Monday, October 22, 2007

எதிர்பாலினப் படிமங்கள்

1.

நீண்டு வளரும் தெருவில்
அனாதையாக யாருமற்று
அலையும் தருணங்களில் உய்த்துணர்கிறேன்
உனது உதடுகளில் சிலபொழுது
கமழ்ந்த என் அன்னையின்
மஞ்சள் குங்கும நெற்றியின் வாசனையை
*(பக்.25)

உனது அணைப்பில்
கஞ்சாவின் மணம்..

நேற்றைய இரவில்
துரும்பாய் உனை மதித்து
தூக்கியெறிந்த குறட்டைகளின் நீட்சியில்
நான் தூங்கி வழிந்தது பொறுக்காமல்
அரைகுறையாய் நீ புகைத்துப் புகைத்து
வீணாக்கிய சிகரட்டின்
சாம்பல் மணம்..

உனது குட்டி போட்ட பூனை நடையில்
அதிர்ந்ததிர்ந்து ஓய்ந்த
இரவின் மணம்..
நிலவின் மணம்

உனது கரங்கள்
பேஸ்போல் மட்டை
கணம் ஒரு விந்தையுடன் இறுக்கும்
வார்ப்பிரும்புச் சங்கிலி

கதறிக் கதறி நெக்குவிட்டுருகும்போதும்
ஒருபோதும் உய்த்துணர முடிந்ததில்லை..,
எந்தையின் மடியிலிருந்து கசியும்,
நான் விரும்பும்
காம்போதியின் குழைவுகளை..


2.

பச்சைக்கிளியின் வளர்ந்த இறகு
வழியில் கிடக்கிறது
இறகை எடுத்துப் பார்க்கும்போது
முழுப் பறவையும் தெரிகிறது
*(பக்.32)

தத்துவவியல் சொன்னது:
இறகை வைத்து பறவையை மதிப்பிடாதே
வாய்ப்புக்கள் அபத்தமாகிப் போகும்
பறவையைக் கொண்டு இறகை மதிப்பிடாமல் விடாதே
முடிவுகள் சாத்தியமற்றுப் போகும்

காற்றில் தவழ்ந்து கூந்தல் சிக்கிய வானம்பாடி இறகு சொன்னது:
பறவையுடன் இருப்பதால்
நானும் பறவையாவதில்லை
என்னைச் சுமப்பதால்
பறவை இறகாவதில்லை

எனது ஒவ்வொரு அணுவும் அது 'நான் தான்'
'நான் தான்'
'நான் மட்டுமே தான்'
நீயற்ற எதுவும் நானாவதில்லை
என்னைப் பிரிந்த நீயும்..


3.

விழுங்கிய நாவல் பழம்
நான் பயந்தபடி வயிற்றில்
முளைத்துவிட்டிருக்கிறது
நாவல் பழக் கண்களோடு
என் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள்
இக்கவிதையை
*(பக்.33)

விழுங்கும் எதுவும்
வயிற்றில் முளைக்குமாமெனில்
வெண்ணிலவை பிடுங்கித் தின்பேன்
நீலக்கடலை அள்ளிப் பருகுவேன்
சுட்டெரிக்கும் தீயை..
விசும்பை..
நெஞ்சை அள்ளிப் போன
ஹரஹரப்பிரியாவின்
ஜன்யமொன்றை..



*சக்கரவாளக் கோட்டம் (ரமேஷ்-பிரேம்)


(இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்பு - ஏறத்தாழ ஒரு வருடமாகிறது - பழக்கதோஷத்தில் வேடிக்கையாய் எழுதிவைத்தது.. ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக் கோட்டம்' தொகுப்பிலிருந்த ரசித்த/ முகஞ்சுளித்த சில கவிதைகளின் உணர்வுகளை ஒரு பெண்ணாய் மீளப் பதிதல்..)

2 comments:

Anonymous said...

வணக்கம் நிவேதா

உங்கள் பதிவு நன்றாக இருந்த்து
"பெண்ணாய் மீளப் பதிதல்"
தவிர்க இயலாது தாங்கும் துன்பம்
என்றே நான் உணருகின்றேன்

நிவேதா/Yalini said...

நன்றி, இராஜராஜன்!