Monday, December 31, 2007

அரியத்திலுருளும் உணர்வுகள்

பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்
வலியெடுத்துக் கதறுமோர்
குழந்தையின் குரலில்
செய்தவைக்காகவும்
செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்
கதைத்தவைக்காகவும்
சமயங்களில்

கதைக்க மறுத்ததற்காகவும்
சுற்றியிருக்கும் அனைவருக்கும்
வெறுப்பினையே பரிசளித்தமைக்காக
பிறர் முதுகில் சுமையிறக்கி
ஆறுதலாக இளைப்பாறியமைக்காக
புன்னகைகளைக் கிழித்தெறிந்து
கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக
இன்னமும் எனதன்பே,
விரல்கள்
நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
வெளிறச் செய்தமைக்காக.