Friday, June 20, 2008

பிர‌திக‌ளை பெண்ணாய் மீள்வாசித்த‌ல்

-Susan Schibanoff ன் 'Taking the gold out of Egypt' ஐ முன்வைத்து

The only phenomenon which, in all parts of the world, seems to be linked with the appearance of writing... is the establishment of hierarchical societies, consisting of masters and slaves and where one part of the population is made to work for the other part... And when we consider the first uses to which writing was put, it would seem clear that it was connected first and foremost with power... exercised by some men over other men and over worldly possessions.
(Claude Levi-Strauss)


அறிவும் கல்வியும் இன்றும் ஓரளவு வசதியானவர்களைத்தான் சார்ந்திருக்கின்றன என்றார் அண்மையில் சந்தித்த எழுத்தாளரொருவர். வாசிக்கவும் எழுதவும் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நல்ல புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தானடைந்த சிரமங்களை நினைவுகூரக் கேட்க முடிந்தது இன்னுமொருவரிடமிருந்து. அறிவை உடனுக்குடன் புதுப்பிக்க நூலகங்களை நம்பிப் பயனில்லை. புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளின் விலையோ ஒரு சராசரி வாசகரின் இயலுமையைக் கடந்து எட்டாத் தொலைவில். இந்தியாவிலிருந்து வரும் தமிழ்ப் பிரதிகளுக்கே இந்நிலையெனில் ஆங்கில/ வெளிநாடுகளிலிருந்துவரும் புத்தகங்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லை.

அறிவும் கலையும் எந்தளவு செல்வத்தில் தங்கியிருக்கின்றனவோ அதேபோல அல்லது அதைவிடவும் இறுக்கமாக எழுத்தும் வாசிப்பும் அதிகாரத்தோடு பிணைந்து நிற்கின்றன. படைப்பென்பது செல்வமும் அதிகாரமும் ஒன்றையொன்று இடைவெட்டிக் கொள்ளும் புள்ளியாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. பெண்ணியப் பிரதிகளும் விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்களின் இலக்கிய எழுச்சியும் இந்த இறுகிய பனிப்பாளத்தைத் தகர்த்தெறிய முயற்சிக்கினும், மரபுகளின் பெயராலும், ஏலவே நிறுவப்பட்ட செவ்விலக்கிய மேற்கோள்களின் துணையுடனும் இவ்வாதிக்கமானது தொடர்ந்தும் வன்மையாக நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Susan Schibanoff தனது 'Taking the gold out of Egypt' எனும் கட்டுரையில் - கட்டுக்களையும் மீறித் தெறிக்கும் தீவிரமான பெண் வெறுப்புடன் கூடிய - பேரிலக்கியங்களையும் பெரும் படைப்பாளிகளையும் ஒரு பெண்ணாய் எதிர்கொள்ள நேர்வதன் துன்பியல் அனுபவத்தை எடுத்துக் கூறுகிறார். மத்தியகாலப் படைப்புகளில் மேலோங்கிக் காணப்படும் misogyny (பெண் வெறுப்பு?) பெண் வாசகர்களை மிகவும் மனவுளைச்சலுக்காளாக்கக் கூடியது. ஆண்களை மையப்படுத்திய படைப்பொன்றில் பெண்களுக்கெதிரான/ பெண்களை இழிநிலைக்குட்படுத்திய வாசகங்கள் இடம்பெறுவது ஆண் வாசகர்களைப் பொறுத்தவரை ஒருவித உற்சாகப்படுத்தலாகவும், நிறைவேறாமற் போன காதலொன்றின் வேதனைப் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆறுதலாகவும் அமையும் அதேவேளை அப்படைப்பு ஒரு பெண்ணின் மனதில் நேரெதிர் உணர்வுகளை ஏற்றிச் செல்கிறது. பதினான்கு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் படைப்பாளிகளின் முக்கிய இலக்கு ஆண்களாகவேயிருந்தமையினால் பெண்களுக்கெதிரான வாசகங்கள் மிகச் சாதாரணமாக இடம்பெற்றாலும், சிலர் அவற்றுக்காக பெண் வாசகர்களிடம் நாடகப் பாங்கில் மன்னிப்புக் கேட்கும் வழமையுமிருந்தது. அவ்வாறு மன்னிப்புக் கேட்பவர்களும் அச்சொற்றொடர்கள் தங்களால் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல, மாறாக மாமேதைகளாலும் புகழ்பெற்ற எழுத்தாளர்களாலும் காலங்காலமாக வழிமொழியப்பட்டு வந்தவையென்பதையும் மறக்காமல் குறிப்பிட்டு, ஆகவே அத்தகைய மாமனிதர்களால் எடுத்துரைக்கப்பட்ட வாசகங்கள் ஒருபோதும் பொய்த்துப் போவதில்லை ('He could not believe that so true a man and noble a philosopher as 'Socrates' should write otherwise than truth'); அழிந்துவிடுவதுமில்லை; விரும்பியோ விரும்பாமலோ தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டவாறேயிருக்குமெனவும் மறைமுகமாக நிறுவத்தலைப்பட்டு விடுகின்றனர். Chaucer, Jean de Meun போன்ற அனைவரும் இதில் உள்ளடக்கம்.

Implicit in this self-excuse by source is the threat that the written texts of anti-feminism are 'fixed': they are autonomous entities that may be neither altered nor discontinued. The female reader is to understand, then, that when writers must choose between pleasing her and venerating the written traditions of anti-feminism created by wise men of the past and noble ancient philosophers, patriarchy has first claim on their loyalty.
(pg223. - Feminist Readings in Middle English Literature: Edited by Ruth Evans and Lesley Johnson)


இலக்கியவுலகில் நிறுவப்பட்டுவிட்டதோர் பாரம்பரியத்தை எடுத்தாளுகின்றன இவ்வரிகள். மேலைத்தேய இலக்கியங்களில் மட்டுமல்ல, இங்கும் இத்தகைய ஆனானப்பட்ட பாரம்பரியங்கள் - பாரதியும் திருவள்ளுவரும் கூறுவது வேதவாக்கியமென்பதாய் - இன்றும் நடைமுறையிலுண்டு. இப்பாரம்பரியங்கள் ஒரு பெண் வாசகர் மீது அதீதமான அழுத்தத்தைப் பிரயோகித்து அவளைப் பலவீனமானவளாக்குகின்றன. மேலும், அவள் ஒரு பெண்ணாகவல்லாது ஆணாக அப்பிரதியை அணுகவும் நிர்ப்பந்திக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் தான் ஒரு பெண்ணாய் படைப்பொன்றை எதிர்கொள்ளவேண்டியதன் தேவையும், அதன் அசாத்தியமும் புலப்படத் தொடங்குகிறது. பழைய பிரதிகளைக் கலைத்துப்போட்டு அவற்றை மீள்வாசிப்புக்குட்படுத்தவேண்டியது இவ்விடத்தே அவசியமாகின்றது. இந்த மீள்வாசிப்பென்பது என்ன, அதை எவ்வாறு மேற்கொள்வதென்பது ஒரு முக்கியமான, ஆராயப்படவேண்டிய விடயம்.

Susan Schibanoff மேற்கொள்ளும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அவதானிப்பு, எழுத்தறிவுக்கும் பெண்களின் சுயசார்புக்குமிடையிலான முரண்பாடு. மேலோட்டமான நோக்கில் எழுத்தறிவு அல்லது கல்வியறிவு ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக்கும் தற்றுணிவுக்கும் வழிவகுக்கிறதென்ற முடிவை வந்தடைகிறோம். ஆனால், யதார்த்தமும் சான்றுகளும் இதற்கு நேர்மாறானதாகவே இருந்து வந்திருக்கின்றன. எழுத்தறிவற்ற பெண்களை விடவும் அதிக பிரதிகளை கற்றறிந்த பெண் அன்றாட வாழ்வில் பின்னிற்கவே செய்கிறாள். இதற்கான காரணத்தைத் தேடும் Susan Schibanoff மறுமலர்ச்சிக் காலத்தின் பாரிய சமூக மாற்றங்களினிடத்து அதைக் கண்டடைகிறார். தீவிர பழமைவாதிகள் கூட பெண் கல்வியைத் தீவிரமாக ஆதரித்த காலமது. எழுத்தறிவு பெறுவதற்கும், கற்பதற்கும் அதிக வாய்ப்பும் பெண்களுக்குக் கிடைத்து வந்தது. ஆனால், தமது எழுத்தறிவினால் முதன்மைப் பயன்பெறுபவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியுடன் இந்த முன்னேற்றத்தையும் நாம் மீள்வாசிப்புச் செய்யவேண்டும். பெண்களின் அதிகரித்த எழுத்தறிவு வீதமானது இன்னுமின்னும் அதிகமாக ஆண்வயப்பட்ட பிரதிகளுக்கு பெண்களை நெருக்கமாக்கியதேயொழிய (மாற்றுப் பிரதிகள் அக்காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பட்டிருந்தன) சுயசிந்தனையையும் தேடுதலையும் வளர்ப்பதற்கு தவறிவிட்டதென்றே கூறவேண்டும். படைப்புகள் பொதுவாக ஆண்களின் பார்வையில் நாணம், பணிவு, 'கற்பு'டன் கூடிய இலட்சியப் பெண்ணொருத்தியை வடிப்பதிலேயே குறியாயிருந்தன. மறுமலர்ச்சிக் காலத்து கல்விசார் எழுத்தாளர்களும் பெண்கள் வாசிக்கப் பழகுவதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தினர், அறிவதற்காகவல்ல, நல்ல பெண்களாவதற்காக. அந்தளவு வாசிப்பு பெண்களை அறிவுப்பாதையிலல்லாது, 'சிறந்த' பெண்களாவதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. அதேவேளை, எழுத்தறிவானது தொடர்ந்தும் அதிகாரஞ்செலுத்தும், பலவீனப்படுத்தும் வினைத்திறனான உத்தியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டிருந்தது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுப் பெண்களின் சமூக நிலையானது நலிவடைந்தும், அவர்களது சமூகப் பங்களிப்பு மிகக் குறுகியும் போனமைக்கு அதிகரித்த எழுத்தறிவு வீதமும் ஒரு காரணமாகலாம். இன்னுமொரு விதத்தில் இந்த எழுத்தறிவு சில பெண்களுக்கு பெண்ணிய எதிர்ப்புப் பிரதிகளை மீள்வாசிப்புச் செய்யவும், அதனூடாகத் தமதான வரலாற்றைக் கட்டியெழுப்பவும் உதவிபுரிந்திருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது மிகக் குறைவே.

ஒரு பெண்ணாய் வாசிப்பது/ பிரதியொன்றை அணுகுவதென்பது வெறுமனவே பிரதியும் வாசிப்பும் சார்ந்தது மட்டுமல்ல. Susan Schibanoff கூறுவது போல, சக பெண்களுடன் உரையாடுவதும், அன்றாடப் பெண்களிடமிருந்து தான் கேட்டதற்கும், பெண்களைப் பற்றி ஆண்கள் எழுதி வைத்திருப்பதற்குமிடையிலான முரண்பாடுகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் புள்ளியிலிருந்துதான் பெண்ணிய வாசிப்பு ஆரம்பமாகிறது. இதுதான் முறையான மீள்வாசிப்பும். விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், கலந்துரையாடற் பட்டறைகள் போன்ற வாய்வழிப் பெண்ணிய மரபு இந்த மீள்வாசிப்பில்/ பெண்ணாய் வாசிப்பதில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

Christine de Pisan did likewise and found it just hard to reconcile what she heard from them with the written opinions of male authorities on women's base and immoral character. If one of the mainsprings which motivated Christine's rereadings was the conflict between what she heard from women and what she read by men, then perhaps it is well for us to remember that modern feminist oral traditions have a vital role to play in the otherwise intellectual and literate act of rereading, reading as women.

முன்கூட்டியே நிறுவப்பட்டுவிட்ட ஆண்மையவாத படைப்புகளை மீள்வாசிப்புச் செய்வதனூடாக எமக்கான வரலாற்றைக் கண்டடைவதன் மூலமே பெண்ணிய வாசிப்புச் சாத்தியமாகின்றதெனலாம்.


(Susan Schibanoff இன் 'Taking the gold out of Egypt' கட்டுரையைத் தழுவி.. நீண்ட கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்கள் மட்டும். நன்றி: Feminist Readings in Middle English Literature: Edited by Ruth Evans and Lesley Johnson )
Image: Christine de Pisan lecturing to a group of men

Thursday, June 12, 2008

மனப்பாழ்வெளியினூடொரு தேசாந்திரியாய்..!!

- 'சஞ்சாரம்' படமும் சில குறிப்புகளும்


ரஷ்யக் கலாசார மையத்தில் Women and Media Collective னரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு திரைப்பட விழா.. ஓரினப் பாலுறவாளர்கள் பற்றிய மலையாளத் திரைப்படம் 'சஞ்சாரம்'. Fire போன்ற இன்னபிற படங்களைப்போல அதிகம் வர்த்தகமயப்படுத்தப்படாத படம். மிகச் சுருக்கமாகக் கதையைச் சொல்வதானால்:

காடு, நீர்வீழ்ச்சி, ஆறுகளுடன் கூடிய ஒரு அழகான கிராமம். கிரண், டிலைலா - சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகள். டிலைலா தந்தையை இழந்தவள், அம்மாவுடனும், அம்மம்மாவுடனும் வாழ்ந்து வருகிறாள். கிரண் ஒரு கவிஞை. காது கூட குத்தாமல், நகைகள் அணிய பிரியப்படாமல் தனது சுயவிருப்புடன் வளர்ந்தவள். அவளது அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு அப்பா அவளுக்கு வாய்த்திருக்கிறார். வளரும் பருவத்தில் கிரணுக்கு டிலைலா மீது ஈர்ப்பு வருகிறது. இவர்களது வகுப்பைச் சேர்ந்த ஒருவனும் டிலைலாவுக்குப் பின்னே அலைகிறான். டிலைலாவை நெருங்க கிரணின் உதவியை நாடும் அவன் மூலம் தனது ஈர்ப்பை அவளுக்கு வெளிப்படுத்த கிரணால் முடிகிறது. டிலைலாவும் சம்மதிக்க, அவர்களுக்கிடையிலான நெருக்கம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் அவர்களது வகுப்பாசிரியைக்கு இது தெரியவருவதுடன், டிலைலாவில் நாட்டம் கொண்டிருந்த அந்த மாணவனுக்கும் இது தெரியவர, டிலைலாவின் தாயிடம் உண்மையைக் கூறிவிடுகிறான். அதிர்ச்சியடைந்த டிலைலாவின் அம்மா மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க அவசரப்படுகிறாள். டிலைலாவும் தமக்கிடையிலான இந்த உறவு சமூகத்தாலும், ஏன் அம்மாவாலுமே கூட ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லையென அறிந்து, திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். இதுதெரியவந்த கிரண் வீட்டை விட்டு வெளியேறுவோமென முடிவெடுத்தாலும், டிலைலா அதற்கு உடன்படவில்லை. இறுதியில், டிலைலாவுக்குத் திருமணம் நடைபெறுகிறது, முதலில் தற்கொலைக்கு முயற்சிக்கும் கிரண் பின் மனம் மாறி, தன் வாழ்வின் போக்கைத் தானே தீர்மானிப்பவளாக மாறுகிறாள்.

நிகழ்வு ஒருங்கமைப்பாளர்கள் மீது ஏராளமான விசனம், சிங்கள மொழியில் மட்டும் subtitle போட்டது, கலந்துரையாடல் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றதென. தம்மருகிலிருக்கும் சிறுபான்மையினரைப் புறக்கணித்துக் கொண்டு எப்படி விளிம்புநிலைப்படுத்தப்பட்ட இன்னுமொரு குழுமத்தினரைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது, அதனூடாக எத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டுமென எதிர்பார்க்கிறார்களென்பதும்.. அவற்றைப் புறந்தள்ளி, படத்தைப் பார்த்தாலும், இத்தகைய படங்களை, அல்லது நாவல்களை எடுத்துக்கொண்டால் சிந்தனையில் இடறுமொரு விடயம், ஓரினப் பாலுறவிலும் ஆண் - பெண் என்ற எதிர்நிலைகள் கட்டமைக்கப்படுவது ஏன் என்பது. உடலமைப்பில் - அதாவது பால் ரீதியாக இருவரும் பெண்களாயிருந்தாலும், அங்கு ஒருவர் ஆண் என்ற - பாலினக் கட்டமைப்பினடிப்படையிலும் (ஆணாக உடையுடுத்துவது, தலைமை தாங்குவது...) மற்றவர் பெண்ணாகவும் (பயந்த சுபாவமுடைய, அழகாக வெளிக்கிடுவதில் நாட்டமுடைய, கொஞ்சம் பின்னிற்கும்) காட்டப்படுவது ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஆண் என்ற பாத்திரத்தையும், மற்றுமொருவர் பெண் என்ற பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. ஓரினப் பாலுறவிலும் இந்த ஆண்-பெண் எதிர்நிலை கட்டமைக்கப்படுவது ஊடக மற்றும் mainstream னரின் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வா அல்லது இயற்கையானதா என்ற சந்தேகம் எழுகிறது. நண்பரொருவர் அதுவே இயற்கையாகவிருக்கலாம் என்றார். ஆனாலும்.., அதது அவர்களவர்களால் தான் பேசப்பட்டாக வேண்டும். அப்போதுதான் அது நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கக்கூடும். நாம் எமது பாட்டில் சிந்திப்பதும், முடிவெடுப்பதும் கடைசியில் பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்க முனைந்ததைப்போல, அவ்விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்கள் மீதான மற்றுமொரு வன்முறையாகத்தான் அமையும். நாங்கள் செய்யக்கூடியதெல்லாம் இப்படியும் விடயங்களிருக்கின்றன என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைவதும், அவர்களையும் எம்மைப்போன்ற அதே உணர்வுகள் கொண்ட மனிதர்களாக மதிக்கும் மனப்பக்குவத்தை எம் ஒவ்வொருவரின் மனதிலும் வளர்த்துக் கொள்வதாகுமென்று நினைக்கிறேன்.

......................

கலந்துரையாடலின் போது ஒருங்கமைப்பாளர்களுள் ஒருவர் இத்தகைய சமூக நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த என்ன செய்யலாமென நினைக்கிறீர்களெனக் கேட்டார். பார்வையாளரொருவர் வேடிக்கையாக, வருடத்துக்கு இப்படி இரண்டு திரைப்பட விழாக்களை ஒங்குபடுத்துங்கள் என்றுகூற, அரங்கு முழுதும் சிரிப்பலை பரவியது, என்ற ஒரு உழுத்துப்போன சொற்றொடரை எடுத்தெறிந்து கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.

சமூக மாற்றம் அல்லது விழிப்புணர்வு.. (தனியே ஓரினப் பாலுறவாளர்கள் பற்றி மட்டுமல்ல, இன்னபிற controversial issues அனைத்தையும் பற்றிய) இதைக் கொண்டுவர என்னசெய்யலாமென்பது பொதுவாக இத்தகைய விடயங்களில் ஆர்வமுடைய, சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய முக்கியமான கேள்வி. அதிகம் பகிரங்கமாகப் பேசப்படாத இவ்விடயங்களை, விளிம்புநிலை மக்களின் குரலை எழுத்தில் பதிவது ஒரு வழி, திரைப்படங்கள் போன்ற காட்சியூடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது இன்னொன்று, அடுத்தது களத்திலிறங்குவது. இவையொவ்வொன்றும் தமதேயான வழிமுறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த துணைநிற்கின்றன. களத்திலிறங்குவதற்கு முதல் எழுதி வைக்கவேண்டும், ஆவணமாகப் பதியவேண்டுமென சொல்லித்திரிவதும், எழுதிக்கிழித்து என்ன பிரயோசனம் செயற்பட மட்டுமே வேண்டுமெனக் கூறுவதும் இரண்டும் பயனற்றவை. தண்டவாளங்கள் எப்போதும் சமாந்தரமாகப் பயணித்தாக வேண்டும். ஆவணங்களும் பதிவுகளும் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதும், மக்கள் மத்தியில் இயங்கும் இயக்கங்களின் செயற்பாடுகள் பதிவுசெய்யப்படுவதுமென எழுத்தும் செயற்பாடும் தமக்கிடையே இடையீடு செய்தபடியிருந்தால் மட்டுமே ஏதேனுமொரு சிறிய மாற்றமாவது ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவும். இரண்டும் ஒரே நபரால் நிறைவேற்றப்படுவதும், தமக்கு விருப்பமான, சாத்தியமான வழிவகையைத் தேர்ந்துகொண்டு தன்னாலான பங்களிப்பை வழங்குவதும் அவரவரது தெரிவு. இதில் எந்தவொரு வழிமுறையும் நூற்றுக்கு நூறு வீதம் சரியானதுமல்ல, நூறுவீதம் சமூக மாற்றத்துக்கான சாத்தியக்கூற்றினைத் தனக்குள் கொண்டதுமல்ல.

ஆனால், இந்தக் களத்திலிறங்குவது அல்லது செயற்படுவதென்றால் என்னவென்பது அடுத்த கேள்வி. ஏதோவொரு அமைப்பில் சேர்ந்துகொண்டு விடுதலை வேண்டும், சமத்துவம் வேண்டுமென கொடிகளும், பதாகைகளும் தூக்கிக்கொண்டு திரிந்தாற்போல சாத்தியமாகக்கூடிய விடயங்களல்ல இவை. சமூகமென்பது தனிமனிதர்களின் தொகுதி. தனிமனித விழிப்புணர்வு ஏற்படாத ஓரிடத்தில் சமூக மாற்றமும் சாத்தியமில்லை. எந்தவொரு விடயமும் முதலில் தனிமனிதனிலிருந்து ஆரம்பித்தாக வேண்டும்.

ஒரு மனிதன் தனக்குத்தானே நேர்மையுடையவனாயிருந்து, எந்தவொருவரையும் அடிமைப்படுத்தாமலோ, காயப்படுத்தாமலோ, அதிகபட்ச புரிந்துணர்வுடன் உறவுகளை அணுகி, தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அவரவரது பலவீனங்களுடன், சக மனிதப்பிறவியாகக் கருதி நேசிப்பானேயாகில் அந்த மனிதனிலிருந்துதான் மாற்றம் தனது முதற்காலடியை எடுத்துவைக்கத் தொடங்குகிறது. தனது தாயை, சகோதரியை, மனைவியை நேசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத ஒருவனால் பெண் விடுதலை அல்லது சமத்துவம் - அவன் என்னதான் தெருவிலிறங்கி போராடினாலும், ஆயிரமாயிரம் பெண்களைக் 'கரையேற்றினாலும்' - சாத்தியப்படக்கூடுமாவென்பது சந்தேகமே. அதேவேளை இந்தப் 'பெண்ணியம், ஆண் மேலாதிக்கம், தந்தை வழி சமுதாயம்' போன்ற பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் தெரியாத ஒரு சாதாரண ஆண் தனது குடும்பத்தினருடன், சக பெண்களுடன் நடந்துகொள்ளும் முறையினூடாக தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய ஆண்களின் மனதில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், அதுவே முக்கியமானதும். அவனிலிருந்து அவனைச் சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்களென வியாபிக்கும் அவ்வதிர்வு காலப்போக்கில் மிக இயல்பானவொன்றாக ஏற்றுக்கொள்ளப்படவும் கூடும். அதேபோல, 'எனக்காக இதைச் செய், அதைச் செய், இதைப்போடு, அதைப்போடு, இப்பதான் வடிவாயிருக்கிறாய், இல்லாட்டி அசிங்கமாயிருப்பாய்,' என்றெல்லாம் கமெண்ட் அடித்துக்கொண்டிராமல், 'இவனோடு பேசாதே, அவனோடு பழகாதே, என்னை மட்டுமே நினை, எனக்காக மட்டுமே கவலைப்படு,' என்று அதிகாரம் செலுத்தாமல், 'நீ நீயாக இருப்பதைத்தான் நேசிக்கிறேன்' என்றுகூறும் மனப்பக்குவம் வாய்த்திருக்கும் ஒரு ஆணால் களத்திலிறங்கிப் போராடுபவனை விட அதிகம் சாதித்துவிட முடியும்.

ஆதிக்கம் என்பது எப்படி ஆண்களின் உயிரோடும் உடலோடும் வேரோடிக் காணப்படுகிறதோ அதேபோலத்தான் அடிமைத்தனமும் பெண்களும்.. நகை நட்டணிந்துகொண்டு, 'வடிவாக' வெளிக்கிடுவதில் பிரியமுடைய ஒரு பெண் எப்படி தன்னை விடுதலையடைந்தவளாக அல்லது அடைய முற்படுபவளாக, பிரயாசைப்படுபவளாகக் காட்டிக்கொள்ள முடியுமென்பது குறித்து சந்தேகம் கொள்கிறேன். அது உடலைக் கொண்டாடுவதென யாரும் கூறி தமக்குள் ஆசுவாசப்படலாம். ஆனால், கொண்டாடுவதற்கும் கொண்டாட்டத்துக்குத் தயார்படுத்துவதற்குமிடையே வேறுபாடுகளிருக்கின்றன. உடலைக் கொண்டாடுவதென்பது உடலை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதும், நேசிப்பதும். அதாவது, மற்றுமொரு பார்வையில் தனது நிர்வாணத்தை நேசிப்பது. என்று காதில் துளை குத்தி தோடு அணியவும், மூக்கில் மூக்குத்தி அணியவும் தொடங்குகிறோமோ அன்று எமது உடலின் இயல்பைக் குலைக்கிறோம், அதைச் சிதைத்து 'இதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு' என்று கட்டமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒரு விம்பத்தை அவசர அவசரமாக அணிந்து அலங்கரித்துக் கொள்கிறோம். இந்நிலையில் பெண்ணுடம்பு பண்டமயமாக்கப்படுவதையும், போகப்பொருளாக எடுத்து நோக்கப்படுவதையும் எப்படிக் குறைகூற..

ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பெண் பற்றிய விம்பங்களிலிருந்தான விடுதலையுணர்வு ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தானாக எழாதவரையில் யார் என்ன சமூக மாற்றத்துக்காய், எப்படியெப்படிப் போராடினாலும், திரும்பத் திரும்ப ஒரே செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருந்தாக வேண்டும்.

நாங்கள் எதற்காகப் போராடுகிறாமோ, எந்த மாற்றத்தை வேண்டுகிறோமோ முதலில் அது குறித்த பூரண விழிப்புணர்வும், நேர்மையும் எமக்கிருக்க வேண்டும். நாங்கள் வழிகாட்டிகளாக முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டவேண்டும். எமது வாழ்வும் நடவடிக்கைகளும் இன்னும் ஒரேயொரு மனிதனை தனது எண்ணம், சிந்தனை குறித்து சுய விமர்சனம் செய்துகொள்ளத் தூண்டுமாயின் அதுவே மிகப்பெரிய சாதனை.

...........................

மற்றையது, உறவுகள்.. டிலைலாவுக்குத் திருமண ஏற்பாடுகள் இடம்பெறுவது அறிந்ததும் கிரண் வீட்டை விட்டு வெளியேற அழைக்கிறாள். அதை மறுக்கும் டிலைலா, திருமணத்துக்குப் பிற்பாடும் தாம் இதேபோல இருக்கமுடியும், தமது உறவைக் கொண்டுசெல்ல முடியும் என்கிறாள். படத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவொரு பகுதியல்லவெனினும், அந்த உரையாடல் என்னைப் பாதித்திருந்தது.

நேர்மை.., ஒரு உறவிலிருந்து, அதன் பிடிப்பிலிருந்து முற்றாக விடுபடாமல் இன்னொரு உறவில் நுழைவதென்பது இரண்டையும் சிதைப்பதாகும். புதிய உறவொன்றில் நுழைவதற்கு ஒரு நேர்மை இருந்தாக வேண்டும். முறிந்து போன, அல்லது முறிக்கப்பட்ட உறவின் நினைவிலிருந்து விடுபட, தப்பியோட அல்லது பழிவாங்குமுகமாக இன்னொருவரை நேசிக்கத் துணிபவர்களின் நேசத்தின் மீது சந்தேகங்கொள்ளவே முடிகிறது. உண்மையான அன்பு பச்சாதாபத்தின் மீதோ, நன்றியுணர்வுடனோ, அல்லது வேறேதேனும் காரணம் பற்றிக்கொண்டோ எழுவதில்லை.

அடுத்தது இந்தப் பாலும், பாலினமும்.. ஆண்குறி கொண்டவர்களெல்லாம் 'ஆண்'களாக இருப்பதுமில்லை; ஆண்குறியற்றவர்கள் அனைவருமே 'ஆண்'களாக இல்லாமலுமில்லை. இந்த ஆண்குறி தொடக்கம் இன்னபிற உறுப்புக்கள் எல்லாம் பால் - அதாவது இயற்கை உடலமைவுடன் தொடர்புடையவை; மற்றும்படி ஆணாக இருப்பது, பெண்ணாக இருப்பதென்பது பாலினம் - சமூகம் கட்டமைத்திருக்கும் வரைமுறைகள், விதிகளுடன் தொடர்புடையவை. விமர்சிக்கப்படவேண்டியதும், மறுக்கப்பட வேண்டியதும் இந்தப் பால் வேறுபாடல்ல, பாலின வேறுபாடே.

இவையனைத்தின் பின்னமைவிலும் ஒரு படத்தை ஆழமாக இரசிக்க முடிந்தது..

Thursday, June 05, 2008



கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில்
நீயோ நானோ இப்படியிருந்திருக்க வேண்டியவர்களல்ல
அடிவானத்தைப் பார்த்து
நான் உரக்கக் கத்த வேண்டியிருந்தது,
மனிதர்களை நேசிப்பவளெனினும்
காற்றில் கலந்த என் குரலை
சூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாக
அவர்கள் பேசிக்கொண்டார்கள்
எனக்குத் தெரியும்,
படகெடுத்து கையுளைய துடுப்பு வலித்து
புயல்கள் கடந்து உன் கரையை வந்தடையும் முன்பு
ஓங்கிக் குரலெழுப்பி சலித்துப்போய்
நீ திரும்பிக் கொண்டிருப்பாய்...
கரைகள் என்னைக் கைவிட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டு
நானொரு க‌ட‌ற்க‌ன்னியாகியிருப்பேன்.
...................

கண்முன்னே பிணமொன்று செத்துவீழ்கிறது
என் சாயலுடன்
அதன் அங்க அசைவுகளும் உதட்டுச் சுழிவும்கூட
என்னதையே ஒத்திருப்பதாக அக்கா முணுமுணுத்தாள் காதுக்குள்
பட்டுப்போன இதயம்..
தீய்ந்துபோன உதடு..
கருகிய மூளை..
'இதுவொரு மனித உயிரியா என்ன'
சா வீட்டில் அனைவருக்கும் சந்தேகம்
நான் உயிரைச் சுருட்டியெடுத்து பைக்குள்ளிட்டு
இரைப்பையின் ஆழத்தில் புதைத்து விட்டிருந்தேன்
நாற்பது நாள் கடந்து,
நானொரு பிணமென நடமாடுவதாய்
அம்மா சலித்துக்கொள்வாள் அனைவரிடமும்


ஓவிய‌ம்: ச‌ல்வ‌டோர் டாலி