Wednesday, December 21, 2005

'உயிரோடு சிதைதலென்பது...' - என்னவளோடு ஒரு கணம்


இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதில்லை..
இப்படியும் இருக்கிறது..
இப்படியும் இருக்கலாம் என்பதை..,
கண்டதை..,
உணர்ந்ததை..,
பகிர்ந்துகொள்ள விழையும் ஒரு முயற்சி.

தனிப்பட்ட உணர்தல்கள்..
அவற்றினூடு எழுந்த விசனங்கள்..

சமூகம் என்ன செய்யும்..
அமைதியாய்.., ஆறுதலாய்
அனைத்தையும்
வேடிக்கை பார்த்திருப்பதைத் தவிர..?



அவள்:

அவனில் நான் கண்ட எது எனக்குப் பிடித்துப் போனது?
எது என்னை அவன்பால் ஈர்த்தது?
எது அவன்மீதான என் நேசத்தைத் தூண்டியது?
அவனது கபடமற்ற புன்னகையோ..,
நடையுடை பாவனையோ..,
வசீகரிக்கும் பேச்சோ..
எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால்...
என்னை இன்றளவும் அவனைவிட்டு நீங்காதவண்ணம் கட்டிப்போட்டது யார்?
இத்தனை காலம் கழிந்த பின்னரும்..,
எத்தனையோ எல்லாம் நடந்து முடிந்த பின்னரும்..
நான் இன்னமும் அவனை வெறுக்காமலிருப்பது ஏன்?
தாலியென்ற பெயரில் என் கழுத்தில் அவன் விலங்கிட்டதாலா..?
என் தனித்துவத்தைத் தன் அடையாளங்களுக்குள் புதைத்து விட்டதாலா..?

அப்போதெல்லாம் அவன் பல பெண்களின் ஹீரோவாகத்தான் வலம்வந்தான். அரசியல், இலக்கியம், முற்போக்குவாதம், பின்நவீனத்துவம், அது, இது, என்னவெல்லாமோ எழும் அவன் நாவிலிருந்து. பெண்களே வாய்பிளந்து வியக்கும் வண்ணம் பெண்ணியம் பேசத்தெரிந்த அவன் என்னை நேசிக்க ஆரம்பித்தபோது பெருமையாகத் தானிருந்தது.

எத்தனை பெண்களின் பொறாமைத் தீ கனலும் பார்வைகள் சுட்டெரித்திருக்கும் என்னை?
தீவிர பெண்ணியவாதிகளே இவன் ஆளுமையில் அசந்து போயிருந்தார்கள் அல்லவா?
இவனைப் போன்றவன்தான் வாழ்க்கைத் துணையாக வரவேண்டுமென்று நான் மட்டுமா கனவு கண்டிருந்தேன்?


நான்:

அவன் அப்படித்தான்.
அவன் மட்டுமல்ல..,
இன்னும் எத்தனையோ ஆண்களும்.

அவனைவிடத் தாழ்ந்தவளில்லை அவள்..
படிப்பிலும்..,
அறிவிலும்..,
தேடலிலும்...

ஆனால் என்னதான் பெண்ணியவாதியாயிருந்தாலும், என்னதான் திறமையுடையவளாயிருந்தாலும் அவளது இயல்பான அப்பாவித்தனம் அவனைப் போன்ற நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலையொன்றின் பிடியில் அவளை விழுத்திவிட்டது.

அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு பெண்.. பெண்ணுடல் அவ்வளவே. தனது தகுதிக்கேற்ற.., சிந்திக்கத் தெரிந்த ஒரு உடல் தன் வறட்டு கௌரவத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவுமென்று நினைத்தானோ என்னமோ.. அவள் வந்து விழுந்தாள்.

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்...
அவளது இலட்சியங்கள்..,
கனவுகள் எல்லாம்
முடக்கப்படப் போகின்றனவென்று தெரிந்தும்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்...
சிறிது சிறிதாக அவள் சிதையத் தொடங்கவும்,
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..
இந்தக் கணத்திற்காய்..,
இந்த இயலாமைக்காய்..
இறுதிவரை நான் என்னை மன்னிக்கப் போவதில்லையென உணர்ந்தும்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்...

அவள் பிடிவாதக்காரி...
நான் முயன்றிருந்தாலும் அவளைத் தடுக்க முடிந்திருக்காது என்னால்..
அவள் முடிவை மாற்றியிருக்க முடிந்திருக்காது என்னால்..
அவன்மீது அவள்கொண்ட நேசத்தை பொய்ப்பித்திருக்க முடிந்திருக்காது என்னால்..

இப்படித்தான்..
என்னவள் பாழுங்கிணற்றில் தானாகப் போய்விழுவதை வேடிக்கை பார்த்திருந்துவிட்டு..,
அனைவரையும் போல வாழ்த்தி ஆசிகூறிவிட்டு..
என் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கான நியாயப்படுத்தல்களையும் முன்வைக்க முயல்கிறேன்.


அவள்:

என் கனவுகளில் மட்டுமே உயிர்த்திருந்த என்னவனின் முழுமொத்தச் சாயலையும் அவனில் கண்டேன். அவனைவிடச் சிறந்த துணைவன் கிடைக்கவே மாட்டானென நம்பியிருந்தேன். எனக்குத் தேவைப்பட்டது:-

someone who listens to me..
someone who cares for me..
someone who understands me..

இப்போதுதான் எனக்கும் புரிகிறது..

அவன் ஒருபோதும் நான் சொல்பவற்றைக் காதுகொடுத்துக் கேட்டதில்லை.
ஏனெனில் அவனுக்குக் கேட்பதற்கு..,
அதைவிடவும் பேசுவதற்கு..
இன்னும் எவ்வளவோ விடயங்களிருந்தன.
என்னை..
என் குரல்களை..
என் ஓலங்களை..
செவிமடுக்க அவனுக்கு நேரமிருக்கவில்லை.
ஆனால் அவனது அத்தனை அலட்டல்களையும்,
அத்தனை அறுவைகளையும்,
அத்தனை பிரசங்கங்களையும்
நான் பொறுமையாய்..,
அமைதியாய்..
கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

அவன் ஒருபோதும் எனக்காக அக்கறைப்பட்டதில்லை.
ஏனெனில் அவன் அக்கறைப்பட வேண்டிய விடயங்கள்..
மிக முக்கியமான விடயங்கள்..
இன்னும் எத்தனையோ இருந்தன.
அரசியல்..,
இலக்கியம்..,
பெண்ணியம்..,
தலித்தியம்..,
இன்னும் என்னவெல்லாமோ.
அதனால் எனக்காக அக்கறைப்பட அவனுக்கு நேரமிருக்கவில்லை.
ஆனால் நானோ அவனது உடல்நலம், எழுத்து, உழைப்பு, நண்பர்கள்..
எல்லாவற்றின்மீதும் அக்கறை கொண்டிருந்தேன்..
கவலை கொண்டிருந்தேன்.
அவற்றைத்தவிர வேறெதையும் கணக்கெடுக்க எனக்கு நேரமிருந்ததில்லை.

அவன் ஒருபோதும் என்னைப் புரிந்துகொள்ள முயன்றதில்லை.
ஆனால் நான்,
அவனது ஒவ்வொரு அசைவையும் புரிந்துகொண்டு
அதன்படி நடக்கவேண்டுமென
எதிர்பார்க்க மட்டும் அவன் தயங்கவில்லை.
நோயில் கிடந்தால் தாதியாகவும்..,
பாலியல் தேவைகளை நிறைவேற்ற விபச்சாரியாகவும்..,
சமையல்காரியாகவும்..,
வேலைக்காரியாகவும்..
இப்படி நீண்டுகொண்டே போனது
அவனது எதிர்பார்ப்புகளின் பட்டியல்.
ஆனால்,
எத்தனைநாள்..
சுகவீனமுற்றுப் படுக்கையில் கிடந்தபோது
தலைகோதும் அவன் விரல்களின் ஸ்பரிசத்திற்காய் ஏங்கியிருப்பேன்..?
எத்தனை தடவை..
உடலும், மனமும் சோர்ந்திருக்க
அவன் தோளில் தலைசாய்க்கத் துடித்திருப்பேன்..?

அவன் புரிந்துகொண்டதில்லை..
புரிந்துகொள்ள முயற்சித்ததுமில்லை.
ஏனெனில் அவன் ஒரு அறிவுஜீவி...
முற்போக்குவாதி...
இலக்கியவாதி...
சீர்திருத்தவாதி...
etc.. etc..
அவன் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் எவ்வளவோ இருந்தன.


நான்:

அவள் ஒரு அறிவுஜீவியின் உத்தம பத்தினி.
அவள் விரும்புகிறாளோ, இல்லையோ..
அந்த அடையாளத்தை
அதற்கேயுரிய வரையறைகளோடு..,
அதற்கேயுரிய கடப்பாடுகளோடு..,
அதற்கேயுரிய பலவீனங்களோடு..
அவள் ஏற்றுத்தானாக வேண்டும்.

இதே தாதியாகவும்.., இதே சமையல்காரியாகவும்.., இதே வேலைக்காரியாகவும் அவள் வேறெங்காவது பணியாற்றியிருந்தால் அவளது உழைப்பு மூலதனமாகியிருக்கும். இந்த ஆண்மேலாதிக்கக் குடும்பக் கட்டமைப்புக்குள் அவளது உழைப்பு 'கடமை' என்ற பெயரில் பெறுமதியிழந்துவிடுகிறது. சமூகத்தில் ஒரு ஆணின் உழைப்புக்கு வழங்கப்படும் அதே மதிப்பும், மரியாதையும் 'இல்லத்தரசிகள்' ஆகிய பெண்களினதுக்கும் வழங்கப்படாத வரையில் சமத்துவமென்பதும், சரிநிகர் சமானமென்பதும் எங்ஙனம் சாத்தியம்?

இல்லத்தரசிகளை விடுவோம். அவள்போல வேலைக்குப்போகும் பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? முற்போக்குவாதியொருவரின் படித்த மனைவி வீட்டிற்குள் சிறைப்பட்டுக் கிடப்பது அவரது கௌரவத்திற்கு இழுக்கல்லவா? "எனது துணைவி வேலைக்குப் போகிறாள்.. இதோபார் அவளது உரிமைகளை நான் அங்கீகரித்து விட்டேன்; அவளுக்கான சுதந்திரத்தை.. விடுதலையை வழங்கிவிட்டேன்" என பறைசாற்றித் திரியும் பாசாங்குக்காரர்களில் ஒருவன்தான் அவனும். வேலைக்குப் போவதென்பது சுதந்திரத்தின் அடையாளம்.. வேலை செய்யும் பெண்களனைவரும் விடுதலையடைந்தவர்களென்பது அவன் நினைப்பு.

அவன் மட்டுமல்ல.., இன்னும் பலரதும்..

ஒரு சராசரி வேலையா எம் விமோசனத்தைத் தீர்மானிக்கப் போகிறது?
இதையடைவதற்கா இத்தனை காலமாய்ப் போராடிக் கொண்டிருந்தோம்?
இதுதானா நாம் கேட்கும் விடுதலை?


அவள்:

இல்லாமலிருக்கலாம்.. அதற்காக 'நான் உனக்கு சமைத்துப் போடுகிறேன்.. உன் உடைகளைத் துவைத்துப் போடுகிறேன்.. உன் காமத்தைத் தணிக்க வேசியாகிறேன்.. அதற்கான பெறுமதியை.., காசைத் தா' என்றா கேட்கமுடியும்?

கேவலமானவள்தான் நானும்..
ஒரு விபச்சாரியை விட..
வேலைக்காரியை விட..
அடிமையை விட..

என் உழைப்பிற்கான பலாபலனை எதிர்பார்க்கக்கூட எனக்கு உரிமையில்லை. ஏனெனில் அது என் கடமை.. அப்படிப்பட்ட கற்பிதங்களோடுதான் வளர்க்கப்பட்டேன். அவனது கடமை... சம்பாதிப்பது. அதில் நானும் பங்குகொள்கிறேனல்லவா.. ஏன், என் கடமைகளில் பங்குகொள்ள அவனால் முடியாமல் போனது..? இரட்டைப் பொறுப்பைச் சுமக்கும் என் சிரமம்.. என் சுமை.. ஏன் அவனுக்குப் புரியாமல் போனது..?

அவன் பார்வையில் எனக்கு
முகம் இல்லை...
இதயம் இல்லை...
ஆன்மாவும் இல்லை...
- ###

ஆனால் அன்று அவன் எனக்காக எழுதிய கவிதைகளை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இன்றில்லையெனினும் எப்போதோ ஒருநாள் அவனால் நேசிக்கப்பட்டிருக்கிறேன் என்பதற்கான அடையாளமாய்.. என்றாவது மறுபடியும் என்னை நேசிக்கத் தொடங்குவான் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காய்..


நான்:

இயலாமை தந்த சலிப்பு..

சிறைக்குள்ளிருந்தபடியே, 'இங்கே வேளை தவறாமல் உணவு கிடைக்கிறது.. உடை கிடைக்கிறது.. வசதியாய் இருக்க இடமும் இருக்கிறது.. வேறென்ன வேண்டும்.. ஏன் விடுதலையடைய வேண்டும்..' எனக் கேட்பவர்களுக்கு மத்தியில் சிறைக்குளல்லவா இருக்கிறேனென்ற பிரக்ஞை உயிர்த்தெழுந்ததால் துடிப்பவள் அவள்.

உண்ண உணவில்லாமல் போனாலும்.., உடுக்கத் துணியில்லாமல் போனாலும்.., இருக்க இடமில்லாமல் போனாலும் சுதந்திரமாய் வாழவே விரும்பும் எம்மவர்களின் ஓலங்கள் கேட்கிறதா உங்களுக்கும்?

நீங்கள் கவிதை எழுதுங்கள்...
வேண்டாமென்று சொல்லவில்லை.

உங்கள் உணர்வுகளைக் கிளறிவிட்ட
அவள் உடல் அவயவங்களைப்பற்றி எழுதுங்கள்..
அவை முதிர்கோங்கைப் போலவும்,
மூங்கிலைப் போலவும்,
பட்டுத் தலையணை போலவும் இருந்ததாக எழுதுங்கள்..
அவள் உங்கள் கனவுகளைக் கவர்ந்த
பாதகியென்று எழுதுங்கள்..
அவளது நினைவுகள் உங்களை
நிதமும் தொந்தரவு செய்தவாற்றை எழுதுங்கள்..
ஆனால்,
அவளை நேசிக்கிறேன் என்று மட்டும் எழுதிவிடாதீர்கள்..
அவளுக்காக எதையும் செய்வேன் என்று மட்டும் எழுதிவிடாதீர்கள்..
என்றாவதொருநாள்..,
சில நிமிடங்கள்கூட அவளுக்காக ஒதுக்க முடியாது போகின்றபோது
உங்கள் எழுத்துக்களே
உங்களைப் பரிகசிக்கக்கூடும்..,
எள்ளிநகையாடக்கூடும்..

அவளுக்காய் பரிதாபப்படுகிறேன்..

பாலியல் பண்டமயமாக்கலையும், பெண்ணுடம்பு ஆண்களின் சொத்தாக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்தவன் அவனென்பதை மறந்துவிடத்தான் முயன்று கொண்டிருக்கிறாள்.

தெருக்கோடியில், கையில் நீண்ட தடியுடன் அமர்ந்திருக்கும் மனநிலை பிறழ்வுற்ற அந்தப் பிச்சைக்காரிகூட அவளைவிட விடுதலையடைந்தவள்தான். தனது எல்லைகளைமீறும் எந்தவொரு மனிதனையும் கடைந்தெடுத்த கேவலமான சொற்களால் வசைபாடவும், கற்களையும் தடியையும் எறிந்து தாக்கவும் முடிகிறது அவளால். அவளை நெருங்கவும் தயங்குகிறார்கள் இந்த ஆண்கள்.

ஆனால் என்னவளோ அநேகமாக ஒவ்வொரு இரவும் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். அவள் சம்மதத்தைப் பற்றிக் கவலைப்படாமலேயே அவளுடல் மேயும் விரல்களைத் தடுக்கும் உரிமைகூட அவளுக்கில்லை. அவள் விருப்பம்... அவள் அனுமதி... அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை. அவளுடம்பு அவனது சொத்து. தனது வெளிக்குள் அத்துமீறி நுழைபவனைத் தண்டிக்கும் அந்தப் பிச்சைக்காரப் பெண்ணின் வீரியம்கூட அவளுக்கில்லை.

ஏனெனில்..,
அந்தப் பெண் ஓர் மனநிலை பிறழ்வுற்ற,
ஆதரவற்ற பிச்சைக்காரி.
இவளோ..
சமூகத்தில் உயர் அந்தஸ்திலுள்ள
ஓர் அறிவுஜீவியின்
பத்தினி...


அவள்:

'தாலி கட்டிய போதினிற் பெரிதுவக்கும் தன் துணைவனைச் சான்றோன் எனக்கேட்ட மனைவி'... இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன்.

தனக்குச் சேவைசெய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்.. அப்படித்தான் சொன்னான் ஒருநாள்.

சில்லம் பல்லமாகச் சிதறுண்டு போனது இதயம்..
விண்ணென்று அடிவயிற்றிலிருந்து கிளம்பி,
மனசெல்லாம் பரவி,
தலைக்குள் ஊசியாய்க் குத்தியது வேதனை..
அவன் அகங்காரம் தந்த வேதனை..


நான்:

முற்போக்குவாதிகள்... என் வெறுப்புக்களை மிகைப்படுத்தும் புண்ணிய புத்திரர்கள்...

ஒரு சராசரி குடிகாரக் கணவனைவிட பெண்விடுதலை பற்றிக் கதையளக்கும் ஆணாதிக்க முதலைகள், முற்போக்குவாத முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு பெண்ணினத்திற்குச் செய்யும் அநியாயங்கள் அநேகம்.

உலகின் இரட்சகர்கள் தாங்கள்தானென்ற நினைப்பு அவர்களுக்கு..

கூடவேயிருந்து ஒத்தூத ஒரு கும்பல் கிடைத்துவிட்டால் காணும்.. அறியாப்பதர்கள் சில தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடினால் போதும்..

இவர்களை மிஞ்ச யாருமேயில்லைதான்..
தன்னகங்காரத்தில்..,
தற்பெருமை பேசுவதில்..,
தன்னைத் தவிர்ந்தோரை முட்டாள்களாகக் கருதுவதில்...


அவள்:

நான் வாழ்ந்தேன்..,
வாழ்நாளெல்லாம் நானாக..
இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்..
இன்னமும் வாழ்கிறேன்.
- ###

ஆனாலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்.., இன்னமும் நான் அவனை நேசிக்கிறேன்.

பாதையைக் கடக்க
இருவருமாய் அடியெடுத்து வைத்த நாளொன்றில்,
எங்கோ தொலைவில்
வேகமாய்வந்த வாகனத்தைக்கண்டு பதறி..
என் கரம் பற்றியிழுத்தானே..

அந்தக் கணத்திற்காய் அவனை நேசிக்கிறேன்.

முழங்கை எலும்பு விலகி
வேதனையில் நான் துடித்த போது
அவன் விழிகளில் ஈரம் துளிர்த்ததே..

அந்தக் கண்ணீருக்காய் அவனை நேசிக்கிறேன்.

இன்னமும்..., இனியும்..

நான்:

என்னத்தைச் சொல்ல..

நான் மௌனித்துப் போனேன்..



### - நினைவில் நின்ற பெண்கவிஞரொருவரின் வரிகள்.. பெயர் ஞாபகமில்லை.

8 comments:

ஒரு பொடிச்சி said...

வித்தியாசமா இருக்கு; கேள்விகள் விசனங்களைத் தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
-
முதல் ### சங்கரியோடது: ((முழுக் கவிதை - வன்னியனின் தளத்தில்)
மற்ற ### சிவரமணியோடது..

அருள் குமார் said...

படித்துக்கொண்டிருக்கும்போதே பல முகங்களை நினைவில் காட்டிப்போகிறது இந்தப்பதிவு.

//ஏனெனில்..,
அந்தப் பெண் ஓர் மனநிலை பிறழ்வுற்ற,
ஆதரவற்ற பிச்சைக்காரி.
இவளோ..
சமூகத்தில் உயர் அந்தஸ்திலுள்ள
ஓர் அறிவுஜீவியின்
பத்தினி...//

எவ்வளவு பெண்கள், தங்கள் சுதந்திரத்தை இழந்திருப்பதுகூட தெரியாமல், அந்த அடிமைத்தனத்தையே கொளரவம் என்று நினத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் என் தாயும்(மங்கையர்க்கரசி) விதிவிலக்கில்லை!

நிவேதா, அந்தக் கவிஞரின் பிற படைப்புகள் இருந்தாலும் பதிவிடுங்கள்.

நிவேதா/Yalini said...

பொடிச்சி, உண்மை, அருள்குமார் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

பொடிச்சி, எப்போதோ வாசித்த வரிகள் அவை. வாசித்தவுடன் நினைவில் நிலைத்துவிட்டதோடு எழுதுகையில் திடீரென்று வெளிக்கிளம்பியும் விட்டன. கவிஞர்களின் பெயரைக் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி.

அருள்குமார், தேடிப்பார்த்து பதிவிலிடுகிறேன்.

நிவேதா/Yalini said...

பொடிச்சி, உண்மை, அருள்குமார் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

பொடிச்சி, எப்போதோ வாசித்த வரிகள் அவை. வாசித்தவுடன் நினைவில் நிலைத்துவிட்டதோடு எழுதுகையில் திடீரென்று வெளிக்கிளம்பியும் விட்டன. கவிஞர்களின் பெயரைக் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி.

அருள்குமார், தேடிப்பார்த்து பதிவிலிடுகிறேன்.

தமிழ்நதி said...

நிவேதா!யதார்த்தத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள். உங்களோடு பேசிக்கொண்டிருந்ததைப் போலிருந்தது. நாம் விரைவில் சந்திக்கவிருக்கிறோம் :) பரீட்சை முடிந்துவிட்டதை எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றனவா?

நிவேதா/Yalini said...

நன்றி தமிழ்நதி!

ஆமாம், பரீட்சைகள் முடிந்து இப்போது விடுமுறையிலிருக்கிறேன்.. இனி ஆகஸ்ட் மாதம் அடுத்த பரீட்சைகள் வரும்வரை சற்று ஓய்வெடுக்கலாம்..:-)

ஆனால், இவை எப்போதோ எழுதியவை.. இன்றைக்கு ஒரு வருடத்துக்கும் முன்பு.. தற்போது ஏதோ குளறுபடியில் மறுபடியும் முகப்புக்கு வந்து நிற்கின்றன.. ஏனென்று தெரியவில்லை.. இந்த வலைப்பதிவு சமாச்சாரங்கள் ஒருவித மர்மம் வாய்ந்தவையாகவே இருக்கின்றன..:-(

சந்திக்கவிருக்கிறோமா.. நல்ல சேதிதான்.. ஆனால், போன தடவை போல ஒருதடவை முகங்காட்டிவிட்டு ஓடிவிடமாட்டேனென்று ப்ரொமிஸ் பண்ணுங்கோ.. இந்தத் தடவை வீட்டுக்கு வரத்தான் வேணும் கட்டாயம்.. ஆனால், நீங்கள் வருவதாயிருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்னரே என் அறையை அடுக்கத் தொடங்க வேண்டும்.. இல்லாட்டில், உங்களுக்கு அடியெடுத்து வைக்க இடமில்லாமல் புத்தங்களும், பத்திரிகைகளும் இறைந்தெல்லோ கிடக்கும்..

அக்கா சும்மாவே மிரட்டிக் கொண்டிருக்கிறா.. நிவேதாவின் மறுபக்கமென்டு ஒரு வலைப்பதிவு தொடங்கி உன் அறையை படமெடுத்துப் போடுவனென்டு...:-(

சினேகிதி said...

enaku unga blog template pidichuruku enga eduthenga endu sola mudiyuma?

நிவேதா/Yalini said...

சிநேகிதி,

எனக்கும் இது பிடித்தமானதுதான்.. அந்தச் சிறுமியை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், எனது குழந்தைப் பராயம் நினைவுக்கு வந்து மனது இலேசாகிவிடும்.. தவிரவும், நானும் அதிகம் நித்திரை கொள்பவள்தான்.. நேரகாலமில்லாமல்.. மிகப்பிடித்த பொழுதுபோக்கு அது..:-)

வலைப்பதிவுக்குக் கீழே ஒரு முகவரி இருக்கிறதில்லையா.. அங்கே போய்ப் பார்த்தால் கிடைக்குமென்று நினைக்கிறேன்..