறோமென்ற மிதப்பில் என்றோவொரு காலத்தில் எமது மூதாதையர் வாள்களாலும், வேல்களாலும் அதற்கும் முன்னர் கற்களாலும், மரத்தடிகளாலும் போரிட்டனரென்பதை மறந்துவிடுவதோ, மறுத்துவிடுவதோ எந்தவிதத்தில் நியாயமாகும்?

ஏன் அவர்களைப் பயங்கரவாதிகளென அழைக்கிறோம்? எண்ணிப் பார்ப்பதற்கே பயங்கரமான காரியங்களை அவர்கள் செய்வதனாலென நீங்கள் சாட்டுச் சொல்லலாம். அதென்ன அது பயங்கரமான காரியம்... உயிர்பறித்தலொன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்லவே. இன்று நானுமொரு கொலை செய்தேனென்றால் யார் நம்புவீர்கள்? ஒன்றல்ல, இரண்டல்ல.. சரியாகச் சொல்வதானால் நான்கு உயிர்கள் இன்று என் சுயநலத்தின் பொருட்டு காவுகொள்ளப்பட்டன. நுளம்புகளைச் சொல்கிறேன். காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டு உறக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தவைகளை சந்தர்ப்பத்திற்காய்க் காத்திருந்து, குறிவைத்து சடாரென்று கைகளால் தாக்கினேன். இரத்தம் தெறிக்க சுருண்டு வீழ்ந்து இறந்தன. இனம்புரியாதவோர் உணர்வு மனதில் மின்னி மறைந்தது. நாளை என்னையும் 'பயங்கரவாதி' யென அடையாளப்படுத்துமோ இந்த நுளம்புகள்? உயிரிழந்தவற்றின் உறவுகள் நாளையிரவு என்மீது போர்ப்பிரகடனம் செய்யக் கூடுமோ?

நுளம்புகளையும் மனிதவுயிர்களையும் சமானமாகக் கருதுவது எவ்விதத்தில் நியாயமென சிலர் கொதித்தெழக்கூடும். ஒரு போத்தல் கசிப்பைவிடவும் மனிதவுயிரின் பெறுமதி மலிந்துபோன தேசமொன்றில் காவியுடைகளும் குருதியில் தோய்ந்துகொண்டிருக்க... இதிலென்ன இருக்கிறது அதிசயிக்க..? இன்றே தொடங்கிவிட்ட நாளையினை முன்னிட்டு இந்தப் பொழுதின் இருத்தலுக்கெதிராகப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.


எது 'சுதந்திரம்'..?


இரத்தத்தில் பிறந்தது அந்தச் சொல்,
இருண்ட உடலில் வளர்ந்து, துடித்து
உதடுகளின் வழியாகப் பறந்து சென்றது அந்தச் சொல்

தூரத்தில் மிக அருகில்
இறந்த தந்தைகளிடமிருந்து
அலையும் இனங்களிடமிருந்து
கல்லாக மாறிய நிலங்களிலிருந்து
வந்தது அந்தச்சொல்
ஏழைப் பழங்குடிகளால்
களைத்துப்போன நிலங்கள்
துக்கம் சாலையை நிறைத்த போது
மக்கள் புறப்பட்டார்கள்
வந்து சேர்ந்தார்கள்
சொற்களை மீண்டும் விளைவிக்க
புதிய நிலத்தையும் நீரையும்
இணைத்தார்கள்
நாம் பெற்றிருப்பது இதுதான்
இன்னும் வெளிச்சத்திற்கு வராத
புதிய உயிர்களின் விடியலுடன்
இறந்த மனிதர்களுடன்
நம்மைப் பிணைக்கும் அலைவரிசையும் இதுதான்.
- பாப்லோ நெரூதா


01. ஊடக சுதந்திரம்/உரிமை

இன்றைய கொழும்புத் தமிழ் நாளிதழ்களின் தலையங்கங்களை அவசர அவசரமாக நோட்டம் விட்டதில் முகமெங்கும் இழையோடத் தொடங்கியது மெல்லிய புன்னகை.

மூதூர் புலிகள் வசம்; சமர் தொடர்கின்றது! படையினரின் பல மினி முகாம்கள் தொடர் வரிசையில் வீழ்ச்சியுற்றன.
- சுடரொளி

மூதூரிலும் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்தும் கடும் சமர். நகரை புலிகள் கைப்பற்றியதாக கூறப்படுவதை படையினர் மறுப்பு.
- தினக்குரல்

மூதூரைக் கைப்பற்ற புலிகள் முயற்சி; இருதரப்புக்கும் கடும் மோதல். மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், ஆலயங்களில் தஞ்சம்.
- வீரகேசரி

ஒரே கதையை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள். எவரென்ன செய்தாலும் பரவாயில்லை.. தனது தரப்பை மேம்படுத்த வேண்டுமென்ற முனைப்பு ஒருவரிடம். தனது தரப்பும் முக்கியம்தான்.. அதற்காக மற்றவரை பகைத்துக்கொள்ள முடியாதென்கிறார் இன்னொருவர். ஐயோ.. தரப்பை விடுங்கள்.. எனக்கு மற்றவர்களில் சரியான பயமென ஒதுங்கி பொதுப்படையாகப் பேச ஆரம்பிக்கிறார் வேறொருவர்.

ஊடகங்களின் அரசியலானது யதார்த்தத்தினையே புரட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்ததென்பதை எவரும் இலகுவில் மறுத்துவிட முடியாது. மாவிலாறு அணைக்கட்டுப் பகுதி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு விட்டதென்று சிங்கள நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியிருந்தமையை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். கெப்பற்றிப்பொல சம்பவம் மக்கள் மத்தியில் தேவைக்குமதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டளவுக்கு வங்காலைச் சம்பவமோ, எகலியகொட பம்பேகம தோட்டத்தில் காடையர் உட்புகுந்து மக்களைத் தாக்கியமையோ சிங்கள மக்களைச் சென்றடையவில்லையென்பதே உண்மை. இப்படியெல்லாம் நடந்திருக்கிறதாவென்றே அவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை. இலங்கைத்தீவின் வரலாற்றேடுகளிலிருந்து தமிழர்கள் மற்றும் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புக்களுக்கு நேர்ந்ததைப்போல இதனையும் திட்டமிட்ட மறைப்பென்றே கூறவேண்டும்.

தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் ஊடகவியலாளர் மீதான வன்முறைகளையும், தொடர் கொலைகளையும்கூட கவனத்திற்கொண்டேயாக வேண்டும். கடந்த மாதம் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகப் பத்திரிகைகளில் எழுதிவரும் சுதந்திர ஊடகவியலாளரான சம்பத் லக்மல் சில்வா (வயது 24) கடத்திச் செல்லப்பட்டு கொலையுண்டமைக்கு தலையற்ற உடல்கள் மலையகப் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களும் ஆதாரங்களும் அவரிடத்திலிருந்தமையே காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூதூர் மோதல் தொடர்பாக தகவல்களெதனையும் வெளியிட வேண்டாமென இன்று அரசாங்கம் செய்தி ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமற்ற அறிவித்தலொன்றைக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே. இவ்வறிவித்தலைத் தொடர்ந்து தனியார் வானொலிகளும் மௌனம் சாதிக்கத் தொடங்கியுள்ளதுடன் செய்தியறிக்கைகளைத் தவிர்த்து திரையிசைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றன. அதுவுமொரு விதத்தில் நல்லதுக்குத்தான். மக்களைத் தூண்டிவிட்டு இனவழிப்பினைத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்வதை விடவும், அறியாமையிலாழ்த்தி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயல்வதை மனிதாபிமானரீதியான முயற்சிகளுள் ஒன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


02. அறிதலுக்கான சுதந்திரம்/உரிமை (The right to know)

அண்மையில் பெரும்பான்மையினத்தினைச் சேர்ந்த தென்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவியொருவருடனான உரையாடலின்போது, உண்மையில் உங்களுக்கு என்னதான் தேவை.. உங்களுக்கு என்ன இல்லையென்று போராடுகிறீர்களென்று அவர் வினவியபோது விக்கித்துப் போனது நெஞ்சம். சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டமை, பல்கலைக்கழக அனுமதியில் மட்டுப்பாடு, யாழ். பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, செம்மணிச் சம்பவமென ஒவ்வொன்றாக கூறக்கூற அவர் விழிவிரித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். இருந்தாலுமேகூட இது ஆயுதமேந்துமளவுக்கு பாரிய பிரச்சனையல்லவே.. பேசித் தீர்த்திருக்கலாமென்பது அவரது நிலைப்பாடு. ஆமாம்... தந்தை செல்வா, அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நாம் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். எதிர்க்கட்சியெனும் அந்தஸ்து 1977 களில் கைவசமானவுடன் தமிழீழத் தாயகத்தினை விழுங்கிவிட்டார்களென தமிழரசுக் கட்சியினரை ஒரேயடியாகக் குற்றம் சாட்ட முடியாதெனினும் - தமிழ்த்தேச அரசியலுக்கு அவர்களாற்றிய அளப்பரிய பங்கினை மறுத்துவிட முடியாதென்பதால் - உண்மை அதுவாகத்தானிருக்கின்றது. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளுமளவுக்கு எம்மவர்களின் வரலாறுகள் திறமானவையாகவில்லை. காரணம், அவ்வக் காலங்களின் அதிகார வர்க்கத்தினரின் நலன்களுடன் முரண்படும் எவையும் வரலாற்றில் தொகுக்கப்படுவதில்லை. யதார்த்தத்தினை நோக்கின், வரலாற்றில் கூறப்பட்ட விடயங்களையும் விட கூறப்படாத விடயங்களிலேயே உண்மையான வரலாறு பொதிந்துள்ளது.


03. நீதித்துறைசார் சுதந்திரம்

அதிகாரப்பிரிவினைக் கோட்பாட்டின்படி ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சி நிலவுவதற்கு இன்றியமையாததோர் காரணி எந்தத் தலையீடுகளுமில்லாமல், கட்டுப்பாடுகளுமில்லாமல் சுதந்திரமாக இயங்கக்கூடிய நீதித்துறையாகும். நீதித்துறையானது அரசுக்கோ / நாட்டின் தலைவருக்கோ கூட கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. நியாயத்தின்படி நடைமுறை அரசியலிலிருந்து (கூட்டாட்சி நாடுகளில் மத்திய / பிராந்திய அரசுகளுக்கிடையேயான பிணக்குகளைப் பாகுபாடில்லாமல் தீர்ப்பதற்கு) அது விலகியே நின்றாகவேண்டும். இலங்கைக்குப் பொருத்தமானதோர் தீர்வாக தற்போது முன்வைக்கப்படுவது - ஐரோப்பிய யூனியனையொத்த - நாடுகளின் கூட்டாட்சியென்ற கோட்பாடாகும். இதன் பொருத்தப்பாடுகளை விடுத்துப் பார்த்தாலும், இலங்கையில் நீதித்துறையின் நிலைமை கேள்விக்குரியதே.

இதற்கோர் சிறந்த உதாரணம்: யாழ். மேலதிக நீதவான் சிறிநிதி நந்தசேகரன் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டமை. அரச இயந்திரத்தில் அங்கத்துவம் வகித்துக்கொண்டே இராணுவத்தினரின் அடாவடித்தனங்களைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்பவர்களில் மிகவும் கவர்ந்தவர்கள் இவரும், வவுனியா மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும்தான். பாதுகாப்பு மற்றும் சோதனைகளைக் காரணஞ்சாட்டி யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக் கவசமணிந்து கொண்டு பயணிப்பதை இராணுவத்தினர் நிறுத்த முயற்சித்தபோதும், வீடுகளில் படலைகளை அகற்றும்படி நிர்ப்பந்தித்த போதும் மக்களின் முறையீட்டின் பேரில் அதனைத் தடுத்து நிறுத்தியவர் சிறிநிதி. மேலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தவொரு குடிமகனும் தன்னைத் தனிப்பட்ட முறையில் நாடிவந்து முறைப்பாடு செய்யலாமென பகிரங்கமாக அறிவித்து நீதித்துறையினர் மீதான மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்தியவர்.

இத்தகைய காரணங்களுக்காக முன்னரும் பலமுறை அவர் இராணுவத்தினரின் சீண்டல்களுக்கு ஆளானபோதும், அவரது உத்தியோகபூர்வ வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடாத்த முயன்ற சந்தர்ப்பம் - நாடளாவிய ரீதியில் தமிழ் மக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் - பரவலான விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வியக்க வைக்கும் ஆளுமைகளுள் ஒருவரான அவரை அண்மையில் சந்திக்கச் சந்தர்ப்பம் வாய்த்த போது, யாழ். இளைஞர்களின் மனோநிலை மாற்றங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருந்தார். தென்னிலங்கையை விடவும் இங்கே நிலைமை மோசமாகவுள்ளதெனவும், இரு தசாப்தகாலத்திற்கும் மேலாகத் தொடரும் முறுகல் நிலையினால் கசிப்பு அடிக்காமலேயே சக மனிதனின் கழுத்தைச் சீவுமளவுக்கு மக்களின் மனங்கள் இறுகிப்போயுள்ளனவெனவும் கூறியமை சிந்தனையைத் தூண்டியது. வாழ்ந்தால் அவரைப்போல வாழவேண்டுமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.


04. நடமாடுவதற்கான சுதந்திரம்

சில தினங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டியொன்றில் பயணிக்கப் புறப்படுகையில் வண்டிச் சாரதி தனது தோழரொருவரையும் ஏற்றிக்கொள்வதற்கு அனுமதி கேட்டார். அவர்களிருவரும் பெரும்பான்மையினத்தவர்கள். முச்சக்கர வண்டிச் சாரதியுடன் வருடக்கணக்கான அறிமுகமிருந்ததாலும், மனிதாபிமான / சகமனித நேயத்துடனும் அனுமதிக்கப்போனதுதான் வினையாகப் போயிற்று. வழியில் இடைமறித்த பொலிஸார் ஆயிரத்தேட்டு கேள்விகளை முன்வைக்கலாயினர். இன்றைய நாட்களில் பெரும்பான்மையினத்தவர்களைக்கூட அவர்கள் நம்புவதாயில்லை. இராணுவத்தினரே பணத்திற்கு விலைபோகும் போது சாதாரணச் சனங்கள் எம்மாத்திரம்? அவர்களது சந்தேகித்தல்களின் காரணமாக அன்றைய பயணம் அரைமணி நேரத்திற்கும் மேலாக தாமதித்திருந்தாலும் ஒருவழியாக விடுபட்டு வந்தது நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தது.

அண்மைக் காலங்களில் கொழும்பு நகரெங்கும் பொலிஸார் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதும், பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கண்மையிலும் ஒன்றுகூடல்களை ஒழுங்குபடுத்தி வருவதும் குறிப்பிடத்தகுந்ததே. சந்தேகத்திற்கிடமானவர்கள்/பொருட்களைக் கண்ணுற்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களும், மாணவரும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும், சந்தேகத்திற்கிடமானவர்களென இவர்களால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் யார்? சந்தேகத்திற்கிடமானவர்களென்பது தொடர்பில் இவர்களது வரையறைகள் யாது? முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கான கருத்தரங்கின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:

'மூன்று பேருக்கு மேலதிகமாக வண்டியில் ஏறிவிட்டு இடையில் இறங்கிச் செல்லும் நபர் தொடர்பாகக் கவனமெடுக்க வேண்டும். வண்டியில் வரும்போது முக்கிய இடங்கள் தொடர்பாகக் குறிப்பெடுப்பவர்கள், அநாவசியமாக பேச்சுக் கொடுப்பவர்கள், முக்கியமான இடங்கள் தொடர்பாக விசாரிப்பவர்கள் தொடர்பில் அவதானித்து இராணுவத்திற்கு தகவல்களை வழங்கலாம் அல்லது இராணுவ, பொலிஸ் காவலரண்களில் சந்தேகப்படுபவர்களை ஒப்படைக்கலாம்.

செல்லுமிடத்தின் கட்டணம் தொடர்பாக எதுவித விசாரணையுமில்லாமல் ஏறுபவர்கள், வண்டியில் ஏறியபின் முக்கியஸ்தர்களின் விலாசங்களை விசாரிப்பவர்கள், செலூலர் தொலைபேசியினூடாக சந்தேகத்திற்கிடமாக உரையாடுவோர் தொடர்பாக கவனம் செலுத்தி பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.'

இச்சந்தர்ப்பத்தினை சிலர் தமக்கு வேண்டாதவர்களைப் பழிதீர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அவலமும் இடம்பெறத்தான் செய்கின்றது. மனிதர்கள் எப்போதும் மனிதர்கள்தான்.

இன்னமும் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், உயிர்வாழ்வதற்கான சுதந்திரம், இத்யாதி.. இத்யாதி.. தொடர்பில் நான் கவனஞ் செலுத்தவில்லையென்பதனால் அப்படியும் சமாச்சாரங்களிருக்கின்றவென்பதையாவது மறந்துவிடாமலிருப்போம்.


என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.
(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...