Showing posts with label நாட்குறிப்பு. Show all posts
Showing posts with label நாட்குறிப்பு. Show all posts

Tuesday, July 24, 2007

முன்பனிக்காலத்துப் பிரியங்கள்

செஞ்சொண்டுக் காகமொன்றன்
நிலம் பதியா நிழல்போல
அலைவுண்டபடியிருக்கும்,
ஒரேயொரு நினைவு மட்டும் எனக்குள்..
அழித்துவிட முடியாததும் நித்தியமானதுமாய்..
சிவனொளிபாதத்தின் உச்சியில் நின்றபடி
சூரியோதயத்தின் முதல் கிரணத்தின்
ஸ்பரிசத்தை ரசிக்கும் பரவசத்துடனும்..,
விளிம்பில் நின்றுகொண்டு
ஆழ்கிணற்றினுள் எட்டிப்பார்ப்பதான
கலவரம் நிறைந்த ஆர்வத்துடனும்..


இந்தக்கணத்தில் உலகின் எங்காவதோர் மூலையில் கணனிக்கு முன் அமர்ந்திருந்து நீங்கள் இதனை வாசித்துக் கொண்டிருக்கக் கூடும்.., கையில் தேநீர்க் கோப்பையுடனோ.. நொறுக்குத் தீனியுடனோ. மிகச் சில காலம் மட்டுமேயான இவ்வுலகத்து வாழ்தலில் ஒவ்வொரு கணமும், கணத்தின் கணமும் அளப்பரிய பெறுமதி வாய்ந்தவை. விரல் சொடுக்குமொரு நொடிப்பொழுதில் என்னவும் நடந்துவிடலாம்.. அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு துள்ளிநடந்த சிறுவன், கண்மூடித் திறப்பதற்குள் வாகனமொன்றில் சிக்கி நடுத்தெருவில் வீழ்ந்து கிடக்கலாம்.. புகழ்பெற்ற ஓட்ட வீராங்கனையொருத்தி ஒரு செக்கன் வித்தியாசத்தில் தோற்றுப் போகலாம்.. தற்செயலாக வெளிப்பட்ட ஒற்றை வார்த்தையின் காரணமாக நெடுங்கால உறவுகளும் முறிந்திடலாம்..

அந்தக்கணத்தை.., கடந்துபோன துர்ப்பாக்கியமான அந்தப் பொழுதை மறுபடியொருமுறை திருப்பித் தரும்படி, காலச்சக்கரத்தை ஒரேயொரு கணம் பின்னோக்கிச் சுழற்றும்படி நம்முள் எத்தனைபேர், எத்தனை தடவை கடவுளிடம் இறைஞ்சியிருப்போம்..

ஓ.எல் லில் வணிகக்கல்வி கற்பித்த ஆசிரியை கணவருடனான மனத்தாங்கலில் ஒன்பது மாதக் கர்ப்பிணியாய் தற்கொலை செய்துகொண்ட போது, கணவர் தனது மனைவிக்காக ஒரு சில நிமிடங்கள் செலவளித்திருந்தால் அதைத் தடுத்திருந்திருக்கலாமென இப்போதும் தோன்றுவதுண்டு. சுகமில்லாமல் படுத்திருக்கும் அம்மாவுக்கு, 'என்னம்மா பண்ணுது' என்ற எமது ஒற்றை வார்த்தை வேதனைகளனைத்தையும் போக்கியிருந்திருக்கும். பாராட்டுவது, நன்றிகூறுவது, மன்னிப்புக் கேட்பதென இதுபோன்ற இன்னமும் சிறு சிறு விஷயங்களில்தான் வாழ்தலின் அழகு தங்கியிருக்கிறது போலும். அவற்றை விடுத்து, தத்தமது ஈகோவைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் வாழ்வினதும், அதனை உயிர்ப்புள்ளதாக்கும் உறவுகளினதும் மகத்துவங்களைப் புரிந்துவிடத் தவறிக்கொண்டிருக்கிறோம்..

.........

எமது சந்திப்பு மிக மிகத் தற்செயலானதுதான். எழுதவென முடிவெடுத்த அந்தக் கணத்தினைத் தவறவிட்டிருந்திருப்பேனாயின் என்றென்றைக்குமாய் அவனையும் தொலைத்திருந்திருப்பேன். உலகின் ஒரு கோடியில் அவனும், மறுகோடியில் நானுமென எமது அன்றாட அலைக்கழிதல்களுக்குள் மூழ்கியிருந்திருப்போம், எதுவிதக் கரிசனைகளுமற்று. வாழ்வென்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம்தான்.. எப்படி அது மனிதர்களை இணைத்தும், பிரித்தும் வேடிக்கை பார்க்கிறது.. எந்தவொரு உயிராலும் பிறனிருக்கத் தான் தனித்து வாழ்தல் இயலாததாயிருக்க.., அரியமொன்றினுள் புளியங்கொட்டைகளையும், குண்டுமணிகளையும் போட்டு உருட்டி உருட்டி விதவிதமான வடிவங்கள் தோன்றுவதையும், சிறு சலனத்தின்போதும் மறைந்து இன்னொன்று தோன்றுவதையும் வாய்பிளந்து ரசிப்பது போல, வாழ்வு மனிதர்களை இணைப்பதையும், இமைப்பொழுதில் காததூரம் விலத்தி விடுவதையும் அதே லயத்துடன் ரசிக்க முடியாததாயிருப்பதும் ஏன் ?

கடல் கடந்த வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியில் ஈழத்து நினைவுகளுடனும், கடந்தகாலத்தின் காயங்களுடனும் எஞ்சியிருக்கும் உயிர்ப்புடன் மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க நிபந்தனைகள் தேவைப்படுவதில்லை அவனுக்கு.. மனிதர்கள் விசித்திரமானவர்கள். எவருடனும் நெருங்கிப் பழக முன்னரே அவரைப்பற்றிய விம்பங்களை மனதில் வளர்த்துக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். பின்னர் பின்னரான பொழுதுகளில் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் வாய்த்தாலும், அந்த விம்பம் இடையிடையே குறுக்கிட்டு தொந்தரவுபடுத்தும். சமயங்களில் 'விம்பத்துடன் மட்டுமே வாழ்தல் மேல்' எனவும் தோன்றும். இறுதியில், விம்பமும் யதார்த்தமும் முரண்படுகிற புள்ளியில் விரிசல் வெடித்து வாக்குவாதம் முற்றி, நூலறுந்த பட்டமென உறவும் காற்றிலலையத் தொடங்கிவிடும். பிறகென்ன.., கண், காது, மூக்கு முளைத்த கதைகளும் அவலரைத்தல்களும் 'ஏனடா, இந்த மனுச சகவாசம்' என்ற நிலைக்கு இட்டுக்கொண்டுவந்துவிடும். அதையும் தாண்டி, மனிதர்களை அவரவரது இயல்புகளுடன் - அவனைப்போல எவராலும் - நேசிக்க முடிதல் அதிசயம்தான்.

நான் சொல்வது மட்டும்தான் சரி.. உனக்கென்ன தெரியுமென்ற தோரணையுடன் 'கொம்பு முளைத்த ஆம்பிளை' களுக்கு மத்தியில், என்னையும் சக மனுஷியாய் மதித்து அவன் கதைக்க முற்பட்டதுதான் பெரும் ஆறுதலாகவிருந்தது. வேறெவரும் என்னைக் கதைக்க வைக்க இத்தனை முயன்றதாய் நினைவில்லை. ஒவ்வொரு சின்னச் சின்ன விடயத்திலும் நான் என்ன நினைக்கிறேன், என் கருத்தென்ன.. பார்வையென்னவென்பது குறித்து இந்தளவு எவரும் அக்கறை கொண்டதாயும் நினைவில்லை. எனக்குள்ளே இறுகிக்கிடந்த சுயத்தை, மெல்ல மெல்ல மௌனத்தின் கண்ணாடித் திரைகளை உடைத்து நொறுக்கி வெளிக்கொணர முடிந்தது அவனுக்கு. இத்தனை 'வளவளா' க்காரியா நான், என ஒருகட்டத்தில் என்னாலேயே நம்பமுடியாமல் போனது. நீண்டகாலமாக எவருடனும் மனந்திறந்து பேசாததையெல்லாம் சேர்த்துவைத்து அவனுடன் பேசுகிறேனாக்குமென நினைத்துக் கொள்வதுதான்.

..........

மரணம் கருநிழலென உன்னைப் பின் தொடர்கிறதென்கிறாய்.. பிறந்த நாளிலிருந்து, செம்மண் ஒழுங்கைகளெங்கும் பூனையாய் மெல்ல அடியெடுத்து அது உன்னைத் துரத்திக் கொண்டிருக்க, பிரக்ஞையற்றவளாய் இங்கேயமர்ந்து எதுவும் எழுதிக்கொண்டிருப்பதும் அபத்தமெனத் தோன்றுகிறது.

நீயின்றி பூரணமடையப் போவதில்லை
எனது எந்த இருப்பும்
எல்லாப் பொழுதுகளிலும்
உனக்காகவே உன்னோடே
காலங்களின் விறைத்த கணங்களினூடு
நானும் உயிர்த்திருப்பேன்
குட்டி அலிஸாய்
உன் மனக்காடுகளில் துள்ளியோட
போதாது இப்பிறவி ஒருசிறிதும்...

(தொலைதூரத் தோழனுக்கு வாழ்த்துக்களுடன்..)

Monday, June 04, 2007

நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல்

உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில் மனது அலைபாய்வதைத் தடுத்து மனதுக்குப் பிடித்த விடயங்களையே நினைப்பதென்ற தீர்மானத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.

மனதுக்குப் பிடித்தது...? வேறென்னவாக இருக்கமுடியும் உன் நினைவுகளைத்தவிர. இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது; என் அரைகுறை அறிதல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நம்பிக்கையீனங்களையும்.., எனக்கான கொள்கைகளை வகுப்பதில் தாக்கம் செலுத்திய நிர்ப்பந்தங்களையும்.., எனது நம்பிக்கைகள் எங்கே தொலைந்து போயினவென்பதையும்.. உன்னுடன் பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது மனம். உனது நம்பிக்கைகளை நோக்குமிடத்தும்.., உன் அப்பாவைப்பற்றி நீ கூறியவற்றைக் கேட்டவிடத்தும் என் நிலைப்பாடுகளும் என்றேனுமொருகால் இப்படித் தடம்புரளுமாவென்ற கலக்கம்... அல்லது அப்படியேதும் நிகழ்ந்தால் இன்னும் நிம்மதியாய் உணர்வேனோவென்ற நப்பாசை... என்னவெல்லாமோ தோன்றுகின்றது.

நானும் ஒருகாலத்தில் இத்தகைய நம்பிக்கைகளோடு வாழ்ந்தவள்தான். முருகன்... சைவசமயம் கற்றுத்தந்த கடவுளரில் என்னை மிகவும் கவர்ந்தவன். இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு அவனையொத்த வயதுகளில் நானுமிருந்தபடியாலோ என்னமோ... ஒரு தோழனாய் என் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அவனோடு. கார்த்திகேயன்... அவனது பெயர்களில் மிகப் பிடித்தது.. நெஞ்சுகொள்ளாப் பிரியத்துடன் 'கார்த்தி' என்றே அவனை விளித்திருக்கின்றேன் (இந்தத் தாக்கத்தில்தான் என் நாட்குறிப்பிற்கும் கார்த்தி என்றே பெயரிட்டு.. இன்றுவரை அப்படித்தான்.. கார்த்தியோடு உரையாடுவதாய்த்தான் நாட்குறிப்பு எழுதிவருகிறேன்). மனம் கனத்துப் போகும் போதெல்லாம் அவனது படமொன்றினை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் அவனுடன் உரையாடியிருக்கிறேன். ஒருபோதும் 'பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.. அது வேண்டும்.. இது வேண்டும்..' என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை அவனிடம். இது தந்தால்.. அது தருவேனென என் அன்பினை/பக்தியை ஒருபோதும் வியாபாரமாக்கியதுமில்லை. நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.

ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?

வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மட்டுமேன் அவர்களை மதிக்க வேண்டும்..

மார்க்ஸியம் பற்றிய எனது அறிவு மிக மிகச் சொற்பமானதுதானென்றாலும், அந்தச் சொற்பத்திற்குள்ளும் ஆயிரத்தெட்டு முரண்பாடுகளை என்னால் அடையாளங்கண்டுகொள்ள முடிந்ததாலும்... - கம்யூனிஸமும் ஆணாதிக்கவழிச் சிந்தனையின் மற்றுமொரு வடிவமே.. என்னதான் சமத்துவம்பற்றி வலியுறுத்திக் கூறினாலும் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கமுறைமைச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ, பாலினச் சமத்துவம் பற்றியோ அது அதிக கரிசனை காட்டவில்லை - இவர்களது மற்றுமொரு உழுத்துப்போன தத்துவக் கழிவுகளுள் ஒன்றாகத்தான் மார்க்ஸியத்தையும் கருதினேனென்றபோதும்... மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுளென்று கூறிய மார்க்ஸ் என்ற தனிமனிதர் என்னை மிகவும் ஈர்த்ததும் இந்தக் காலங்களில்தான்.

மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை.

மனித இனத்தைக் கூறுபோடவும், ஒருசாராரை தீட்டு.. அந்த இந்தப் பணியாரங்களென்ற பெயரில் ஒதுக்கி வைக்கவும் வழிசெய்த மதங்களை/ கடவுளரை விடவும்... 'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..' என்றுகூறிய மார்க்ஸ் எனும் மாமனிதருக்கு... சக மனிதரை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத்தந்த அந்த அற்புதமான ஆளுமைக்குத் தலைவணங்குகின்றேன்.

நீ கூறியதுபோல மொஸ்கோவில் மழைபெய்கின்றதென்றவுடன் இங்கே குடைபிடிக்கின்ற அரைவேக்காடுகள், அவரையும் அவரது சிந்தனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகின்றது, எனக்கு. மார்க்ஸ் மதங்களை அவற்றின் இயல்பான பலவீனங்கள் காரணமாக மறுத்திருக்கலாம்.. ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு.

(தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு வாய்க்கவில்லைதான் என்றாலும்) மார்க்ஸின் கவிதைகளில் கைவசமிருந்தவை..:

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, சுணக்கமுமில்லை
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளிமிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண் குதிரையுமல்ல;
sophocles, சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்

....................................

கான்ட்டும் Fichte யும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்

.....................................

என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.

Friday, April 13, 2007

நிகழ்காலப் பயணியொருத்தியின் நாட்குறிப்பு

அல்லது அதனையொத்த ஏதோவொன்று..!

எனை மாற்றிக் கொண்டிருக்கிறாய்.... நீ.
எனக்கே தெரியாமல்...
கொஞ்சங் கொஞ்சமாய்.., மிக மிக இயல்பாய்.
பிடிக்கவில்லை எனக்கு.. ஒரு சிறிதும் பிடிக்கவில்லை..
நானாயிருந்த 'என்' னின் தோல்வியைக் காணச் சகிக்கவில்லை.
அச்சம் மேலிடுகிறது... மனது பதைபதைக்கிறது...
வேறெந்த சந்தர்ப்பத்திலும் இத்தனை பரிதாபமாய் என் சுயம் தோற்கடிக்கப்பட்டதில்லை.
உனைப்போல் வேறெவரும் என் உயிரள்ளிப் போனதுமில்லை.


அது ஒரு மழைநாள் தானில்லையா... இல்லை.., இல்லாமலிருந்திருக்க முடியாது. உன் வருகை எந்த முன்னறிவித்தல்களுமின்றி நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை. எனக்குப் புரியாமலிருந்திருக்கக்கூடும். எதுதான் புரிந்திருக்கிறது.. எனக்கு? 'உயிர்த்த நிலமும், துளிர்த்த மரங்களும் பறைசாற்றத் தவறியிருக்கலாம்'. ஆனால் வருணன் எனை வஞ்சித்துப்போக வாய்ப்பில்லை. அதுவொரு மழைநாளாகத்தானிருந்திருக்க வேண்டும். இடியும், மின்னலும் தமக்கேயான மொழியில் உன் வருகையைச் சொல்லிச் சென்றிருந்திருக்கக்கூடும். எனக்குத்தான் புரியவில்லை. சராசரி சலித்துப்போன மழைக்கால மாலைகளுள் ஒன்றாய் அன்றைய பொழுதையும் கருதி, நான் அலட்சியப்படுத்தியிருந்திருப்பேன்.

wasn't that a romantic rainy day... as these silly poets describe...? there have never been any romantic moments in my life... how could it be possible without mutual respect... or even understanding? but, things have never been the same since you came into my life.

அதுவொரு வெள்ளிக்கிழமை. எப்படி மறப்பேன்.., நான்? வெள்ளியன்றுதான் பிறந்ததாலோ என்னமோ, நல்லது நடக்குமானால் எல்லாமே வெள்ளிக்கிழமைதான் நடக்குமென்ற ஒரு அசட்டு நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்தது... சிறுபராயந்தொட்டே. வெள்ளியென்றால் ஏனோ அப்படிப் பிரியம் எனக்கு. நம்பிக்கைகள் அவ்வளவு இலகுவில் பொய்த்துப் போவதில்லையென்பதை உணர்வதற்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வந்து வாய்த்தது.., உன் வருகையினூடு. கடந்து போன அந்த நாட்களை நினைக்கையில் ஏனோவோர் பிரகாசம் நிறைந்த புன்னகை நிறைக்கிறது.., முகத்தையும் மனத்தையும்.

my days were so blue... and especially, the rainy days were so painful... i don't know why... but they usually make me cry. i was not quite sure of what's going to be or what am i going to do in the future. those days, love seemed like a myth... a very popular myth. i have never dreamt of a day which i would lose myself in someone else's arms. i was a self - reliant girl.. so as i am today.. who loves herself more than anything in the world. but yet, my arms were stretched in need of love, care and comfort. i was waiting with stretched arms for a long time... waiting for someone who loves me.. not for who i am.. but for what i am.

when i felt that someone is trying to hold my arms tightly... suddenly i realized that the time has come to love and to be loved.

இன்னமும் அழுகிப்போகாத ஆன்மாவொன்றின் அவலக் குரல்களைக் கேட்டிருக்கிறாயா நீ எப்போதாவது..? மழைக்கால மாலைகளில்.., மனம் எங்கோ அலைபாய்கையில்.., காளான்களாய் முளைக்கும் உன்னைப் பற்றியதான நினைவுகளுடன்... தவிர்க்கவே முடியாத உன் அருகாமைக்கான ஏக்கங்களுடன் ஆன்மாவொன்று பாடலிசைப்பது உன் செவியை வந்தடைந்திருக்கிறதா எப்போதாவது..?

விண்மீன்களைத் தொலைத்த நாளொன்றில் வெண்மதி அறியக்கூடும் என் வேதனைகளை.., நிலவும் கரைந்த அமாவாசையிரவில் வானம் உணரக்கூடும் என் வெறுமைகளை. அலறுகிறது அடிமனம்.., அருகில் நீயில்லாமல் போனதில்.

உணர்தல்களுக்கு அப்பாற்பட்ட அநாகத நாதங்களிலிருந்து பொறுக்கியெடுக்க முயல்கிறேன் உனக்கான ஸ்வரங்களை... என்னுள் கரைந்தொழுகி.., கசிந்துருகி.. கருக்கொண்டு உயிர்த்தெழுகிறது உனக்கான ஒரு இராகம்.

கரைசேரா அலைகளின் காணாமற்போன இரைச்சல்களிலிருந்தும்... மலைச்சாரல்களின்வழி காற்று விட்டுச்சென்ற தடயங்களிலிருந்தும்... வானத்தின் விளிம்புகளினூடு கசிந்து கொண்டேயிருக்கும் மர்ம அதிர்வுகளிலிருந்தும் கண்டெடுத்த அமானுஷ்யங்களின் மொழியில்... எனதேயெனதான மொழியில் பாடிக்கொண்டேயிருக்கிறது ஆன்மா.., உன்னைப் பற்றியதோர் பாடலை.

தலைமுறைகளைத் தொலைத்த இனக்குழுமங்களும்... அழிந்துபோன மாயாவும், மெசபத்தேமியாவும்... தைகிரீஸ் - யூப்ரடீஸ் தமக்குள் புதைத்துக்கொண்ட மானுடத்தின் மகோன்னதங்களும் எமக்காக எதையேனும் விட்டுச்சென்றிருக்கவும்கூடும்... எங்கோ வெகுதொலைவில் எம் வருகைக்காக அவை காத்திருக்கவும்கூடும்.., என்றாவதொருநாள் உயிர்ப்பிக்கப்படுவோமென்ற நம்பிக்கையுடன்.

பாரோ மன்னர்களின் அறியப்படாத அதிசயங்களினூடு... நீரோக்களின் அலட்சியங்களினூடு... இன்னமும் எஞ்சியிருக்கின்ற எமக்கான படிமங்களைத் தேடியெடுக்க முயல்கிறேன். வரலாற்று நாயகர்களின் வாள்முனைகளின் கூர்மையில் உனது வீரியத்தினை அடையாளங்காண முனைகிறேன்.

காடுகள் இரம்மியமாய்.. இருளாய் ஆழப்பரந்து, விரிந்தபடி காத்திருக்கின்றன.. வரையறைகளைக் கடப்போம் நாம்.. வளையங்களை அறுத்தெறிவோம்.. நீ நீயாக.. நான் நானாக.

Wednesday, January 10, 2007

தூவானமாய்ப் பொழியும் தாரகைகள்...


புரிகிறது நீ அருகிலில்லையென
என்றென்றைக்குமான கனவாய்
எதையெதையோ யாசித்து
யதார்த்தம் பெருநெருப்பாய்
பொசுக்கிடும்போது
எங்கிருந்தோ வந்துவிடுகின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
அனல் பறக்க

நீயற்ற கணங்களிலிருந்து
தப்பியோடி தப்பியோடி
காலமற்ற வெளிநோக்கி
தொடருமென் பயணம்
உன் வாசலில் வந்துமுடியக் கூடுமென
எதிர்பார்ப்பதும் வேடிக்கைதான்

எழுத்துக்கள்
வார்த்தைகள்
வாக்கியங்கள்
இடமாற்றி இடமாற்றி
அபத்தமான விளையாட்டொன்றின்
ஈவிரக்கமற்ற பிடியில்
தவிர்க்கவே முடியாது
சிக்குண்ட இருப்பு
புரிகிறதா உனக்கு..

வார்த்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து
கனவுகளை சுவைத்து
ரசித்தும்
சிலிர்த்தும்
பெருமூச்சுவிட்டும்
இன்னும் எத்தனை காலத்துக்கு...

விஷ அம்பு குத்தித் துளைத்த
ஆழ்நெஞ்சத்து ரணத்திலிருந்து
ரத்தமும் சீழுமாய்
வடியும் ஆன்மாவுக்கும்
புன்னகைக்கத் தெரியும்
வட்டமாய் வளையங்களாய்
கோளமாய் கோர்வைகளாய்
யாக்கை தேடியலையும்
பொழுதுகளிலும் தயங்காமல்

கதகதப்புத் தேடி
காற்றில் அலைவுறும் கை
வெறுமைகளின் பரிகசிப்பில்
சூம்பிப்போக
உள்ளம்
ஊசிதுளைத்த பலூனாயும்
திருவிழா சனக்கூட்டத்தினிடை
தொலைந்த சிறுமியாயும்

எனது சலனங்கள் உனக்குப் புரியக்கூடுமா... தெரியவில்லை. இதே வெறுமைகளை, வேதனையை, விரக்தியை நீயும் அனுபவித்திருப்பாயா.. தெரியவில்லை. கசிந்துருகும் காதலின் வலியை இதேபோல் உணர்ந்திருப்பாயா.. தெரியவில்லை. ஏன் அடிக்கடி காரணங்களற்றுக் கண்ணீர் வருகின்றதென்றும், ஏன் தனிமையில் புன்னகைக்கிறேனென்றும், வகுப்பறையில் பாடங்களில் ஆழ்ந்திருக்கும்போது ஏன் எனையறியாமலேயே பெருமூச்சு விடுகிறேனென்றும், இருந்தாற்போல உள்ளம் கனத்துப் போவது ஏனென்றும்.. இப்படியான எனது இன்னுமின்னும் பல கேள்விகளுக்கும் உன்னிடம் பதிலிருக்குமா.. அதுவும் தெரியவில்லை.

மௌனித்திருந்தாலும்
புறவுலகம் வானமாய்
உச்சந்தலைமேல் கவிந்திருந்தாலும்
பேதைப் பெண்ணுக்குப் புரிவதெல்லாம்
நீ அருலில்லையென்பது
மட்டும்தான்...

.........

புன்னகைகளை மதித்திருந்த காலமுமிருந்தது.. அதுவோர் கனாக்காலம் போல.. அந்தக்காலத்துத் தேவதைக் கதைகளில் வருகின்ற இனிய முடிவுகளைப் போல.. சாயம் பூசிக்கொண்ட வெளிறிய புன்னகைகளைக் கண்ணுற நேர்ந்ததன் பிற்பாடு எல்லாவற்றையும் போல அதுவும் கசந்து போனது. இன்றைய பொழுதில் அர்த்தமில்லாப் பல்லிளிப்புக்களுக்கு மத்தியில் நான் மட்டும் புன்னகைத்து என்னவாகப் போகிறதென்ற எனது தயக்கங்களை ஒற்றை வார்த்தையில் துடைத்தெறிந்து விடுகிறாய்..

இதழோரங்களில் கசியும்
உனக்கான புன்னகை
சோப்பு நுரையைப்போல
காற்றில் அலைவுண்டு
உன் கரைகளை வந்தடையும்
கருவுக்குள் சுருண்டிருக்கும்
பச்சிளங்குழந்தையின்
கதகதப்பிற்கான தேட்டம்
முற்றுப்பெறுவதை
தவிப்புடன் நோக்குமுந்தன்
சின்னஞ்சிறு தேவதைகளிரண்டும்
எமது கடமையை நீ செய்தாயோவென
கடுஞ்சினங்கொள்ளுமெந்தன்
புன்னகை மீது...

ஒரு கவிதை எழுதிடத்தான் வேண்டும்.. உன்னைப்போல் நெக்குருகிக் கசிதல் சாத்தியமாகப் போவதில்லையெனினுமே கூட.. எப்படி எழுதுவது.. எங்கிருந்து தொடங்குவது..

நீயின்றி பூரணமடையப் போவதில்லை
எனது எந்த இருப்பும்
எல்லாப் பொழுதுகளிலும்
உனக்காகவே உன்னோடே
காலங்களின் விறைத்த கணங்களினூடு
நானும் உயிர்த்திருப்பேன்
குட்டி அலிஸாய்
உன் மனக்காடுகளில் துள்ளியோட
போதாது இப்பிறவி ஒருசிறிதும்...

அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன், எனை நானே.. எப்படி.. எப்படி.. முழுதாய் எடுத்துரைப்பது.. நேசிக்கிறேன் நேசிக்கிறேனென நிமிடத்துக்கு நூறு முறை கூறிடினும் ஆதங்கம் நிறைவேறிடுமோ.. படுக்கையை விட்டு எழுந்ததும் உன் நினைவு.. முதல் நாள் அனுப்பிய மடல்களின் ஒரு சில வார்த்தைகள் நெஞ்சோடு தங்கிவிட்டவை நினைவில் விரிந்து அந்நாள் பிரகாசிக்கும்.. குளிக்கையில், சாப்பிடுகையில், நடக்கையில், படிக்கையில், கண்மூடித் தலைசாயும் போதெல்லாம் உன் நினைவு.. உன்னுடனான என் எதிர்காலங்கள் இன்னுமின்னும் என்னவோ எல்லாம் மனத்திரையில் தொடர்ந்தோடும்.. தன்னையறியாமல் விழி கசியும்.. புன்னகைகள் எனைக் கேட்காமல் வழிந்தோடும்..

இளம்பரிதி மேற்கில் சாய்கையில்
மனதெங்கும் கவிந்துகொள்ளும்
அந்தியின் மந்தாரம்
தொலைதூரத்துக் கேவல் சீண்டிட
விழித்தெழும் தாய்மை
பகற்கனவு கலைவுற்று
மேகத்தினின்றும் பொசிந்த
சிறுதுளியின் ஸ்பரிசத்தில்
உணர்வு கிளர்ந்து உதடு சிலிர்க்க
தலைக்கு மேலால் விரையும்
கருஞ்சிட்டின் நிழலைப்போல
நினைவுக் குவடுகளில்
ஒரு குழந்தை குறும்புப் புன்னகையோடு
மறுபடியும்...

.........

மனப் பொந்துகளில்
விழியோரக் கசிவினில்
துளிர்விடும் நினைவொன்று
பீதிகளை வாரியிறைத்துப் போகும்
மழைமேகமென
உருத்திரனைக் கண்ட ஒற்றைக்கால் நாரை
மோனம் கலைந்து
வரங்கள் கிட்டா விரக்தியில்
கணப்பொழுதில்
கடந்துவிடும் காலவடுக்குகளை
சூன்யங்களை விழுங்கிடும்
உன் பிரியங்களின் கதகதப்பில்
பின்மாலைப் பொழுது தோறும்
என் சாம்பர் வானினின்றும்
தூவானமாய்ப் பொழிகின்றன தாரகைகள்


(இன்மைகளை நிரப்பிடத் தெரிந்தவொரு உறவுக்காக..)

Friday, October 27, 2006

*எனக்குள் பெய்யும் மழை...


என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை

இரவு
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனது
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலாய் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது
- சிவரமணி


இலங்கையின் அரசியல் யாப்புக்களுக்குள் ஆழ்ந்து போயிருந்தேன். இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னைய காலப்பகுதி நினைவினை ஆக்கிரமித்திருந்தது. புராதன நிலமானியச் சமூகவமைப்பு, ஐரோப்பியரின் வருகை, நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள், அந்நிய ஆக்கிரமிப்பின் உச்சகட்டமாக ஆங்கிலேயரின் வருகையும் கண்டி இராசதானியைக் கைப்பற்றுதலும், ஒரு சில வருடங்களுக்குள் சமூகவமைப்பே தலைகீழாகப் புரண்டமை அனைத்தும் மனத்திரையில் படமென விரிந்துகொண்டிருக்க, சட்டென்று கவனத்தைத் திசைதிருப்பியது எங்கிருந்தோ வந்து விழுந்த மழைத்துளியொன்று.

இப்போதெல்லாம் சில்லிடச் செய்யும் துளிகள் எதை நினைவுபடுத்துமென்பது சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லையே.. என்னவனின் இதழ் கசிவு.. புன்னகைத்துக்கொண்டே நிமிர்ந்தேன். மறுபடியும் கொட்டும் மழைக்குக் கூரை ஒழுகத் தொடங்கிவிட்டிருந்தது. பழங்காலத்து வீடில்லையா.. பாவம், அதுவும் எத்தனைகாலத்துக்குத்தான் நின்றுபிடிக்கும். கூரையிலிருந்து வழிந்து யன்னலில் விழுந்து தெறித்த துளிகளிலொன்றுதான் என் கவனத்தையும் சிதறடித்திருக்கிறது. சொட்டுச் சொட்டாய் மழைத்துளிகள் சந்தம் தவறாமல் விழுவதையும், தெறித்து பல்லாயிரம் முத்துத் துகள்களாய்ச் சிதறுவதையும் இடைக்கிடை சில என் கன்னங்களை வருடிச் செல்வதையும் இரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி எவ்வளவு நேரம் கழிந்ததோ நினைவில்லை.. சில கணங்களாக இருக்கக்கூடும் மற்றவர்களின் பார்வையில். எனக்கோ நினைவினடுக்குகளில் தொலைந்த யுகயுகாந்தரங்கள்தான். திடுக்கிட்டு விழிப்புநிலைக்குத் திரும்பியபோது மழைத்துளிகள் எனது அரசறிவியல் புத்தகத்தில் தாரை தாரையாகக் கோலமிட்டிருந்தன. பதறிப்போய் புத்தகத்தை எடுத்து மார்போடு அணைத்துத் துடைத்துக் கொண்டாலும், சில்மிஷம் செய்துவிட்டுப்போன துளிகளைக் கடிந்துகொள்ள முடியவில்லை. புத்தகங்களையும், படிப்பையும் எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அதையும்விட ஒருபடி அதிகமாய் மழையை நேசிக்கிறேனாக்கும்.

வானம் கவிழ்ந்து சரம் சரமாய் பூமியை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தது. நடுச்சாமத்தில் தொடங்கிய மழைதான்.. விடிந்தும் கதிரவனைக் காணவில்லை.. அவனுக்கென்ன கவலை.. இருண்டபடிதான் காலையும் விடிந்தது.. இப்போது பகலாயிற்று.. இன்னமும் விட்டபாடில்லை, வானமும் தெளிந்தபாடில்லை. பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தோளில் கனத்த புத்தகங்கள் தவிர, கையில் இன்னும் சில.. பற்றாக்குறைக்கு மறுகையில் குடை வேறு. மெல்லிய கூதல் காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையிலிருந்த புத்தகங்களை மார்போடு அணைத்தபடி கதகதப்புத் தேடிக்கொண்டு மழையை இரசித்தும் அனுபவித்தும் கொண்டு தனிவழி தொடர்ந்ததென் பயணம். மனம் மட்டும் நழுவி கடந்தகாலங்களை நோக்கி தாவிக்கொண்டிருந்தது.

இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன், இதேபோன்றதோர் மழைநாளில்தான் நானும் அவளும் காலாற நடந்து திரிந்தோம். மழை வலுக்க, வீட்டுக்குப் போகலாமென்ற என் வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திவிட்டு, 'உன்னுடன் இருக்கவேண்டும் போலிருக்கிறது..' என்றபடி கைகோர்த்துக்கொண்டு என்னை நடப்பாட்டிச் சென்றாள். மழைநீரில் தெருவெல்லாம் நிரம்பி முழங்காலளவு வெள்ளம்.. முன்னெச்சரிக்கையாய் தக்க ஆடையணிந்திருந்ததால் தப்பித்தோம். எதிரில் வருபவரின் முகம் கூடத் தெரியாதளவு தடித்த திரையாய் கவிந்திருந்தது மழை. தெருக்களில் மனித நடமாட்டத்தைக் காணவே காணோம்.. வாகனங்கள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. வாய்க்கால்கள், குழிகள் குறித்த பயம் தெருவோரமாக நடக்கவிடவில்லை. கொழும்புத் தெருக்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லைதானே. நடுத்தெருவில் ராசகுமாரிகள் போல நடந்துகொண்டிருந்தோம், வேடிக்கைப் பேச்சுக்களில் எமைத் தொலைத்தபடி. கையில் குடையிருந்தென்ன.. பேய்மழைக்கு உச்சந்தலை தவிர மிச்சமெல்லாம் நனைந்தாயிற்று. மணிக்கணக்காய் கதைபேசித்திரிந்த காலங்கள்... இன்று, அதே மழை.. அதே தெருக்கள்.. நான் மட்டும் தனியளாய். கனத்துப் போனது மனம், கருக்கட்டிய மேகம்போல.

ம்ம்ம்... மறுபடியும் சுயவுணர்வு பெற்றுத் திரும்பி, ஒழுகும் இடங்களைக் கண்டுபிடித்து மழைத்துளிகளை ஏந்த பாத்திரங்களை வைக்கிறேன். மழையென்றால் காணும்.. வீட்டில் கிடக்கும் பழைய வாளிகளுக்கும், பண்டம் பாத்திரங்களுக்கும் வேலை வந்துவிடும். இந்த வீடு பரவாயில்லை.. ஆறுவயதுவரை வாழ்ந்த பழைய வீட்டின் நினைவு வந்தது. மிகவும் சிரமப்பட்டிருந்த காலங்கள் அவை...

அந்தவீடு தெரு மட்டத்திலிருந்து சில அடிகள் தாழ்வாக அமைந்திருந்ததால் கொஞ்சம் மழையென்றாலும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து நிறைந்துவிடும். கடும் மழையென்றால் வீட்டுக்குள் வெள்ளம்தான். அப்பா என்னையும், தம்பியையும் கட்டிலில் ஏற்றிவிடுவார். பாடசாலைக்கும் போகாமல் அக்காவினதும், அப்பாவினதும் தலையாய கடமை தொடங்கும். தண்ணீரை வாளியில் அள்ளி வெளியே ஊற்றுவது. மழைநாட்களென்றால் அப்பாவின் மாணவியருக்குக் கொண்டாட்டம்தானாம் அப்போதெல்லாம். அவர்தான் பாடசாலைக்கு வர மாட்டாரே.. எனக்கும் அதெல்லாம் வேடிக்கைதான். சமயங்களில் அக்காவோடு போட்டிக்கு தண்ணீர் அள்ளி ஊற்றுவேன். யார் வேக வேகமாக ஊற்றுவதென்று பந்தயமே நடக்கும். காலில் சிரங்கு வந்துவிடுமென்று பேசுவாள் அம்மா.. அதையெல்லாம் யார் கணக்கெடுத்தார்.. புது வீடு தேடியலைந்தபோது வெள்ளம் நுழையாத மேட்டுநிலம்தான் வேண்டுமென பிடிவாதமாய் நின்றாராம் அப்பா.. அதேபோலவே இந்த வீடு வாய்த்தது.

இன்றும், தெருவில் முழங்காலளவு வெள்ளத்தில் அடியெடுத்து அடியெடுத்து நடப்பதென்றால் கொள்ளைப் பிரியம்.., பள்ளங்கள் குழிகள் பற்றிய பயமிருந்தாலுமேகூட. ஊரிலுள்ள கஞ்சல், குப்பையெல்லாம் காலடியில் வந்து சிக்கிக்கொள்ளுமென்றாலும் அதிலுமொரு தனிசுகமிருக்கிறதுதானே.. சமயங்களில் வேகமாகக் கடக்கும் வாகனமொன்று நீரை வாரியிறைத்து ஆடைகளை நனைத்துப் போகும்.. ஆனாலும், ஒருபோதும் கோபம் வந்ததில்லை. சிலவேளை மன்னிப்புக் கேட்கும் பாவனையில் வாகனத்திலிருந்து ஒரு மனிதர் எட்டிப்பார்த்தாலும், 'இதெல்லாம் ஒன்றுமேயில்லை..' என தலையசைத்துப் புன்னகைத்து அவரை வழியனுப்புகையில் மறுபடியுமொருமுறை குழந்தையாகி விடுகிறேன்.

மழைக்காலங்கள் ரம்மியமானவைதான்.., நீயும் அருகிலிருந்தால்...


(*தலைப்பு நன்றி: யமுனா ராஜேந்திரன்)

Tuesday, October 24, 2006

பசுமையாம்.., பாரிப்பாம்.. கருகிடட்டும் கனவுகள்..!


01.

இப்போதெல்லாம்.. சிலநாட்களாகவே என் கனவுகளில் வளைய வருகிறாள், ஒருத்தி. வெளிர் இரவுகளில் நீலம் பாரித்த புன்னகையுடன் கருநிலவாய் தினந்தோறும் தோன்றி வளர்ந்து தேய்ந்து பின் மறைகிறாள்.., புரியாத மொழியில் கதறும் அவள் குரலின் ஒவ்வொரு பிசிறலும் ஊசியாய்த் துளைக்க... காதுமடல்கள் நீள நீளமாய் வளர்ந்து செவிப்பறையை இறுகவடைத்துவிட வேண்டுமென்ற எனது வேண்டுதல்களையும் புறக்கணித்தபடி.

ஏன் வருகிறாள், எதற்காக அலறுகிறாள், என்னிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்கிறாள்..? பதில் வேண்டின், காலவடுக்குகளின் ஏதோவோர் ஆழத்தில் புதையுண்டுபோன படிமங்களை மறுபடியும் கிளறியெடுக்க வேண்டியிருக்கும்.., சிதழூறும் ரணங்களைச் சீண்டுவதைப்போல கணநேர இன்பம் வேண்டி காலாகாலத்திற்குமான வேதனையை மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கும்.. சாம்பல் பூத்த நினைவுகளையும் கூடத்தான்.

இன்னமும், விழிகளை நிறைத்திருப்பதெல்லாம்.. திரையிடப்பட்ட முகமும், நீண்ட கறுப்பு உடையும், கையிலேந்திய அவளது பால்மணம் மாறா பச்சிளங்குழந்தையும்தான். ஆற்றங்கரையோரக் குடியேற்றமொன்று... சிந்துவெளி, ஹரப்பா.. தைகிரீஸ் - யூப்ரடீஸ்.. ஏன் மாயா அல்லது பெயர் குறிப்பிட முன்னரே வரலாற்றோட்டங்கள் புறக்கணித்துவிட்ட ஆபிரிக்க நாகரிகச் சமுதாயமென்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.. அதது அவரவர் விருப்பம்.. என்னைப் பொறுத்தவரை அதுவொரு வெறும் ஆற்றங்கரையோரத்துக் குடியேற்றம் மட்டும்தான். நேரம் நடுச்சாமத்தை எட்டிக்கொண்டிருப்பது சாமக்கோழியின் கேவலின் வழி புரிந்தாலும், இப்போதுதான் மேளங்களினதும், முரசினதும் ஒலி துரித லயத்தினை அண்மித்திருந்தது. கிராமியச் சடங்கோ அல்லது ஏதேனுமொரு விழாவோ அங்கே இடம்பெற்றுக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக கொம்பு வாத்தியமொன்று உச்சஸ்தாயியில் முழங்கும் ஓசை காதைப் பிளக்க.., பாரம்பரிய நடனத்தின் உச்சகட்டத்தில் இளம்பெண்களும், ஆண்களும் தமை மறந்து தீப்பந்தங்களின் மந்தகாச வெளிச்சத்துடன் சுடரின் அசைவுக்கேற்ப சந்தம் பிசகாமல் ஆடிக்கொண்டிருந்தனர். ஏனோவொரு போதை கலந்த மயக்கத்தின் ஆழத்தில் கிராமமே கட்டுண்டிருக்க.. ஒருத்தி மட்டும் கருநிழலென அவ்விடத்திலிருந்து நழுவுகிறாள், தனது என்றென்றைக்குமான விழிப்புணர்வினைத் தக்கவைத்தபடி.

ஆற்றங்கரையில் நின்றிருந்த தனித்த படகிலேறி சலனங்களற்ற நீரோட்டத்தின் பாதையில் அவளும், அவளைச் சுமந்த படகும் நகரத் தொடங்க.. கையிலேந்திய குழந்தையுடனான அப்பிம்பம் எந்தன் ஆதியன்னையை நினைவுறுத்திப் போனது.. குழந்தை இயேசுவுடனான அன்னை மரியாளையும்.., சமயங்களில் தாரகாசுரனை வதம்செய்த காளியையும். வாத்தியங்களின் ஓசை தொலைதூரத்தில் மங்கிக்கொண்டிருக்க, அடுத்து வந்த சில மணித்துளிகளின் மீது கவிந்துகொண்டது நடுச்சாமத்தின் கனத்த மௌனம்.

ஆற்றுத் தீவொன்றில் கரையொதுங்கியது படகு, அவளைக் கேளாமலேயே. தாவியிறங்கியவள் குழந்தையுடன் நீரினுள் அடியெடுத்து நடக்கத் தொடங்குகிறாள். தூக்கம் கலைந்தெழுந்து குழந்தை அழுதுவிடக் கூடாதேயென்ற கவலை அவள் முகத்தில் அப்பியிருந்தமை திரைகளைத் தாண்டியும் எப்படி எனக்குத் தெரிந்ததென்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். எதிர்ப்பட்டபோது அவளது தோளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியொன்றை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. முகத்திரை விலக்கி நீலம் பாரித்த புன்னகை எனை வந்து தீண்டியபோது, "அம்மா.." என்றலறி அவள் காலடியில் விழுந்தேன். அள்ளியணைக்க கைநீட்டுகையில், பட்டாம்பூச்சிக் குவியலென மாறி திசைக்கொன்றாய் அவள் பறந்துவிட்டிருந்தாள்.. குழந்தை மட்டும் கொட்டக் கொட்ட விழித்தபடி என் கால்களைக் கட்டிக்கொண்டது.

ஒரு பெருங்கடமை... யுகயுகாந்தரங்களாய் என் தலையில் அப்படித்தான் சுமத்தப்பட்டது.


02.

அத்துடன் எல்லாமும் முடிந்து விடவில்லை. பின்னரும் சில பொழுதுகளில் அவள் அடிக்கடி வருவாள், என் கடமையை நினைவுறுத்திப் போகவோ என்னவோ. ஏ.கே 47 ரக துப்பாக்கியுடனும், சமயங்களில் டி. 56 உடனும்.. சாதாரண பிஸ்டலுடனும் கூட. கறுத்த பெட்டியொன்றைக்கொண்டு வந்து ஒப்படைப்பாள்.. இதைப் பாதுகாப்பது உன் பொறுப்பென. அதைப் பாதுகாப்பதற்கேயாயினும் நானென் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கும், பிரியத்திற்குரியவர்களை அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களை / பாசாங்கு செய்பவர்களைக் கொன்றேனும் நானென் கடமையை நிறைவேற்றியேயாக வேண்டியிருக்கும்.

ஓரிரவில், சில வக்கிர மனிதர்களின் பிடியிலகப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த என் முகத்தில் அவளது சாயலைக் கண்டேன். ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி புணர்ந்துவிட்டு எனை அவர்கள் தூக்கியெறிந்த போதும், வீறாப்புடன் மறுபடி நிமிர்ந்தெழுந்து என் வழி தொடர்கையில்.. தடுமாறி விழப்போனவளின் இடையைச் சுற்றி இறுகவணைத்து தன் தோள் மீது என் தலைசாய்த்துக்கொள்ளச் செய்தவனில் அவளது படைப்பின் இறுமாப்புக்களைக் கண்டேன். அந்தக் கணத்தில் அவனது அணைப்பும், அருகாமையும் எனக்கு வேண்டியிருந்தது. அவளொருபோதும் எனைக் கைவிடுவதில்லையென்ற நம்பிக்கையும் எனக்குத் தேவைப்பட்டிருந்தது.

பிறிதொரு நாள், பாடசாலைப் புளியமரத்து நிழலின் கீழ் சிமெந்துக்கட்டில் நான் உட்கார்ந்திருந்தபோது வைத்தியம் பார்ப்பதற்கென வந்த பூசாரி வாகாய் உடலில் அத்துமீற விழைகையில் கைகொடுக்க ஏன் வராமல் போனாளென்பது இன்னமும் புரிந்தபாடில்லை. கதறித்துடித்தபடி விழித்தெழுந்து அருகில் படுத்திருந்த சகோதரியின் முதுகில் முகம்புதைத்து பிரமைகளிலிருந்து விடுபட முயன்றபோதும் அவள் ஆறுதல் கூறவில்லை. அன்றைக்குக் குளியலறைக் கதவு திறந்து என் நிர்வாணங்களைப் போர்த்திக் கொண்டவனைத் தண்டித்திருப்பாளென்றும் எனக்குத் தோன்றவில்லை.

இருந்தும், என் கடமைகளின் மீது மட்டும் கரிசனை அதிகம் கொள்கிறாயடி பெண்ணே..


03.

இப்படியே அவளும், அவள் குறித்த / அவள் சார்ந்த கனவுகளும் அலைக்கழித்துக் கொண்டிருக்க ப்ராய்டின் கனவுகள் பற்றிய கருத்தாக்கங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். பால்யகாலத்தில் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளும், ஆசைகளும்தான் கனவுகளாக வெளிப்படுகின்றனவாம். அதுவே பிற்காலங்களில் மனப்பிறழ்வுகளாகவும் உருமாறுவதுண்டு. எது எவ்வாறிருப்பினும், நானுமொரு சிறுமியாகவிருந்தபோது எவனாலும் வன்புணரப்பட வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை நிரம்பியிருந்ததா என் மனதுள்ளும்..

கனவுகளோ அல்லது நனவுநிலைக் காட்சியசைவுகளோ... கதறக் கதற வதம் செய்யப்பட்டமை நினைவிலுண்டு. உண்மையைக் கூறுவதாயின் அதுவே எனது பெரு விருப்பாயுமிருந்திருக்கலாம்.., உறவுகளின் போலி வேடங்களைக் களைந்தெறிவதற்கான.. இன்னமும் தெளிவுற்றால், மனிதர்களது நிஜ முகத்தினைக் கண்டடவதற்கான எனது மனங்கொள்ளா ஆசையிலிருந்து அது முளைவிட்டதாகவுமிருக்கலாம்.

பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, குதறப்பட்ட முலைகளுடனும் கிழிந்த உதடுகளுடனும் தொடைகளில் இரத்தம் வழிந்தோட.. பெற்றோர் முன் போய் நின்றால் அவர்கள் என்ன நினைப்பார்களாயிருக்கும்.. ஓவென்று பெருங்குரலெடுத்து அழுவாளோ அம்மா..? அக்கா என்ன சொல்வாள்.. நீயொரு அப்பட்டமான sadist.. போய்க் குளிச்சுட்டு வாடி.. என்பாளாயிருக்கும். என்னவன்...??? தோழியொருத்தியின் துணைவனைப் போல.., நான் நேசித்தது உன் மனதைத்தான்.. உடலையல்லவென தமிழ்த்திரைப்பட வசனங்களை எடுத்து வீசிவிட்டு (உண்மையில் அச்சம்பவத்தினூடான அவளது களங்கங்களை - அவர்கள் கூறுவதன்படி - முற்றுமுழுதாக ஏற்பதன் அடையாளமிது).. பிறிதொரு பொழுதில் வாக்குவாதம் முற்றிப்போக, "நீயென்ன பத்தினியா.." என்று எதிர்க்கேள்வி கேட்பானோ... இல்லையில்லை.., உன்னுடலில் எந்தக் களங்கமுமில்லையென்றபடி என்னை நெஞ்சில் தாங்கிக் கொள்வானாயிருக்கும்.

நிஜங்களை நிந்திப்பதாலும், நியாயப்பாடுகளைப் புறக்கணிப்பதாலும் நிழல்கள் நிதர்சனமாவதில்லை. வேடங்களைந்த முகங்களைத் தரிசிப்பதற்கான தீராத தேட்டம் உள்ளமெங்கும் நிறைந்திருப்பினும் இப்போதைக்குக் கெஞ்சுகிறேன் அவளை.., என்னைக் கைவிட்டுவிடும்படி.. என் கனவுகளினின்றும் காணாமற் போகும்படி.

சில கணங்களேனும், ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகளற்ற பெருவெளியில் கரைந்திட வேண்டும் நான். எனக்குத் தேவை ஓய்வு. வெறும் ஓய்வு. என்றென்றைக்குமான ஓய்வு. என்னை உறங்க விடுங்கள், தயவுசெய்து.


Saturday, August 12, 2006

*சிறகெனக் கனக்கும் காலங்கள்


நானுமொருகாலத்தில் உயிர்த்திருந்தேனென்றால் எவரும் நம்புவார்களோ என்னமோ..?!

1.

என் தாயுமானவளுக்கு...

நெற்றிப்பொட்டில் முகிழ்த்தெழுந்து
வேர்கொண்டகன்று
நீண்டு
வளர்ந்து
கிளைவிரித்து உயர்ந்துயர்ந்து
தலை முழுதும் சுழன்றுபரவும்
வலி...
நீயில்லா வலி.

சிந்தனைகளின் அழுத்தலில்
கேள்விகளின் குடைதலில்
தலைக்குள் குருதி,
தறிகெட்டு தடைதகர்த்து குமுறிப்பாய
நரம்புகள் பின்னிப் பிணைந்து
இறுகித் தெறித்து
வெடித்துச் சிதறக்கூடும்.

நானும் சிதையக்கூடும்.

சீக்கிரம் வந்துவிடு.

.............

அடிக்கடி
நீ அருகிலிருப்பதாய் தோன்றுவதெல்லாம்
பொய்பொய்யென
பிரமைதானென
உணர்ந்துணர்ந்து உள்குறுகும்போது
கண்முன்னே மயிர்பிடுங்கும் வேதனையில்
மனசு மறுகுகின்றது.

சீக்கிரம் வந்துவிடு.

...........

நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்குருகி - உடல்நடுங்கி
நீயில்லா ஏக்கம் நிரம்பி
வழிய
நிற்கிறேன்.

சீக்கிரம் வந்துவிடு.

...........

ஒற்றைக்குயிலின் அழுகையின் நீட்சியில்
எழுகிறது என் சோகம்
பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்
வழிகிறது என் கண்ணீர்

தனிமை தனிமை தனிமை
தனிமை தலைவிரித்தாடுகிறது

சீக்கிரம் வந்துவிடு.

...........

விரக்தி மிகுந்த வெறுமையும்
வெறுமை நிறைந்த விரக்தியும்
விரவி நிற்கும் -
கையறு நிலையில்
மெய்யது தவிக்க
எற்றுண்டு கிடக்கிறேன்,
கணங்களின் கரையோரம்...

சீக்கிரம் வந்துவிடு.

..........

தாங்கவொண்ணாத் துயரமாயிருக்கிறது
உன் பிரிவு...

சீக்கிரம் வந்துவிடு.

சீக்கிரம் வந்துவிடு.
- தமிழினி


2.

போர்த்துண்டது கருமை, என்றென்றைக்குமாய்...

'..நான் உன்மீது வைத்திருப்பது அன்பில்லை, ஒருவிதமான வெறியென்றும் சொல்லலாம். நீ எனக்கு வேண்டும். வாழ்நாள் முழுவதுக்குமாக நீ எனக்கு வேண்டும். என்னை விட்டு விலகிச் செல்ல நினைத்தாயானால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன். ஆனால், கொலை செய்ய மாட்டேன். ஹி..ஹி..ஹீ..'

எமது இறுதிச் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? அதுவொரு ஜூலை மாதத்துப் பிற்பகல் பொழுதாகத்தானிருந்திருக்க வேண்டும். நாட்காட்டி 23 என குறித்துக் கொண்டிருந்ததாகவும் நினைவு. மறுநாள் நீ என்னை நீங்கி காததூரம் போகப்போவதை அறியாதவளாய் நான் மட்டும் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தேன், வழமையாகக் கலகலக்கும் நீயோ மௌனித்திருந்தாய்.

அன்றைக்கு வானம் எப்படியிருந்தது..?

சாம்பல்நிற ஒளிக்கீற்றொன்று
அன்றும் தென்பட்டிருக்கக் கூடுமோ..

வெண்பஞ்சு மேகமொன்று
தனதேயான விஷமத்தனங்களுடன்
அதனை எனது பார்வையிலிருந்து
மறைத்து விட்டிருக்குமோ..

சூரியன்
முகில்க்கூட்டங்களினிடை
மறைந்து வெளிவந்து
ஜாடைகாட்ட முற்பட்டிருந்திருக்குமோ..

ஏன் என் அடிமனம் எதனையும் உணரத் தவறிவிட்டிருந்தது..?

மரணங்கள்
சொல்லிக்கொண்டு
வருவதில்லை..,
பிரிவுகளும் கூடத்தான்.
உனது பிரிவும்
அப்படித்தான் நிகழ்ந்தது..,
அதனைத் தொடர்ந்த
எனது மரணமும்.

எல்லாம் தெரிந்திருந்தும் அடி பெண்ணே..,

நிர்த்தாட்சண்யமாய்
என்னுள் ஊடுருவித் துளைத்த
உன் விழிகளின் ஆழங்களில்..
எத்தனை நூற்றாண்டு காலத்துக்
கண்ணீர்த்துளிகளை
உயிரோடு சிதையேற்றியிருந்தாய்?

பாறையாய் இறுகிக்கிடந்த
இதயத்தில்..
எத்தனை கோடானுகோடி
மூதாதைகளின் துயரங்களைப்
பதுக்கியிருந்தாய்?

உள்ளத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் தொண்டைக்குழியை அடைய முன்னமே தற்கொலை செய்துவிட்டிருந்தன போலும். கருமை போர்த்தவந்நாளில்.., என்றென்றைக்குமான எமது பிரிவினைப்பற்றி நீ எதுவுமே பேசத்துணியவில்லை.

கத்திக் குளறியிருக்க மாட்டேன்..
அழுது புலம்பியிருக்க மாட்டேன்..
வேதனையில்,
விரக்தியில்
உன்னை சபித்துமிருக்க மாட்டேன்..

இன்னும் சில நிமிடங்கள்.. ஒரு சில நிமிடங்கள் உன்னோடு கழித்திருப்பேனடி என் கண்ணே.. ஏன் பேச மறுத்தாய்?

அந்தச் சில நிமிடங்களுக்குள் இத்தனைகாலம் சொல்லாமற் போன என் பிரியங்களையும், கேட்க நினைத்திருந்த மன்னிப்புக்களையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறி.. இறுதியாய் ஒருமுறை உன்னை ஆரத்தழுவி.. விடைகொடுத்திருப்பேன்.. ஏனடி சொல்லாமற் போனாய்?

கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, வருடிவிட்டு அவசர அவசரமாக உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில் பிரதிபலித்திருந்த ஏக்கத்தினை.. காலாகாலத்திற்குமான வேதனையை ஏன் என்னால் புரிந்துகொள்ள இயலாமற் போனது?

என் உள்ளுணர்வு ஏன் அந்தக்கணத்தில் மரத்துப் போனது?

உன்னை என்றென்றைக்குமாகப் பிரியப் போகிறேனென்று ஏன் எனக்கு தோன்றாமல் போனது?

ஏன்.. ஏன்.. ஏன்..???

தெருவோரத்தின் வளைவில் என் நிழலும் போய் மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாயா? அந்தக் கணத்தில் என்ன நினைத்துக்கொண்டாய்? அடி அவசரக்காரியே.. என்று என்னைக் கடிந்து கொண்டிருப்பாயா? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போவென மனதுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தாயா? இல்லையெனில், உனது தயக்கத்தினையும் துணிவின்மையையும் எண்ணியெண்ணி உன்னை நீயே நொந்துகொண்டிருந்தாயா?

ஜூலைகள் கறுத்துப் போனவைதான்; மறுப்பதற்கில்லை.


3.

உயர்கின்றன மதில்கள், என்னைக்கூட கேளாது...

'..உன் பேச்சில் மழலைத்தனமிருந்தது. அந்தவொரு குறும்புத்தனம் வீதியில் செல்லும்போது.., உனக்குள்ளே நீ பேசிக்கொள்வது, சிரிப்பதென்று. உனதந்தச் சிரிப்பில் எனது கவலைகளை மறந்திருக்கின்றேன். உன் வருகையை எதிர்பார்த்து எத்தனையோ நாள் என்வீட்டு வாசலில் கண்மூடாமல் காத்திருந்திருக்கிறேன். உன்னுடன் பழகும்போதெல்லாம் என்னுள்ளிருக்கும் பாரங்களத்தனையும் வெறும் தூசு போல் தெரியும்; உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்றும் தோன்றும்..'

காரிருள் மேகமாய்
சுற்றிலும் கவிந்துகொண்டு,
போகுமிடமெல்லாம்
என்னைப் பின்தொடர்கின்றது..,

பார்க்கும்,
கேட்கும்,
ஸ்பரிசிக்கும் அனைத்திலும்
படர்ந்து பரவி
எல்லைகளற்ற மதில்களாய்..
தடித்த திரையாய்
என்னை ஆக்கிரமித்தபடி எழுகின்றது..,

காற்றினுள் கலந்திருக்கும்
அவள் விட்டுச்சென்ற
களங்கமற்ற நேயத்தின் வாசம்.

நூலகத்திலிருந்து வீடு திரும்பும் எனது நீண்ட பயணத்தில் வழித்துணையாக வந்தது அவள் நினைவுகள்தான். கூடவே வெறுமையும், உயிர்கொல்லும் தனிமையும்.

தலை கனக்கத் தொடங்கியது.. இந்தவுடலை இனியும் சுமந்துகொண்டு அலைதல் சாத்தியமில்லையென மனம் எண்ணமிடத் தொடங்கிற்று.

அமைதியை விரும்புபவள்..,
நிச்சலனத்தை வேண்டுபவள்..,
இப்போதோ,
அவள் விட்டுப்போன
மௌனத்தை உடைத்தெறிய
செவிப்பறைகளைக் கிழித்தெறியும்
இரைச்சல்களை
நேசிக்கத் தொடங்குகிறேன்.

அடிமனத்து ஓலங்கள்
எல்லை கடக்குமொரு பொழுதில்
வீங்கிப் பெரிதாகி
என் மண்டை
வெடித்துப் பிளந்தால்தான்
ஆசுவாசமாக உணர்வேனாக்கும்.

மதில்கள் பொருட்படுத்துவதில்லை.., சிறையுண்ட ஆன்மாவின் விருப்பு வெறுப்புக்களை.


4.

கடந்து விட்டிருந்த காலம், கேவல்களைச் செவிமடுத்ததோ...

'..உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனால், எம்மிருவரது வீட்டிலும் அதனை அனுமதிக்கப் போவதில்லை. அவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகின்றது? அவர்கள் தங்களது சுயநலம் கருதித்தானே எம்மைப் பெற்றெடுத்ததும். உறவுகளென்பது பொய். ஒருநாளும் அவை உண்மையானதாக இருக்கமுடியாது. ஒருகாலத்தில் என்னைச் சுற்றியிருப்பவர்களைக் கேள்விகேட்டே என் கவலைகளைக் குறைப்பேன். அவர்களது குற்றவுணர்ச்சியைக் கூட்டுவேன்..'

மகத்தானவள் நீ...

எதிர்பார்ப்புகளற்ற அன்பைச்
சாத்தியமாக்கிப் போனவள் நீ...

அடையாளங்களைத் துறந்து,
சுயம் தொலைத்து
எல்லைகளற்ற நேசத்தில்
கரைந்துவிடப் பழக்கியவள் நீ...

என் ஆணவங்களை
அடியோடு சாய்த்தவள் நீ..
என் ஆன்மாவை
உயிரோடு சிதைத்தவள் நீ..

கட்டுக்கடங்காமல் அன்பை வாரி வழங்கத் தெரிந்திருந்தது உனக்கு. அனைத்தையும், அனைவரையும் உன் கட்டுக்குள் வைத்து ஆண்டுகொண்டிருக்கத் தெரிந்திருந்தது உனக்கு. நட்ட நடுக்காட்டில் தவிக்கவிட்டு தடயங்களேயில்லாமல் மறைந்துவிடும் நெஞ்சழுத்தமும் வாய்த்திருந்தது உனக்கு.

ஆனாலுமென்ன, உன்னைச் சுற்றியிருந்தவர்கள் எவருமே உன் தனித்துவங்களைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்தனர்.., என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நீ தந்த அன்பை அதே நிறைவுடனும், முழுமையுடனும் திருப்பித்தர ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை. உனதன்பை உள்ளது உள்ளபடி உள்வாங்கவும் நான் கொடுத்து வைத்திருக்கவில்லை.

அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு
நீ புறப்பட்ட போது..,
இனியும்,
என் வாழ்வில் நீயில்லையென்பது
அடிமனதில் உறைத்த போது..,

காலம் கடந்துவிட்டிருந்தது
என் பெண்ணே..
உன் அருமை புரியத் தொடங்குகையில்
காலம் யுக யுகாந்தரங்களைக் கடந்துவிட்டிருந்தது.

அண்டசராசரங்களும் அதிர பெருங்குரலெடுத்து கதறியழத் தோன்றுகின்றது. கையில் கிடைக்கும் அனைத்தையும் வீசியெறிந்து, உடைத்து நொறுக்கி.. நானும் களைத்து விழும்வரை.. தெறித்துச் சிதறும்வரை ருத்ர தாண்டவமாட வேண்டும் போலிருக்கிறது. எழுதப்படாமலேயே போய்விட்ட எத்தனையோ மடல்கள் நினைவில் விரிந்து என் உலகை நிறைக்கின்றன. வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்குண்டிருந்து என்னை மூச்சுத்திணறச் செய்கின்றன.

மறுபடியொருமுறை உன்னைக் காண்பேனா, என் கண்ணே?


*(நன்றி:- குட்டிரேவதி)