Tuesday, October 31, 2006

பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்:

-ஒற்றைப் புனைவும் ஒரு சில புதிர்களும்-

மாமரத்துக் குயில்கள்
மழைக்காலத்தைச் சபிப்பதில்லை;
மரமேறத் தெரிந்தவன்
உயரங்கள் குறித்து அலட்டுவதில்லை;
கரைந்தொழுகிய காலங்கள்
மீண்டோடி வருகையில்
அள்ளிப்பருக ஒரு கை
பிரக்ஞைகளேதுமின்றி
மார்புக் குவட்டில்
முளைவிடத் தொடங்கும்
இன்றே..
இப்போதே..

01. கிளைவிரிக்கும் ஆன்மாவும் கருவறுக்கும் புனைவும்

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஈரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில்.. சித்தனையும், மலைநாகத்தையும் புணர்ந்து களித்த மலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன் குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்... என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றன, கதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.., ஏன் அவர்களது மரணமுங்கூட. தலைகொய்து உரலிலிட்டு உலக்கை கொண்டு இடித்தும் சிதறிய ஒவ்வொரு பருக்கையிலிருந்தும் புதியதொரு கதைசொல்லி முளைவிட, இரு பனைமரங்களுக்கிடையே கால்களை அகலவிரித்தபடி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், மரங்கள் இருவேறு திசைகளில் தறிக்கப்பட.., யோனி பிளவுற்று உயிர்மூலம் சிதைந்துதான் அவர்களது மரணமும் சம்பவித்ததாம். இடைக்காலத்துச் சூனியக்காரிகளைப் போலவே அக்காலத்துக் கதைசொல்லிகளும் பெண்களாக மட்டுமேயிருந்தனரென்பதையும் விரும்பியோ விரும்பாமலோ என்னைப்போலவே நீங்களும் நம்பித்தானாக வேண்டும்.

இவ்வாறாக, கதைசொல்லிகள் மரணங்களைப் பற்றிப் பேச விரும்பாமையின் மர்மம் உங்களுக்கும் புரிந்திருக்கக்கூடும். தவிரவும், அவர்கள் கூறுவதன்படி மரணங்களுக்கு அழத்தெரியாதென்பதையும் உங்கள் புரிதல்களோடு இணைத்தபடி சரத்துளிகளாய் கதைகளை உள்வாங்கிக்கொள்கின்ற போதுதான் கதைகளும் உங்களை நேசிக்க ஆரம்பிக்கின்றன. மேகங்களினிடுக்கில் சொருகிவிட்டுவந்த ஈரலிப்பை அணிந்துகொள்ள முன்வருமொருநாளில் மரணங்களும் மஞ்சள் நதியாய் மாறி உங்கள் பாலைவனங்களில் நீர்த்தடம் பதித்துச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நானுமொரு கதைசொல்லியைச் சந்தித்தேன், இன்றைக்குச் சில்லாயிரமாண்டுகளுக்கு முன்பு. இதோ நீ நின்றுகொண்டிருக்குமிடத்தில்.., உன் நிழல் படரும் பரப்பில்.., மூன்றுகோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்து மூவாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று தசம் மூன்று மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்தோ ஒரு விதை வந்து வீழ்ந்ததாம். அது அப்போதைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்பது தெரியவந்ததால் மூன்று நாட்களுக்குள் அதனைப் புதைத்துவிடல் நலமென அவர்கள் முடிவுசெய்து முடிக்க மூன்று நிமிடங்களாயின. புதைத்த மூன்றே கணங்களில் முளைவிட்ட அவ்விதையிலிருந்துதான் தான் தோன்றியதாக அக்கதைசொல்லி கூறிமுடித்தபோது என் ஆளுமை மூன்றாகப் பிளவுபட்டுப் போயிருந்தது.

அதைவிடுத்துப் பார்த்தாலும், கதைசொல்லிகளைக் கதைசொல்லும்படி எவரும் வற்புறுத்திவிட முடியாது. பாற்சந்தியில் எதிர்ப்பட்ட இரு கடவுளருக்கிடையேயான மோதலில் பிரபஞ்சவெளி வெடித்துச் சிதறி, இன்மையும் இல்லாமையும் எங்கும் நிறைந்திருக்கின்றபோது, ஒரு கதை அவர்களது கனவிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கும். எனது கணிப்பின்படி, எமக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்து மூன்று நாழிகைகளுள் கோடானுகோடிகாலச் சரித்திரங்கொண்ட ஆதியன்னையொருத்தி கனவுகளைக் கீறிப்பிளந்து வெளியேறி புள்ளியிலிருந்து அல்லது நேர்கோட்டிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ள ஆயத்தமானாள்.

நிழல்கள் உருவங்களை விழுங்கத் தொடங்கியவக்கணத்தில் என் பட்டாம்பூச்சிகள் மயிர்க்கொட்டிகளாக மாறின.


02. அதிகாரத்தின் நிறமும் அழகு / அவலட்சணங்களின் பின்னணியும்

'...கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்ட பழங்காலப் பெண்களில் பலரும் அவர்களது கணவர்களைக் கொண்டோ அல்லது வேறு ஆண் உறவினரைக் கொண்டோ அடையாளப்படுத்தப்படவில்லை. பெண்கள் வேறு தனிநபர் அடையாளங்களுடன் அடிக்கடிகுறிப்பிடப்படுவதால், தந்தையர், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சார்ந்து மட்டுமே சமூக அடையாளங்கள் வரையறுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சொத்துடையவர்களாகவும், சொத்தின்மீது கட்டுப்பாடு செலுத்தியவர்களாகவுமே விவரிக்கப்படுகிறார்கள். பல பெண்கள் நிலவுடைமை பெற்றிருந்தவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பாதிப்பேர் கொடையளித்தவர்களாகவோ, அல்லது கல்வெட்டின் மையமான நபராகவோ இருப்பது, அவர்களது தற்சார்புத் தன்மையையும், அதிகாரத்தையும் தெளிவாக அடையாளங் காட்டுகிறது.'
(தமிழகக் கல்வெட்டுக்களில் பெண்கள் - லெஸ்லி சி.ஓர்)


b

day break II

நீ ஏன் எப்போதும் ஏதாவதொன்று இன்னொன்றாக மாறுவதைப் பற்றியே பேசுகிறாயென உங்களில் எவராவது வினவக்கூடும். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமென்றாகிவிட்ட உலகில் வேறெதைப்பற்றியும் பேசமுடியாத என் இயலாமை.., 'இருப்பது இல்லாததாகாது; இல்லாதது இருப்பதாகாது' எனும் தத்துவ விசாரங்களை மட்டுமே சார்ந்திருப்பதுகூட ஒருவகையில் எனது இயலாமையென்றேதான் கூறவேண்டும். எந்தவொன்றன் அந்தமும் இன்னொன்றன் ஆதியாகின்றது. நீ இறப்பாயானால் அக்னியுடன் சங்கமித்து சாம்பலாகி மண்ணுடன், காற்றுடன், கடலுடன் கலக்கிறாய்.. அங்கே நீ அழியவில்லை; உனது வாழ்வு அத்துடன் முடிந்துவிடவில்லை. மண்ணாய், காற்றாய், கடலாய் நீ தொடர்ந்தும் உயிர்த்திருக்கிறாய்.., இதோ இப்போதிருக்கும் நீயாகவல்லவெனினுமேகூட.

அப்போதெல்லாம்.., பட்டாம்பூச்சிகள் கன்னங்கரேலென இருந்தனவாம்; காக்கைகள் வெள்ளை வெளேரெனவும். அழகு, அழகின்மை பற்றிய கற்பிதங்கள் ஏதோவொரு மூதாதைக் காகத்தின் மூளையில் மின்னலிட சரேலென்று கழன்றது கருமை, பட்டாம்பூச்சிகளிடமிருந்தும்.. என எழுதிட விருப்பம்தானெனினும் யதார்த்தம் நிச்சயமாக எதிர்மாறானதுதானாக்கும். கறுப்பு - அவலட்சணம், வண்ணமயம் - அழகு ஆகிய கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரத்தொடங்க, காகங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் வலிந்து, கருமையைத் தமக்கென ஏற்றுக்கொண்டனவாயிருக்க வேண்டும். சிறகுகளில் வண்ணத் தீற்றல்களைக் கண்டதன் பின்பு அவற்றைப் பேணிப்பாதுகாப்பதிலேயே பட்டாம்பூச்சிகளின் பொழுதெல்லாம் கரையலாயிற்று.

பிறகெப்படி கவலைப்பட, இல்லவே இல்லையென்றாகிவிட்ட கருமைகள் குறித்து..

03. பிரதிமைகளை விழுங்கிய பிம்பங்களும் புளித்துப் போன பிரலாபங்களும்

'மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இலங்கையில் பாலியல் வன்புணர்தலுக்காளான பெண்ணொருத்தியின் அதிகுறைந்த வயது 6 மாதங்கள்; அதிகூடிய வயது 85 வருடங்களாம்..'

இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும், "பட்டாம்பூச்சிகளா.. ஓ.. பிடிக்குமே" என்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று, பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காதென என்னையே எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அன்றாடங்களின் நகர்வில்.., அலமலந்த தேடல்களில்.. பிடிக்கும்.. பிடிக்குமென்பவர்களை மட்டுமே காண்கிறேன் அல்லது அவர்கள் மட்டுமே எனக்கு எதிர்ப்படுகிறார்கள்.

அப்படி என்னதான் பிடித்திருக்கிறது..? வர்ணச் சிதறல்கள், படபடக்கும் சிறகுகள், அழகு, மென்மை... நீண்டுகொண்டே போகின்றன, மறுமொழிகள். பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிருந்தனவென்பது யாருக்காவது நினைவிருக்குமா..? அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை..? அவற்றின் இரத்தத்தின் நிறம் யாருக்குத் தெரியும்.. அதில் ஈரலிப்பிருமென்பதையாவது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா உங்களிடம்.. அவற்றின் உணர்கொம்புகளை நேசிக்கமுடியுமா உங்களால்.. அவற்றின் மயிர்களைக் கண்டு அருவருப்படைகிறீர்கள்.. தூர விலகியோடுகிறீர்கள்.. உதிர்ந்த மயிர்கள் பற்றிய கரிசனை எள்ளளவுமிருக்குமா உங்களுக்கு.. மயிர்க்கொட்டிகள் இல்லையேல் பட்டாம்பூச்சிகளும் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் இன்னுமேன் அவற்றை அழிக்கப் பாடுபடுகிறோம்?

மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே.. அவற்றின் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர் நாளில் உங்கள் வானங்கள் வெளிறிப்போய்விடக்கூடும்.


04. கனவுலக இருண்மைகளும் கற்காலத்துக் கரைமீறல்களும்

கண்மூடித் திறப்பதற்குள் சிறகுதிர்த்துப் பறந்து மறையும் பெயரறியா வண்ணப் பறவையொன்றன் நினைவில் அடிமனம் அலைவுற.., ஆதியன்னை விழித்தெழுந்தாள். அவளது கணப்பொழுது கண்ணயர்வில் தலைகீழாகிவிட்டிருந்தது, அவள் படைத்திருந்த உலகம். உருகி உருகி அவள் தன் மேனி தொட்டு வண்ணம் பூசியிருந்த கருநிறப் பட்டாம்பூச்சிகள் நிறக்குவியல்களுடன் அல்லாடுவதையும், வெண்காகங்கள் கருநிறங்கொண்டு கூவிப் பிதற்றலுற்றுத் திரிவதையும் கண்ணுற்று, உள்ளம் வெம்பினாள்: உலகம் அதிர்ந்து நிலம் நடுங்கியது. உயிர் கசிந்து விழிநீர் பெருக்கினாள்: ஆழி பொங்கி கண்டங்களைச் சூழ்ந்தது. முடிவுக்கு வந்தவளாய் தேறுதலுற்று பெருமூச்செறிந்தாள்: புயல்வீசி மலைகளும் சுருண்டன.

இன்றைய கணத்தில், அவள் உயிர்ப்பித்த பூவுலகில் அவளுக்கென எஞ்சியிருந்ததென்னமோ கூந்தலிடை சிக்கிக்கொண்ட மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான். காகங்கள் கெக்கலித்துக் கொண்டாலும், இன்னமும் ஆதியன்னையின் கனவுகளெங்கும் மயிர்க்கொட்டிகள் சுருள்சுருளாய் ஊர்ந்து திரிவது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்..?

இன்றில்லையெனினும்.. என்றேனுமொருநாள் அண்டம் முழுவதற்குமாய் விரியும் அவள் யோனி.., பிதுக்கித் தள்ளும் இளவரசர்களை.. அன்று இருளும் கருமை களைந்து வேறு நிறம் போர்த்தும். இளவரசர்கள் மயிர்க்கொட்டிகளை முத்தமிட்டு உயிர்ப்பிக்குமந்நாளில் அவள் உலகம் பட்டாம்பூச்சிகளால் நிறையும்.

4 comments:

இளங்கோ-டிசே said...

/பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிருந்தனவென்பது யாருக்காவது நினைவிருக்குமா..? அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை..? அவற்றின் இரத்தத்தின் நிறம் யாருக்குத் தெரியும்.. அதில் ஈரலிப்பிருமென்பதையாவது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா உங்களிடம்.. அவற்றின் உணர்கொம்புகளை நேசிக்கமுடியுமா உங்களால்.. அவற்றின் மயிர்களைக் கண்டு அருவருப்படைகிறீர்கள்.. தூர விலகியோடுகிறீர்கள்.. உதிர்ந்த மயிர்கள் பற்றிய கரிசனை எள்ளளவுமிருக்குமா உங்களுக்கு.. மயிர்க்கொட்டிகள் இல்லையேல் பட்டாம்பூச்சிகளும் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் இன்னுமேன் அவற்றை அழிக்கப் பாடுபடுகிறோம்?/

இந்தப் புள்ளியிலிருந்து நிறைய விடயங்களை -விரிவாக்கி- யோசிக்க முடிகின்றது. நன்றி.

த.அகிலன் said...

//மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே.. அவற்றின் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர் நாளில் உங்கள் வானங்கள் வெளிறிப்போய்விடக்கூடும்//
ம் உண்மைதான் நிவேதா. இன்னொன்று ஒரு புதிய வடிவமுறைக்குள் உங்கள் எழுத்துக்களை நுழைக்கிறீர்கள் நிவேதாநல்லது கொஞ்சம் எளிமையாக்கலாம் என்பது எனது கருத்து .இதுவும் நன்றாகத்தான இருக்கிறது .
அன்புடன்
த.அகிலன்

ஈழநாதன்(Eelanathan) said...

நிவேதா நிறையவே சிந்திக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.மொழியில் நிறையவே மாற்றம் தெரிகிறது.

நிவேதா/Yalini said...

டிசே, காண்டீபன், அகிலன், ஈழநாதன் நன்றி!

கம்பியூட்டர் அடம்பிடிப்பதால் விரிவாக பின்னூட்டம் எழுத முடியாது உள்ளது....sorry!