Saturday, August 12, 2006

*சிறகெனக் கனக்கும் காலங்கள்


நானுமொருகாலத்தில் உயிர்த்திருந்தேனென்றால் எவரும் நம்புவார்களோ என்னமோ..?!

1.

என் தாயுமானவளுக்கு...

நெற்றிப்பொட்டில் முகிழ்த்தெழுந்து
வேர்கொண்டகன்று
நீண்டு
வளர்ந்து
கிளைவிரித்து உயர்ந்துயர்ந்து
தலை முழுதும் சுழன்றுபரவும்
வலி...
நீயில்லா வலி.

சிந்தனைகளின் அழுத்தலில்
கேள்விகளின் குடைதலில்
தலைக்குள் குருதி,
தறிகெட்டு தடைதகர்த்து குமுறிப்பாய
நரம்புகள் பின்னிப் பிணைந்து
இறுகித் தெறித்து
வெடித்துச் சிதறக்கூடும்.

நானும் சிதையக்கூடும்.

சீக்கிரம் வந்துவிடு.

.............

அடிக்கடி
நீ அருகிலிருப்பதாய் தோன்றுவதெல்லாம்
பொய்பொய்யென
பிரமைதானென
உணர்ந்துணர்ந்து உள்குறுகும்போது
கண்முன்னே மயிர்பிடுங்கும் வேதனையில்
மனசு மறுகுகின்றது.

சீக்கிரம் வந்துவிடு.

...........

நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்குருகி - உடல்நடுங்கி
நீயில்லா ஏக்கம் நிரம்பி
வழிய
நிற்கிறேன்.

சீக்கிரம் வந்துவிடு.

...........

ஒற்றைக்குயிலின் அழுகையின் நீட்சியில்
எழுகிறது என் சோகம்
பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்
வழிகிறது என் கண்ணீர்

தனிமை தனிமை தனிமை
தனிமை தலைவிரித்தாடுகிறது

சீக்கிரம் வந்துவிடு.

...........

விரக்தி மிகுந்த வெறுமையும்
வெறுமை நிறைந்த விரக்தியும்
விரவி நிற்கும் -
கையறு நிலையில்
மெய்யது தவிக்க
எற்றுண்டு கிடக்கிறேன்,
கணங்களின் கரையோரம்...

சீக்கிரம் வந்துவிடு.

..........

தாங்கவொண்ணாத் துயரமாயிருக்கிறது
உன் பிரிவு...

சீக்கிரம் வந்துவிடு.

சீக்கிரம் வந்துவிடு.
- தமிழினி


2.

போர்த்துண்டது கருமை, என்றென்றைக்குமாய்...

'..நான் உன்மீது வைத்திருப்பது அன்பில்லை, ஒருவிதமான வெறியென்றும் சொல்லலாம். நீ எனக்கு வேண்டும். வாழ்நாள் முழுவதுக்குமாக நீ எனக்கு வேண்டும். என்னை விட்டு விலகிச் செல்ல நினைத்தாயானால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன். ஆனால், கொலை செய்ய மாட்டேன். ஹி..ஹி..ஹீ..'

எமது இறுதிச் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? அதுவொரு ஜூலை மாதத்துப் பிற்பகல் பொழுதாகத்தானிருந்திருக்க வேண்டும். நாட்காட்டி 23 என குறித்துக் கொண்டிருந்ததாகவும் நினைவு. மறுநாள் நீ என்னை நீங்கி காததூரம் போகப்போவதை அறியாதவளாய் நான் மட்டும் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தேன், வழமையாகக் கலகலக்கும் நீயோ மௌனித்திருந்தாய்.

அன்றைக்கு வானம் எப்படியிருந்தது..?

சாம்பல்நிற ஒளிக்கீற்றொன்று
அன்றும் தென்பட்டிருக்கக் கூடுமோ..

வெண்பஞ்சு மேகமொன்று
தனதேயான விஷமத்தனங்களுடன்
அதனை எனது பார்வையிலிருந்து
மறைத்து விட்டிருக்குமோ..

சூரியன்
முகில்க்கூட்டங்களினிடை
மறைந்து வெளிவந்து
ஜாடைகாட்ட முற்பட்டிருந்திருக்குமோ..

ஏன் என் அடிமனம் எதனையும் உணரத் தவறிவிட்டிருந்தது..?

மரணங்கள்
சொல்லிக்கொண்டு
வருவதில்லை..,
பிரிவுகளும் கூடத்தான்.
உனது பிரிவும்
அப்படித்தான் நிகழ்ந்தது..,
அதனைத் தொடர்ந்த
எனது மரணமும்.

எல்லாம் தெரிந்திருந்தும் அடி பெண்ணே..,

நிர்த்தாட்சண்யமாய்
என்னுள் ஊடுருவித் துளைத்த
உன் விழிகளின் ஆழங்களில்..
எத்தனை நூற்றாண்டு காலத்துக்
கண்ணீர்த்துளிகளை
உயிரோடு சிதையேற்றியிருந்தாய்?

பாறையாய் இறுகிக்கிடந்த
இதயத்தில்..
எத்தனை கோடானுகோடி
மூதாதைகளின் துயரங்களைப்
பதுக்கியிருந்தாய்?

உள்ளத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் தொண்டைக்குழியை அடைய முன்னமே தற்கொலை செய்துவிட்டிருந்தன போலும். கருமை போர்த்தவந்நாளில்.., என்றென்றைக்குமான எமது பிரிவினைப்பற்றி நீ எதுவுமே பேசத்துணியவில்லை.

கத்திக் குளறியிருக்க மாட்டேன்..
அழுது புலம்பியிருக்க மாட்டேன்..
வேதனையில்,
விரக்தியில்
உன்னை சபித்துமிருக்க மாட்டேன்..

இன்னும் சில நிமிடங்கள்.. ஒரு சில நிமிடங்கள் உன்னோடு கழித்திருப்பேனடி என் கண்ணே.. ஏன் பேச மறுத்தாய்?

அந்தச் சில நிமிடங்களுக்குள் இத்தனைகாலம் சொல்லாமற் போன என் பிரியங்களையும், கேட்க நினைத்திருந்த மன்னிப்புக்களையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறி.. இறுதியாய் ஒருமுறை உன்னை ஆரத்தழுவி.. விடைகொடுத்திருப்பேன்.. ஏனடி சொல்லாமற் போனாய்?

கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, வருடிவிட்டு அவசர அவசரமாக உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில் பிரதிபலித்திருந்த ஏக்கத்தினை.. காலாகாலத்திற்குமான வேதனையை ஏன் என்னால் புரிந்துகொள்ள இயலாமற் போனது?

என் உள்ளுணர்வு ஏன் அந்தக்கணத்தில் மரத்துப் போனது?

உன்னை என்றென்றைக்குமாகப் பிரியப் போகிறேனென்று ஏன் எனக்கு தோன்றாமல் போனது?

ஏன்.. ஏன்.. ஏன்..???

தெருவோரத்தின் வளைவில் என் நிழலும் போய் மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாயா? அந்தக் கணத்தில் என்ன நினைத்துக்கொண்டாய்? அடி அவசரக்காரியே.. என்று என்னைக் கடிந்து கொண்டிருப்பாயா? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போவென மனதுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தாயா? இல்லையெனில், உனது தயக்கத்தினையும் துணிவின்மையையும் எண்ணியெண்ணி உன்னை நீயே நொந்துகொண்டிருந்தாயா?

ஜூலைகள் கறுத்துப் போனவைதான்; மறுப்பதற்கில்லை.


3.

உயர்கின்றன மதில்கள், என்னைக்கூட கேளாது...

'..உன் பேச்சில் மழலைத்தனமிருந்தது. அந்தவொரு குறும்புத்தனம் வீதியில் செல்லும்போது.., உனக்குள்ளே நீ பேசிக்கொள்வது, சிரிப்பதென்று. உனதந்தச் சிரிப்பில் எனது கவலைகளை மறந்திருக்கின்றேன். உன் வருகையை எதிர்பார்த்து எத்தனையோ நாள் என்வீட்டு வாசலில் கண்மூடாமல் காத்திருந்திருக்கிறேன். உன்னுடன் பழகும்போதெல்லாம் என்னுள்ளிருக்கும் பாரங்களத்தனையும் வெறும் தூசு போல் தெரியும்; உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்றும் தோன்றும்..'

காரிருள் மேகமாய்
சுற்றிலும் கவிந்துகொண்டு,
போகுமிடமெல்லாம்
என்னைப் பின்தொடர்கின்றது..,

பார்க்கும்,
கேட்கும்,
ஸ்பரிசிக்கும் அனைத்திலும்
படர்ந்து பரவி
எல்லைகளற்ற மதில்களாய்..
தடித்த திரையாய்
என்னை ஆக்கிரமித்தபடி எழுகின்றது..,

காற்றினுள் கலந்திருக்கும்
அவள் விட்டுச்சென்ற
களங்கமற்ற நேயத்தின் வாசம்.

நூலகத்திலிருந்து வீடு திரும்பும் எனது நீண்ட பயணத்தில் வழித்துணையாக வந்தது அவள் நினைவுகள்தான். கூடவே வெறுமையும், உயிர்கொல்லும் தனிமையும்.

தலை கனக்கத் தொடங்கியது.. இந்தவுடலை இனியும் சுமந்துகொண்டு அலைதல் சாத்தியமில்லையென மனம் எண்ணமிடத் தொடங்கிற்று.

அமைதியை விரும்புபவள்..,
நிச்சலனத்தை வேண்டுபவள்..,
இப்போதோ,
அவள் விட்டுப்போன
மௌனத்தை உடைத்தெறிய
செவிப்பறைகளைக் கிழித்தெறியும்
இரைச்சல்களை
நேசிக்கத் தொடங்குகிறேன்.

அடிமனத்து ஓலங்கள்
எல்லை கடக்குமொரு பொழுதில்
வீங்கிப் பெரிதாகி
என் மண்டை
வெடித்துப் பிளந்தால்தான்
ஆசுவாசமாக உணர்வேனாக்கும்.

மதில்கள் பொருட்படுத்துவதில்லை.., சிறையுண்ட ஆன்மாவின் விருப்பு வெறுப்புக்களை.


4.

கடந்து விட்டிருந்த காலம், கேவல்களைச் செவிமடுத்ததோ...

'..உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனால், எம்மிருவரது வீட்டிலும் அதனை அனுமதிக்கப் போவதில்லை. அவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகின்றது? அவர்கள் தங்களது சுயநலம் கருதித்தானே எம்மைப் பெற்றெடுத்ததும். உறவுகளென்பது பொய். ஒருநாளும் அவை உண்மையானதாக இருக்கமுடியாது. ஒருகாலத்தில் என்னைச் சுற்றியிருப்பவர்களைக் கேள்விகேட்டே என் கவலைகளைக் குறைப்பேன். அவர்களது குற்றவுணர்ச்சியைக் கூட்டுவேன்..'

மகத்தானவள் நீ...

எதிர்பார்ப்புகளற்ற அன்பைச்
சாத்தியமாக்கிப் போனவள் நீ...

அடையாளங்களைத் துறந்து,
சுயம் தொலைத்து
எல்லைகளற்ற நேசத்தில்
கரைந்துவிடப் பழக்கியவள் நீ...

என் ஆணவங்களை
அடியோடு சாய்த்தவள் நீ..
என் ஆன்மாவை
உயிரோடு சிதைத்தவள் நீ..

கட்டுக்கடங்காமல் அன்பை வாரி வழங்கத் தெரிந்திருந்தது உனக்கு. அனைத்தையும், அனைவரையும் உன் கட்டுக்குள் வைத்து ஆண்டுகொண்டிருக்கத் தெரிந்திருந்தது உனக்கு. நட்ட நடுக்காட்டில் தவிக்கவிட்டு தடயங்களேயில்லாமல் மறைந்துவிடும் நெஞ்சழுத்தமும் வாய்த்திருந்தது உனக்கு.

ஆனாலுமென்ன, உன்னைச் சுற்றியிருந்தவர்கள் எவருமே உன் தனித்துவங்களைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்தனர்.., என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நீ தந்த அன்பை அதே நிறைவுடனும், முழுமையுடனும் திருப்பித்தர ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை. உனதன்பை உள்ளது உள்ளபடி உள்வாங்கவும் நான் கொடுத்து வைத்திருக்கவில்லை.

அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு
நீ புறப்பட்ட போது..,
இனியும்,
என் வாழ்வில் நீயில்லையென்பது
அடிமனதில் உறைத்த போது..,

காலம் கடந்துவிட்டிருந்தது
என் பெண்ணே..
உன் அருமை புரியத் தொடங்குகையில்
காலம் யுக யுகாந்தரங்களைக் கடந்துவிட்டிருந்தது.

அண்டசராசரங்களும் அதிர பெருங்குரலெடுத்து கதறியழத் தோன்றுகின்றது. கையில் கிடைக்கும் அனைத்தையும் வீசியெறிந்து, உடைத்து நொறுக்கி.. நானும் களைத்து விழும்வரை.. தெறித்துச் சிதறும்வரை ருத்ர தாண்டவமாட வேண்டும் போலிருக்கிறது. எழுதப்படாமலேயே போய்விட்ட எத்தனையோ மடல்கள் நினைவில் விரிந்து என் உலகை நிறைக்கின்றன. வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்குண்டிருந்து என்னை மூச்சுத்திணறச் செய்கின்றன.

மறுபடியொருமுறை உன்னைக் காண்பேனா, என் கண்ணே?


*(நன்றி:- குட்டிரேவதி)

8 comments:

Anonymous said...

உங்கள் நண்பியைப்பற்றி எழுதியுள்ளீர்களா நிவேதா?

ஏன் அவருக்கு என்னாயிற்று?

நிவேதா/Yalini said...

Anonymous,

உங்கள் வினவலின் பின்னணி புரிந்தாலும்.., ஆம்.. தவிர்க்கமுடியாக் காரணங்களின் நிமித்தம் என்றென்றைக்குமாகப் பிரிந்துவிட்ட தோழியொருத்தியைப் பற்றியதே இப்பதிவு.

Arun Appadurai said...

உங்கள் எழுத்து கண்கலங்க வைக்கிறது நிவேதா. தங்கள் நண்பியினை தாங்கள் மீண்டும் சந்தித்திட என் பிரார்த்தனைகள்!

நிவேதா/Yalini said...

பிரார்த்தனைகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, அருண்!

Anonymous said...

Nivetha,
I am also have a friend like U. Dont think more. God know about True friendships and them Love. So he must will give a chance to meet Ur lovly friend. only Friedship is the true relationship in the world. so keep it. i like much Ur friendship.
SUHIR

Anonymous said...

hi my dear im always with uuuuuuuuuuu.......... dont worry...


thivya

நிவேதா/Yalini said...

நன்றி, சுகிர்! கணனி தந்துகொண்டிருக்கும் தொல்லைகளோடு எப்படியோ பதிலளிக்கத் தவறிவிட்டேன்.. மன்னித்துக் கொள்ளுங்கள்.. பிரிவின் வலி அதனை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் புரியுமென்பார்கள்.. ம்ம்ம்..

திவ்யா.., நன்றியடியம்மா.. எங்கிருந்தாலும் இதே புன்னகையோடிருந்தால் எனக்கது போதும்..

Anonymous said...

U got such a nice feeling about friendship... I hope u will have some more dayz as those with your friend next to U!!!