Thursday, October 05, 2006

சுவர்க்கத்தின் வர்ணமும் பூலோகத்தின் வெளிறலும்


பாதாள ரயில்வண்டி இரு நிலையங்களுக்கிடையே
வெகுநேரம் நின்றுவிடும் சமயத்தில்
சம்பாஷணை எழுகிறது, பின் மெதுவாக மங்கி
மௌனமாய் மாறுகிறது
ஒவ்வொரு முகத்தின் பின்னாலும்
சிந்தனையற்ற வெறுமை ஆழமடைகிறது
சிந்திக்க ஏதும் இல்லை என்ற
வளர்ந்துவரும் பீதி மட்டுமே எஞ்சி நிற்கிறது
- T.S.Eliot (நன்றி:- அழகும் உண்மையும்: மார்க்ஸியப் பார்வை. தமிழாக்கம் - நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)


1.

உலகின் எந்த மூலையிலும், இண்டு இடுக்கிலுங் கூட இடமில்லாமற் போனதாய்.. ஒவ்வொரு அணுவாலும் புறக்கணிக்கப்படுவதாய் உணர்ந்த இரு நெஞ்சங்களின் சங்கமிப்போடு தொடர்கிறது, இன்றைய படத்துடனான இரண்டறக் கலத்தல். திரையில் பார்வையற்ற சிறுவனொருவனுக்கு - அவனது குறைபாட்டினைக் காரணங்காட்டி - அவன் வாழவிரும்பிய உலகில் இடம் மறுக்கப்படுகிறது. அன்றாடங்களின் நகர்வில் அமர்ந்து படம்பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஒருத்திக்கோ, பெண்ணாய் அல்லது அவர்கள் கூறுவதன்படி இரண்டாம் தரப் பிரஜையாய் பிறந்துவிட்ட காரணத்தால்.., வயது ஏற ஏற.. வருடங்கள் நகர நகர சிறுவர்களின் உலகில் இடமில்லாமற் போகிறது. அதேவேளை பெரியவர்களின் உலகிலும் - அவர்களது கயமைத்தனங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழத்தெரியாததால் - இடம் மறுக்கப்பட்டு விடுகிறது. இனியும் எங்கே போய்த் தேடுவது எனக்கான இடத்தை..? உடல் குறுக்கி மனம் நடுங்கி, உன் மனச்சந்தில் ஒடுங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகூட நாளை பறிபோய்விடக்கூடுமோ என்னமோ.. யார் கண்டார்? ஒரு கணம் சோர்ந்த பாதங்கள் எங்கேனும் தரித்து நின்றாலும் உடைமையாளர்களின் அலறல் வீரிட்டெழுகிறது. "போ... ஓடிப்போ இங்கிருந்து... இது உனக்கான இடமல்ல". எந்த இடமும் எனக்கானதல்லவென எனக்கும் புரிகிறதுதான். இருந்தும், அதையே சொல்லிக்காட்டி நான் அநாதரவானவளென அடிக்கடி நீங்கள் நினைவுறுத்துகின்ற போது.. தெள்ளிய ஓடைபோல என் இயலாமைகள் உங்கள் வார்த்தைகளினூடு பிரதிபலித்துத் தெறிக்கின்ற போது இன்னுமின்னுமதிகமாக உங்கள் உலகத்தினை அருவருக்க ஆரம்பிக்கிறேன்.

பால்யப் பருவத்து பசும் நினைவுகளுடன் இன்னமும் சிறகடித்துப் பறப்பவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் சமயங்களில் ஒருவிதப் பொறாமையுணர்வு தலைதூக்கும். நகரங்களால் தூக்கி வளர்க்கப்பட்ட எம் போன்ற குழந்தைகளுக்குக் கடந்தகாலங்களை அசைபோடுகையில் நினைவில் நிற்பதெல்லாம் தூசும் வாகனப் புகைகளும் மறைத்த சில மங்கிப்போன சம்பவக் கோர்வைகள்தான். வறண்டு போன பால்யங்களில் படித்துச் சிலிர்த்த கஸாக்கியக் கிராமங்களையும், ஸ்தெப்பிப் புல்வெளிகளையும், சணல் பூத்த வயல்களையும் பற்றியதான கனவுகள் மட்டும் இன்னமும் எஞ்சியிருந்து இன்றைய பொழுதின் வாழ்தலுக்கு வர்ணங்களேற்றிப் போகும். தனிமையின் சிலிர்ப்பில்.. மனதில் அலைமோதும் மெல்லிசையின் மிதப்பில்.. கால்கள் எனைமீறி நர்த்தனமிட்டுப் பின்னும் போதும்.., மெய்மறந்து கனம் தொலைத்து நீர்ப்பரப்பின்மீது மீன்குஞ்சென மிதந்தலையும் போதும் மூப்படையவோ, சாகவோ மறுத்தபடி லிவ் உல்மனுக்குள்ளும் எனக்குள்ளும் வாழ்ந்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண் உயிர்த்தெழுவதை உணர்ந்திருக்கிறேன்.

உங்களது மொழியில்.., உங்களது மதிப்பீடுகளின்படி அழகானவளல்ல நான்.., பிறை நுதற் பாவையல்ல; சேலகட்டிய விழியினளல்ல; கொவ்வைக் குமிண் சிரிப்பழகியல்ல; முதிர் கோம்புக் கொங்கையினளல்ல; அலைந்தாடும் கொடியிடைக் குமரியுமல்ல. நானொரு வெறும் பெண்... உங்கள் கனவுகளில் வளைய வருமொருத்தியின் நளினங்களுடனும், 'பெண்மை' யின் இலக்கணமான மென்மையுடனுமல்லவெனினுமேகூட.., எனதேயெனதான விழுமியங்களுடன் - மலரல்ல, நிலவல்ல, தேவதையுமல்லாத - பெண் மட்டும்தான்.

நானும் காதலிப்பேன் ஒருவனை.., ஒரு குழந்தையின் கதறலைப்போல.. நெக்குருகி நெக்குருகி.. நெஞ்சம் கசிந்து. சமயங்களில் தாயுமாவேன்.., ஒரு சிறுமி தனது விளையாட்டுப் பொம்மைக்குத் தாயாவதைப்போல.. கள்ளமற்று, கபடமற்று.. சற்றும் பிறழ்வுறாமல்.


2.

சமீபத்தில், குறுகிய காலத்திற்குள்ளாகவே சில அருமையான படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஷியாம் பெனகலின் அங்கூர், Frida, இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers, கிச்சான் உள்ளிட்ட இன்னும் சில குறும்படங்களென அவ்வரிசை நீளும். ஏன் அவையனைத்தையும் பற்றி எழுத என்னால் முடிவதில்லையென்ற சந்தேகம் எனக்குள்ளேயும் பலமுறை எழுவதுண்டு. உண்மையைக் கூறுவதானால் எழுதுமளவுக்கு அவற்றில் பெரும்பாலான படங்கள் மனதில் எவ்விதச் சலனங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. சிறந்த படங்களனைத்தும் எம்மைப் பாதிக்கவேண்டுமென்றும், எம்மைப் பாதிக்கும் அனைத்தும் சிறந்தவையாகத்தானிருக்க வேண்டுமென்றும் நியதிகளொன்றுமில்லைதானே. வேறெவற்றையும்விட குழந்தைகளுக்கான / குழந்தைகளைப் பற்றிய எவையும் என் அகவுணர்வை அதிகமதிகம் பாதிக்கின்றன. அங்கூர் போன்ற தரமான படங்களை விடவும், நேற்றுக் கேட்ட குழந்தையொன்றின் அழுகை பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் கதைகளிருக்கக்கூடும்.

இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers இதற்கு விதிவிலக்கு. 'So let the cries and whispers die away' என படம் முடிவுற்ற பின்னரும் கூட அடிமனது அலறிக்கொண்டேதானிருந்தது. அலறல்களின் நீட்சியில் அந்நிகழ்வு குறித்த தகவல்களை வழங்கிய நண்பருக்கும் நன்றி கூறிக்கொண்டேயிருந்தேன். இத்தகைய film festivals கொழும்பில் அடிக்கடி நடைபெறுகின்றபோதும் அவைகுறித்த தகவல்கள் அனைவரையும் - குறிப்பாக இதுசார்ந்த ஆர்வமுடையவர்களுக்கு - முறையாகப் போய்ச்சேருவதில்லை. கடந்த வாரம் முழுதும் இங்க்மர் பெர்க்மனின் 6 படங்கள் திரையிடப்பட்டிருந்தும் நாளாந்த அலுவல்களின் மத்தியில் ஒரேயொரு படத்திற்கு மட்டுமே செல்லும்வாய்ப்புக் கிடைத்தமை வருந்தவைத்தாலும், அவ்வாய்ப்பினைப் பெற்றுத் தந்தமைக்காக நண்பருக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

விடயத்திற்கு வருவோமாகில், ஈரான் படங்களில் மிகவும் கவர்ந்த அம்சம் தமது அதியுயர் பண்பாட்டினூடாக (rich culture) அவர்கள் குழந்தைகளைப் பேணும் / பாராட்டும் விதம்தான். பெரும்பாலான ஈரானியப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றமையும், சிறுவர்களே முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றமையும் விதந்து நோக்கத்தக்கவை. விழிவிரித்து ஆச்சரியப்பட வைப்பது, பார்வையாளர்களை தம்மோடு ஒன்றித்துப் போகவைக்கும் அச்சிறுவர்களின் அசாத்தியமான நடிப்புத் திறமைதான். சினிமாத்துறையில் பல்லாண்டுகால அனுபவம் வாய்த்த ஆனானப்பட்ட நடிகர் திலகங்களுக்கே சாத்தியமற்றுப் போன உணர்வு வெளிப்பாடுகளை அநயாசமாகவும், மிக மிக இயல்பாகவும் அச்சிறுவர்கள் தம் முகங்களில் வெளிக்கொணர்கின்றமை மெய்சிலிர்க்க வைப்பதில் வியப்பதற்கில்லை.

மேலைத்தேய பகட்டுலகம் சிறுவர்களுக்குத் தம்மத்தியில் வழங்கியிருக்கும் ஸ்தானத்தின் போலித்தனங்கள் அவற்றிற்கு முழு எதிரிடையாகவமைந்த ஈரானியத் திரைப்படங்களைப் பார்க்கும்போதே இன்னும் தெளிவாகப் புலனாகின்றன. சிறுவர்களின் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அதிநவீன சாகசங்களை அல்லது அசட்டு / குறும்புத்தனங்களை மாத்திரமே பதிவுசெய்துவந்த மேலைத்தேயத் திரையுலகம் ஈரானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ. சிறுவர்களது உலகம், உணர்வுகள், எதிர்பார்க்கைகளென மேலைத்தேயம் கவனத்திற்கொள்ளாத பல விடயங்களை ஈரானியத் திரைப்படங்களில் கண்ணுற நேர்கையில் மொழி, பண்பாட்டு, புவியியல் வேறுபாடுகளுக்குமப்பால் நாமும் அவற்றுடன் ஒன்றிப்போக முடிகின்றது.


3.

சர்வதேசச் சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு எல்பின்ஸ்டன் திரையரங்கில் சர்வதேசச் சிறுவர் திரைப்படங்கள் இவ்வாரம் முழுவதும் - கடந்த ஞாயிறன்று இலங்கையின் 'சமனல தட்டு' படத்துடன் ஆரம்பித்து ஜேர்மானிய, பிரான்சிய, இந்திய, ஈரானிய, ரஷ்ய, சீனப்படங்களென - திரையிடப்பட்டு வருகின்றன. இன்று மஜீத் மஜீதியின் மற்றுமொரு சிறுவர் படமான 'Colour Of Paradise' னைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

c1

தாயையிழந்த பார்வைப் புலனற்ற சிறுவனொருவனைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை தெஹ்ரானின் பார்வையற்றோர் பாடசாலையொன்றின் கோடைக்கால விடுமுறையுடன் ஆரம்பமாகின்றது. மூன்றுமாதகால விடுமுறையை முன்னிட்டு பாடசாலை மூடப்பட தன்னை அழைத்துச் செல்லவரும் அப்பாவுக்காக காத்திருக்கிறான் மொஹமட். தாமதமாக வந்துசேரும் அப்பாவோ - மனைவியுமற்ற நிலையில் குறைபாடுடைய மகனைப் பெரும் சுமையாகவே கருதும் சராசரிக் கல்வியறிவற்றவர்களில் ஒருவர்தான் அவருமாதலால் - அவனைக் கிராமத்துக்கு அழைத்துச்செல்லப் பிரியப்படவில்லை. பாடசாலை அதிபர் கைவிட, வேறுவழிகளேதுமின்றி மொஹ்மடை அழைத்துச் செல்கின்றாரெனினும் அங்கே அவன் தனது இரு தங்கைகளுடனும், பாட்டியுடனும் குதூகலமாகப் பொழுதைக் கழிப்பதை தனது அடுத்த திருமணத்திற்கான பெரும் இடையூறாகக் கருதி, தனது தாயின் பலத்த எதிர்ப்புக்களையும் மீறி ஊரிலிருந்து அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் ஒரு தச்சரிடம் (அவரும் பார்வையற்றவரே..) வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். பேரனின் பிரிவும், மகனின் நடவடிக்கைகளும் வேதனையில் ஆழ்த்த வயது முதிர்ந்த பாட்டி நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றார். அத்துடன், அப்பாவின் மறுமணமும் கைவிடப்படுகின்றது. அவர் மகனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், நதியின் குறுக்காகக் கடக்கையில்.. பாலம் உடைந்து விழுந்து மொஹமட் நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுகிறான். இத்தனைகாலமும் மகனை சுமையாகவே கருதி வெறுத்திருந்தும் இனம்புரியாத பாசம் வந்து தாக்க, அப்பாவும் நீரில் குதிப்பதாகத் தொடர்கிறது கதை.

சிறிய கதைதானெனினும், ஒவ்வொரு காட்சி நகர்வினூடாகவும் எம்மை இலயித்துப் போகச்செய்யும் இயக்குநரின் அசாதாரண இலாவகம் வியக்கவைத்தது. மொஹமட் ஊருக்குத் திரும்பும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருந்தமையையும், இன்னகாட்சிதான் மிகவும் கவர்ந்தது / பாதித்ததென தனித்து அடையாளங்காட்ட முடியாமல் படத்தின் ஒவ்வொரு நகர்வும் மனதை அள்ளிப் போனமையையும் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். பார்வைப் புலனற்றவனெனினும் மொஹமடின் கேட்கும் திறமையும், பொருட்களை அவன் உணர்ந்துகொள்ளும் விதமும், அவற்றினூடாக அவன் கற்பதும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. பறவைகள் ஒலியெழுப்புகையிலும், ஆற்றோரக் குறுங்கற்களிலும், கோதுமைத் தானியங்களிலும்.. அனைத்திலுமே தான் கற்றிருந்த பிரெய்லி எண்களையும், எழுத்துக்களையும் அவன் நினைவு கூர்கின்றமை கற்றலின் மீதான அவனது தீராத தாகத்தினை வெளிக்காட்டியிருந்தது. தங்கைமாருடன் கோதுமை வயல்களினூடாகவும், வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்திருந்த வெளிகளினூடாகவும் அவன் ஓடித்திரிந்த போது, நானும் மறுபடியும் சிறுமியாய் மாறி அவர்களோடு கைகோர்க்க முடியாதாவென்ற ஏக்கம் தலைதூக்கியது. வனப்புமிகு அம்மலையோரக் கிராமத்தின் எழிலையும், மலர்களின் வண்ணச் சிதறல்களையும் அவனால் கண்டுகளிக்க முடியாதுதானெனினும் தங்கையரின் அன்பும், பாட்டியின் அரவணைப்பும் - அவை மட்டுமே அவன் வேண்டுவதென்ற வகையில் - அவனறிந்த இருட்டுலகிற்கு சுவர்க்கத்தின் நிறங்களையேற்றிச் செல்லுமென்பதை உணர்த்தியபடி படம் நகர்ந்துகொண்டிருந்தது.

அப்பா மொஹமடைத் தச்சரிடம் கொண்டுபோய் விட்டவந்நாளில்...:

"எனது ஆசிரியை சொன்னார்.., எமக்குப் பார்வையில்லையென்பதால் கடவுள் வேறெவரையும்விட எம்மை அதிகம் நேசிப்பதாய்.. ஆனால், அது பொய். எம்மை உண்மையாகவே நேசித்திருந்தால் கடவுள் எம்மை பார்வையற்றவர்களாகப் படைத்திருக்கவே மாட்டார். எனது நீட்டிய கைகளின் மூலம் தடவித் தடவி ஒருநாள் கடவுளைக் கண்டுபிடிப்பேன். அன்று அவரிடம் கேட்பதற்கென பல கேள்விகளும், அவரிடம் சொல்வதற்கென எத்தனையோ இரகசியங்களும் என்னிடம் உள்ளன.."

எனக்கூறி அவன் கேவிக் கேவி அழுதபோது இனம்புரியாதவொரு சோகம் மனதில் கவிந்துபோனது.., கூடவே ஒருவித வாஞ்சையும். அந்தக் கணத்தில் அந்தச் சுட்டிப் பையனில் என்னைக் கண்டேன்.. என் சின்னஞ்சிறு பெண்ணைக் கண்டேன். அவனைக் கட்டியணைத்து, நீயும் நானும் ஒரே இலக்கினை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமென்று கூறவேண்டும் போலிருந்தது. நம்பிக்கைகளை மனதுள் நிறைத்தபடி மனிதத்துவத்தை எதிர்நோக்கிய பயணத்தில், அவனுடனிணைந்து நடைபோடவேண்டும் போலவுமிருந்தது.

hossein_mahjub_mohsen_ramezani_the_color_of_paradise_001

அப்பா தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணைச் சந்திக்கச் செல்லும்போதான காட்சிகளின் கோமாளித்தனங்கள் படத்தின் கனதியைக் குறைத்துவிடுகின்றமை வருந்தவைத்ததெனினும் அது எந்தவிதத்திலும் இரசனையைக் குலைத்துவிடாமையும், பார்வையாளரைப் படத்துடன் ஒன்றிப்போகும் உணர்வைத் தோற்றுவித்தமையும் மஜீத் மஜீதியின் சாதனையென்றே சொல்லவேண்டும்.


4.

மிக நொய்ந்த சமூகப்பிரிவினரென்ற வகையில் சிறுவர்களை அடக்கியாள்வதற்கான உலகத்தின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இருக்கின்றதா எம்மிடம்..?

திருகோணமலையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வெளிநாட்டு அரசுசாரா அமைப்பொன்றின் எதிரேயுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றில் 14 வயதே நிரம்பிய சிறுவனொருவன் வேலைசெய்வதாகவும், அவ்வமைப்பின் தொண்டர்கள் அங்கே வந்து ஐஸ்கிறீம் அருந்தி சிறுவர் உரிமைகள் பற்றிய காரசாரமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றபோதும் அச்சிறுவனை ஏனென்று கேட்பதற்கு யாருமேயில்லாத அவலநிலையை நண்பரொருவர் எடுத்துக் கூறியிருந்தார். சிறுவர் உரிமைகள் தொடர்பான மேலைத்தேயத்தின் அக்கறை இவ்வளவும்தான்.

சில தினங்களுக்கு முன், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எட்டு வயதே நிரம்பிய மைத்துனரொருவரை நலம் விசாரித்து வந்திருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றினுள் புகுந்த இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஒரு இளைஞர் பலியானதுடன், அப்போதுதான் பாடசாலையிலிருந்து திரும்பிய இச்சிறுவனும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தான். முள்ளந்தண்டில் சிதிலங்கள் பாய்ந்ததில் கைகால்கள் வழங்காமல், உடல் மரத்துப்போய் படுத்த படுக்கையாகக் கிடந்த அந்தத் துருதுருச் சிறுவனைப் பார்த்தபோது மனதின் அலறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன தெரியும் அவனுக்கு..? காலாகாலத்திற்கும் சுமந்துகொண்டிருக்க வேண்டிய இவ்வடுக்கள் அவனது குழந்தைப் பருவத்தையுமல்லவா பறித்துக்கொண்டு விட்டன.. ஏன் இப்படி... ஏன் இப்படி...


(சிந்திக்க ஏதுமற்ற பொழுதுகளைத் தூண்டிவிட்ட பால்யகாலத்து நினைவுகளுக்கு..)



10 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

///சில தினங்களுக்கு முன், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எட்டு வயதே நிரம்பிய மைத்துனரொருவரை நலம் விசாரித்து வந்திருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றினுள் புகுந்த இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஒரு இளைஞர் பலியானதுடன், அப்போதுதான் பாடசாலையிலிருந்து திரும்பிய இச்சிறுவனும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தான். முள்ளந்தண்டில் சிதிலங்கள் பாய்ந்ததில் கைகால்கள் வழங்காமல், உடல் மரத்துப்போய் படுத்த படுக்கையாகக் கிடந்த அந்தத் துருதுருச் சிறுவனைப் பார்த்தபோது மனதின் அலறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன தெரியும் அவனுக்கு..? காலாகாலத்திற்கும் சுமந்துகொண்டிருக்க வேண்டிய இவ்வடுக்கள் அவனது குழந்தைப் பருவத்தையுமல்லவா பறித்துக்கொண்டு விட்டன.. ஏன் இப்படி... ஏன் இப்படி...//


இதுக்கு பதில் தெரிஞ்சா பிரச்சனை எப்பவோ தீர்ந்து போயிருக்கும்.உங்கள் மைத்துனருக்கு நடந்ததை செய்தியாக வாசித்திருந்தேன் அவன் குணமடைய வேண்டுகிறேன்

இளங்கோ-டிசே said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் நிவேதா.
......
காயப்பட்ட அந்தச் சிறுவனுக்கு எந்த வார்த்தை கூறினாலும் அது அவருக்கு ஆறுதலிக்காது :-(.

நிவேதா/Yalini said...

ஈழநாதன், டி.சே, நன்றி!

ம்ம்ம்.. இதைவிடவும் கேவலமான சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்க தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றென்று தம்மைத் தேற்றிக்கொண்டிருப்பவர்களுக்காக வேண்டுவதைத் தவிர நாமும் என்னதான் செய்ய..?

Anonymous said...

Good writing Nivedha, keep it up!

செல்வநாயகி said...

வழக்கம்போல் படித்தபிறகு ஒரு இனம்தெரியாத மௌனம் வந்து ஒட்டிக்கொள்கிறது இப்பதிவு படித்தபின்னும். அந்தச் சிறுவனுக்குச் சொல்ல ஏதாவது கிடைக்குமா என என்னைச் சூழும் மௌனத்தில் தேடிப்பார்க்கிறேன். ஒன்றும் கிடைக்காத வெறுமையை எப்படி எழுத:((

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்

நிவேதா/Yalini said...

அனானி அண்ணனுக்கு நன்றிகள்!

வெறுமைகள் மொழிபெயர்க்கப்பட முடியாதன தான் செல்வநாயகி.. சிந்திக்க ஏதுமற்ற பீதி தலைதூக்கிடும் பொழுதுகளில்... பின்னூட்டத்திற்கு நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் மைத்துனர் இப்பொழுது உடல் நலம் தேறி இருக்க வாய்ப்புண்டா. வேண்டிக் கொள்கிறேன்.

--

படத்தில் சிறுவன் தேம்பி அழும் காட்சி தான் என்னைப் பொறுத்த வரை முக்கியக் காட்சி. படம் பார்த்து ஆண்டுக்கு மேலாகியும் அந்தக் காட்சி மட்டும் தான் மனதில் இருக்கிறது.

நிவேதா/Yalini said...

நன்றி, ரவிசங்கர்!

மைத்துனருக்கு இப்போது சற்றுத் தேவலைதான். இருந்தாலும் இவ்வடுக்களெல்லாம் காலாகாலத்துக்கும் சுமந்துகொண்டிருக்க வேண்டியவை தானில்லையா.. முன்புபோல் ஓடியாடித் திரிய முடியாதென்பதுதான் வலிக்கச் செய்யும் உண்மை..

சிறுவன் தேம்பியழும் காட்சிதான் என்னை அதிகம் பாதித்ததும்.. ஒரு குழந்தையின் அழுகையைப் பார்த்துக் கொண்டிருப்பது கல்நெஞ்சக்காரருக்கும் சிரமமாயிருக்கும்போது, எம் போன்றவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன..?

Paheerathan said...

//இத்தகைய film festivals கொழும்பில் அடிக்கடி நடைபெறுகின்றபோதும் அவைகுறித்த தகவல்கள் அனைவரையும் - குறிப்பாக இதுசார்ந்த ஆர்வமுடையவர்களுக்கு - முறையாகப் போய்ச்சேருவதில்லை.//

இந்தப்பிரச்சினை எனக்கும் இருக்கிறது. தயவு செய்து உங்களுக்கு இப்பிடியான தகவல்கள் கிடைத்தால் எனக்கும் கொஞ்சம் அறியத்தாருங்கள் ppahee@gmail.com
நன்றி

Anonymous said...

hai dear nevetha excellent writing i have lot of work but i try to read your article you have fantastic future from writing world god bless
Esther akka