Thursday, July 27, 2006

*மகா காலம் வியாபித்த அழியாத் துயர்...

பிரிவு என்னைப் பொறுத்தவரை பொய்..!


1.

என்னைப் பற்றியும்
உன்னைப் பற்றியும்
சொல்வதற்கு இனியேதுமில்லை

காலங்கடத்திப் போட்ட
தலைமுறையொன்றின் பிறள்வில்
சரிந்து கிடக்கிற
எம் வாழ்வின் மீது
ஒரு பனிக்காலத்தின் குளிர்மை
வசந்தகாலம் முழுதும்
சிறகடித்தொதுங்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறக்குவியல்
மழைக்காலத்தின் செழுமை
இனியெதுவும் வேண்டாம்

வாழ்வின் அலைச்சலில்
எதையெதையோ பொய்யாக்கி
இனியும் யாரிடம் சொல்லப் போகின்றோம்

கேட்பதற்கும் சொல்வதற்கும்
யாருமேயற்ற நாளொன்றில்
நானும் நீயும்
நினைவுகளாய் கரைந்தொழுகி...
உன்னொத்த நண்பர்களை
இனியெங்கு தேடிப்போவேன்...

வாழ்வின் கரைசல்களில்
எல்லாம் வந்து போகிறது
அசைவற்றுப் போகின்ற உணர்வுகளில்
உள்மனம் எதையோ
வேண்டிக் கிடக்கிற கணங்களில்
நினைவுகளாய் மீண்டும்
ஏன் வந்து போகிறாய்

எதற்காக வெளிக்கிட்டோம்
இரு தசாப்தங்களைத்
தொலைத்த நாளொன்றில்
இன்னும் வெறுமையாய்
தோற்றுப் போனதென்ற பிரமையில்
நான்... நீயெப்படியோ...

நானும் நீயும்
நாமெல்லோரும்
காலங்கடத்திய
அந்த நாட்களும்
என்னில் அழிந்து போவதாய்
உணரும் போதெல்லாம்
வெடித்துச் சிதறுகிறது
மனப் பெருவெளி...

போர்க்காலத்தின் நெரிசலும்
வரண்டுபோன இந்த வாழ்வும்
சிதைந்து போன கனவுகளும்
இப்போதெல்லாம்
சுகமெனத் தெரிகிறது என்னில்.
- பி. ரவிவர்மன்


2.

யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி

எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!

அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்

தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன

விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை

இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்
- அஸ்வகோஷ்


3.

ஆசைமகனே என் அன்பான கண்மணியே
நேசத்துரையே நெடுந்தூரம் போனாயோ
உந்தன் தலையரிந்து ஓலைக் குடலைகட்டி
சென்று சென்று விற்றனரோ! தின்று பசியாறினரோ
அம்மாவென அழைக்கும் ஆசைத் திருக்குரலை
எம்மாதுளக் கொளுந்தே நான்கேட்ட தென்னாளோ
ஓங்கிய கத்தி விழும்போது உடல் நடுங்க
ஏங்கியெனை நினைத் தென்னம்மாவே என்றாயோ
- விபுலானந்தர்


* நன்றி - எம்.பௌசர்

No comments: