Friday, March 14, 2008

பெண்ணும் பயணியுமாயிருத்தல்

- Being a woman and a traveller

(பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)



முற்குறிப்பு

துணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப் பயணிக்கவும், அதைப் பதிவுசெய்யவும் பெண்கள் முன்வர வேண்டியதன் தேவையும், இத்தகைய பயணங்களில் தாக்கம் செலுத்தும் பாலின மற்றும் உடலரசியலின் இருப்பும் குறித்த ஒரு விழிப்புணர்வினை வேண்டிநிற்பதே இங்கு எனது நோக்கமாகிறது.

முன்னுரை

வரலாறு தொடக்கம் மானுட இருத்தலின் தடங்கள் யாவும் இதுகாலம் வரை ஆண்களால், அவர்களின் பார்வையிலேயே பதியப்பட்டிருந்தன. பெண்ணானவள் ஓர் இரண்டாமினமாகத் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறாள். உடலும் உலகமும் தம்முள் ஏராளமான மர்மங்களையும் ரகசியங்களையும் பொதிந்து வைத்திருப்பவை; தேடிக் கண்டறியப்பட வேண்டியவை. ஆனால், அதை தேடுபவர்களும் கண்டடைபவர்களும் - மார்க்கோ போலோவாயிருந்தாலென்ன, யாரென்றாலென்ன - எப்போதும் ஆண்களாகத்தானிருந்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக உடலும் உலகமும் சார்ந்த ஒரு பெண்ணிய வெளியைக் கட்டமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கிருக்கிறது.

பயணங்கள் வரலாற்றையும், அது தொடர்ந்து வந்த தடங்களையும் மீள்பரிசீலனை செய்பவை (இங்கு பயணங்களென நான் குறிப்பிடுபவை தம்பதி சமேதரராய் சுற்றுலா போவதையோ, குடும்ப சகிதம் கதிர்காமம் போவதையோ அல்லவென்பதைக் கவனத்திற் கொள்ளவும்). மனித நாகரிகமும், அதன் பல்வகைமையும் மீள்வாசிப்புச் செய்யப்படுவதற்கான வாய்ப்பினை பயணங்கள் வழங்குகின்றன. வரலாற்றோட்டத்தில் ஆண்களின் பெரும்பாலான பயணங்கள் நாடுகளும் இனங்களும் சூறையாடப்படுவதற்கும், இனக்குழுமங்கள் அவற்றின் பண்பாட்டம்சங்களுடன் முற்றாக அழிந்து போவதற்கும், காலனியாதிக்கத்துக்குமே வழிவகுத்திருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆரம்பகால மானுட குல வரலாற்றின் பெரும்பகுதியும் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய பயணிகளின் குறிப்புகளைத் தழுவியதாகவே அமைந்துமுள்ளன. இவ்வரலாற்றில் பெண்களின் வகிபாகம் எத்தகையதென ஆராய விழைகையில், ஏற்கனவே 'கண்டறியப்பட்டு எடுத்துச் சொல்லப்பட்ட' உலகை பெண்கள் தமது வழிநின்று மீள்வாசிப்புச் செய்யவேண்டியதன் தேவை புலப்படும். அம்மீள்வாசிப்புக்கான சிறந்த வழிமுறையாகப் பயணங்கள் திகழ்கின்றன.

வெளி நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் உள்முகமாகத் திரும்பினர். அவர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்கள், பிரதிகள் பெரும்பாலும் உணர்வுவழிப்பட்டனவாக அமைந்தமைக்கு இதுவே காரணமாயமைந்ததெனலாம். உள்முகமாகத் திரும்பியவர்கள் தமது உடலையும், அதனை மையப்படுத்திக் கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தையும் விமர்சிக்கவும், தம்மை வெளிப்படுத்தவும் தமக்கான மொழியைக் கட்டமைக்கத் தொடங்கினர். தனது உடல், காதல் - காமம் குறித்து வெளிப்படையாக உரையாடுவதற்கான உரிமை பெண்களுக்கு எவ்வாறு மறுக்கப்பட்டிருந்ததோ அதேபோல அல்லது அதைவிடவும் வன்மையாக பெண்கள் தனியாகப் பயணிப்பதும் மறுக்கப்பட்டிருந்தது. உடல் பற்றிய தேடல் பெண்ணிய வெளியைக் கட்டமைப்பதில் எந்தளவு பங்களிப்பு செலுத்துகிறதோ, அதேயளவு பங்களிப்பினை - உலகு பற்றிய தேடலாய் அமையும் - பெண்களின் பயணங்கள் குறித்த பதிவுகளும் செலுத்தக்கூடும்.

தனியாகப் பயணிக்குமொரு பெண்ணின் பயம் குறித்து Robin Morgan தனது The Demon Lover நூலில் கூறுகிறார்:

Look closely at her.

She crosses a city street, juggling her briefcase and her sack of groceries. Or she walks down a dirt road, balancing a basket on her head. Or she hurries toward her locked car, pulling a small child along with her. Or she trudges home from the fields, the baby strapped to her back.

Suddenly there are footsteps behind her. Heavy, rapid. A man's footsteps. She knows this immediately, just as she knows that she must not look around. She quickens her pace in time to the quickening of her pulse. She is afraid. He could be a rapist. He could be a soldier, a harasser, a robber, a killer. He could be none of these. He could be a man in a hurry. He could be a man merely walking at his normal pace. But she fears him. She fears him because he is a man. She has reason to fear.

It is the footstep of a man she fears. This moment she shares with every human being who is female.

This is the democratization of fear.

(Robin Morgan, The Demon Lover)

இது சனநாயகமயப்படுத்தப்பட்ட பயம். பல்கேரியக் கவிஞரான ப்ளாகா டிமிட்ரோவாவின் கவிதை வரிகளும் இங்கு குறிப்பிடத்தக்கன:

இன்னும் ஆண்களுடையதாகவேயிருக்கும்
இவ்வுலகில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும்தான்
இங்கு ஒவ்வொரு வளைவிலும்
அபத்தமான மோதல்களின் திடீர்த்தாக்குதல்கள்
காத்திருக்கும்..

(அக்மதோவா: அக்கரைப் பூக்கள், தமிழாக்கம் - வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

சாலையோரப் பெண்ணொருத்தியின் பாதையைத் தீர்மானிப்பதில் பெரும் தாக்கம் செலுத்துமொரு விடயம் இந்தக் கறுப்பு மனிதன் பற்றிய பயம். முதுகின் பின்னால் தொடருமொரு காலடியோசை முள்ளந்தண்டை எவ்விதம் சில்லிடச் செய்யுமென்பது, இரவில் யாருமற்ற நேரத்தில் தனியே நடந்து திரிந்த பெண்ணொருத்திக்குத் தெரிந்திருக்கும்.

இதே பின்னணியில்தான் பெண்ணியப் பயண இலக்கியங்களை நாம் அணுகியாக வேண்டும். இங்கு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை மேலைத்தேயப் பெண்களின் பயண இலக்கியங்களே. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இதுவரை அப்படியெதுவும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காதது வருத்தத்திற்குரியது.

1. வேறுபாடு - பெண்ணுடலும் பாலினமும்

மேற்குலகிலேயே 18ம் நூற்றாண்டளவில்தான் பெண்கள் தனியே வீட்டையும் நாட்டையும் விட்டு பயணிக்கத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் அவர்களது அனுபவங்கள் பதிவுசெய்யப்பட்டு நூலுருப்பெற்று அதிக கவனமும் பெறத் தொடங்கின.

இங்கு ஆண்களின் பயணம் - பெண்களின் பயணமென வேறுபிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமென்னவென்ற கேள்வியெழலாம். இரவுப் பொழுதில் ஒரு ஆண் தனியே தெருவைக் கடப்பதற்கும், பெண் கடப்பதற்குமிடையிலான அடிப்படை வேறுபாட்டிலிருந்து இந்தப் பாகுபாடு மேலெழுகிறது. பயணிகளென்ற அடிப்படையில் ஆண்களோ, பெண்களோ எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகளை விடவும் வேறுபட்ட சிக்கல்களுக்கு பெண்கள் - பெண்களாயிருக்கும் ஒரே காரணத்துக்காக முகங்கொடுக்க நேர்கிறது.

பிரபல பெண் பயணியும், படைப்பாளியுமான Mary Morris கூறுவதன்படி, பெண்கள் ஆண்களை விட மிகவும் வேறுபட்ட முறையில் உலகினூடு பயணிக்கிறார்கள், நிலத்தையும் மனிதர்களையும் மிகவும் வேறுபட்ட முறையில் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், பிரச்சனைகள், குழப்பமான உணர்வுநிலை, உடல் அசௌகரியங்கள் என்பன ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. உதாரணமாக, பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக நேரிடுமோவென்ற பயம், மற்றையது, Robin Morgan கூறுவது போல ஒரு சாதாரண நன்கு பழகிய நகரத்துத் தெருவை இரவில் - அசாதாரணமான பொழுதொன்றில் கடப்பதுகூட பெண்கள் உலகினூடு பயணிக்கும் விதத்தில் பாரிய தாக்கத்தினையேற்படுத்தி விடுகிறது. துஷ்பிரயோகமென்பது அத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை:

Gwendolyn Maceven தனது Noman's Land நூலில், கெய்ரோவிலுள்ள நூதனசாலையைப் பார்வையிடச் செல்லும் பெண் பயணியொருத்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு பெண் தொடர்ந்து தினமும் நூதனசாலைக்கு வருவது வெறுமனவே இந்தப் பொருட்களை வெறித்துப் பார்ப்பதற்காக இருக்காது என எண்ணமிடும் காவலர்கள் அவளையொரு பாலியல் தொழிலாளியென நினைத்து தொடர்ந்து கண்காணிப்பதையும், அவளை வளைத்துப் போட முயற்சிப்பதையும் ஆவணப்படுத்துகிறார். ஒரு பெண்ணுக்கு நூதனசாலைக் காட்சிப்பொருட்களில் ஆர்வமிருக்கக்கூடுமென்பதே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகி விடுகிறது.

Christina Dodwell தனது தோழியுடன் ஆபிரிக்காவில் பயணிக்கையில், இரவில் அவர்களது தங்குமிடத்துக்கு வந்து திரும்பிச் செல்ல மறுத்த இராணுவ வீரனைத் துரத்த தானும் தோழியும் தங்களுக்கு சிரங்கு இருப்பதாக தலையையும், கைகால்களையும் மாறி மாறிச் சொறிந்து பாவனை செய்ததை Travels with Fortune: An African Adventure இல் நினைவு கூர்கிறார்.

அதேபோல, ஜெனீவாவைச் சேர்ந்த Isabelle Eberhardt 18ம் நூற்றாண்டளவில் வட ஆபிரிக்கா முழுவதும் ஒரு முஸ்லிம் ஆணாக வேடமிட்டு அலைந்து திரிந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த Eliza Farnham தான் குளித்துக் கொண்டிருந்த தாழ்ப்பாளற்ற விடுதி அறைக்குள் நுழைய முயன்ற மனிதனைத் தடுக்க, பெரிய துணிப் பெட்டிகளை கதவோடு சாத்தி வைத்து, தானும் கதவைத் தள்ளிக்கொண்டிருந்ததாக Life in Prairie Land நூலில் குறிப்பிடுகிறார்.

The reality of a woman on the road is often a personal reality. This does not mean that the woman traveller is not politically aware, historically astute or in touch with the customs and language of the place.

ஆனால், ஒரு பெண் தனது உடல் பற்றிய, தனது பாலினத்தின் மீதான வேறுபட்ட பண்பாடுகளின் வரையறைகள் குறித்த விழிப்புணர்வின்றி பயணிக்கவே முடியாது என்கிறார் Mary Morris. உதாரணமாக, மத்தியகிழக்கில் பயணம் செய்யுமொரு பெண்ணின் பயணத்தில் தாக்கம்செலுத்தும் உடை தொடர்பான வரைமுறைகள். காற்சட்டையுடன் பயணம் செய்த Gwendolyn Maceven ன் Kali, அராபியச் சிறுவர்களால் கல்லெறிபடுகிறார். ஒரு ஆணுக்கு இத்தகைய பாலின ரீதியான வரையறைகளையோ, கட்டுப்பாடுகளையோ எதிர்கொள்ளும் வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்த விழிப்புணர்வு பெண்களின் பயண அனுபவங்களுக்கு ஒருவித செறிவினை (richness) வழங்குவதுடன், அவர்களது அனுபவங்கள் மாறுபட்டவையாக அமையவும் காரணமாகின்றது.

மற்றையது, உணர்வுகள். புறவுலகில் பயணிக்கும்போதே அகவுலகிலும் பயணித்தபடி, தான் நினைத்தது உணர்ந்ததையும் எழுத்தில் பதிவதனூடாக இரண்டு உலகங்களினூடான தனது பயணத்தைச் சாத்தியமாக்கும் Mary Morris தான் லெனின்கிராடில் தங்கியிருந்தபோதுதான் கர்ப்பம் தரித்திருப்பதை உணர்கிறார். அதன் பின்பான பொழுதுகளில் தனது பார்வையில் லெனின்கிராட் ஒரு வெறும் நகரமாக மட்டுமே தோற்றமளிக்கவில்லையென்கிறார்.

கனடாவின் புகழ்பெற்ற ஓவியரான Emily Carr மேற்குக் கனடாவின் தொல்குடியினர் வாழும் காட்டுப் பிராந்தியத்திலமைந்த கிராமமொன்றுக்குப் பயணிக்க நேர்ந்த அனுபவத்தைப் பதிகையில், இரவு தன்னைத் தனியே ஊர் நாய்களுக்கு நடுவே நடுத்தெருவில் விட்டு விட்டு அனைவரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும், தன்னை அவர்களுள் ஒருவராய் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாரில்லையென உணர்ந்தபோது தனக்குக் கத்தியழ வேண்டும்போல இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

ஆண்கள் உலகத்தையோ, ஒரு அந்நிய நிலப்பரப்பினையோ புறவயப்பட்ட பார்வையுடன் எதிர்கொள்கின்றனர். அவர்களது பயண இலக்கியங்கள் பெரும்பாலும் அது என்னவாக அல்லது யாராக இருந்தது, யாருக்காகக் காத்திருந்தது, எதை இழந்திருந்தது அல்லது எதைப் பெற்றிருந்தது என்பவற்றை விபரிப்பதுடன் நின்றுவிடுகின்றன. ஆனால், பெண்களின் நோக்கு இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக அகவயப்பட்டதாகவும், நிலப்பரப்பை அதன் மனிதர்களை - வெறும் தரவுகளென்பதற்குமப்பால் - உயிர்ப்புடன் எதிர்கொள்வதாகவும் அமைந்திருக்கக் காணலாம்.

2. தூண்டுசக்தி

அனைத்துப் பெண் பயணிகளும், பயணிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அல்லது மேலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ கிளம்பியவர்களல்ல. நான் மிகவும் ரசித்த பயணம் Maud Parrish னுடையது. வெறும் ஒன்பது பவுண்ட் எடையுள்ள பயணப் பொதியுடனும், banjo வுடனும், அவர் வீட்டை விட்டு விலகியோடுகிறார், அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்,

"..So I ran away. I hurried more than if lions had chased me. Without telling him. Without telling my mother or father. There wasn't any liberty in San Francisco for ordinary women. But I found some. No jobs for girls in offices like there are now. You got married, were an old maid, or went to hell. Take your pick."
(Maud Parrish, Nine Pounds of Luggage)

திருப்தி தராத திருமணத்தினை முறித்துக்கொண்டு ஓடுகையில் அவர் பதின்மங்களையும் கடந்திருக்கவில்லையென்பது இன்னமும் சுவாரசியமான விடயம். இது மேலைத்தேயவுலகம் - அவர்களது சமத்துவம், சமவுரிமை - பற்றி நாம் கொண்டிருக்கும் உயர் அபிப்ராயங்களைத் தகர்த்தெறிகிறது. சில காலம் முன்புவரை மேலைத்தேயப் பெண்கள் கீழைத்தேயவர்களை விட எந்தவிதத்திலும் மேம்பட்ட நிலையில் இருக்கவில்லை. பதினைந்து பதினாறு வயதுகளில் திருமணம் முடிப்பதும், வீட்டில் கணவனுக்கு பணிவிடை செய்தபடி வாழ்வதுமே அவர்களதும் யதார்த்தமாகவிருந்தது. சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரு நகரமொன்றில் கூட பெண்களுக்கு வேலையிருக்கவில்லையென அறிய நேர்வது - இது நிகழ்ந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - வியக்கவைக்கிறது.

இதேபோல Isabelle Eberhardt ம் தனது வீட்டை விட்டு தப்பியோடும் நோக்கிலேயே பயணிக்கிறார். பெற்றோரை, துணைவரை அல்லது குழந்தைகளை இழந்து அந்த இழப்பிலிருந்து விடுபடுமுகமாகப் பயணித்தவர்களுமிருக்கின்றனர். அதேவேளை இன்னும் சிலர் புதிய பிரதேசங்களை அறிந்துகொள்ளவும், துணைவர்களைத் தொடர்ந்தும், மிசனரிகளாகவும் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

பயணித்தலென்பது பெண்கள் பலருக்கு ஆற்றுப்படுத்தலாகவும், இனியும் சமரசம் செய்துகொள்ள முடியாத சூழலில் இருந்தான விடுபடலாகவும், மென்மேலும் அறிவை விசாலப்படுத்தும் திறவுகோலாகவும், அனைத்துக்கும் மேலாக ஓர் பேருவகையாகவுமிருந்திருக்கிறது.

3. தனித்துவமும் முக்கியத்துவமும்

கனேடிய ஓவியரான Emily Carr ன் அனுபவம் பெண்கள் பயணிப்பதன் முக்கியத்துவத்தினையும் அதன் தனித்துவத்தினையும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

புகழ்பெற்ற ஓவியரான இவர் கனடாவின் வடமேற்குப் பகுதியிலமைந்த போக்குவரத்து வசதிகளற்ற Kitwancool எனும் தொல்குடியினரின் கிராமத்துக்குப் பயணிக்கிறார். அவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் totem poles (வினைத்திறனுடன் செதுக்கப்பட்டு நிறமூட்டப்பட்ட உயரிய மரக்குற்றிகள்) னை படமாக வரைந்து வருவதே அவரது நோக்கம். விசாரித்தவரை அனைவரும் அக்கிராமத்துக்குப் பயணிப்பது இயலவே இயலாத காரியமென எடுத்துக்கூறியும், இறுதியாக கிராமத் தலைவரின் மகன் அருகிலுள்ள சிறிய நகரமொன்றுக்குப் பொருட்களை ஏற்றிச்செல்ல வந்து போவதறிந்து அவனுடன் இணைந்துகொள்கிறார். கிராமத்தில் வந்திறங்கியதும் அவர்கள் அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ள மறுத்து நள்ளிரவில் தனியே நாய்களுக்கு நடுவில் வெளியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். பின்னர், கிராமத்துத் தலைவரை விட அதிக அதிகாரமும் மரியாதையும் கொண்ட அவரது மனைவி Emily Carr வந்த நோக்கமறிந்து அவரை ஏற்றுக்கொள்வதுடன் தமது வீட்டிலேயே தங்கவும் அனுமதிக்கிறார். அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான totem poles னை படமாக வரைந்து, அதன் பிரதியொன்றை பின்னர் அனுப்பி வைப்பதாய் வாக்குறுதியுமளித்துத் திரும்புகிறார் Emily.

அக்கிராமத்திலிருந்து திரும்பியதும் பொலிஸார் அவரை விசாரிக்க வருகின்றனர். அப்பழங்குடியினர் அவரை எவ்வாறு நடத்தினர், அவருடன் எவ்வாறு பழகினரென அறிய விரும்பும் அவர்கள், அப்பழங்குடியினர் தமக்குத் தந்த தொல்லைகளையும் - மிசனரிமாரை துரத்தியமை, மக்கள்தொகை கணக்கெடுப்பாளர், நில அளவையாளர் போன்றோரைக் கோடரிமுனையில் விரட்டியடித்தமையென - பட்டியலிடுகின்றனர். அம்மக்கள் தம்மத்தியில் வெள்ளையரை அனுமதிக்க விரும்பாமையையும், அங்கு செல்ல தாம் யாரையும் அனுமதித்திருக்க மாட்டோமெனவும், அதுவும் குறிப்பாக ஒரு பெண்ணை தனியே செல்ல விட்டிருந்திருக்கவே மாட்டோமென பொலிஸார் கூற, பதிலுக்கு Emily,

"Then I am glad I did not ask for your advice. Perhaps it is because I am a woman that they were so good to me" என்கிறார்.
(Emily Carr, Klee Wyck)

அவரது இப்பதில் மிகக் கவனத்திற்குரியது. எந்தவொரு வெள்ளையினத்தவரையும் தம்மிடையே அனுமதிக்க மறுத்த அத்தொல்குடியினரின் நம்பிக்கையை ஒரு பெண்ணாயிருந்த காரணத்தினால் தன்னால் வென்றுவிட முடிந்ததென அவர் கூறுமிடத்து, ஒரு இனக்குழுமத்தை ஒரு பெண் அணுகுவதற்கும் ஆண் அணுகுவதற்குமிடையிலான வேறுபாட்டினை உணர்ந்துகொள்ள முடிகிறது. அவரதந்த அணுகுமுறை அவரது அருகாமையில் பாதுகாப்பாய் உணரவைப்பதாலேயே அம்மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகின்றனர். இதே கிராமத்துக்குப் பயணித்து வந்த ஒரு ஆணின் பயணக்குறிப்பு நிச்சயம் Emily யின் குறிப்புக்கு நேர்மாறானதாக - பொலிஸாரின் கருத்தினையொத்ததாக - இருந்திருக்கக்கூடும். அதேபோல, மார்க்கோ போலோ அல்லது தொன் ஜுவானினிடத்து ஒரு பெண் பயணித்திருப்பாளாயின் உலக வரலாறு இன்றைக்கிருப்பதற்கு முற்றிலும் நேர்மாறானதாக அமைந்திருந்திருக்கலாம். ஆகக்குறைந்தது, தென்னாபிரிக்க மற்றும் தென்னமெரிக்க தங்கச் சுரங்கங்கள் கொள்ளையடிபடுவதும், பல தொன்மையான இனக்குழுமங்களும் நாகரிகங்களும் அழிந்து போவதும் கொஞ்சமாவது பிற்போடப்பட்டிருந்திருக்கலாம்.

ஒரு பண்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்வதென்பது எம்முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. இந்தியாவில் பலியும், காளைச் சண்டையும் தடைசெய்யப்பட்டிருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது போன்றதுதான் இதுவும். மனிதநேயம் மற்றும் விழுமியங்களினடிப்படையில் அவை சரியானதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்வது, அதன் நிலைபேற்றுக்குத் துணைநிற்பதென்றதனடிப்படையில் இத்தடைச்சட்டங்கள் தோல்வியடைந்துவிட்டனவெனவே கூறவேண்டும். குறித்ததோர் மக்கள் குழுவொன்றன் நம்பிக்கைகள் எமது நவ நாகரிக விழுமியங்களுடன் ஒத்துவராமற் போனமைக்காக அவற்றை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்துவது எந்தவகையில் நியாயமென்ற கேள்வியெழுகிறது. புராதன நாகரிகங்களும் பண்பாடுகளும் இவ்வாறுதான் சிறிது சிறிதாகச் சிதைக்கப்பட்டன. ஒரு முஸ்லிம் பெண் பர்தா அணியலாமா இல்லையாவென்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மற்றவர்களல்ல (இந்த மற்றவர்களுள் மேற்குலகின் சமத்துவவாதிகளும் உள்ளடங்குவரென்பதையும் கவனத்திற்கொள்ளவும்), ஆனால் அவளை அவ்வாறு அணிந்துகொள்ள நிர்ப்பந்திக்கும் புறக்காரணிகளை வேண்டுமானால் விமர்சிக்கலாம். இந்தவகையில்தான் Rebecca West, Mostar ல் பெண்கள் அணியும் - பர்தாவினையொத்த - ஆடையினை விமர்சிக்கும் விதமும், Anna Leonowens சீயத்தின் அரண்மனை மகளிர் பற்றி எடுத்துக் கூறுவதும் (இவரது The English Governess at the Siamese Court நூலின் பயணக்குறிப்புக்களைத் தழுவி Anna and the King of Siam எனும் நாவல் Margaret Landon னால் எழுதப்பட்டது. பின்னர் அக்கதை திரைப்படமாக வெளியாகி பெரும் புகழ் பெற்றிருந்தது) முக்கியத்துவம் பெறுகின்றன.

"..The austere yet lubricious beauty of the coat gives a special and terrifying emphasis to the meaning inherent in all these Eastern styles of costume which hide women's faces. That meaning does not relate directly to sexual matters; it springs from a state of mind more impersonal, even metaphysical, though primitive enough to be sickening. The veil perpetuates and renews a moment when a man, being in league with death, like all creatures that must die, hated his kind for living and transmitting life, and hated woman more than himself, because she is the instrument of birth, and put his hand to the floor to find filth and plastered it on her face, to affront the breath of life in her nostrils. There is about all veiled women a sense of melancholy quite incommensurate with the inconveniences they themselves may be suffering. Even when, like the women of Mostar, they seem to be hastening towards secret and luxurious of humorous love-making, they hint of a general surrender to mortality, a futile attempt of the living to renounce life."
(Rebecca West, Black Lamb and Grey Falcon)

இத்தகைய ஆடையணிவது மடத்தனம், அல்லது மேலாதிக்கமென ஒரேயடியாக மறுக்காமல் அதன் பின்னணியிலான ஆடையின் அரசியல் குறித்து ஆராய்வது சுவாரசியமெனப் படுகிறது. அத்துடன் அசௌகரியத்தை புறவயமாக மட்டும் பார்க்காமல் அதன் பின்புலத் தோற்றப்பாடுகள் சாராம்சங்களையும் தனது அபிப்ராயமாக வெளியிடுகிறார் Rebecca West. முகத்தினை மறைத்த ஆடைகள் வெறுமனவே ஆடையென்ற நிலையையும் கடந்து ஆண்மனதின் தொன்மைவாய்ந்த தாழ்வுச்சிக்கலின் வெளிப்பாடாகத் தோன்றுகின்றன அவருக்கு. இந்தவிடத்தில், இத்தகைய ஆடைகளுக்கு ஆண்களால் அளிக்கப்பட்டு வந்த விளக்கமும் அதன் நியாய அநியாயங்களும் மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றன.

4. பயணங்கள் கட்டமைக்கும் பெண்ணிய வெளியும் தமிழ்ச்சூழலும்

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தெறிய முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்த் தேங்கித்
ததும்புகின்றன

(குட்டிரேவதி, முலைகள்)

பெண்ணுடலின் ஓர் அங்கமான முலைகள் மீதான ஆண்களின் கவர்ச்சி, காமம் சார் மதிப்பீடுகளைத் தகர்த்தெறிந்து மீந்திருக்கும் உணர்வுகளின் தடயமாய் அவற்றைப் படிமமாக்குகிறார் குட்டிரேவதி. உடல் பற்றிய பெண்ணியவெளி இதிலிருந்து உருக்கொள்கிறது. அதேபோல, உலகு பற்றிய பெண்ணியவெளியின் தோற்றத்தினை Mary Morris இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"The late John Gardner once said that there are only two plots in all of literature. You go on a jouney or a stranger comes to town. Since women, for so many years, were denied the journey, they were left with only one plot in their lives - to await the stranger...

..From Penelope to the present, women have waited - for a phone call, a proposal, or the return of the prodigal man from sea or war or a business trip. To wait like patients for a doctor, commuters for buses, prisoners for parole, is in a sense to be powerless. If we grow weary of waiting, we can go on a journey. We can be the stranger who comes to town."

(The Virago Book of Women Travellers: Edited by Mary Morris)

காத்திருத்தல் அதிகாரமற்றிருத்தலைக் குறிக்கிறது; பயணித்தல் அதனைக் கைப்பற்றிக்கொள்வதாகிறது. இதுகாலம் வரை பெண்களுக்கென விதிக்கப்பட்டிருந்த - அன்பினையோ, வேறெதனையோ நோக்கிய - காத்திருத்தலை விடவும், அதனை நாடிச் செல்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெண்களுக்கானதோர் அல்லது பெண்களது பார்வையிலான வெளியொன்றினைக் கட்டமைப்பது சாத்தியமாகிறது. சபிக்கப்பட்ட திருமண வாழ்க்கையை விட்டு விலகியோடும் பெண்ணுக்கு பயணம் விடுபடலாகிறது; எதிர்பாராதவிதமாக குடும்பத்தினரையோ உறவினரையோ இழந்தவளுக்கு ஆற்றுப்படுத்தலாகிறது; இன்னும் சிலருக்கு அறிவு; அழகு; அனுபவம்; சமயங்களில் பேருவகை. இவை அவற்றுக்காகக் காத்திராமல் அவற்றை நாடிப் பயணித்தமையாலேயே சாத்தியமாகின. இனி, அந்த வெளியானது குறித்த பெண், அவளைச் சுற்றியுள்ள மனிதர்கள், சமூகம், ஏன் நிலப்பரப்பு அனைத்தையும் சார்ந்து இயங்கத் தொடங்குகிறது. மாற்றுவெளிகள் தமக்கிடையே சமாந்தரமாகப் பயணிக்குமிடத்து மட்டுமே சமத்துவம் நிலவக்கூடும். தூர நோக்கின், இப்பயணங்கள் ஆண்-பெண் எனும் எதிர்நிலைகளுக்கிடையிலான சமாந்தரமான இயக்கத்தை நடைமுறைச் சாத்தியமாக்கவும்கூடும்.

உடலும் உலகமும் தமக்கிடையே இடைவெளிகளின்றி தொடர்ந்தும் இடையீடு செய்தபடியே இருக்கின்றன, காலந்தோறும். உலகினையூடறுத்துப் பயணிக்கையில் ஒரு பெண் தனது உடல், அது பிரதிநிதித்துவப்படுத்தும் பாலினம் மற்றும் அது வெளியிடும் கவர்ச்சி தொடர்பான விழிப்புணர்வுடனிருக்க வலியுறுத்தப்படுகிறாள். அதேபோல, உடலினையூடறுத்துப் பயணிக்கையில் உடல் பற்றிய உலகின் மதிப்பீடுகள், கட்டுப்பாடுகள், வரையறைகளனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியவளாகிறாள். தற்போதைய தமிழ்ச்சூழலில் உடல் குறித்த உரையாடல்கள் தீவிரமாக நிகழ்ந்துவருகின்ற போதும், பெண் பயணிகளின் பயணப் பதிவுகள் மிக அருமையாகவே காணக்கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்ணியப் பயணவிலக்கியங்களென நோக்கின் வெறுமையே மிஞ்சும். பெண்கள் தனித்துப் பயணித்தல் இன்னமும் முறையாகத் தாராளமயப்படுத்தப்படாத சூழலில் இவ்விலக்கியங்களை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், உடலைப் போலவே உலகமும் மிக ஆழமான நுண்ணுணர்வுடன் ஆராயப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டியதொன்றென்ற பிரக்ஞை பெண்களுக்கு இருந்தாக வேண்டியது அவசியம். மற்றையது, உலகு பற்றிய தேடலின்றி - பெண்கள் தாம் தனித்தியங்க ஏதுவான - முழுமையான பெண்ணிய வெளி சாத்தியமில்லையென்ற புரிதலும் வேண்டும்.