Tuesday, June 27, 2006

என் தேவனே.., ஏன் எம்மைக் கைவிட்டீர்..?

- ஓர் இறுதி மன்றாடல்

1.

முலைக்காம்புகளைக் கீறிப்பிளந்துகொண்டு
தெறிக்க முனைகின்றது வலி..
உடலெங்கும் திட்டுத்திட்டாய்ப்
படிந்தும், ஒழுகியும் கொண்டிருக்கிறது,
உங்கள் எச்சில் நாற்றம்..

என் சகோதரர்களே..,
என்னை மன்னியுங்கள்

உங்கள் எல்லைகளை
அத்துமீறப்போவதற்காக..
நீங்கள் பேசவிரும்பாதவொரு மொழியினை
என்னதாக நான் தேர்ந்தெடுத்துக் கொண்டமைக்காக..

விறைத்த குறிகள்
படுக்கைப் பரப்பெங்கும்
காளான்களாய் முளைக்கும்..,
கிளைத்தெழுந்து பரவி
உடல் துளைக்க நீள்வதான
பிரமைகளுடனும், கனவுகளுடனும்

இப்படித்தான்..,
உங்களால்தான்..,
நானுமொரு பெண்ணாகிப் போனேன்...


2.

மனச்சாட்சியைத் தொலைத்தவர்களுக்கு..,

மனங்களையும், சாட்சிகளையும் மறுத்தெறிந்தவள் எழுதிக்கொள்வது...,

நீங்களெல்லாம் நாய்ப்பிறப்புக்களென்று எனக்குத் தெரியும். எனதிந்தச் சொல்லாடல் உங்களுடனானதல்லவென்பதால், அதுகுறித்து அதிகமாக நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இன்னமும் எனது மனிதத்தன்மைகளிலிருந்து நான் பிறழ்ந்து போய்விடவில்லையாதலால், நாய்களுடன் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லையென்ற நொண்டிச்சாட்டுக்களுக்குமப்பால், உங்களது வக்கிரம் தொனிக்கும் மொழி இன்னமும் கைவரப்பெறாதவளென்ற ஒரே காரணத்தால் உங்களுடனான என் உரையாடல்களைத் தவிர்த்துக்கொண்டு சுயம் மீள்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னமோ... அப்போதெல்லாம் நான் மிகவும் சிறியவளாயிருந்தேன். எனது கவலைகளெல்லாம் விரைவில் வளர்ந்து பெரியவளாகி விடவேண்டுமென்பதாயிருந்தன. இன்னமும் தெளிவுற்றால் குழந்தைமை எனது வெறுப்பிற்குரியதாகவிருந்தது. சொந்தங்கொண்டாடிய சில வல்லூறுகளால் என் பால்யகாலம் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு விட்டிருக்க, மூப்பு எனது மிகப்பெரிய கனவாயிருந்தது. பெரியதொரு விடுதலையினை, சுதந்திரத்தினை அது பெற்றுத்தரக்கூடுமென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகவுமிருந்தது.

பால் / பாலியல் என்பவற்றின் பொருளறியாத வயதுகளிலேயே.. அப்பா, அண்ணாவெனும் அர்த்தங்களற்ற உறவுகளின் சுரண்டல்களின் நீட்சியில்.., ஒற்றையிரவில்.. தலை நரைத்து, உடலெங்கும் முகமெங்கும் சுருக்கங்கள் விழுந்து நாங்கள் கிழடுகளாகிப் போனோம்.

*அந்தப் பெண் குழந்தை
சர்வசாதாரணமாக நடந்து போவாள்
அப்புறம் அப்புறமான நாட்களில்
அந்தப் பெண்ணால் முடியாது; முடியாது
திரும்பவே முடியாது.
தனது கடந்த கால சுயத்துக்கு
தனது பழைய
குழந்தை மயமான வாழ்வுக்கு...

அலறித்துடித்தபடி விழித்தெழுந்து.. கனவுதானென்ற ஆசுவாசங்களுடன்.. நிம்மதிகளுடன் மறுபடியும் படுக்கையில் சாய்கையில்.. தொலைந்துபோன பால்யகாலத்து சாம்ராஜ்யம் நினைவுகளாய் விரிந்து மனதை விம்மப் பண்ணும்; உள்ளம் கதறியழும்...

என் தேவனே.., ஏன் எம்மைக் கைவிட்டீர்..?


3.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னரான பொழுதுகளில், நண்பர்களுடனான வழமையான அரட்டை சற்றே திசைதிரும்பி அரசியல், பெண்ணியமென ஆழ்வெளிகளை ஊடறுத்துப் புகலாயிற்று. அண்மையில் வங்காலையிலும், மன்னாரிலும் இடம்பெற்ற சம்பவங்களும் நேற்றைய இராணுவத் தளபதியின் படுகொலையும் விவாதத்தில் இடம்பிடிக்க காரசாரமான வார்த்தைப் பரிமாற்றங்கள் வெளியேறிப் பரவி அறையினை நிறைத்துக்கொள்ளலாயின. தோழியொருத்தி ஆவேசத்துடன் தன்னிலை மறந்து பேசத்தொடங்கினாள்:

நேற்றைக்கு நிகழ்ந்ததைப் பயங்கரவாதமென்கிறீர்கள்.. படுகொலையென்கிறீர்கள்.. பச்சைக் குழந்தைகள் தூக்கில் தொங்கியபோது எங்கே தொலைந்தன உங்கள் பச்சாதாபமெல்லாம்..? கட்டிய மனைவி கண்ணெதிரில் துன்புறுத்தலுக்குள்ளானபோது எப்படியிருந்திருக்கும் அந்தக் கணவனுக்கு..? பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி.. பெண்ணுறுப்பில் வாழைப்பொத்தியும், இன்னபிறவும் சொருகப்பட்ட பெண்ணின் நிலையில் நீங்களிருந்திருப்பீர்களானால் என்னதான் செய்திருப்பீர்கள்..? அப்போதும் அனைத்துமே எங்கள் தலைவிதிதான்.. கடவுளின் திட்டங்கள்தானென்று வாய்மூடி மௌனித்திருந்திருக்க முடியுமா உங்களால்..? அந்தக் கணத்தில் கயவர்களின் கைகால்களை செயலிழக்கச் செய்ய வக்கில்லாத கடவுள் ஒரு குருடுதான்.. சந்தேகமேயில்லாமல் உங்கள் கடவுள் குருட்டுக் கடவுள்தான்..

அவர்கள் பதிலளிக்கிறார்கள்: உணர்ச்சிவசப்பட்டு கடவுளைக் குற்றஞ்சாட்டாதே.. உன் நாக்கு அழுகித்தான் போகும். அவர் எது செய்தாலும் அதற்கொரு தக்க காரணமிருக்கும். பாவம் செய்தவர்கள் என்றேனுமொருநாள் எப்படியேனும் தண்டிக்கப்படுவார்கள். மனிதர்களின் போன ஜென்மத்துப் பாவங்கள்தான் இந்தப் பிறப்பில் அவர்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் காரணங்களாகின்றன.

தீவிரமடையும் வாக்குவாதத்தினுள் தலையிடுகிறேன், நான்: தனது தாய்தந்தையரைத் தொலைத்திராத வரையில், தனது தங்கைக்கோ தோழிக்கோ இப்படியெதுவும் நடந்திராதவரையில் இவர்கள் தொடர்ந்தும் பேசிக்கொண்டுதானிருப்பார்கள்.. இறந்துவிட்ட சகோதரியின் சடலத்தினருகிலமர்ந்திருக்கையில், 'எல்லாம் கடவுளின் எண்ணம்.. போன ஜென்மத்துப் பாவபுண்ணியம்' தானென எவராவது சொல்வாராகில் அப்போது உறைக்கும் இவர்களுக்கும்.. எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.

சரிதான் போங்கடா.. நீங்களும் உங்கள் கடவுளரும்.. என்று சாடிவிட்டு, என்னையும் இழுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்கிறாள்.., சிறுவயதிலேயே தாய்தந்தையரை இழந்து பதின்மங்களிலேயே குடும்பப் பொறுப்பினைச் சுமக்கவேண்டிய நிலைக்காளான தோழி..


4.

கடந்த வருடம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வழியில், நடுக்கடலில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் படகு இயங்காமல் திடீரென்று நின்றுவிட்டது. என்னென்னமோ பாடுபட்டும் படகு அசைந்துகொடுப்பதாயில்லை. கிட்டத்தட்ட 20 அல்லது 25 பேர் இருந்திருப்போம்.. அடுத்த படகு வந்தால் அனைவரையும் அதற்கு மாற்றி கரையேற்றிவிடுகிறோம்.. வேறு வழியில்லையென கைவிரித்து விட்டார், எம்மை ஏற்றிச் சென்றவர். கலக்கத்துடன் காத்திருந்தோம்.., இன்னுமொரு படகிற்காக. எங்கோவோர் மூலையிலிருந்து ஒரு வயது முதிர்ந்த பெரியவரின் குரல் வேதனையுடன் எழுந்தது: 'இன்று காலையில் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது யாரோ கடவுளைக் கும்பிடாமல் வந்துவிட்டார்கள்.. அதுதான் இறைவன் இப்படிச் சோதிக்கிறார்..'

நான் குனிந்து அருகிலிருந்த தோழியின் காதில் முணுமுணுத்தேன்: 'அது அநேகமாக நாங்களிருவரும் தானாக்கும்..' சூழ்நிலையின் இறுக்கங்களைக் கட்டுடைத்துக்கொண்டு எம்மிருவரினுள்ளிருந்தும் வெடித்துப் பீறிட்டது சிரிப்பு. அத்தனை விழிகளும் எம்மையே நோக்க, சுதாகரித்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமானோம்.

பிரார்த்தனைகள் பலக்கத் தொடங்கின. அவரவரும் தத்தமது இஷ்ட தெய்வத்தினை மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார்கள்; நாங்கள் வேடிக்கை பார்த்தபடியிருந்தோம். அதிசயமோ, தற்செயலோ... படகோட்டிகளின் முயற்சியில் எஞ்சின் மறுபடியும் வேலைசெய்யத் தொடங்கியது.. படகும் விரைந்தது. அனைவர் முகத்திலும் ஆசுவாசப் பெருமூச்சு.

படகினைக் கிளப்ப இப்படியும் குறுக்குவழிகள் இருக்கின்றனவா... வியப்பால் விரிந்தன, என் விழிகள். அப்படியெனின் இனிமேல் வாகனத்தில் வீட்டை விட்டுக் கிளம்புவதானால் எவரும் பெற்றோலைப் பற்றியோ அல்லது டீசலைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. ஆளுக்கொரு பிரார்த்தனைப் புத்தகத்துடன் கிளம்பினால் போதுமே. மானியப் பற்றாக்குறையினால் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மசகெண்ணெய் வழங்குதலைக் கட்டுப்படுத்தியமையால், எரிபொருளுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவி பொருட்களின் விலைகளும் பனையளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் இந்தத் தந்திரோபாயம் எத்துணை பயனுள்ளதாக இருக்கக்கூடும்...


5.

** உனக்கு நானொரு சாளரமாயிருந்தேன்
நீ என்னைத் திறந்தாய்.
நீ விரும்பிய காட்சியை ரசித்தாய்
தென்றலையும் நிறங்களையும் முகர்ந்தாய்
புயலினின்றும் அடைக்கலம் தேடி
சாளரக் கதவுகளைச் சாத்தினாய்
உன்னைப் பாதுகாப்பாய்த் தழுவிய
போர்வையாக ஆனேன்.

இப்படித்தான் நீர் எம்மைப் படைத்தீரா.., என் தேவனே? இப்படி வாழ்ந்திருக்கத்தான் படைத்தீரா..? வசதிகேற்றபடி வெறும் போகப்பொருளாய், பாலியல் பண்டமாய் வாழ்ந்திருக்கத்தான் முலைகளுடனும், யோனிகளுடனும் எம்மைப் படைத்துத் தொலைத்தீரா..?

எம்மைப் போன்ற பெண்களுக்கு சிந்தனையென்பது ஒரு விஷம்.. ஆலகால விஷம்..

உங்கள் உலகினில்.. தெய்வ நியதிகளுக்கு மத்தியில் எங்களுக்கு இடமில்லை. நீங்கள் தருவதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, அதற்கு மேலும் ஒரு வார்த்தைகூட - அது எங்கள் சுதந்திரம் பற்றியதாயிருந்தாலுமே கூட - வினவாமல், உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதையே இருத்தலின் நோக்காகக்கொண்டு வாழமறுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் உலகினில் இடமேயில்லை.

யோனிகளினாலும், முலைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உடல்தனில் மூளையையும் இணைத்து வைத்து ஏன் எம்மைப் பழிவாங்கினீர்..?

ஏன்.. என் தேவனே.., ஏன்..?


நன்றி:
*சுஜாதாபட்
**கிஸ்வர் நஹீத்

(எல்லைகள் அத்துமீறப்பட்டு, மரத்துப்போன உணர்வுகளுடன் எதிர்பார்ப்புக்களைத் தொலைத்த தோழிக்கும் அவள் சகோதரிக்கும்)

Friday, June 23, 2006

ஆமைகளுக்குப் பறக்கத் தெரியாதென்று யார் சொன்னது..?

ஆமைகள் பறப்பதில்லைதானெனினும்..
அவற்றுக்குப் பறக்கவே தெரியாதென
எமக்குக் கற்பித்தவர் யார்?

நான் பார்த்த ஆமைக்குச்
சிறகுகளிருந்ததென்று
எவரேனும் கூறுவாராகில்
அதை நாம் மறுப்பது எங்ஙனம்?

எம் விழிகளுக்குத் தட்டுப்படாத
ஒரேயொரு காரணத்தைக்கொண்டு
முடிந்த முடிவுக்கு வருதல்
எத்துணை நியாயம்?

அண்மையில் நண்பர் சிவகுமாரின் ஏற்பாட்டில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த Bahman Ghobadi யின் 'Tutles Can Fly' எனும் ஈரானியத் திரைப்படமொன்றினைக் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கண்டுகளிக்கும் - உண்மையைக் கூறுவதானால்.. கண்டுகலங்கும் - வாய்ப்புக் கிடைத்தது. நிகரி திரைப்பட வட்டத்தினர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இதுபோன்ற கிடைத்தற்கரிய திரைப்படங்களைத் திரையிட்டு, முடிவில் அன்றைய படம் சார்ந்த கலந்துரையாடலொன்றையும் தொடர்ந்து சில மாதங்களாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது. சராசரி தென்னிந்திய மசாலாப் படங்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் தலைநகர்வாசிகளுக்கு - அதிலும் குறிப்பாக இளந்தலைமுறையினருக்கு - இத்தகைய கலைநயம் வாய்ந்த படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது வெகு அபூர்வம். அந்தவகையில் நிகரியினரின் முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.

துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சிறுபான்மையினமாக வாழ்ந்துவரும் குர்திஷ் இனத்தவர்களின் வரலாற்றுப் படிமங்கள் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளான இனக்குழுமமொன்றின் அவலநிலையினையே எடுத்துக்காட்டுகின்றன. ஈரானிய குர்திஸ்தானைச் சேர்ந்த இயக்குனர் Bahman Ghobadi தனது மூன்றாவது படமான 'Turtles Can Fly' ன் மூலம் அதனை பகுதியளவிலாயினும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறார்.

அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்திற்குப் பின்னரான காலங்களில் ஈராக்கின் எல்லைப்புறங்களில் வாழும் குர்திஷ் இனச் சிறுவர்களின் வாழ்வியல் போராட்டங்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லும் இப்படத்தின் யதார்த்தத்தினை மீறிய காட்சி நகர்வுகள் சமயங்களில் சலிப்படைய வைத்தாலும், anti - Saddham கோஷத்துடன் ஆரம்பித்து anti - America குரலுடன் படம் முடிவடைந்தமை விதந்து குறிப்பிடத்தகுந்தது.

இதில் சுவாரசியமான அம்சம்.. இப்படத்தில் நடித்த சிறுவர்கள் எவருமே தொழில்ரீதியான நடிகர்களல்ல - அனைவரும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சராசரிக் குழந்தைகள் - என்பதுதான். காட்சிகளின் ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டுவிடும் இத்தகவல் படத்தின் கனதியை இன்னமும் அதிகரிக்கச்செய்யும்.

அநேகமான சந்தர்ப்பங்களில் சமூகத்தின் குரூரங்களுக்கும், வக்கிரங்களுக்கும் அதிகளவில் பலியாவது சிறார்கள்தான். ஈராக்கிய இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்காளாகிய குர்திஷ் சிறுமியொருத்தியையும், அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்தின் விளைவாக கண்ணிவெடியொன்றில் அகப்பட்டு இரு கைகளையும் இழந்த அவளது மூத்த சகோதரனையும் முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை நகர்கின்றது.

பதின்ம வயதிலேயே வலுக்கட்டாயமாக, தாய்மைப் பொறுப்பினையேற்க வைக்கப்பட்ட சிறுமி.. வக்கிரத்தின் சின்னமான பார்வைத்திறனிழந்த தன் குழந்தையை நேசிக்கவும் தெரியாமல், வெறுத்தொதுக்கவும் முடியாமல் தத்தளிக்கின்றமை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அக்குழந்தையைக் கொல்லும் நோக்குடன் மலையொன்றின் விளிம்பில் அமரவைத்துவிட்டு, இறுகிய மனத்துடன் திரும்பி, தானும் மலையுச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். இக்காட்சியிலிருந்து தொடங்கும் படம், கடந்தகாலங்களுக்கு நழுவி, சுற்றித் திரும்பி, மீண்டும் அதே சம்பவத்துடன் முடிவடைகின்றது. அவளது குழந்தை தப்பித்துக்கொள்ள, அவள் மட்டும் என்றென்றைக்குமாக மறுபடியுமொருமுறை மரணித்து விடுகின்றாள்.

இவ்விருவரதும், இவர்கள் தவிர்ந்த ஏனைய சிறார்களதும் அதிமுக்கிய பிரச்சனையாக விளங்கும் கண்ணிவெடிகளே அவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. கண்ணிவெடிகளை அகழ்ந்து அதனை உள்ளூர் தரகர்களுக்கு விற்பதன் மூலம் அன்றாடச் சீவியத்தினை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளான இச்சிறுவர்களின் பால்யகாலம் யுத்தத்தினாலும், வயதினை மீறிய பொறுப்புக்களினாலும் களவாடப்பட்டு விடுகின்றமை வேதனைக்குரியதே. ஆட்சியதிகாரம் சதாமின் கைகளிலிருந்தாலென்ன.. அமெரிக்காவின் கைகளிலிருந்தாலென்ன.. இவர்களின் கதைகள் மட்டும் காலாகாலத்திற்கும் தொடரத்தான் செய்யும்.

ஒப்பீட்டு ரீதியில் நோக்கின் ஈழத்தமிழர்களது நிலையும் இதற்கு விதிவிலக்கானதல்லவே..

அனைத்தையும் தாண்டி..,

ஆமைகளுக்கும் பறக்க முடியும்.. அண்டசராசரங்களையும், வானவீதிகளையும் கடந்து எல்லைகளற்ற வெளிகளை நோக்கி பயணிக்கவும் தெரியும்..

நேற்றிருந்த வீட்டை விட்டு
நெடுந்தூரப் பயணம்
நான் செய்து கொண்டதல்ல
அது என்மீது வீசப்பட்ட ஒரு விசம்
ஆயினும் நினைக்க முடியாத எல்லைகள்
பல தாண்டியும் என் பயணம்
முற்றுப் பெறுவதாயில்லை.

என்னொரு தேசத்தை விட்டு
கானகமும் வயல்வெளிகளையும் நோக்கி
நான் எவ்வளவு தூரம்
பயணம் செய்தல் சாத்தியம்

வியாபிக்கும் நச்சிலிருந்து என் மரணம்
என்றாவது சம்பவிக்குமென்று
என்னால் காத்திருக்கவும் முடியவில்லை

உயிர்துடித்து என் மனமும்
இறந்து போகும் பொழுதும்
காத்திருப்பு தவிர்க்க முடியாதது
என்கிறார்கள்

எனக்கொரு காத்திருப்பு இனித் தேவையில்லை
அது தரும் ஏக்கமும் கண்ணீரும்
எனக்கு வேண்டாம்
நானொரு விட்டேத்தியாய்ப்
புறப்படப் போகிறேன்

என்னிலிருந்து கண்ணீர் இல்லாதபடியால்
எல்லைகளற்ற பரந்தவெளி மீது
என்னாலியன்ற
எனக்குப் பிடித்தமான பாடலை
எழுதிவிட்டுப் போகவே விரும்புகிறேன்
அது எனது சுதந்திரத்தை நோக்கியதாயினும்
உங்களுக்குள் பிரளயத்தினை
ஊட்டுவதாகவும் இருப்பின்
நான் என் செய்தல் இயலும்?

எனது சுதந்திரத்தினை
அங்கீகரிக்காத நீங்கள்
என்னிலிருந்து எதை
எதிர்பார்க்கிறீர்கள்?!
- கலா

மரத்துப் போன உணர்வுகளுடனான அந்தச் சிறுமியின் முகம் கலாவின் இந்தக் கவிதையை நினைவுறுத்தியது. உணர்வுவெளிப்பாடுகள் தேசம், இனம், மொழி, மதம், பண்பாடு அனைத்தையும் கடந்து ஒன்றிப்போகக்கூடியவையே.


(நண்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க, ஏற்கனவே பின்னூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்த பட அறிமுகம் சற்றே விரிவாக)



Saturday, June 17, 2006

ஒன்றும்.. எல்லாமும்.. அற்றுப்போய் யாதுமாகி!

சகித்தல்களின் எல்லைகளை மீறிய சம்பவங்களுக்காகவும்.., மௌனிக்க மறுத்த கணங்களுக்காகவும்..


1. மனித உரிமையாளன் பற்றி...

எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும் சித்திரவதையாளர்களும் ஒரே
இடத்தில் சமாதானமாகி வாழ முடியும்? ஒடுக்குமுறையால்
பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில் வெளிப்படையாகப் பேசுவது பற்றிய பயம்
இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் எவ்வாறு அந்த
நாட்டை வேதனையிலிருந்து மீட்க முடியும்?

பொய்யே வழமையாகி விட்டபோது உண்மையை எப்படித்தான் எட்டுவது?
வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படி கடந்த காலத்தை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது? வருங்காலத்திலும் இவை நேரலாம்
என்று கருதாமல் எவ்வாறு அதை முற்றிலும் மறத்தல் முடியும்?
சமாதானத்தை நிச்சயப்படுத்துவதற்காக உண்மைகளை தியாகம்
செய்யத்தான் வேண்டுமா?

கடந்த காலத்தை நாம் மறுத்து விடும்போதும் நிராகரிக்கும் போதும்
உண்மை நம்மிடம் வந்து முணுமுணுக்கும் போதும் கதறும் வேளையிலும்
அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? இராணுவ அத்துமீறல் பற்றிய
பயம் என்றென்றும் இருக்குமானால் மக்கள் நீதியையும் சமத்துவத்தையும்
தேடிச்செல்வது எங்ஙனம் சாத்தியம்?

இந்த நிலைமைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால்
வன்முறை தவிர்க்கப்படக் கூடியதாகவா இருக்கிறது? மிக மோசமாக
வன்முறைக்கு உள்ளாகிய மக்களுக்கு முன்னால், பாதிக்கப்பட்ட
மக்களுக்கு முன்னால் எவ்வளவு தூரம் குற்றவுணர்ச்சி கொண்டவர்களாக
நாம் இருக்கிறோம்?

எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய மனத்துயரம் யாதெனில் தேசத்தின்
ஜனநாயக ஸ்திர நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல்
இவ்விஷயங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?


2. கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்

நான் ஒரு கைதியாக அவர்களிடம் இல்லையென்று
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக
அவர்கள் அதை
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
என்னை விடுதலை செய்துவிட்டதாக
அவர்கள் சொன்னால்
அதை நீங்கள் நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக அவர்கள்
தாங்கள் பொய் சொன்னதாக
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
நான் கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாக
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள்
நான் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன்
என்பதை
ஒப்புக் கொள்வார்கள்.

அவர்களை நம்பவேண்டாம்
நம்பவே வேண்டாம்
அவர்கள் சொல்கிற எதையும்
நம்ப வேண்டாம்
அவர்கள் சத்தியம் செய்கிற எதையும்
அவர்கள்
சுட்டிக் காண்பிக்கிற எதையும்

அவர்களை நம்ப வேண்டாம்

கடைசியாக அந்த நாள் வரும்போது
அவர்கள் உங்களிடம் வந்து
என் உடம்பை
அடையாளம் காட்டச் சொல்லும்படி
கேட்கும்போது
ஒரு குரல் சொல்லும்:
நாங்கள் இவனைக் கொன்றோம்
இந்த அயோக்கியன் செத்துப்போனான்
இவன் செத்தான்

நான் முழுமையாக
முற்று முழுதாக நிச்சயமாக
இறந்துவிட்டேன் என்று அவர்கள்
சொல்லும் போதும்

அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்.

மூலம்:- ஆரியல் டோப்மேன் (இலத்தீன் அமெரிக்கக் கவிஞர்)
மொழிபெயர்ப்பு:- யமுனா ராஜேந்திரன்


3. ஆயிஷாவுடன் என் கடைசிநாள்

இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்

காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
இரவின் வானத்துள் வீசியது
சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது

சொல்வதற்கு உன்னிடம் நிறைய இருந்தன
ஆனால் மௌனம் நம்மைச் செவிடாக்கியது
வேதனையால் மௌனித்து
ஜெருசலேம் தன் குழந்தைகளைப் புதைப்பதைப்
பார்த்தவாறு நாம் உட்கார்ந்திருந்தோம்

அந்தச் சிறிய புதைகுழியில்
நான் எனது கையை வைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளியை வழிய விட்டேன்

நாம் இருவரும் கவனித்ததைப் போல்
அது மிகவும் சிறியது
ஊர்க்குருவியின் உடைந்த சிறகுகளையும்
இரத்தம் தோய்ந்த தலையையும்
எனது மென் துப்பட்டியால் போர்த்தினேன்

ஜெருசலேத்தின் துயரத்தின் கரையில்
முஅத்தீனின் அழைப்பு ஒலித்தபோது
அதை நான் மக்காவை நோக்கித்
திருப்பி வைத்தேன்

இப்போது மௌனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க்குருவியைப் போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை

பலஸ்தீன் மீதுள்ள உனது காதல்
ஆகாயத்தைக் கொழுத்தி உயிர்ப்பிக்கும் படிக்கு
வலிக்கும் உன் உடலை
நீ பூமியின் விளிம்பின் மீது வைத்தாய்

இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்

காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
வானங்களுக்குள் வீசியது
சந்திரன்
நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது.

மூலம்:- அமினா கசக் (ஆங்கிலத்தில் எழுதும் பலஸ்தீனக் கவிஞர், 1960 ல் நியூஸிலாந்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்.)
மொழிபெயர்ப்பு:- எம்.ஏ.நுஹ்மான்


4. ஒன்றைப்பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

நான் ஒன்றைப்பற்றி பேசும்போது
இன்னொன்றைப்பற்றி பேசுவது போல இருக்கிறது
என்கிறாய்.
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந்தான்.

மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப்
போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது
அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு
பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றது.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும்
சந்தேக நபர்
சிறீ நகரில் இந்தியப்படையினரால்
கொண்டுசெல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போகின்றவர்கள்
சூரியகந்தவிலும் செம்மணியிலும்
புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில்
சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில்
கடித்துக் குதறுகின்றன.

வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால்
அனுமதி மறுக்கப்படுகிறான்.
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக்கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.

துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்துகொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காசா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கிறன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன.
கியூபா மீதான் அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமல் தடுக்கிறது.
புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.

காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த்தொழிலாளிக்காகப் போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப்போர்
இலங்கை விவசாயிகளின் விமோசனத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.

ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன.

எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.

- சிவசேகரம்
--------------------------------------------------------------
(தேடல்களின் ஒவ்வொரு கட்டத்திலும் - இருந்தும் இல்லாமலும் - துணைநின்ற மைத்துனனுக்கு.....)


Tuesday, June 13, 2006

ஆழ்மனப்பிரவாகங்களும் உயிர் துளைக்கும் அலட்சியங்களும்

- ஒரு மீள்வாசிப்பு


இரண்டாம் சாமம் தாண்டியிருக்கக்கூடும்.. இன்னும் சில மணிநேரங்களில் விடிந்தும்விடும். ஒற்றை நிலவுடனும், ஒருசில நட்சத்திரங்களுடனும் நான் மட்டும் காத்திருக்கிறேன், சில வார்த்தைகளுக்காய்.., எழுதவே படாத உன் மடலுக்காய். மயிர்பிடுங்கும் வேதனையுடன்.. உயிர் உறிஞ்சும் காயங்களுடன்.. உறக்கம் தொலைந்துபோன என் மற்றுமொரு இரவு இது. அணைக்க வந்த நித்ராதேவியை உதறித்தள்ளிவிட்டு எனதேயெனதான வீம்புப் பிடிவாதங்களுடன் இன்னமும் விழித்திருக்கிறேன்.., படுக்கைக்குப் போக விருப்பமில்லாமல். படுத்தால்.. நித்திரை வரும்; நித்திரை வந்தால்.. கனவு வரும்; கனவுகளில் நீ வருவாய்.. உனது கோபங்களுடன், அலட்சியங்களுடன், புறக்கணிப்புக்களுடன்.

நான் மென்மையானவள்.., உணர்வுகளால் ஆளப்படுபவள்.., இவையனைத்தையும்விட உன்னை உயிருக்குயிராய் நேசிப்பவள். கண்ணீரால் நனைந்திருக்கும் என் தலையணைகூட கதறியழும், உனக்காய்க் காத்திருக்கும் இந்தக் கணங்களில்.

எல்லாமும் முடிந்து போய்விட்டதாக ஒருபோதும் கருதியதில்லை, நான். வாழ்தலெனும் பயணத்தில் தங்கல்களும், தரித்தல்களும் நிரந்தரமில்லையென்பது நிதர்சனமெனின் உறைந்துவிட்ட புள்ளியிலிருந்து மறுபடியும் புதியதொரு தடம் தொடரத்தான் செய்யும். எனினும், இன்றைய கணத்தின் அவலங்கள் என்றென்றைக்குமாகத் தொடருமாயின்.. எஞ்சிய ஒவ்வொரு நாளும் இதேபோலத்தான் கழியுமாயின்.. மேலும் மேலும் எதிர்காலங்குறித்த எதிர்பார்ப்புக்களை வளர்த்து வளர்த்து மாய்வானேன்?

நாளைய பொழுதும் இப்படித்தான் விடியுமாமெனில்.. கனவுகள் வேண்டாமென்று சொல்லுங்கள்..!

எனையறியாமலேயே நிலைகுலைந்து சாய்கிறேன், கணனி மேசையில். மனதை உலுக்கும் கனவொன்றின் பின்னணியில் திடுக்கிட்டு விழிக்கிறது என் சுயவுணர்வு.. மெல்லிய அலையாய் வருடிச் செல்கிறது உனது நினைவு. இந்தக் கணத்தில் அடிமனத்தாழங்களில் எஞ்சியிருப்பதென்னமோ உன்மீதான நம்பிக்கை மட்டும்தான். அதுவும் கனவாய்க் கலைந்துவிடுமொரு பொழுதில் என் இருத்தல் குறித்தும், அதன் பின்னரான என் வாழ்தல் குறித்தும் கவலைகொள்ள உங்கள் எவருக்கும் அருகதையில்லை.

நெக்குவிட்டுருகுகிறது மனம்..,
வழிந்தோடும் உனது பிரியங்களில்.

இளவேனில் வானம்
அதிகாலை வாசம்
மனதில் சுடர்விடும்
உன்மீதான நம்பிக்கையாய்..
முளைக்குமொரு வெள்ளி

நானும் எல்லாரையும்போல அமைதியாகவும், சுமுகமாகவும் என் நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பதாக எண்ணி நீ நிம்மதி கொள்ளலாம். ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்கி எழும்புகிறேனென ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், இன்றளவும் *சமூகத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பது நீ அறியாதது.

எல்லாமே இயல்பாய், முறையாய்,
அதனதன் ஒழுங்கு குலையாமல்

நீ அதிசயிக்கிறாய்..
புன்னகைக்கிறேன் நான்.

நிலவைச்சுற்றி சாம்பல் ஒளிவட்டம் தென்படுவது புயல் வருவதற்கான முன்னறிவித்தலென பௌர்ணமிப் பொழுதொன்றில், நிலாச்சோறு ஊட்டியபடி அப்பம்மா கூறியது, அறியாப்பருவங்கள் கடந்தபின்னரும்.. இன்னமும் நினைவிலுண்டு. இளம்தென்றலின் ஸ்பரிசமும், கடலலைகளின் தாலாட்டும் மனதை மயக்கினாலும் ஒற்றைச் சாம்பல் வட்டம் இயற்கையின் போலி அரிதாரங்களைக் கணப்பொழுதில் களைந்தெறிந்து, பீதியை மனதில் வாரியிறைத்துச் செல்லும்.

சில்லறைத்தனமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி அடிக்கடி 'பன்னாடை' என நீ என்னை செல்லமாகக் கடிந்துகொண்டாலும், நேற்றும் முரண்பட நேரிட்டது உன்னோடு. உணர்ச்சிவசப்படுதலும்.., உடைந்து சிதறும் உள்ளத்தினைக் கொண்டிருத்தலும்தான் நான் செய்த குற்றங்களா..?

நான் உன்னை நேசிக்கிறேன்... அதனாலேயே மிக மிக அதிகமாக உன்னோடு முரண்படவும் செய்கிறேன். தெரியவில்லை அன்பே... இன்னுமொரு சாம்பல் வட்டமா, இது..?

எனக்கு மட்டும்தான் தெரியும்..,
நிலவைச் சூழும்
சாம்பல் ஒளிவட்டங்கள்
இயல்பின் நிரந்தரத்துவங்களை
நிராகரிக்கக்கூடுமென்று..

நீ தனித்துவமானவன். உனைப்போலவே இனிமையாய்.. எல்லாவற்றையும் அசாத்தியப் பொறுமையுடன் செவிமடுத்தபடி.. அவரவர் பலவீனங்களுடன் மனிதரை நேசிக்கும் பாங்கு அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

நானொரு சுயநலவாதியென்பது நீ அறியாததல்லவே. என் கவலைகளனைத்தும் என்னைப் பற்றியவை.. எவரிடமும் தோற்றுவிட விரும்பா என் தன்னகங்காரத்தைப் பற்றியவை.. குரல்வளைதனை நெரித்துக்கொண்டிருக்கும் என் பலவீனங்களைப் பற்றியவை.. எவராலும் இலகுவில் எடைபோட்டுவிட முடியா என் ஆளுமையைப் பற்றியவை.

கடல் கடந்து, கண்டங்கள் தாண்டும் வகையறியாதவளை நொந்தும் என்னதான் செய்ய..?

ஒற்றைப்பனையின் சிருங்கார மொழி
ஒருவருக்கும் புரிவதில்லையென
ஊர்க்குருவி குறைபட்டுக் கொள்கிறது,
அணைகட்ட மண் சுமக்கா
ஊனமுற்ற அணிலிடம்

அழுத்தங்கள் பால் / பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானவையே. உனது வார்த்தைகளில் கூறுவதானால்..

'...பெண்ணாய் இல்லாதவரை பெண்ணுக்குரிய வலிகளை முழுதாய் உணரமுடியாதது மாதிரி ஆண்களுக்கும் வலிகள் உண்டு. 'நீ ஆணாய் இருக்கின்றாய்' என்று சமூகம் அடிக்கடி நினைவுபடுத்தி, கொடுக்கின்ற அழுத்தங்கள் எங்களுக்கும் இருக்கின்றன. பெண்களுக்குள்ள ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் போல ஆண்களும் பலவிடங்களில் பாதிக்கப்படுகின்றனர். புலம்பெயர் வாழ்வு, காலநிலை, புதியமனிதர்கள், அடிமையாய் பலவிடங்களில் முதுகை வளைக்கவேண்டிய வேலைத்தள சூழ்நிலை, மேலும் குறைந்த சம்பளத்துடன் குடும்பத்தை நடத்திச்செல்லவும் தாய் நாட்டில் இருக்கும் சொந்த பந்தங்களுக்கு உதவவேண்டிய நிலை, அரசியல் காரணங்களால் தப்பிவந்துவிட்டோம் என்ற குறுகுறுக்கும் மனநிலை... இப்படி பலப் பல மன உளைச்சல்கள்/ அவசங்கள் ஆண்களுக்கும் உண்டு. ஒரு பெண்ணை இன்னொரு பெண் புரிந்துகொள்வதைப்போல, பகிர்ந்துகொள்வதற்கு வெளிகளைக் கொடுப்பதுபோல், ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் எதையும் அவ்வளவு இலகுவாய் பகிரமுடிவதில்லை. இப்படிப் பிரச்சினைகளை பகிர்தலோ கேட்டலோ, ஒரு 'ஆணுக்குரிய' அடையாளம் இல்லை என்று கதவுகளை இறுக அடைத்துவிடுவார்கள்..'

இவ்வாறெல்லாம் கூறி நீ சினந்ததும்.. நான் அதிர்ந்ததும் இன்னமும் மனதை விட்டகன்றபாடில்லை.

'நான் மட்டுமென்ன விதிவிலக்கா' என
வாய்க்கால் நீரின் அபஸ்வர நாதங்களையும் மீறி
தாழைமடலொன்று வினவிய
காலைப்பொழுதில்..

என்னதான் இருந்தும் என்ன..? இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்திலும் வரையறுக்கப்படாத விதிகளையும், நெகிழ்த்தப்படாத சட்டகங்களையும் விடுத்து எவரும் வெளியேறுவதாகக் காணோம். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

ஆற்றங்கரையோரத்து நாணற் புற்கள்
தலைநிமிர்வதில்லையென்ற
ஆதாம் காலத்துச் சமன்பாடுகளை
கணனித் திரைகளிலிருந்து பறித்தெடுத்து
மூளைக்குள் திணித்துக் கொள்கிறான்,
என் சின்னவன்

உனது வார்த்தைகளில் மெய்சிலிர்த்து எனை மறந்து போகிறேன், அடிக்கடி. எமது பாதைகள் திசைமாறிப் பிரிந்தாலும் உனதந்த வாக்குறுதிகள் மட்டும் என்றென்றும் என்னை உயிர்த்திருக்கச் செய்யும். ஆனால், வாக்குறுதிகள் நீர்த்துப் போகின்ற நாளொன்றில் எனதன்பே...

மாமரத்துக் குயில் எனைத்தேடி வரக்கூடும். அந்தத் துறுதுறு அணில்குஞ்சும்.. ஊர்க்குருவியும் எனைக்காணாமல் சோர்ந்துவிடக்கூடும். தலைகோதும் தென்றல் காற்றிடம் ரகசியமாக எடுத்துச் சொல்.. எனக்காக அலைந்தொழிய வேண்டாமென்று. எதிர்வீட்டுப் புளியமரத்து நிழலிடம் சொல்.. நான் ஒருபோதும் திரும்பப் போவதில்லையென்று. நிலவு கரைந்து பால்வீதி வழியே வெள்ளமாகப் பாய்ந்து வருமாயின்.. வானம் தாரகைப் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்துமாயின்.. அவற்றினிடமும் சொல்.. பிரபஞ்ச வெளிகளை நோக்கிய என் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென்று.

நான் உன்னை நேசிக்கிறேன்... அதனாலேயே அதிகமதிகம் அஞ்சுகின்றேன், உனது மௌனம் குறித்து.. புருவ நெரிவுகள் குறித்து.. அதிருப்தியைப் பிதுக்கும் உன் உதட்டுச் சுளிவுகள் குறித்து.

மனிதர்களால் மீறப்படுகின்ற
ஒவ்வொரு வாக்குறுதியும்
கருவேலங்காட்டு முட்களால்
பொத்திப் பாதுகாக்கப்படுகின்றதாம்
எனது நினைவுகளெங்கும்
முட்களே நிறைந்திருக்க,
சில்லூறுகளால் உசுப்பப்பட்டு
ஆதிவாசிக் கனவுகள் உயிர்த்தெழுமொரு பொழுதில்
விடைபெறுவேன் என் இன்மைகளோடு.

*நினைவில் நின்ற கவிதை வரியொன்று

Saturday, June 10, 2006

நாளைய பொழுதும் இப்படித்தான் விடியுமாமெனில்..

கனவுகள் வேண்டாமென்று சொல்லுங்கள்..!

1.

நெக்குவிட்டுருகுகிறது மனம்..,
வழிந்தோடும் உனது பிரியங்களில்.

இளவேனில் வானம்
அதிகாலை வாசம்
மனதில் சுடர்விடும்
உன்மீதான நம்பிக்கையாய்..
முளைக்குமொரு வெள்ளி
எல்லாமே இயல்பாய், முறையாய்,
அதனதன் ஒழுங்கு குலையாமல்

நீ அதிசயிக்கிறாய்..
புன்னகைக்கிறேன் நான்.

எனக்கு மட்டும்தான் தெரியும்..,
நிலவைச் சூழும்
சாம்பல் ஒளிவட்டங்கள்
இயல்பின் நிரந்தரத்துவங்களை
நிராகரிக்கக்கூடுமென்று..

ஒற்றைப்பனையின் சிருங்கார மொழி
ஒருவருக்கும் புரிவதில்லையென
ஊர்க்குருவி குறைபட்டுக் கொள்கிறது,
அணைகட்ட மண் சுமக்கா
ஊனமுற்ற அணிலிடம்

'நான் மட்டுமென்ன விதிவிலக்கா' என
வாய்க்கால் நீரின் அபஸ்வர நாதங்களையும் மீறி
தாழைமடலொன்று வினவிய
காலைப்பொழுதில்..
ஆற்றங்கரையோரத்து நாணற் புற்கள்
தலைநிமிர்வதில்லையென்ற
ஆதாம் காலத்துச் சமன்பாடுகளை
கணனித் திரைகளிலிருந்து பறித்தெடுத்து
மூளைக்குள் திணித்துக் கொள்கிறான்,
என் சின்னவன்

மனிதர்களால் மீறப்படுகின்ற
ஒவ்வொரு வாக்குறுதியும்
கருவேலங்காட்டு முட்களால்
பொத்திப் பாதுகாக்கப்படுகின்றதாம்
எனது நினைவுகளெங்கும்
முட்களே நிறைந்திருக்க,
சில்லூறுகளால் உசுப்பப்பட்டு
ஆதிவாசிக் கனவுகள் உயிர்த்தெழுமொரு பொழுதில்
விடைபெறுவேன் என் இன்மைகளோடு.


2.

இப்போதெல்லாம்...

மின்மினிப் பூச்சிகளும்
மௌனங்காக்கத் தொடங்கியதில்
வெள்ளை யானைகள்
உலாப்போன என் தோட்டங்களில்
பட்டாம்பூச்சிகளின் சிறகசைவுகள்
கரையொதுங்குவதேயில்லை

எப்படிச் சொல்வேன்,
என் கண்ணே..

நெரிசலான பேருந்துப் பயணத்தின்
யன்னலோரத்து இருக்கை போல,
ஆசுவாசமாகிப் போனது
பாம்புகளோடு பழகுதல்;
சௌகரியமாகிப் போனது
பச்சோந்தியாய் வாழுதல்.

நிழல்களும் முக்காடிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள
தேசத்தில் பிறந்தவளிடம்..
அலட்சியங்களுக்குள் ஊறிப்போய்
நாட்களைக் கடத்துபவளிடம்..
இன்னுமேன் இல்லாமற்போன
ஈரங்களை எதிர்பார்க்கிறாய்

மாமரத்துக் குயில்கள் பாடலுறுவது
எவரும் கேட்டு இரசிப்பதற்காகவல்லவே..