Wednesday, February 18, 2009

முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம்


1.

பிரியங்களின் மென் ஸ்பரிசங்கள் மீது
கரும்போர்வை விரித்து
கேள்விகளும் குழப்பங்களும்
சயனித்துக் கொண்டிருக்கின்றன
புத்தனைப் போல
நானோ போதிமரக்கிளையேந்திய சங்கமித்தையாய்
அலைந்து கொண்டிருக்கிறேன் ரணங்களைக் காவிக்கொண்டு


2.

எங்கிருந்தோ வந்து தவறுதலாக அறைக்குள் அடைபட்டுவிட்ட
மாட்டிலையானின் ஓல ரீங்காரம்
தலையைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும்
ஆயிரமாயிரம் வெளின்ற ஈசல்களின் வன்மத்தை
நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது
நான் விட்டுச்செல்ல விரும்புகிறேன்,
என் காலடியின்கீழ் துளிர்விடும் அரும்பொன்றை
அதில் துளிக்கும் நேசத்தை


3.

மாறிக்கொண்டிருக்கும் நிலப்பரப்புகள்
வேரோடு பிடுங்கப்பட்டு
மாற்றான் தோட்டத்தில் நடப்பட்டதாய்
சற்றும் தகவமையா வாழ்வு
'இதைவிட வடிவானதென் தோட்டம்
இதைவிடப் பரந்தது'
வரண்டு வெடித்து வாய்பிளந்த நாடுவிட்டு
வலசை வந்த பறவைகளின் ஏக்கம்
பனிப்புலத்தை உருக்கி உருவழிக்கும்
பைன் மரங்களும் பூச்சாடிகளும்
மிகுதயக்கத்துடன் முணுமுணுத்திருக்க
கால்கள் சிறகுகளற்ற வெண்ணிலத்து செடிகள்
தலையசைத்தெதிர்க்கும் - சந்தர்ப்பங்கள்
தங்களைத் தாங்களே நிகழ்த்திக்கொண்ட
குளிர்காலப் பகற்பொழுதொன்றில்
நான் நானற்றவளாயானேன்

Tuesday, February 10, 2009

செதுக்கும் சிற்பியும் செதுக்கப்படும் கல்லும்



*இரு தெரிவுகள் எங்கள் முன்:
ஒன்றில், பயங்கரவாதியாயிருத்தல் அல்லது

பயங்கரவாதத்தை எதிர்த்தல்


எதிர்மறைத் தத்துவத்தின்படி:
ஒன்றில் B, அல்லது B அன்று

**ஒரேநேரத்தில் இரண்டாகவும் இருப்பதும் (சாத்தியமில்லை)

இரண்டாகவும் அல்லாதிருப்பதும் (சாத்தியமில்லை)


அரசியல் கற்றுக்கொடுத்தது:
பயங்கரவாத எதிர்ப்பென்ற பெயரில்

மகா பயங்கரவாதியாக.. - அல்லது

இரண்டையும் எதிர்த்தபடி
நடுநிலைமையாளனாக..

குழந்தைகள் உறங்கியபடியிருந்த ஒரு
குளிர்கால நடுநிசியில், எனதன்ப
நான் கல்லாயிருந்தேன் - நீ
என்னைச் செதுக்கும் சிற்பியாயிருந்தாய்
காதல் ஒரு செடியென
ஆத்மாவின் ஈரமுறிஞ்சி வளர
என்மீது
கோபுரங்கள் தாதுகோபங்கள் எழுந்தன
உடல் துளைத்து பாதைகள் நீண்டன
உளியின் ஆங்காரம் பொறுத்திருந்து பொறுத்திருந்து
நான் கடவுளானேன்
பூதமானேன்
மனிதனுமானேன்
பயங்கரவாதப் புழுதி மண்டியிருந்த தெரு
மனிதர்களை சிற்பங்களாக்கி விட்டிருந்தது
நெரிவுண்டு நொறுங்குண்டு
எஞ்சியிருந்த குறுணிக்கற்களும்
சிதறிக்கொண்டிருந்தவோர் நாளில்
நானொரு
சிற்பியுருவங்கொண்ட கல்லாய்ச் சமைந்து போனேன்
அல்லது, கல்லாலான சிற்பியாய் அலைந்தேன்
இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கவுமில்லை


*நன்றி: திரு.ஜோர்ஜ்.டபிள்யு.புஷ், திரு.கோத்தபாய ராஜபக்ஷ

**தத்துவவியல் இந்நிலையைப் 'போலி' என்கிறது

படம்: சல்வடோர் டாலி

Monday, January 05, 2009

Come Gather Round People Wherever You Roam

by VK Perera

Facebook was one place that disillusioned me of the future chances our island has. It is a place that informed me that peace, for this island, is a journey through a moonless night without a single match in your pocket.

I'm sorry. But, I have seen extremist, non-compromising racist assholes. I've seen them on the road. I've seen them in the market place. I have seen them in govt offices. I've seen them in academic chairs. I have seen them disguised, half-disguised and i have seen them naked and proud about it too. I have seen them on Facebook too. I have, in fact, seen that non-compromising, chauvinist, uncritical and -- in that sense --- ignorant psyche going haywire on Facebook. Education doesn't change people, dudes. Computers, internet, exposure doesn't change these people. They are, in their depths, no different from the noisy lumpan elements, for whom, the capture of Killinochchi is heaven with the pearly gates all open.

This island has failed to cultivate a multiethnic consciousness. Of course, people entrusted with power have successfully faked a multy-ethnic ethic for their thin political agendas. Surely, the President made his address at the UN in Tamil. Coming on TV, after Kilinochchi was entered, he played a contained sequel of the same -- a couple of lines in Tamil contrived. But, in a 70% Sinhala majority any achievement / development that is groomed in the absence of a naturalized multi-ethnic consciousness would ultimately / inevitably translate into being a victory of but the Sinhala Buddhist. That is how power operates. Where consciousness is absent power does not facilitate the minority or the marginal. Isn't this what the Tamil liberation struggle --- (the basis of the struggle, and not necessarily the means of it) -- was all about , leading upto the 1982 violent break out?

One cannot dismiss the pre-LTTE attempts by the TULF that pressed for a recognition of Tamil sovereignty. These attempts, often crushed with state violence, was because a multi-ethnic consciousness was of want in the post-independent Sri Lanka. This was because the Sinhala extrimists sidelined the numerically minor ethnic identities in their policy-making and their act of "nation building".

Dudes, the Tamil community in this island lost their socio-cultural richness in this prolonged military crisis. It was, alongside their economic and political "sense", drained away worldwide. And, today, they have come the full circle... Cos, the forces (NOT cosisting of, but) backed by an island's racist mob has entered Kilinochchi. They have entered this town, but the multi-ethnic consciousness is of want in the armoury which the people carry. The celebrations down in Southern Sri Lanka, to me, spelt more the celebration of a "Sinhala victory"...than a "Sri Lankan victory".

Perhaps, "Sri Lanka" is just a label we use for convenience. Maybe, it is simply used to fake it all the more. It was ironic how the president made a bilingual speech on TV (well, the speech was in sinhala...but a bit of heavily contrived Tamil was inserted just to show that "multiculturalism rocks") that ended with the national anthem....which is purely and totally monolingual: Sinhala.

Dudes who cracked fireworks yesterday, dudes who changed their profile pics into three-legged lion flags when Pooneryn fell, dudes who are now happy and think that the worst is past, dudes who think that the "ethnic issue" is now settled, dudes who now sigh sighs of relief........ do yourselves a favour: marry, if you must, but DO NOT have kids. Cos, this ain't over. This will not be over. Your kids will have to pay for this utter ignorance we display...the utter ignorance which the politicians sponsor, so as to flourish their parochial agendas.

Do not be fooled... Pirabaharan or whoever is just an individual. The struggle is a part of a consciousness. And a consciousness does not necessarily require an individual to live and to breed.

Teach yourself to be compromising. Teach yourself to be informed. Teach yourself to be critical. Teach yourself and your loved ones the history of this issue. The present. The future to be.

Monday, September 22, 2008

பாம்படக் கிழவியும் காற்றில் கரைந்துபோன ஒரு மூட்டை அன்பும்


1.

எல்லாம் வேடிக்கையெனத் தோன்றுகிறதின்று
இந்தச் சுவர்களுக்குள் அடைந்துகொண்டிருக்குமென்
பெருமூச்சுக்களை
கம்பிவலையிட்ட சன்னலின் சிறுதுவாரங்களினூடு
பிதுக்கி வெளியேற்றுவதுதான் வாழ்வென்றிருந்திருந்தால்
நேசிக்காதிருந்திருப்பேன் எவரையும்
படிப்பு, எழுத்து, பேச்சு
ஆர்வம், துடிப்பு, தேடல்
இந்தப் புள்ளியில் அனைத்தும் தொலையுமென்றிருந்திருந்தால்
சிந்திக்கப் பழகாதிருந்திருப்பேன் அன்றைக்கே
காத்திருப்பை வேண்டும்
சட்டகங்களுக்குள் சிக்கிக்கொண்ட
பலிபீட வாழ்வு
இனியும் அன்பென்ன அன்பு..
கனவிலொரு கழுகு வரைந்து
அதன் கால்விரல்களிடை காதலனுப்பி
அந்தப்புரத்தில் தவளைக்கும் தேருக்குமாய்
காத்திருந்து சுகங்காணத் தெரிந்தவர்களுக்கெல்லாம்
முடிவதில்லை,
என்னைப்போல
கருணை வரண்டு மூர்க்கம் பிடித்த
பாம்படக் கிழவியாயிருக்க
இருந்துவிட்டுப் போகிறேன்
திமிர்க் கிழவியாயில்லையென்றாலும்,
அவளது சிலிர்த்தாலும் நிமிராத
ஒரு கற்றை சுருள் மசிராகவாவது..


2.

நடுங்கும் விரல்களுடன்
தடித்த சாக்கு ஊசிக்குள்
தட்டுத் தடுமாறி நூல்கோர்க்க விழையும்
ஒரு கிழவியின் தீவிர கவனத்துடன்
கடக்க வேண்டியிருக்கிறது இந்த நாட்களை
சாவை சில்லறைகளாய் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்
நாட்டிலிருந்து எந்தச் செய்திகளும் வேண்டாமென
என்னைப்போலவே நூல்பின்னிக்கொண்டிருக்கும்
இன்னொருத்தி பதற்றத்துடன் கூறுகிறாள்
வெகுதொலைவுக் கிராமமொன்றில்
பெண்ணுறுப்பைக் கீறியெடுக்க மறுக்கும்
பருவமடைந்த ஆபிரிக்கப் பெண்ணின் அலறல்
வளையங்களால் நிரப்பப்பட்ட அவள் சகோதரியின் கழுத்து
எமக்கென இல்லாமற்போன
நாகரிகமொன்றுக்கு சாட்சியமாகிறது
யன்னல்களுக்குப் பின்னால் முகங்களைப் புதைத்துக்கொண்டு
என்னால் சகோதரிகள் குறித்தும்
ஆதங்கப்பட முடிவது வேடிக்கைதான்
இன்னும் என்னைத் தேற்றிக்கொள்ளவும்..
அந்தக் கிழவி நிமிர்ந்து பார்த்து சிரித்தபடியே
செம்மறியாடுகளை ஓட்டிச் செல்கிறாள்
பசும்புல்வெளி தேடி
அவள் பொக்கை வாய்க்குள் எதிரொலிக்கும்
நீரோடை பற்றியதோர் பாடல்
எழுதுமேசை மீண்டு,
நானும் கிழவியாய்ப் பிறவாததன் விசனத்தை
ஒரு கவிதையாக்கி
கிழவியாய்ப் பிறந்து குழந்தையாய் சாகவேண்டும்
என் (கடவுளர்க்கான) விண்ணப்பங்களுடன்
நாட்குறிப்பின் பக்கமொன்றினுள்
பத்திரமாய் ஒளித்துக் கொள்கிறேன் மறுபடியும்
தலைகீழ் வாழ்வு சிறு எலுமிச்சைச் செடியென
துளிர்விடத் தொடங்கும்
என் இன்றிராக் கனவுக்குள்


Friday, September 19, 2008

மரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள்

- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்


இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன?

பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக தன்னிலை மாறாது புழக்கத்திலிருந்து வந்து இன்று எம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கற்பிதங்கொண்டு, நாம் மிகச் சாதாரணமாக, "இது மரபார்ந்தது" என்கிறோம். இந்தத் தற்புனைவு மிகத் தவறானது. காரணம், மரபுகள் ஒருபோதும் - பிறிதொரு தலைமுறைக்குக் கையளிக்கப்படுகையிலும் கூட வெறுமனவே இயக்கமற்று உறைந்திருப்பதில்லை.

ஒரு தலைமுறையிலிருந்து மற்றைய தலைமுறைக்கு மரபின் கூறுகளைக் கையளிக்கும் செயற்பாட்டின்போது அம்மரபு இயல்பாகவே மாற்றத்துக்குள்ளாகிறது. அத்துடன், இன்று எம்மால் மரபெனக் குறிப்பிடப்படுவது சமயங்களில் வெறும் நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். எதுவுமே முற்றுமுழுதாகத் தொன்னலம் வாய்ந்த வடிவத்துடன் நூற்றாண்டுகளைக் கடந்து எம்மை வந்தடைவதில்லை.

மரபுகள் மாற்றமுறுவதை இனங்கண்டுகொள்வதைத் தொடர்ந்து ஏன், எப்போது அக்குறித்த மாற்றம் நிகழ்ந்ததென கேள்வியெழுப்பவேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, வேறுபட்ட தொல்பிரதிகளில் பெண்கள் சித்தரிக்கப்படுமாற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை மரபார்ந்த இந்தியப் பெண்மையின் சித்தரிப்பாகக் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தில் இடம்பெறும் சகுந்தலையின் கதையில், துஷ்யந்தன் சகுந்தலையைக் கன்வ முனிவரின் பர்ணசாலையில் சந்திக்கும்போது அவர்களிருவரும் வெளிப்படையாக உரையாடுவதுடன், எவ்வித சடங்கு சம்பிரதாயங்களையும் வேண்டாத காந்தர்வத் திருமணத்தில் இணைவதற்கு துஷ்யந்தன் அவளுக்கு அழைப்பு விடுக்கிறான். சகுந்தலையோ, தமக்குப் பிறக்கும் மகனை துஷ்யந்தன் தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் சம்மதிக்கிறாள். காந்தர்வ மணத்தினைத் தொடர்ந்து துஷ்யந்தன் பிரிவதோடு, அவளுக்கு மகனும் பிறக்கிறான். சில வருடங்களுக்குப் பின், அவள் தனது மகனுடன் துஷ்யந்தனின் சபைக்குச் சென்று முடிக்குரிய வாரிசாக மகனது உரிமையை எடுத்துக் கேட்கிறாள். துஷ்யந்தனோ அவளது வேண்டுகோளை நிராகரிப்பதுடன் அவளை அவமதிக்கவும் செய்கிறான். ஆனால், பின்னர் ஒரு அசரீரி அது துஷ்யந்தனின் சட்டரீதியான புதல்வனேயென எடுத்துக் கூறுகிறது. அதைக்கேட்ட துஷ்யந்தனும், அந்தப் புதல்வன் தனது சட்டரீதியான முடிக்குரிய வாரிசென நிரூபிப்பதற்கான ஆதாரம் வேண்டியே தான் அவ்வாறு சகுந்தலையைக் அடையாளங் காணாதது போல பாவனை செய்ததாகக் கூறுகிறான்.

ஆனால், காளிதாசர் இக்கருத்தினை எடுத்தாளுகையில் சகுந்தலையின் குணவியல்பினை முற்றுமுழுதாக மாற்றியமைத்து விடுகிறார். தற்றுணிவுடனும், முன் நிபந்தனையுடனும் திருமணத்தினுள் புகும் ஒரு தன்முனைப்புடைய பெண்ணின் நிலையிலிருந்து அவள் பணிவமைதியுடைய, இணங்கிப் போகின்ற, பின்வாங்கும் இயல்புடைய இளம் பெண்ணாக மாறுகிறாள். தனக்கான உரிமைகளுக்காகக் கூட வாதிட முடியாதளவு துஷ்யந்தன் மீதான காதலினுள் அவள் மூழ்கிப் போகிறாள். அத்துடன், தனதும் தனது புதல்வனதும் உரிமைகளுக்காக சகுந்தலை வாதாடுவதல்லாமல், அவள் சபையை நீங்கிச் சென்றதும் தனது செயலையெண்ணி மனம் விரக்தியுற்று துஷ்யந்தனே தனது முடிக்குரிய புதல்வனையும் தொலைந்த காதலையும் மீட்டெடுக்க தவித்தலைகிறான்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில், இன்று சகுந்தலையின் கதை குறித்து உரையாடும் போதெல்லாம் நாம் காளிதாசரின் விளக்கத்தையே முன்னெடுக்கிறோம். ஆனால் மரபினைப் பற்றி ஒருவர் உரையாடுகையில், மகாபாரதக் கதைவடிவம் பரவலான ரசிகர்களைக் கொண்டதாயிருந்திருக்கும். அக்கதைவடிவத்தினைச் செவிமடுப்போர் அதிகமாயிருந்திருப்பார்கள். காளிதாசரின் கதைவடிவமோ வெகு சிலருக்கே பரிச்சயமாயிருந்திருக்கும்.

இன்று, காளிதாசரின் கதைவடிவத்தினை மட்டுமே கருத்திற்கொள்வதன் மூலம் நாம் ஒரு தற்சார்புப் போக்குக்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வடிவத்தினைத் தெரிவுசெய்து அதனை மரபார்ந்த விம்பமாகக் கட்டமைக்கக் காரணம், பெண்ணை தற்றுணிவுடையவளாகவும், திருமண வேண்டுகோளொன்றை ஏற்றுக்கொள்ள முன்னர் முன் நிபந்தனையொன்றை வற்புறுத்துபவளாகவும், மன்னன் தன்னை அடையாளங்கண்டுகொள்ளத் தவறுகையில் அசாத்தியமான மனவலிமையுடன் தன்பக்க நியாயத்துக்காக எதிர்வழக்காடுபவளாகவும் சித்தரிக்குமொரு கதைவடிவத்தினை விட, அவளைத் தயக்கமும், பணிவும், பின்னிற்கும் மனப்போக்குமுடையவளாகச் சித்தரிக்கும் ஒன்றை முன்னிறுத்துவதானது இன்றைய எமது சமூகத்தினைப் பொறுத்தவரை பயனுடையதும் கூட. தற்காலச் சமூகம் ஒரு மரபுத் தெரிவை மேற்கொள்ளும் முறையானது பெண்கள் குறித்தான சமூகத்தின் நிகழ்காலத்து மனப்பான்மையினால் ஏலவே வரையறுக்கப்பட்டு விடுகிறதெனலாம்.


இராமாயணத்தைப் பொறுத்தவரையிலும் இதனையொத்த கதை/திரிபு வடிவங்கள் உருவாக்கப்பட்டனவென நீங்கள் நினைக்கிறீர்களா?

இன்று அதிகம் பேசப்படுவதும், புகழ்பெற்றதும், தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பெறுவதும் வால்மீகியினதும் துளசிதாசரதும் கதைவடிவங்கள்தான். இவற்றினைவிடவும் வேறு பல வடிவங்களிருப்பது மக்களுக்குச் சொல்லப்படவில்லை. அவற்றுள் சில வால்மீகியினதை விடவும் காலத்தினால் முற்பட்டதாக இருந்திருக்கக் கூட வாய்ப்புண்டு.

பௌத்த ஜாதக இலக்கியங்களில், இராமாயணத்தின் சில பகுதிகளுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய குறுங்கதைகள் காணப்படுகின்றன. அவ்வாறான கதையொன்று இராமனும் சீதையும் சகோதரர்களெனவும், தமது சிறிய தாயின் கொடுமைகளுக்கஞ்சி இலக்குமணனுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறுகிறது. தசரதனின் மறைவுக்குப் பின்னர், அவர்களது இளைய சகோதரன் இராமனிடம் வந்து அவனை நாட்டுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுக்கிறான். அஞ்ஞாதவாசக் காலம் முடியுமுன் திரும்ப மறுக்கிறான் இராமன். அவர்கள் நாடு திரும்பியதும், சீதை இராமனின் துணைவியாகவும் பட்டத்து இராணியாகவும் ஆகிறாள்.

சகோதரனுக்கும் சகோதரிக்குமிடையிலான இந்த உறவு அக்காலத்துச் சமூகம் மீதான கற்பிதங்கள் குறித்து பெருமளவு விளக்கத்தை எடுத்துக் கூறுகிறது. பௌத்த பிரதிகளினடிப்படையில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் தோற்றமானது சகோதரன் - சகோதரி இணைவினது வழிவந்ததாகவே நிறுவப்படுகிறது. இவ்வுறவு நேருண்மைப் பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை. இம்மரபுவழியில் ஏதோவொரு தனித்துவமான அம்சம் காணப்படுவதும், இதற்கும் ஏனையவற்றுக்குமிடையில் சமூக எல்லை வரையறையொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கலாமென்பதுவுமே இங்கு குறியீட்டுப் பொருளில் எடுத்துக்கூறப்படுகிறது.

எனவே, இராமாயணத்தின் பிரபலமான கதைவடிவமொன்று 'இராமாயணப் பரம்பரை' என ஒரு மரபினை முன்னிறுத்துகையில், இதேபோல வேறும் பல கதைவடிவங்கள் நிலவுவதாகவும், இது ஒற்றைப்படையான மரபல்ல, மாறாக வேறுபட்ட மக்கள் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு விதங்களிலும் மாற்றியமைக்கப்பட்ட கதைகளாலான நிலையற்ற மரபெனவும் மக்களுக்குக் கூறவேண்டியது அவசியமாகிறது. இப்படித்தான் பெரும்பாலான காவியங்கள் உருவாக்கப்படுகின்றன. கதைகள் சேகரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றமைக்கப்படுகின்றன. இந்நிலையற்ற, மாறுமியல்புடைய மரபினை வால்மீகியின் கதைவடிவம் குறித்தவொரு நோக்கில் ஒன்றமைக்குமாயின், பௌத்த மற்றும் ஜைனக் கதைவடிவங்கள் அதையே வேறோர் நோக்கில் ஒன்றமைக்கக் கூடும்.

இவைதவிர நாட்டுப்புற மற்றும் தென்கிழக்காசியக் கதைவடிவங்களும் நிலவுகின்றமை குறிப்பிடத்தகுந்தது. அவற்றுள் சிலதில், சீதை இராவணனின் மகளாகவும், இன்னும் சிலதில் இராவணனுடன் ஏதோவொரு வகையில் உறவு பூண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். கதை புதிய புதிய இடங்களுக்குப் பயணிக்க, அப்பகுதிகளின் சமூகக் கட்டமைப்பு, குடும்ப மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகள், நம்பிக்கைகள், அவற்றின் கட்டமைவு என்பன அப்பகுதி மக்கள் அக்கதையை தமது ஒழுக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்குமேற்ப தமக்கேயான முறையில் மீளுருவாக்கம் செய்வதில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.

இதுதான் இராமாயணத்தின் மிகவும் ஆர்வமூட்டும் பகுதி. கருத்தமர்வுகளின்போது அறிவுலகினர் பெரும்பாலும் பிரதியின் ஒருங்கிணைவிலும் வேறுபட்ட கதைவடிவங்களுக்கிடையே ஒத்த தன்மையைக் காண்பதிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். நோக்கின், இந்த ஒத்திசைவின்மையே அதிகம் சிக்கலானதும், பிரதிகளை மேலும் செறிவூட்டக்கூடியதும், இன்னும் ஆராயப்படவேண்டியதுமாகும். உதாரணமாக, ஜைனக் கதைவடிவமானது முக்கியமானதோர் மாற்று வடிவமாகும். பிராகிருதத்தில் எழுதப்பட்ட இது, Paumacharyam என அழைக்கப்படுகிறது. வால்மீகியின் வடிவத்தில் மேலோங்கிக் காணப்படும் பிராமணீய நோக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கினை இது முன்னிறுத்துகிறது. உண்மையில் வால்மீகியின் மூலக் கதைவடிவத்தின் தகவல்கள் குறித்து நாம் எதுவித முடிவுகளுக்கும் வர முடியாமலுமுள்ளது, காரணம் இன்று எம்மிடமிருக்கும் வால்மீகியின் கதைவடிவமானது ஆரம்பத்தில் உலகியல் சார்ந்ததாகவிருந்து பின்னர் காலப்போக்கில் பிராமணர்களால் புனிதப்படுத்தப்பட்ட ஓர் பிரதியேயாகும்.


ஜைனக் கதைவடிவத்து சீதை வால்மீகி வடிவத்துடன் ஒப்பிடப்படுகையில் எவ்வகையில் வேறுபடுகிறாள்?

ஜைனக் கதைவடிவத்து சீதை மிகவும் தற்றுணிவும் உறுதியுமுடையவள். இராவணன் சீதையைக் கடத்திச் செல்வது நிகழ்ந்தாலும் அதுவே மைய நிகழ்வல்ல. இராமனும் இலக்குமணனும் பல அரச சபைகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் வெறுமனவே காடுகளினூடு பயணிக்கவில்லை. எனவே, கடத்தலானது பல நிகழ்வுகளைக் கொண்ட கதையின் ஒரு பகுதி மாத்திரமே. கதையின் முழு குவிமையமுமே அதுவல்ல.

அடுத்தது, சீதைக்கும் இராவணனுக்குமான உறவும் வேடுபடுகிறது. இராவணன் ஒரு அரக்கனாகச் சித்தரிக்கப்படவில்லை. அவன் துறவறம் பூண்டு அதன் விளைவாக பல வரங்களையும் சக்திகளையும் பெற்றுக்கொண்ட ஒரு ஜைனன்/ சமணன். தனிப்பட்டளவில் அவன் சீதையின் பால் ஈர்க்கப்படுகிறானேயொழிய அவ்வுறவில் எவ்வித வக்கிரம் நிறை காமவுணர்வோ, கொடூரமோ காணப்படவில்லை. தனது காதலுக்கு சீதையிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கும் அவன், அவள் அவ்வாறு நடந்துகொள்ளாததால் ஏமாற்றமடைகிறான். சீதை தான் அஞ்சி நடுங்கத்தக்க ஒரு அரக்கனை எதிர்கொள்ளவில்லை. மாறாக, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முகங்கொடுப்பதைப்போலவே அவள் நடந்துகொள்கிறாள். அவனுக்குச் சாதகமாகப் பதிலளிப்பதற்கும் மறுப்பதற்குமான உரிமை அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இறுதியில், இராமனும் தசரதனும் சமண முனிவர்களாகின்றனர். இராவணனைக் கொல்வது இலக்குமணனேயொழிய இராமனல்ல. ஒரு உயிரைப் பறித்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியிராத இராமன் தொடர்ந்தும் கறைபடியாதவனாயிருக்கிறான். வால்மீகி இராமாயணத்தைப் போலல்லாது, சத்திரிய அறத்துக்கு மாறாக, சமண அறமே இங்கு இறுதியில் வெல்கிறது. இக்கதைவடிவத்தில் சீதை முக்கிய கதாபாத்திரமாகவுமில்லை, அதேவேளை முக்கியமற்றவளாகவுமில்லை.


இதுவிடயத்தில் துளசிதாசரின் இராமாயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பெண்களைக் கருத்திற்கொள்கையில், துளசிதாசரின் இராமாயண வடிவமானது மிகவும் மனவழுத்தத்துக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பெண்களும் சூத்திரரும் அடிக்கப்பட/ வதைக்கப்பட வேண்டியவர்கள் என்ற புகழ்பெற்ற அவரது வரிகளுக்குமப்பால் பெண்களின் இயற்கை குறித்து விசனத்துக்குட்படுத்தும் வேறும் பல விமர்சனங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. துளசிதாசரின் சீதை பலவீனமானவளாக, பின்னிற்பவளாகக் காணப்படும் அதேவேளை புனிதத்துவத்தை மேற்கொணரும் முயற்சியில் அவரது கதாபாத்திரங்கள் பெருமளவு இறுகிய மரபார்ந்தவையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வால்மீகியின் கதைவடிவத்திலிருந்தான மிக முக்கிய வேறுபாடெனப்படுவது, பொய்த்தோற்றங்களில்/ மாயையில் ஏமாறும், மருட்சி மிக்கவளாக சீதை சித்தரிக்கப்படும் விதமேயாகும்.


ஒரு கதை அதன் காவிய வடிவத்திலிருந்து தெய்வத்தன்மையால் ஆக்கிரமிக்கப்பட்டதாக மாற்றமுறுவது குறித்து..?

அயோத்தி மற்றும் இலங்கை பற்றிய ஏராளமான கதைகள் சுற்றிலும் வழக்கிலிருந்து வருகின்றன. அவையனைத்துமிணைந்தே இராம கதையாக உருவெடுத்துள்ளன. ஏறத்தாழ கிறிஸ்து வருடத்துக்கு முந்தைய, வெகு நெருங்கிய நூற்றாண்டுகளில் (வீர)நாயகன் கடவுளின் திருவவதாரமாக உருவகிக்கப்படும் முதலாவது மாற்றம் இடம்பெற்றது. இவ்வாறே இந்தியக் காவியங்கள் கிரேக்க காவியங்களிலிருந்து வேறுபடவாரம்பித்தன. கிரேக்க காவியங்களில் கடவுளர் வீரர்களுடன் சேர்ந்து பங்குபற்றினர்; இந்தியக் காவியங்களிலோ - அவை மீளெழுதப்பட்ட காலகட்டத்தில், நாயகர்கள் கடவுளரின் மறு அவதாரமாக்கப்பட்டனர்.

இவ்வாறாக, இந்தியக் காவியங்கள் நிலைமாற்றத்துக்குள்ளாகின. சபைகளிலும், விழாக்களிலும் எடுத்துக்கூறப்பட்ட வீர காவியங்கள் பிரதிகள் மீளெழுதப்பட்டு நாயகர்கள் புனிதமான கதாபாத்திரங்களாக மாற்றமடைந்ததை இயல்பென ஏற்றுக்கொண்டன. இருந்தும், புராதன கதைவடிவத்தின் சில எச்சங்கள் நவீன பிரதிகளிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, வாலியை இராமன் முதுகுப்புறமாக அம்பெய்து வீழ்த்துவது, பிந்தைய காலங்களில் இழிவானதாகக் கருதப்பட்டாலும் (18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஓவியங்களில் இராமன் வாலியின் மார்பில் அம்பெய்து வீழ்த்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளமை), யுத்தத்தின் விதிகள் வேறுவிதமாக வரையறுக்கப்பட்டிருந்திருக்கக்கூடிய ஆரம்ப காலங்களில் அவ்வாறாக கருதப்படாமலுமிருந்திருக்கலாம்.


பெண்களின் கற்பனையில் சீதை பற்றிய உருவகம் ஏற்படுத்தும் தொடர்ச்சியான பாதிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சீதை மிக சுவாரசியமான ஒரு உருவகம். அவளொரு சராசரி சத்திரிய பெண்ணல்ல. அவளது பிறப்பு - நிலத்தை உழுகையில் ஜனகனால் கண்டறியப்பட்டதால் - அசாதாரணமானது. அவள் சத்திரியப் பெண்ணுக்குரிய விழுமியங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்துகொள்வாளா இல்லையா என எவராலும் உறுதிகொள்ள முடியாதிருந்த நிலையில், இறுதியில், அத்தனை பரீட்சிப்புகள் இன்னல்களையும் கடந்து, மீளவும் பூமியன்னையை அடையுமிடத்து, அவளதேயான விதத்தில் அவள் வெல்கிறாளென்றே கூறவேண்டும். 'உன்னால் நானடைந்தது போதும்' என்ற தோரணையுடன் அவள் தனது தோற்றுவாயை நாடித் திரும்புகிறாள்.


ஏதோவொரு வித எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக தீக்குளித்து மரணிக்கும் எல்லாப் பெண்களையும் போலவா?

சீதையைக் கருத்திற்கொள்ளுமிடத்து, இந்நிகழ்வானது வெறும் தற்கொலை அல்லது ஏதேனுமொன்றை நிறுவுவதென்பதை விடவும் சற்று மேலானது. 'நான் மாறுபட்டவள்; மண்ணிலிருந்து பிறந்தவள்; இவையனைத்தினூடாகவும் நான் வாழ்ந்திருந்து என்னை நிரூபித்து விட்டேன், இப்போது எனதேயான, எனக்குரித்தான இடத்துக்கு நான் திரும்பிச் செல்கிறேன்; நான் உனக்குச் சொந்தமானவளல்ல' என்பதான எழுதப்படாத, பேசப்படாத கூற்றை அது எடுத்துரைக்கிறது. ஆழுணர்வார்ந்ததாயினும், இது பரந்த கவனிப்புக்குரியதொன்றெனவே நான் நினைக்கிறேன்.

சீதையின் பிரபல்யம், ஒரு வகையில், வழக்கத்திலுள்ள வேறும் பல பெண் உருவகங்களையொத்த - முன்னுதாரணமான 'பெண்'ணென்ற அவளது விம்பத்தின் வழிவந்ததாகவிருப்பினும், இன்னுமொரு பார்வையில் - ஆழ்நோக்கில் - தான் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து தனக்கேயான தனித்துவமான வகையில் விடுபடலைக் கண்டடைந்தவளாக அவளைக் காண்கின்றமையே பெண்கள் மத்தியில் அவள் பிரபலமடைந்தமைக்கு காரணமெனலாம். இந்தவகையில் சீதை ஒரு compensatory model ஆகவும் வெளிப்படுகிறாள்.


அக்னிச் சோதனையின் குறிப்பிடத்தக்க அம்சம் எது?

அது பல குறியீட்டமைவுகளைக் கொண்டது. நெருப்பு ஒரு தூய்மையாக்கி; சடங்குகள் அதனைச் சுற்றியே இடம்பெறுகின்றன. மாசடைந்து கொண்டிருக்கும் இறந்த உடல் நெருப்பிலிடப்படுவதால் தூய்மையாகிறது; ஆன்மா விடுதலையடைகிறது. அதேபோல, மிகத் தூய்மையான ஒரு பெண் மட்டுமே நெருப்பிலிருந்து தப்பிப் பிழைப்பாள். சீதையைப் பொறுத்தவரை அது அவளது கற்பினைப் பரிசோதிக்கும் முயற்சி. புராதன இந்திய சமூகங்களில் நீதியை நிலைநிறுத்தும் - குற்றத்தை அல்லது நிரபராதியென்பதை நிரூபிக்கும் - ஒரு சோதனையாக அக்னிப் பரிசோதனைக்கு முக்கிய இடமிருந்து வந்தது. சில பின்தங்கிய பிரதேசங்களில் அது இன்னமும் புழக்கத்திலிருந்து வருகிறது.

பிற்காலக் கருத்துருவாக்கமான 'சதி'யுடன் இந்த அக்னிப் பரிசோதனை ஏதோவொரு விதத்தில் உறவுகொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். கணவரின் சிதையில் தானும் வீழ்வதன் வாயிலாக அவருக்குத் தான் நேர்மையாகவிருப்பதை நிரூபிக்க/ எடுத்துக் காட்ட முயல்கிறாளா அந்தப் பெண்? ஒரு பெண்ணின் கற்பினைப் பரிசோதிக்கும் வழிமுறையாக தீக்குளிக்கும் வழக்கத்தினை எடுத்துக்கொள்வது வேதகாலத்துப் பிரதிகளில் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆர்வமூட்டும் வகையில், முதலாயிரமாண்டுகளின் இறுதிப் பகுதியில் தோன்றிய இராமாயணக் கதைவடிவங்களில் அக்னிப் பரிசோதனையானது ஒரு மாறுபட்ட வடிவமெடுப்பதுடன், இதன் தாக்கம் துளசிதாசரின் இராமாயணத்திலும் பிரதிபலிப்பதைக் காணலாம். சீதை கடத்தப்படுவதற்கு முன்பு, இப்போது கடவுளின் திருவவதாரமாக்கப்பட்ட இராமன் அவளை ஒரு அக்னிச் சடங்குக்கு உள்ளாக்குகிறான். அதன் வாயிலாக உண்மையான சீதை பாதுகாப்பாக இருக்கும் அதேவேளை போலி சீதையே உலகில் தொடர்ந்திருந்து கடத்தல் தொடக்கம் அனைத்து இன்னல்களுக்கும் ஆளாகிறாள். இராமன் இராவணனை வென்றதன் பிற்பாடு, மீளவும் உண்மையான சீதை உலகுக்குத் திரும்புமுகமாகவே அக்னிச் சோதனை இடம்பெறுகிறது.

வெளிப்படையான விளக்கங்களுக்குமப்பால் இது அத்வைத தத்துவத்தையும், 'மாயை' என்ற கருத்துருவாக்கத்தையும் சார்ந்து இயங்குவது குறிப்பிடத்தக்கது. கதையில் இடம்பெற்றிருக்கும் இம்மாற்றம், சீதை அக்னிச் சோதனைக்கு ஆளாக வேண்டி வந்ததை கேள்வியுடன் எதிர்கொள்ள வைக்கிறது. இந்த மாற்றத்தின் நோக்கம் - 'சதி', புறவய நோக்கில் இதனையொத்ததாக இருந்தாலும், உண்மையில் பலியிடும் வழக்கமேயொழிய ஒரு சோதனையல்ல என்பதை எடுத்துக்காட்டவும், இரண்டுக்குமிடையே குழப்பங்கள் ஏற்படாமல் தடுப்பதற்குமா? அல்லது, சக்தி வழிபாட்டு முறையின் கீழ் பெண் தெய்வங்கள் புகழ்பெற்று வருகையில், சீதையும் அவ்வாறு - பெண் தெய்வமாகக் - கருதப்பட்டு விடக்கூடாதென்ற காரணத்தாலா?



நன்றி:
Traditions versus Misconceptions: Romila Thapar
Published by: Social Scientists' Association, 1997
Reproduced from Manushi, Sep-Dec 1987
(மொழியாக்கம்: நிவேதா)

Friday, June 20, 2008

பிர‌திக‌ளை பெண்ணாய் மீள்வாசித்த‌ல்

-Susan Schibanoff ன் 'Taking the gold out of Egypt' ஐ முன்வைத்து

The only phenomenon which, in all parts of the world, seems to be linked with the appearance of writing... is the establishment of hierarchical societies, consisting of masters and slaves and where one part of the population is made to work for the other part... And when we consider the first uses to which writing was put, it would seem clear that it was connected first and foremost with power... exercised by some men over other men and over worldly possessions.
(Claude Levi-Strauss)


அறிவும் கல்வியும் இன்றும் ஓரளவு வசதியானவர்களைத்தான் சார்ந்திருக்கின்றன என்றார் அண்மையில் சந்தித்த எழுத்தாளரொருவர். வாசிக்கவும் எழுதவும் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நல்ல புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தானடைந்த சிரமங்களை நினைவுகூரக் கேட்க முடிந்தது இன்னுமொருவரிடமிருந்து. அறிவை உடனுக்குடன் புதுப்பிக்க நூலகங்களை நம்பிப் பயனில்லை. புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளின் விலையோ ஒரு சராசரி வாசகரின் இயலுமையைக் கடந்து எட்டாத் தொலைவில். இந்தியாவிலிருந்து வரும் தமிழ்ப் பிரதிகளுக்கே இந்நிலையெனில் ஆங்கில/ வெளிநாடுகளிலிருந்துவரும் புத்தகங்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லை.

அறிவும் கலையும் எந்தளவு செல்வத்தில் தங்கியிருக்கின்றனவோ அதேபோல அல்லது அதைவிடவும் இறுக்கமாக எழுத்தும் வாசிப்பும் அதிகாரத்தோடு பிணைந்து நிற்கின்றன. படைப்பென்பது செல்வமும் அதிகாரமும் ஒன்றையொன்று இடைவெட்டிக் கொள்ளும் புள்ளியாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. பெண்ணியப் பிரதிகளும் விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்களின் இலக்கிய எழுச்சியும் இந்த இறுகிய பனிப்பாளத்தைத் தகர்த்தெறிய முயற்சிக்கினும், மரபுகளின் பெயராலும், ஏலவே நிறுவப்பட்ட செவ்விலக்கிய மேற்கோள்களின் துணையுடனும் இவ்வாதிக்கமானது தொடர்ந்தும் வன்மையாக நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Susan Schibanoff தனது 'Taking the gold out of Egypt' எனும் கட்டுரையில் - கட்டுக்களையும் மீறித் தெறிக்கும் தீவிரமான பெண் வெறுப்புடன் கூடிய - பேரிலக்கியங்களையும் பெரும் படைப்பாளிகளையும் ஒரு பெண்ணாய் எதிர்கொள்ள நேர்வதன் துன்பியல் அனுபவத்தை எடுத்துக் கூறுகிறார். மத்தியகாலப் படைப்புகளில் மேலோங்கிக் காணப்படும் misogyny (பெண் வெறுப்பு?) பெண் வாசகர்களை மிகவும் மனவுளைச்சலுக்காளாக்கக் கூடியது. ஆண்களை மையப்படுத்திய படைப்பொன்றில் பெண்களுக்கெதிரான/ பெண்களை இழிநிலைக்குட்படுத்திய வாசகங்கள் இடம்பெறுவது ஆண் வாசகர்களைப் பொறுத்தவரை ஒருவித உற்சாகப்படுத்தலாகவும், நிறைவேறாமற் போன காதலொன்றின் வேதனைப் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆறுதலாகவும் அமையும் அதேவேளை அப்படைப்பு ஒரு பெண்ணின் மனதில் நேரெதிர் உணர்வுகளை ஏற்றிச் செல்கிறது. பதினான்கு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் படைப்பாளிகளின் முக்கிய இலக்கு ஆண்களாகவேயிருந்தமையினால் பெண்களுக்கெதிரான வாசகங்கள் மிகச் சாதாரணமாக இடம்பெற்றாலும், சிலர் அவற்றுக்காக பெண் வாசகர்களிடம் நாடகப் பாங்கில் மன்னிப்புக் கேட்கும் வழமையுமிருந்தது. அவ்வாறு மன்னிப்புக் கேட்பவர்களும் அச்சொற்றொடர்கள் தங்களால் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல, மாறாக மாமேதைகளாலும் புகழ்பெற்ற எழுத்தாளர்களாலும் காலங்காலமாக வழிமொழியப்பட்டு வந்தவையென்பதையும் மறக்காமல் குறிப்பிட்டு, ஆகவே அத்தகைய மாமனிதர்களால் எடுத்துரைக்கப்பட்ட வாசகங்கள் ஒருபோதும் பொய்த்துப் போவதில்லை ('He could not believe that so true a man and noble a philosopher as 'Socrates' should write otherwise than truth'); அழிந்துவிடுவதுமில்லை; விரும்பியோ விரும்பாமலோ தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டவாறேயிருக்குமெனவும் மறைமுகமாக நிறுவத்தலைப்பட்டு விடுகின்றனர். Chaucer, Jean de Meun போன்ற அனைவரும் இதில் உள்ளடக்கம்.

Implicit in this self-excuse by source is the threat that the written texts of anti-feminism are 'fixed': they are autonomous entities that may be neither altered nor discontinued. The female reader is to understand, then, that when writers must choose between pleasing her and venerating the written traditions of anti-feminism created by wise men of the past and noble ancient philosophers, patriarchy has first claim on their loyalty.
(pg223. - Feminist Readings in Middle English Literature: Edited by Ruth Evans and Lesley Johnson)


இலக்கியவுலகில் நிறுவப்பட்டுவிட்டதோர் பாரம்பரியத்தை எடுத்தாளுகின்றன இவ்வரிகள். மேலைத்தேய இலக்கியங்களில் மட்டுமல்ல, இங்கும் இத்தகைய ஆனானப்பட்ட பாரம்பரியங்கள் - பாரதியும் திருவள்ளுவரும் கூறுவது வேதவாக்கியமென்பதாய் - இன்றும் நடைமுறையிலுண்டு. இப்பாரம்பரியங்கள் ஒரு பெண் வாசகர் மீது அதீதமான அழுத்தத்தைப் பிரயோகித்து அவளைப் பலவீனமானவளாக்குகின்றன. மேலும், அவள் ஒரு பெண்ணாகவல்லாது ஆணாக அப்பிரதியை அணுகவும் நிர்ப்பந்திக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் தான் ஒரு பெண்ணாய் படைப்பொன்றை எதிர்கொள்ளவேண்டியதன் தேவையும், அதன் அசாத்தியமும் புலப்படத் தொடங்குகிறது. பழைய பிரதிகளைக் கலைத்துப்போட்டு அவற்றை மீள்வாசிப்புக்குட்படுத்தவேண்டியது இவ்விடத்தே அவசியமாகின்றது. இந்த மீள்வாசிப்பென்பது என்ன, அதை எவ்வாறு மேற்கொள்வதென்பது ஒரு முக்கியமான, ஆராயப்படவேண்டிய விடயம்.

Susan Schibanoff மேற்கொள்ளும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அவதானிப்பு, எழுத்தறிவுக்கும் பெண்களின் சுயசார்புக்குமிடையிலான முரண்பாடு. மேலோட்டமான நோக்கில் எழுத்தறிவு அல்லது கல்வியறிவு ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக்கும் தற்றுணிவுக்கும் வழிவகுக்கிறதென்ற முடிவை வந்தடைகிறோம். ஆனால், யதார்த்தமும் சான்றுகளும் இதற்கு நேர்மாறானதாகவே இருந்து வந்திருக்கின்றன. எழுத்தறிவற்ற பெண்களை விடவும் அதிக பிரதிகளை கற்றறிந்த பெண் அன்றாட வாழ்வில் பின்னிற்கவே செய்கிறாள். இதற்கான காரணத்தைத் தேடும் Susan Schibanoff மறுமலர்ச்சிக் காலத்தின் பாரிய சமூக மாற்றங்களினிடத்து அதைக் கண்டடைகிறார். தீவிர பழமைவாதிகள் கூட பெண் கல்வியைத் தீவிரமாக ஆதரித்த காலமது. எழுத்தறிவு பெறுவதற்கும், கற்பதற்கும் அதிக வாய்ப்பும் பெண்களுக்குக் கிடைத்து வந்தது. ஆனால், தமது எழுத்தறிவினால் முதன்மைப் பயன்பெறுபவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியுடன் இந்த முன்னேற்றத்தையும் நாம் மீள்வாசிப்புச் செய்யவேண்டும். பெண்களின் அதிகரித்த எழுத்தறிவு வீதமானது இன்னுமின்னும் அதிகமாக ஆண்வயப்பட்ட பிரதிகளுக்கு பெண்களை நெருக்கமாக்கியதேயொழிய (மாற்றுப் பிரதிகள் அக்காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பட்டிருந்தன) சுயசிந்தனையையும் தேடுதலையும் வளர்ப்பதற்கு தவறிவிட்டதென்றே கூறவேண்டும். படைப்புகள் பொதுவாக ஆண்களின் பார்வையில் நாணம், பணிவு, 'கற்பு'டன் கூடிய இலட்சியப் பெண்ணொருத்தியை வடிப்பதிலேயே குறியாயிருந்தன. மறுமலர்ச்சிக் காலத்து கல்விசார் எழுத்தாளர்களும் பெண்கள் வாசிக்கப் பழகுவதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தினர், அறிவதற்காகவல்ல, நல்ல பெண்களாவதற்காக. அந்தளவு வாசிப்பு பெண்களை அறிவுப்பாதையிலல்லாது, 'சிறந்த' பெண்களாவதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. அதேவேளை, எழுத்தறிவானது தொடர்ந்தும் அதிகாரஞ்செலுத்தும், பலவீனப்படுத்தும் வினைத்திறனான உத்தியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டிருந்தது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுப் பெண்களின் சமூக நிலையானது நலிவடைந்தும், அவர்களது சமூகப் பங்களிப்பு மிகக் குறுகியும் போனமைக்கு அதிகரித்த எழுத்தறிவு வீதமும் ஒரு காரணமாகலாம். இன்னுமொரு விதத்தில் இந்த எழுத்தறிவு சில பெண்களுக்கு பெண்ணிய எதிர்ப்புப் பிரதிகளை மீள்வாசிப்புச் செய்யவும், அதனூடாகத் தமதான வரலாற்றைக் கட்டியெழுப்பவும் உதவிபுரிந்திருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது மிகக் குறைவே.

ஒரு பெண்ணாய் வாசிப்பது/ பிரதியொன்றை அணுகுவதென்பது வெறுமனவே பிரதியும் வாசிப்பும் சார்ந்தது மட்டுமல்ல. Susan Schibanoff கூறுவது போல, சக பெண்களுடன் உரையாடுவதும், அன்றாடப் பெண்களிடமிருந்து தான் கேட்டதற்கும், பெண்களைப் பற்றி ஆண்கள் எழுதி வைத்திருப்பதற்குமிடையிலான முரண்பாடுகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் புள்ளியிலிருந்துதான் பெண்ணிய வாசிப்பு ஆரம்பமாகிறது. இதுதான் முறையான மீள்வாசிப்பும். விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், கலந்துரையாடற் பட்டறைகள் போன்ற வாய்வழிப் பெண்ணிய மரபு இந்த மீள்வாசிப்பில்/ பெண்ணாய் வாசிப்பதில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

Christine de Pisan did likewise and found it just hard to reconcile what she heard from them with the written opinions of male authorities on women's base and immoral character. If one of the mainsprings which motivated Christine's rereadings was the conflict between what she heard from women and what she read by men, then perhaps it is well for us to remember that modern feminist oral traditions have a vital role to play in the otherwise intellectual and literate act of rereading, reading as women.

முன்கூட்டியே நிறுவப்பட்டுவிட்ட ஆண்மையவாத படைப்புகளை மீள்வாசிப்புச் செய்வதனூடாக எமக்கான வரலாற்றைக் கண்டடைவதன் மூலமே பெண்ணிய வாசிப்புச் சாத்தியமாகின்றதெனலாம்.


(Susan Schibanoff இன் 'Taking the gold out of Egypt' கட்டுரையைத் தழுவி.. நீண்ட கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்கள் மட்டும். நன்றி: Feminist Readings in Middle English Literature: Edited by Ruth Evans and Lesley Johnson )
Image: Christine de Pisan lecturing to a group of men

Thursday, June 12, 2008

மனப்பாழ்வெளியினூடொரு தேசாந்திரியாய்..!!

- 'சஞ்சாரம்' படமும் சில குறிப்புகளும்


ரஷ்யக் கலாசார மையத்தில் Women and Media Collective னரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு திரைப்பட விழா.. ஓரினப் பாலுறவாளர்கள் பற்றிய மலையாளத் திரைப்படம் 'சஞ்சாரம்'. Fire போன்ற இன்னபிற படங்களைப்போல அதிகம் வர்த்தகமயப்படுத்தப்படாத படம். மிகச் சுருக்கமாகக் கதையைச் சொல்வதானால்:

காடு, நீர்வீழ்ச்சி, ஆறுகளுடன் கூடிய ஒரு அழகான கிராமம். கிரண், டிலைலா - சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகள். டிலைலா தந்தையை இழந்தவள், அம்மாவுடனும், அம்மம்மாவுடனும் வாழ்ந்து வருகிறாள். கிரண் ஒரு கவிஞை. காது கூட குத்தாமல், நகைகள் அணிய பிரியப்படாமல் தனது சுயவிருப்புடன் வளர்ந்தவள். அவளது அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு அப்பா அவளுக்கு வாய்த்திருக்கிறார். வளரும் பருவத்தில் கிரணுக்கு டிலைலா மீது ஈர்ப்பு வருகிறது. இவர்களது வகுப்பைச் சேர்ந்த ஒருவனும் டிலைலாவுக்குப் பின்னே அலைகிறான். டிலைலாவை நெருங்க கிரணின் உதவியை நாடும் அவன் மூலம் தனது ஈர்ப்பை அவளுக்கு வெளிப்படுத்த கிரணால் முடிகிறது. டிலைலாவும் சம்மதிக்க, அவர்களுக்கிடையிலான நெருக்கம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் அவர்களது வகுப்பாசிரியைக்கு இது தெரியவருவதுடன், டிலைலாவில் நாட்டம் கொண்டிருந்த அந்த மாணவனுக்கும் இது தெரியவர, டிலைலாவின் தாயிடம் உண்மையைக் கூறிவிடுகிறான். அதிர்ச்சியடைந்த டிலைலாவின் அம்மா மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க அவசரப்படுகிறாள். டிலைலாவும் தமக்கிடையிலான இந்த உறவு சமூகத்தாலும், ஏன் அம்மாவாலுமே கூட ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லையென அறிந்து, திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். இதுதெரியவந்த கிரண் வீட்டை விட்டு வெளியேறுவோமென முடிவெடுத்தாலும், டிலைலா அதற்கு உடன்படவில்லை. இறுதியில், டிலைலாவுக்குத் திருமணம் நடைபெறுகிறது, முதலில் தற்கொலைக்கு முயற்சிக்கும் கிரண் பின் மனம் மாறி, தன் வாழ்வின் போக்கைத் தானே தீர்மானிப்பவளாக மாறுகிறாள்.

நிகழ்வு ஒருங்கமைப்பாளர்கள் மீது ஏராளமான விசனம், சிங்கள மொழியில் மட்டும் subtitle போட்டது, கலந்துரையாடல் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றதென. தம்மருகிலிருக்கும் சிறுபான்மையினரைப் புறக்கணித்துக் கொண்டு எப்படி விளிம்புநிலைப்படுத்தப்பட்ட இன்னுமொரு குழுமத்தினரைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட முடிகிறது, அதனூடாக எத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டுமென எதிர்பார்க்கிறார்களென்பதும்.. அவற்றைப் புறந்தள்ளி, படத்தைப் பார்த்தாலும், இத்தகைய படங்களை, அல்லது நாவல்களை எடுத்துக்கொண்டால் சிந்தனையில் இடறுமொரு விடயம், ஓரினப் பாலுறவிலும் ஆண் - பெண் என்ற எதிர்நிலைகள் கட்டமைக்கப்படுவது ஏன் என்பது. உடலமைப்பில் - அதாவது பால் ரீதியாக இருவரும் பெண்களாயிருந்தாலும், அங்கு ஒருவர் ஆண் என்ற - பாலினக் கட்டமைப்பினடிப்படையிலும் (ஆணாக உடையுடுத்துவது, தலைமை தாங்குவது...) மற்றவர் பெண்ணாகவும் (பயந்த சுபாவமுடைய, அழகாக வெளிக்கிடுவதில் நாட்டமுடைய, கொஞ்சம் பின்னிற்கும்) காட்டப்படுவது ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஆண் என்ற பாத்திரத்தையும், மற்றுமொருவர் பெண் என்ற பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. ஓரினப் பாலுறவிலும் இந்த ஆண்-பெண் எதிர்நிலை கட்டமைக்கப்படுவது ஊடக மற்றும் mainstream னரின் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வா அல்லது இயற்கையானதா என்ற சந்தேகம் எழுகிறது. நண்பரொருவர் அதுவே இயற்கையாகவிருக்கலாம் என்றார். ஆனாலும்.., அதது அவர்களவர்களால் தான் பேசப்பட்டாக வேண்டும். அப்போதுதான் அது நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கக்கூடும். நாம் எமது பாட்டில் சிந்திப்பதும், முடிவெடுப்பதும் கடைசியில் பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்க முனைந்ததைப்போல, அவ்விளிம்புநிலைப்படுத்தப்பட்டவர்கள் மீதான மற்றுமொரு வன்முறையாகத்தான் அமையும். நாங்கள் செய்யக்கூடியதெல்லாம் இப்படியும் விடயங்களிருக்கின்றன என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைவதும், அவர்களையும் எம்மைப்போன்ற அதே உணர்வுகள் கொண்ட மனிதர்களாக மதிக்கும் மனப்பக்குவத்தை எம் ஒவ்வொருவரின் மனதிலும் வளர்த்துக் கொள்வதாகுமென்று நினைக்கிறேன்.

......................

கலந்துரையாடலின் போது ஒருங்கமைப்பாளர்களுள் ஒருவர் இத்தகைய சமூக நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த என்ன செய்யலாமென நினைக்கிறீர்களெனக் கேட்டார். பார்வையாளரொருவர் வேடிக்கையாக, வருடத்துக்கு இப்படி இரண்டு திரைப்பட விழாக்களை ஒங்குபடுத்துங்கள் என்றுகூற, அரங்கு முழுதும் சிரிப்பலை பரவியது, என்ற ஒரு உழுத்துப்போன சொற்றொடரை எடுத்தெறிந்து கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.

சமூக மாற்றம் அல்லது விழிப்புணர்வு.. (தனியே ஓரினப் பாலுறவாளர்கள் பற்றி மட்டுமல்ல, இன்னபிற controversial issues அனைத்தையும் பற்றிய) இதைக் கொண்டுவர என்னசெய்யலாமென்பது பொதுவாக இத்தகைய விடயங்களில் ஆர்வமுடைய, சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய முக்கியமான கேள்வி. அதிகம் பகிரங்கமாகப் பேசப்படாத இவ்விடயங்களை, விளிம்புநிலை மக்களின் குரலை எழுத்தில் பதிவது ஒரு வழி, திரைப்படங்கள் போன்ற காட்சியூடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது இன்னொன்று, அடுத்தது களத்திலிறங்குவது. இவையொவ்வொன்றும் தமதேயான வழிமுறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த துணைநிற்கின்றன. களத்திலிறங்குவதற்கு முதல் எழுதி வைக்கவேண்டும், ஆவணமாகப் பதியவேண்டுமென சொல்லித்திரிவதும், எழுதிக்கிழித்து என்ன பிரயோசனம் செயற்பட மட்டுமே வேண்டுமெனக் கூறுவதும் இரண்டும் பயனற்றவை. தண்டவாளங்கள் எப்போதும் சமாந்தரமாகப் பயணித்தாக வேண்டும். ஆவணங்களும் பதிவுகளும் முறையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதும், மக்கள் மத்தியில் இயங்கும் இயக்கங்களின் செயற்பாடுகள் பதிவுசெய்யப்படுவதுமென எழுத்தும் செயற்பாடும் தமக்கிடையே இடையீடு செய்தபடியிருந்தால் மட்டுமே ஏதேனுமொரு சிறிய மாற்றமாவது ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவும். இரண்டும் ஒரே நபரால் நிறைவேற்றப்படுவதும், தமக்கு விருப்பமான, சாத்தியமான வழிவகையைத் தேர்ந்துகொண்டு தன்னாலான பங்களிப்பை வழங்குவதும் அவரவரது தெரிவு. இதில் எந்தவொரு வழிமுறையும் நூற்றுக்கு நூறு வீதம் சரியானதுமல்ல, நூறுவீதம் சமூக மாற்றத்துக்கான சாத்தியக்கூற்றினைத் தனக்குள் கொண்டதுமல்ல.

ஆனால், இந்தக் களத்திலிறங்குவது அல்லது செயற்படுவதென்றால் என்னவென்பது அடுத்த கேள்வி. ஏதோவொரு அமைப்பில் சேர்ந்துகொண்டு விடுதலை வேண்டும், சமத்துவம் வேண்டுமென கொடிகளும், பதாகைகளும் தூக்கிக்கொண்டு திரிந்தாற்போல சாத்தியமாகக்கூடிய விடயங்களல்ல இவை. சமூகமென்பது தனிமனிதர்களின் தொகுதி. தனிமனித விழிப்புணர்வு ஏற்படாத ஓரிடத்தில் சமூக மாற்றமும் சாத்தியமில்லை. எந்தவொரு விடயமும் முதலில் தனிமனிதனிலிருந்து ஆரம்பித்தாக வேண்டும்.

ஒரு மனிதன் தனக்குத்தானே நேர்மையுடையவனாயிருந்து, எந்தவொருவரையும் அடிமைப்படுத்தாமலோ, காயப்படுத்தாமலோ, அதிகபட்ச புரிந்துணர்வுடன் உறவுகளை அணுகி, தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அவரவரது பலவீனங்களுடன், சக மனிதப்பிறவியாகக் கருதி நேசிப்பானேயாகில் அந்த மனிதனிலிருந்துதான் மாற்றம் தனது முதற்காலடியை எடுத்துவைக்கத் தொடங்குகிறது. தனது தாயை, சகோதரியை, மனைவியை நேசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத ஒருவனால் பெண் விடுதலை அல்லது சமத்துவம் - அவன் என்னதான் தெருவிலிறங்கி போராடினாலும், ஆயிரமாயிரம் பெண்களைக் 'கரையேற்றினாலும்' - சாத்தியப்படக்கூடுமாவென்பது சந்தேகமே. அதேவேளை இந்தப் 'பெண்ணியம், ஆண் மேலாதிக்கம், தந்தை வழி சமுதாயம்' போன்ற பெரிய பெரிய வார்த்தைகளின் அர்த்தம் தெரியாத ஒரு சாதாரண ஆண் தனது குடும்பத்தினருடன், சக பெண்களுடன் நடந்துகொள்ளும் முறையினூடாக தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய ஆண்களின் மனதில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், அதுவே முக்கியமானதும். அவனிலிருந்து அவனைச் சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்களென வியாபிக்கும் அவ்வதிர்வு காலப்போக்கில் மிக இயல்பானவொன்றாக ஏற்றுக்கொள்ளப்படவும் கூடும். அதேபோல, 'எனக்காக இதைச் செய், அதைச் செய், இதைப்போடு, அதைப்போடு, இப்பதான் வடிவாயிருக்கிறாய், இல்லாட்டி அசிங்கமாயிருப்பாய்,' என்றெல்லாம் கமெண்ட் அடித்துக்கொண்டிராமல், 'இவனோடு பேசாதே, அவனோடு பழகாதே, என்னை மட்டுமே நினை, எனக்காக மட்டுமே கவலைப்படு,' என்று அதிகாரம் செலுத்தாமல், 'நீ நீயாக இருப்பதைத்தான் நேசிக்கிறேன்' என்றுகூறும் மனப்பக்குவம் வாய்த்திருக்கும் ஒரு ஆணால் களத்திலிறங்கிப் போராடுபவனை விட அதிகம் சாதித்துவிட முடியும்.

ஆதிக்கம் என்பது எப்படி ஆண்களின் உயிரோடும் உடலோடும் வேரோடிக் காணப்படுகிறதோ அதேபோலத்தான் அடிமைத்தனமும் பெண்களும்.. நகை நட்டணிந்துகொண்டு, 'வடிவாக' வெளிக்கிடுவதில் பிரியமுடைய ஒரு பெண் எப்படி தன்னை விடுதலையடைந்தவளாக அல்லது அடைய முற்படுபவளாக, பிரயாசைப்படுபவளாகக் காட்டிக்கொள்ள முடியுமென்பது குறித்து சந்தேகம் கொள்கிறேன். அது உடலைக் கொண்டாடுவதென யாரும் கூறி தமக்குள் ஆசுவாசப்படலாம். ஆனால், கொண்டாடுவதற்கும் கொண்டாட்டத்துக்குத் தயார்படுத்துவதற்குமிடையே வேறுபாடுகளிருக்கின்றன. உடலைக் கொண்டாடுவதென்பது உடலை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதும், நேசிப்பதும். அதாவது, மற்றுமொரு பார்வையில் தனது நிர்வாணத்தை நேசிப்பது. என்று காதில் துளை குத்தி தோடு அணியவும், மூக்கில் மூக்குத்தி அணியவும் தொடங்குகிறோமோ அன்று எமது உடலின் இயல்பைக் குலைக்கிறோம், அதைச் சிதைத்து 'இதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு' என்று கட்டமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒரு விம்பத்தை அவசர அவசரமாக அணிந்து அலங்கரித்துக் கொள்கிறோம். இந்நிலையில் பெண்ணுடம்பு பண்டமயமாக்கப்படுவதையும், போகப்பொருளாக எடுத்து நோக்கப்படுவதையும் எப்படிக் குறைகூற..

ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பெண் பற்றிய விம்பங்களிலிருந்தான விடுதலையுணர்வு ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தானாக எழாதவரையில் யார் என்ன சமூக மாற்றத்துக்காய், எப்படியெப்படிப் போராடினாலும், திரும்பத் திரும்ப ஒரே செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருந்தாக வேண்டும்.

நாங்கள் எதற்காகப் போராடுகிறாமோ, எந்த மாற்றத்தை வேண்டுகிறோமோ முதலில் அது குறித்த பூரண விழிப்புணர்வும், நேர்மையும் எமக்கிருக்க வேண்டும். நாங்கள் வழிகாட்டிகளாக முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டவேண்டும். எமது வாழ்வும் நடவடிக்கைகளும் இன்னும் ஒரேயொரு மனிதனை தனது எண்ணம், சிந்தனை குறித்து சுய விமர்சனம் செய்துகொள்ளத் தூண்டுமாயின் அதுவே மிகப்பெரிய சாதனை.

...........................

மற்றையது, உறவுகள்.. டிலைலாவுக்குத் திருமண ஏற்பாடுகள் இடம்பெறுவது அறிந்ததும் கிரண் வீட்டை விட்டு வெளியேற அழைக்கிறாள். அதை மறுக்கும் டிலைலா, திருமணத்துக்குப் பிற்பாடும் தாம் இதேபோல இருக்கமுடியும், தமது உறவைக் கொண்டுசெல்ல முடியும் என்கிறாள். படத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவொரு பகுதியல்லவெனினும், அந்த உரையாடல் என்னைப் பாதித்திருந்தது.

நேர்மை.., ஒரு உறவிலிருந்து, அதன் பிடிப்பிலிருந்து முற்றாக விடுபடாமல் இன்னொரு உறவில் நுழைவதென்பது இரண்டையும் சிதைப்பதாகும். புதிய உறவொன்றில் நுழைவதற்கு ஒரு நேர்மை இருந்தாக வேண்டும். முறிந்து போன, அல்லது முறிக்கப்பட்ட உறவின் நினைவிலிருந்து விடுபட, தப்பியோட அல்லது பழிவாங்குமுகமாக இன்னொருவரை நேசிக்கத் துணிபவர்களின் நேசத்தின் மீது சந்தேகங்கொள்ளவே முடிகிறது. உண்மையான அன்பு பச்சாதாபத்தின் மீதோ, நன்றியுணர்வுடனோ, அல்லது வேறேதேனும் காரணம் பற்றிக்கொண்டோ எழுவதில்லை.

அடுத்தது இந்தப் பாலும், பாலினமும்.. ஆண்குறி கொண்டவர்களெல்லாம் 'ஆண்'களாக இருப்பதுமில்லை; ஆண்குறியற்றவர்கள் அனைவருமே 'ஆண்'களாக இல்லாமலுமில்லை. இந்த ஆண்குறி தொடக்கம் இன்னபிற உறுப்புக்கள் எல்லாம் பால் - அதாவது இயற்கை உடலமைவுடன் தொடர்புடையவை; மற்றும்படி ஆணாக இருப்பது, பெண்ணாக இருப்பதென்பது பாலினம் - சமூகம் கட்டமைத்திருக்கும் வரைமுறைகள், விதிகளுடன் தொடர்புடையவை. விமர்சிக்கப்படவேண்டியதும், மறுக்கப்பட வேண்டியதும் இந்தப் பால் வேறுபாடல்ல, பாலின வேறுபாடே.

இவையனைத்தின் பின்னமைவிலும் ஒரு படத்தை ஆழமாக இரசிக்க முடிந்தது..

Thursday, June 05, 2008



கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில்
நீயோ நானோ இப்படியிருந்திருக்க வேண்டியவர்களல்ல
அடிவானத்தைப் பார்த்து
நான் உரக்கக் கத்த வேண்டியிருந்தது,
மனிதர்களை நேசிப்பவளெனினும்
காற்றில் கலந்த என் குரலை
சூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாக
அவர்கள் பேசிக்கொண்டார்கள்
எனக்குத் தெரியும்,
படகெடுத்து கையுளைய துடுப்பு வலித்து
புயல்கள் கடந்து உன் கரையை வந்தடையும் முன்பு
ஓங்கிக் குரலெழுப்பி சலித்துப்போய்
நீ திரும்பிக் கொண்டிருப்பாய்...
கரைகள் என்னைக் கைவிட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டு
நானொரு க‌ட‌ற்க‌ன்னியாகியிருப்பேன்.
...................

கண்முன்னே பிணமொன்று செத்துவீழ்கிறது
என் சாயலுடன்
அதன் அங்க அசைவுகளும் உதட்டுச் சுழிவும்கூட
என்னதையே ஒத்திருப்பதாக அக்கா முணுமுணுத்தாள் காதுக்குள்
பட்டுப்போன இதயம்..
தீய்ந்துபோன உதடு..
கருகிய மூளை..
'இதுவொரு மனித உயிரியா என்ன'
சா வீட்டில் அனைவருக்கும் சந்தேகம்
நான் உயிரைச் சுருட்டியெடுத்து பைக்குள்ளிட்டு
இரைப்பையின் ஆழத்தில் புதைத்து விட்டிருந்தேன்
நாற்பது நாள் கடந்து,
நானொரு பிணமென நடமாடுவதாய்
அம்மா சலித்துக்கொள்வாள் அனைவரிடமும்


ஓவிய‌ம்: ச‌ல்வ‌டோர் டாலி

Sunday, April 27, 2008

எனக்கும் மேலால் அழுதுகொண்டிருக்கும் ஒரு வானம்..


பித்தேறி மூளை அச்சகன்று சுழலத் தொடங்கிய பொழுதொன்றில்
குரல்வளை கீறிப்பிளந்தொரு குரல்
தெருவழி ஊரத் தொடங்கியதென
ஆதிகாலக் கதைகள்
பாப்பிரஸ் புல்லிலிருந்து மெல்ல நழுவியவாறு
சொல்லித் திரிகின்றன
ஓங்கிக் குரலெடுத்து ஒரு கிழவி ஓலமிடுகிறாள்
இன்னுமொரு தல்கோனை வயலின் மடியிலமர்ந்து
பால்வெளியை விழுங்கக் காத்திருக்கிறாள்
தொன்மங்கள் கனவுகளில் வடிகின்றன
கனவுகள் தொன்மங்களை வடித்துக்கொண்டிருக்கின்றன


'கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே'

கடந்துகொண்டிருக்கிற தேநீர்க் கடையிலயிருந்து கேட்கிறது பாட்டு.. ஒருகாலத்தில் என்னைப் பைத்தியமடையச் செய்திருந்த பாட்டு.. ஒருகணம் நின்டு அடுத்த வரியையும் கேட்க வேணும் போல இருக்கு.. குரல் உச்சஸ்தாயிக்கு ஏறுது..

'கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது விம்பமே'

குண்டுவெடிப்பொன்டுக்கு அடுத்த நாள், அதுவும் ஞாயிற்றுக்கிழமையொன்றில் கொழும்பைப் பார்க்கவேணும் நீங்கள்.. அப்படியொரு அமைதி.. காலி வீதி, மிகப் பரபரப்பான அந்த றோட்டிலயே அங்கையொன்டும் இங்கையொன்டுமாய் தான் வாகனம்.. நடக்கிற சனத்தை கண்ணுக்கு எட்டின தூரம் வரை காணோம்.. மழை நாள்.. எனக்கு அதில் நடக்கப் பிடிச்சிருந்தது.. கொள்ளுப்பிட்டி சந்தியிலயிருந்து பம்பலப்பிட்டி சந்திவரை, பிறகு அங்கையிருந்து திரும்பி அவ்வளவு தூரம், அதையும் தாண்டி அலரி மாளிகை கடந்து.... நடுவில் ஆகக்குறைந்தது ஒரு ஐந்தாறு இடத்திலாவது மறிச்சிருப்பாங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒரு முறைப்போட, எரிச்சலோட எதிர்கொள்ளுற இந்த மறியல்கள் இண்டைக்கு ஒருவித ஏக்கத்தோட, என்னை இப்படியே மறிச்சு வைக்க மாட்டீங்களா, என்னை பிடிச்சுக்கொண்டு போக மாட்டீங்களா என்டு கெஞ்சுற மாதிரி.. சிங்கத்துட குகைக்குள்ள தானாய் விரும்பி தலையைக் குடுக்கிற ஆடு மாதிரி என்டு அந்த இடத்தில் என்ட நிலையை எவராவது விபரிச்சிருக்கலாம்.. வழக்கமாய் ஐசியில் யாழ்ப்பாணம் என்டு கண்டதுமே நிப்பாட்டி ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கிறவங்கள் இண்டைக்கு பார்த்துட்டு பேசாமல் திருப்பித் தாறாங்கள்.. ஏமாற்றம், ஏமாற்றம்.. ஒருத்தன் மட்டும், ஓ, யாழ்ப்பாணம் போல என்டு சிரிச்சுட்டு திருப்பித் தந்தான், வேற யாருமே கணக்கெடுக்கக்கூட இல்ல.. மினிஸ்டரோ யாரோ போறதுக்காய் றோட்டை மறிச்சு நடந்து போற சனத்தைக் கூட போகவிடாமல் அரை மணிநேரம் மறிச்சு வைச்சிருந்தவன் கூட என்னை ஏனென்டு கேட்கேல்லை.. நான் பரிதாபமாய் அவனுக்கு பக்கத்தில் அரை மணிநேரம் நின்டு கொண்டிருந்தன், என்ன நினைச்சானோ, ஒரு சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது.. ஏன் இவங்கள் இண்டைக்கென்டு பார்த்து அநியாயத்துக்கு நல்லவங்களாய் இருக்கிறாங்கள்.. எனக்கு விசர் விசராய் வந்தது..

தன்னந்தனிய ஒரு பொம்பிளைப்பிள்ளை அலரி மாளிகைப் பக்கம் ஏன் போறாள், அதுவும் இந்த மழைக்குள்ள, கையில் குடையொன்டும் இல்லாமல், என்டு நீங்கள் யோசிக்கக்கூடாது.. அப்பாக்கு மட்டும் தெரியவேணும் காலை முறிச்சுப் போடுவார்.. றோட்டின்ரை எதிர்த்திசையில் ஒருத்தர் கையில் வயலினோ, கிடாரோ பெட்டிக்குள் தூக்கிக்கொண்டு வந்தார், அதுவொரு குண்டாயிருந்து திடீரென்டு இந்த இடத்தில் வெடிச்சுடக் கூடாதா என்ற நப்பாசையில் கொஞ்சநேரம் அதே இடத்தில் தாமதிச்சுப் பார்த்தன்.. ம்ஹூம்.. அவர் தன்ரை பாட்டுக்குப் போறார், என்ரை நினைவில் ஒரு குண்டை வெடிக்க வைச்சு அதில் நானும் செத்துப் போறதாய், என்ரை ஐசி எல்லாம் பார்த்து வீட்டுக்குத் தகவல் தெரிய வாறதாய், எல்லாரும் கத்திக் குழறுறதாய் நானே கற்பனை செய்துபார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.. சாவு அதாய் என்னைத் தேடி வரவேணும், எனக்கு அதைத்தேடிப்போக கொஞ்சம் பயம்..

கோல்பேஸ் மூடிக்கிடக்கு.. Nangi me paththen yanna bahaa (தங்கச்சி இந்தப் பக்கத்தால் போக ஏலாது).. அப்ப அந்தப் பக்கத்தால் போக ஏலுமா.. Bahaa (NO!!).. கடலை மூடுறத்துக்கு நீங்கள் யாரடா.. எனக்கு நாக்கு நுனியில் இடறுது வார்த்தை.. No one wants me, not even youuu??? எனக்கு கடலைப் பார்த்துக் கேட்கவேணும் போல இருக்கு.. அதுவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிற மாதிரி.. அலை மற்ற பக்கமாய் திரும்பி ஆழ்கடலைப் பார்த்து அடிக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமென்டு யோசிச்சுப் பார்த்தன்.. 'Everything gonna be alright'.. Alicia Keys ன் பாடல் நினைவுக்கு வந்தது..

வாழ்க்கை என்டுறது எவ்வளவு சின்னது.. எத்தனைகாலம் வாழ்ந்திருப்பன் இந்த உலகத்தில், வெறும் இருபது வருஷம் கூட ஆகேல்லை இன்னமும்.. ஆனா, வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் இதுகாலம் வரையில் முழுமையாய் அனுபவிச்சு, அந்தந்த வயசுக்குண்டான அத்தனை குழப்படிகளையும், குறும்புகளையும் ஒன்டுவிடாமல் செய்து, இண்டைக்கு இந்த நாளில் இந்தக்கணத்தில் இப்படி வந்து நிக்கிறன் என்டது ஒரு திருப்தி.. இப்ப செத்துப்போறதென்டாலும் நிம்மதியாப் போவன்..

நாளைக்கு என்ன, அடுத்த நிமிஷம் என்ன நடக்குமென்டு தெரியாத ஒரு வாழ்க்கை, கணப்பொழுதேயான வாழ்க்கை, அதுக்குள்ளயும் எத்தனை சண்டைகள், எத்தனை முறுகல்கள், எத்தனையோ பேரைக் காயப்படுத்திக்கொண்டு, வருத்திக்கொண்டு.. ஏனப்படி வாழவேணுமென்டிருக்கு.. எதைச் சொன்னாலும் அது பிழையாப் போய்டுமோ என்ட பயத்தில் கதைக்கவே விருப்பமில்லாமலிருக்கு.. என்னைச் சுற்றியிருக்கிறவங்களை, என்னை நேசிக்கிறவங்களை காயப்படுத்திக்கொண்டு எனக்கு வாழப் பிடிக்கேல்லை, உங்களுக்குப் பிடிக்குமா.. அப்படி காயப்படுத்தி அதில சந்தோஷம் காணுறவங்களும் இருக்கிறாங்கள்தான்.. ஆனா, ஏன் நான் அவங்களில் ஒருத்தியாயில்லை.. எனக்குத் தெரியாமலேயே என் ஒவ்வொரு நடத்தையாலும், அசைவாலும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறன், என்னவொரு வாழ்க்கை, வாழ்ந்தும் என்ன பிரயோசனம்..

வானம் மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கு இன்னும்.. இண்டைக்கு நனைஞ்சது காணாது.. தலையில விழுற தண்ணி முகத்தால வடியுற நேரம் எல்லாத்தையும் கழுவிக்கொண்டு, அத்தனை பாரத்தையும் இறக்கிக்கொண்டு வடிய வேணும்.. It should make us feel free.. இந்த மழை அவ்வளவு வேகத்தோட தலையில் இறங்கேல்லை.. விழுந்த கொஞ்சநஞ்ச தண்ணியும் சேர்ந்து தலைக்குள்ள இறுகிப்போயிருக்கு பனிக்கட்டியாய்..

'தூரத்துக் கடல் என்னை அழைக்கிறது.. விடைகொடு எனதன்பே, என்றென்றைக்குமாக விடைகொடு..' பிரைடா காலோவின் வரிகளோடு அப்படியே தூங்கிப்போக வேண்டும் போலிருக்கிறது.. இனியொருபோதுமே இவ்வுலகில் கண் விழிக்க வேண்டியிருக்காதென்ற நிம்மதியோடு..

Friday, March 14, 2008

பெண்ணும் பயணியுமாயிருத்தல்

- Being a woman and a traveller

(பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)



முற்குறிப்பு

துணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப் பயணிக்கவும், அதைப் பதிவுசெய்யவும் பெண்கள் முன்வர வேண்டியதன் தேவையும், இத்தகைய பயணங்களில் தாக்கம் செலுத்தும் பாலின மற்றும் உடலரசியலின் இருப்பும் குறித்த ஒரு விழிப்புணர்வினை வேண்டிநிற்பதே இங்கு எனது நோக்கமாகிறது.

முன்னுரை

வரலாறு தொடக்கம் மானுட இருத்தலின் தடங்கள் யாவும் இதுகாலம் வரை ஆண்களால், அவர்களின் பார்வையிலேயே பதியப்பட்டிருந்தன. பெண்ணானவள் ஓர் இரண்டாமினமாகத் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறாள். உடலும் உலகமும் தம்முள் ஏராளமான மர்மங்களையும் ரகசியங்களையும் பொதிந்து வைத்திருப்பவை; தேடிக் கண்டறியப்பட வேண்டியவை. ஆனால், அதை தேடுபவர்களும் கண்டடைபவர்களும் - மார்க்கோ போலோவாயிருந்தாலென்ன, யாரென்றாலென்ன - எப்போதும் ஆண்களாகத்தானிருந்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக உடலும் உலகமும் சார்ந்த ஒரு பெண்ணிய வெளியைக் கட்டமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கிருக்கிறது.

பயணங்கள் வரலாற்றையும், அது தொடர்ந்து வந்த தடங்களையும் மீள்பரிசீலனை செய்பவை (இங்கு பயணங்களென நான் குறிப்பிடுபவை தம்பதி சமேதரராய் சுற்றுலா போவதையோ, குடும்ப சகிதம் கதிர்காமம் போவதையோ அல்லவென்பதைக் கவனத்திற் கொள்ளவும்). மனித நாகரிகமும், அதன் பல்வகைமையும் மீள்வாசிப்புச் செய்யப்படுவதற்கான வாய்ப்பினை பயணங்கள் வழங்குகின்றன. வரலாற்றோட்டத்தில் ஆண்களின் பெரும்பாலான பயணங்கள் நாடுகளும் இனங்களும் சூறையாடப்படுவதற்கும், இனக்குழுமங்கள் அவற்றின் பண்பாட்டம்சங்களுடன் முற்றாக அழிந்து போவதற்கும், காலனியாதிக்கத்துக்குமே வழிவகுத்திருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆரம்பகால மானுட குல வரலாற்றின் பெரும்பகுதியும் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய பயணிகளின் குறிப்புகளைத் தழுவியதாகவே அமைந்துமுள்ளன. இவ்வரலாற்றில் பெண்களின் வகிபாகம் எத்தகையதென ஆராய விழைகையில், ஏற்கனவே 'கண்டறியப்பட்டு எடுத்துச் சொல்லப்பட்ட' உலகை பெண்கள் தமது வழிநின்று மீள்வாசிப்புச் செய்யவேண்டியதன் தேவை புலப்படும். அம்மீள்வாசிப்புக்கான சிறந்த வழிமுறையாகப் பயணங்கள் திகழ்கின்றன.

வெளி நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் உள்முகமாகத் திரும்பினர். அவர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்கள், பிரதிகள் பெரும்பாலும் உணர்வுவழிப்பட்டனவாக அமைந்தமைக்கு இதுவே காரணமாயமைந்ததெனலாம். உள்முகமாகத் திரும்பியவர்கள் தமது உடலையும், அதனை மையப்படுத்திக் கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தையும் விமர்சிக்கவும், தம்மை வெளிப்படுத்தவும் தமக்கான மொழியைக் கட்டமைக்கத் தொடங்கினர். தனது உடல், காதல் - காமம் குறித்து வெளிப்படையாக உரையாடுவதற்கான உரிமை பெண்களுக்கு எவ்வாறு மறுக்கப்பட்டிருந்ததோ அதேபோல அல்லது அதைவிடவும் வன்மையாக பெண்கள் தனியாகப் பயணிப்பதும் மறுக்கப்பட்டிருந்தது. உடல் பற்றிய தேடல் பெண்ணிய வெளியைக் கட்டமைப்பதில் எந்தளவு பங்களிப்பு செலுத்துகிறதோ, அதேயளவு பங்களிப்பினை - உலகு பற்றிய தேடலாய் அமையும் - பெண்களின் பயணங்கள் குறித்த பதிவுகளும் செலுத்தக்கூடும்.

தனியாகப் பயணிக்குமொரு பெண்ணின் பயம் குறித்து Robin Morgan தனது The Demon Lover நூலில் கூறுகிறார்:

Look closely at her.

She crosses a city street, juggling her briefcase and her sack of groceries. Or she walks down a dirt road, balancing a basket on her head. Or she hurries toward her locked car, pulling a small child along with her. Or she trudges home from the fields, the baby strapped to her back.

Suddenly there are footsteps behind her. Heavy, rapid. A man's footsteps. She knows this immediately, just as she knows that she must not look around. She quickens her pace in time to the quickening of her pulse. She is afraid. He could be a rapist. He could be a soldier, a harasser, a robber, a killer. He could be none of these. He could be a man in a hurry. He could be a man merely walking at his normal pace. But she fears him. She fears him because he is a man. She has reason to fear.

It is the footstep of a man she fears. This moment she shares with every human being who is female.

This is the democratization of fear.

(Robin Morgan, The Demon Lover)

இது சனநாயகமயப்படுத்தப்பட்ட பயம். பல்கேரியக் கவிஞரான ப்ளாகா டிமிட்ரோவாவின் கவிதை வரிகளும் இங்கு குறிப்பிடத்தக்கன:

இன்னும் ஆண்களுடையதாகவேயிருக்கும்
இவ்வுலகில்
எங்கும் ஆபத்தும் தொல்லையும்தான்
இங்கு ஒவ்வொரு வளைவிலும்
அபத்தமான மோதல்களின் திடீர்த்தாக்குதல்கள்
காத்திருக்கும்..

(அக்மதோவா: அக்கரைப் பூக்கள், தமிழாக்கம் - வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

சாலையோரப் பெண்ணொருத்தியின் பாதையைத் தீர்மானிப்பதில் பெரும் தாக்கம் செலுத்துமொரு விடயம் இந்தக் கறுப்பு மனிதன் பற்றிய பயம். முதுகின் பின்னால் தொடருமொரு காலடியோசை முள்ளந்தண்டை எவ்விதம் சில்லிடச் செய்யுமென்பது, இரவில் யாருமற்ற நேரத்தில் தனியே நடந்து திரிந்த பெண்ணொருத்திக்குத் தெரிந்திருக்கும்.

இதே பின்னணியில்தான் பெண்ணியப் பயண இலக்கியங்களை நாம் அணுகியாக வேண்டும். இங்கு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை மேலைத்தேயப் பெண்களின் பயண இலக்கியங்களே. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இதுவரை அப்படியெதுவும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காதது வருத்தத்திற்குரியது.

1. வேறுபாடு - பெண்ணுடலும் பாலினமும்

மேற்குலகிலேயே 18ம் நூற்றாண்டளவில்தான் பெண்கள் தனியே வீட்டையும் நாட்டையும் விட்டு பயணிக்கத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் அவர்களது அனுபவங்கள் பதிவுசெய்யப்பட்டு நூலுருப்பெற்று அதிக கவனமும் பெறத் தொடங்கின.

இங்கு ஆண்களின் பயணம் - பெண்களின் பயணமென வேறுபிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமென்னவென்ற கேள்வியெழலாம். இரவுப் பொழுதில் ஒரு ஆண் தனியே தெருவைக் கடப்பதற்கும், பெண் கடப்பதற்குமிடையிலான அடிப்படை வேறுபாட்டிலிருந்து இந்தப் பாகுபாடு மேலெழுகிறது. பயணிகளென்ற அடிப்படையில் ஆண்களோ, பெண்களோ எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகளை விடவும் வேறுபட்ட சிக்கல்களுக்கு பெண்கள் - பெண்களாயிருக்கும் ஒரே காரணத்துக்காக முகங்கொடுக்க நேர்கிறது.

பிரபல பெண் பயணியும், படைப்பாளியுமான Mary Morris கூறுவதன்படி, பெண்கள் ஆண்களை விட மிகவும் வேறுபட்ட முறையில் உலகினூடு பயணிக்கிறார்கள், நிலத்தையும் மனிதர்களையும் மிகவும் வேறுபட்ட முறையில் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், பிரச்சனைகள், குழப்பமான உணர்வுநிலை, உடல் அசௌகரியங்கள் என்பன ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. உதாரணமாக, பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக நேரிடுமோவென்ற பயம், மற்றையது, Robin Morgan கூறுவது போல ஒரு சாதாரண நன்கு பழகிய நகரத்துத் தெருவை இரவில் - அசாதாரணமான பொழுதொன்றில் கடப்பதுகூட பெண்கள் உலகினூடு பயணிக்கும் விதத்தில் பாரிய தாக்கத்தினையேற்படுத்தி விடுகிறது. துஷ்பிரயோகமென்பது அத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை:

Gwendolyn Maceven தனது Noman's Land நூலில், கெய்ரோவிலுள்ள நூதனசாலையைப் பார்வையிடச் செல்லும் பெண் பயணியொருத்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு பெண் தொடர்ந்து தினமும் நூதனசாலைக்கு வருவது வெறுமனவே இந்தப் பொருட்களை வெறித்துப் பார்ப்பதற்காக இருக்காது என எண்ணமிடும் காவலர்கள் அவளையொரு பாலியல் தொழிலாளியென நினைத்து தொடர்ந்து கண்காணிப்பதையும், அவளை வளைத்துப் போட முயற்சிப்பதையும் ஆவணப்படுத்துகிறார். ஒரு பெண்ணுக்கு நூதனசாலைக் காட்சிப்பொருட்களில் ஆர்வமிருக்கக்கூடுமென்பதே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகி விடுகிறது.

Christina Dodwell தனது தோழியுடன் ஆபிரிக்காவில் பயணிக்கையில், இரவில் அவர்களது தங்குமிடத்துக்கு வந்து திரும்பிச் செல்ல மறுத்த இராணுவ வீரனைத் துரத்த தானும் தோழியும் தங்களுக்கு சிரங்கு இருப்பதாக தலையையும், கைகால்களையும் மாறி மாறிச் சொறிந்து பாவனை செய்ததை Travels with Fortune: An African Adventure இல் நினைவு கூர்கிறார்.

அதேபோல, ஜெனீவாவைச் சேர்ந்த Isabelle Eberhardt 18ம் நூற்றாண்டளவில் வட ஆபிரிக்கா முழுவதும் ஒரு முஸ்லிம் ஆணாக வேடமிட்டு அலைந்து திரிந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த Eliza Farnham தான் குளித்துக் கொண்டிருந்த தாழ்ப்பாளற்ற விடுதி அறைக்குள் நுழைய முயன்ற மனிதனைத் தடுக்க, பெரிய துணிப் பெட்டிகளை கதவோடு சாத்தி வைத்து, தானும் கதவைத் தள்ளிக்கொண்டிருந்ததாக Life in Prairie Land நூலில் குறிப்பிடுகிறார்.

The reality of a woman on the road is often a personal reality. This does not mean that the woman traveller is not politically aware, historically astute or in touch with the customs and language of the place.

ஆனால், ஒரு பெண் தனது உடல் பற்றிய, தனது பாலினத்தின் மீதான வேறுபட்ட பண்பாடுகளின் வரையறைகள் குறித்த விழிப்புணர்வின்றி பயணிக்கவே முடியாது என்கிறார் Mary Morris. உதாரணமாக, மத்தியகிழக்கில் பயணம் செய்யுமொரு பெண்ணின் பயணத்தில் தாக்கம்செலுத்தும் உடை தொடர்பான வரைமுறைகள். காற்சட்டையுடன் பயணம் செய்த Gwendolyn Maceven ன் Kali, அராபியச் சிறுவர்களால் கல்லெறிபடுகிறார். ஒரு ஆணுக்கு இத்தகைய பாலின ரீதியான வரையறைகளையோ, கட்டுப்பாடுகளையோ எதிர்கொள்ளும் வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்த விழிப்புணர்வு பெண்களின் பயண அனுபவங்களுக்கு ஒருவித செறிவினை (richness) வழங்குவதுடன், அவர்களது அனுபவங்கள் மாறுபட்டவையாக அமையவும் காரணமாகின்றது.

மற்றையது, உணர்வுகள். புறவுலகில் பயணிக்கும்போதே அகவுலகிலும் பயணித்தபடி, தான் நினைத்தது உணர்ந்ததையும் எழுத்தில் பதிவதனூடாக இரண்டு உலகங்களினூடான தனது பயணத்தைச் சாத்தியமாக்கும் Mary Morris தான் லெனின்கிராடில் தங்கியிருந்தபோதுதான் கர்ப்பம் தரித்திருப்பதை உணர்கிறார். அதன் பின்பான பொழுதுகளில் தனது பார்வையில் லெனின்கிராட் ஒரு வெறும் நகரமாக மட்டுமே தோற்றமளிக்கவில்லையென்கிறார்.

கனடாவின் புகழ்பெற்ற ஓவியரான Emily Carr மேற்குக் கனடாவின் தொல்குடியினர் வாழும் காட்டுப் பிராந்தியத்திலமைந்த கிராமமொன்றுக்குப் பயணிக்க நேர்ந்த அனுபவத்தைப் பதிகையில், இரவு தன்னைத் தனியே ஊர் நாய்களுக்கு நடுவே நடுத்தெருவில் விட்டு விட்டு அனைவரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும், தன்னை அவர்களுள் ஒருவராய் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாரில்லையென உணர்ந்தபோது தனக்குக் கத்தியழ வேண்டும்போல இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

ஆண்கள் உலகத்தையோ, ஒரு அந்நிய நிலப்பரப்பினையோ புறவயப்பட்ட பார்வையுடன் எதிர்கொள்கின்றனர். அவர்களது பயண இலக்கியங்கள் பெரும்பாலும் அது என்னவாக அல்லது யாராக இருந்தது, யாருக்காகக் காத்திருந்தது, எதை இழந்திருந்தது அல்லது எதைப் பெற்றிருந்தது என்பவற்றை விபரிப்பதுடன் நின்றுவிடுகின்றன. ஆனால், பெண்களின் நோக்கு இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக அகவயப்பட்டதாகவும், நிலப்பரப்பை அதன் மனிதர்களை - வெறும் தரவுகளென்பதற்குமப்பால் - உயிர்ப்புடன் எதிர்கொள்வதாகவும் அமைந்திருக்கக் காணலாம்.

2. தூண்டுசக்தி

அனைத்துப் பெண் பயணிகளும், பயணிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அல்லது மேலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ கிளம்பியவர்களல்ல. நான் மிகவும் ரசித்த பயணம் Maud Parrish னுடையது. வெறும் ஒன்பது பவுண்ட் எடையுள்ள பயணப் பொதியுடனும், banjo வுடனும், அவர் வீட்டை விட்டு விலகியோடுகிறார், அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்,

"..So I ran away. I hurried more than if lions had chased me. Without telling him. Without telling my mother or father. There wasn't any liberty in San Francisco for ordinary women. But I found some. No jobs for girls in offices like there are now. You got married, were an old maid, or went to hell. Take your pick."
(Maud Parrish, Nine Pounds of Luggage)

திருப்தி தராத திருமணத்தினை முறித்துக்கொண்டு ஓடுகையில் அவர் பதின்மங்களையும் கடந்திருக்கவில்லையென்பது இன்னமும் சுவாரசியமான விடயம். இது மேலைத்தேயவுலகம் - அவர்களது சமத்துவம், சமவுரிமை - பற்றி நாம் கொண்டிருக்கும் உயர் அபிப்ராயங்களைத் தகர்த்தெறிகிறது. சில காலம் முன்புவரை மேலைத்தேயப் பெண்கள் கீழைத்தேயவர்களை விட எந்தவிதத்திலும் மேம்பட்ட நிலையில் இருக்கவில்லை. பதினைந்து பதினாறு வயதுகளில் திருமணம் முடிப்பதும், வீட்டில் கணவனுக்கு பணிவிடை செய்தபடி வாழ்வதுமே அவர்களதும் யதார்த்தமாகவிருந்தது. சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரு நகரமொன்றில் கூட பெண்களுக்கு வேலையிருக்கவில்லையென அறிய நேர்வது - இது நிகழ்ந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - வியக்கவைக்கிறது.

இதேபோல Isabelle Eberhardt ம் தனது வீட்டை விட்டு தப்பியோடும் நோக்கிலேயே பயணிக்கிறார். பெற்றோரை, துணைவரை அல்லது குழந்தைகளை இழந்து அந்த இழப்பிலிருந்து விடுபடுமுகமாகப் பயணித்தவர்களுமிருக்கின்றனர். அதேவேளை இன்னும் சிலர் புதிய பிரதேசங்களை அறிந்துகொள்ளவும், துணைவர்களைத் தொடர்ந்தும், மிசனரிகளாகவும் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

பயணித்தலென்பது பெண்கள் பலருக்கு ஆற்றுப்படுத்தலாகவும், இனியும் சமரசம் செய்துகொள்ள முடியாத சூழலில் இருந்தான விடுபடலாகவும், மென்மேலும் அறிவை விசாலப்படுத்தும் திறவுகோலாகவும், அனைத்துக்கும் மேலாக ஓர் பேருவகையாகவுமிருந்திருக்கிறது.

3. தனித்துவமும் முக்கியத்துவமும்

கனேடிய ஓவியரான Emily Carr ன் அனுபவம் பெண்கள் பயணிப்பதன் முக்கியத்துவத்தினையும் அதன் தனித்துவத்தினையும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

புகழ்பெற்ற ஓவியரான இவர் கனடாவின் வடமேற்குப் பகுதியிலமைந்த போக்குவரத்து வசதிகளற்ற Kitwancool எனும் தொல்குடியினரின் கிராமத்துக்குப் பயணிக்கிறார். அவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் totem poles (வினைத்திறனுடன் செதுக்கப்பட்டு நிறமூட்டப்பட்ட உயரிய மரக்குற்றிகள்) னை படமாக வரைந்து வருவதே அவரது நோக்கம். விசாரித்தவரை அனைவரும் அக்கிராமத்துக்குப் பயணிப்பது இயலவே இயலாத காரியமென எடுத்துக்கூறியும், இறுதியாக கிராமத் தலைவரின் மகன் அருகிலுள்ள சிறிய நகரமொன்றுக்குப் பொருட்களை ஏற்றிச்செல்ல வந்து போவதறிந்து அவனுடன் இணைந்துகொள்கிறார். கிராமத்தில் வந்திறங்கியதும் அவர்கள் அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ள மறுத்து நள்ளிரவில் தனியே நாய்களுக்கு நடுவில் வெளியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். பின்னர், கிராமத்துத் தலைவரை விட அதிக அதிகாரமும் மரியாதையும் கொண்ட அவரது மனைவி Emily Carr வந்த நோக்கமறிந்து அவரை ஏற்றுக்கொள்வதுடன் தமது வீட்டிலேயே தங்கவும் அனுமதிக்கிறார். அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான totem poles னை படமாக வரைந்து, அதன் பிரதியொன்றை பின்னர் அனுப்பி வைப்பதாய் வாக்குறுதியுமளித்துத் திரும்புகிறார் Emily.

அக்கிராமத்திலிருந்து திரும்பியதும் பொலிஸார் அவரை விசாரிக்க வருகின்றனர். அப்பழங்குடியினர் அவரை எவ்வாறு நடத்தினர், அவருடன் எவ்வாறு பழகினரென அறிய விரும்பும் அவர்கள், அப்பழங்குடியினர் தமக்குத் தந்த தொல்லைகளையும் - மிசனரிமாரை துரத்தியமை, மக்கள்தொகை கணக்கெடுப்பாளர், நில அளவையாளர் போன்றோரைக் கோடரிமுனையில் விரட்டியடித்தமையென - பட்டியலிடுகின்றனர். அம்மக்கள் தம்மத்தியில் வெள்ளையரை அனுமதிக்க விரும்பாமையையும், அங்கு செல்ல தாம் யாரையும் அனுமதித்திருக்க மாட்டோமெனவும், அதுவும் குறிப்பாக ஒரு பெண்ணை தனியே செல்ல விட்டிருந்திருக்கவே மாட்டோமென பொலிஸார் கூற, பதிலுக்கு Emily,

"Then I am glad I did not ask for your advice. Perhaps it is because I am a woman that they were so good to me" என்கிறார்.
(Emily Carr, Klee Wyck)

அவரது இப்பதில் மிகக் கவனத்திற்குரியது. எந்தவொரு வெள்ளையினத்தவரையும் தம்மிடையே அனுமதிக்க மறுத்த அத்தொல்குடியினரின் நம்பிக்கையை ஒரு பெண்ணாயிருந்த காரணத்தினால் தன்னால் வென்றுவிட முடிந்ததென அவர் கூறுமிடத்து, ஒரு இனக்குழுமத்தை ஒரு பெண் அணுகுவதற்கும் ஆண் அணுகுவதற்குமிடையிலான வேறுபாட்டினை உணர்ந்துகொள்ள முடிகிறது. அவரதந்த அணுகுமுறை அவரது அருகாமையில் பாதுகாப்பாய் உணரவைப்பதாலேயே அம்மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகின்றனர். இதே கிராமத்துக்குப் பயணித்து வந்த ஒரு ஆணின் பயணக்குறிப்பு நிச்சயம் Emily யின் குறிப்புக்கு நேர்மாறானதாக - பொலிஸாரின் கருத்தினையொத்ததாக - இருந்திருக்கக்கூடும். அதேபோல, மார்க்கோ போலோ அல்லது தொன் ஜுவானினிடத்து ஒரு பெண் பயணித்திருப்பாளாயின் உலக வரலாறு இன்றைக்கிருப்பதற்கு முற்றிலும் நேர்மாறானதாக அமைந்திருந்திருக்கலாம். ஆகக்குறைந்தது, தென்னாபிரிக்க மற்றும் தென்னமெரிக்க தங்கச் சுரங்கங்கள் கொள்ளையடிபடுவதும், பல தொன்மையான இனக்குழுமங்களும் நாகரிகங்களும் அழிந்து போவதும் கொஞ்சமாவது பிற்போடப்பட்டிருந்திருக்கலாம்.

ஒரு பண்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்வதென்பது எம்முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. இந்தியாவில் பலியும், காளைச் சண்டையும் தடைசெய்யப்பட்டிருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது போன்றதுதான் இதுவும். மனிதநேயம் மற்றும் விழுமியங்களினடிப்படையில் அவை சரியானதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்வது, அதன் நிலைபேற்றுக்குத் துணைநிற்பதென்றதனடிப்படையில் இத்தடைச்சட்டங்கள் தோல்வியடைந்துவிட்டனவெனவே கூறவேண்டும். குறித்ததோர் மக்கள் குழுவொன்றன் நம்பிக்கைகள் எமது நவ நாகரிக விழுமியங்களுடன் ஒத்துவராமற் போனமைக்காக அவற்றை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்துவது எந்தவகையில் நியாயமென்ற கேள்வியெழுகிறது. புராதன நாகரிகங்களும் பண்பாடுகளும் இவ்வாறுதான் சிறிது சிறிதாகச் சிதைக்கப்பட்டன. ஒரு முஸ்லிம் பெண் பர்தா அணியலாமா இல்லையாவென்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மற்றவர்களல்ல (இந்த மற்றவர்களுள் மேற்குலகின் சமத்துவவாதிகளும் உள்ளடங்குவரென்பதையும் கவனத்திற்கொள்ளவும்), ஆனால் அவளை அவ்வாறு அணிந்துகொள்ள நிர்ப்பந்திக்கும் புறக்காரணிகளை வேண்டுமானால் விமர்சிக்கலாம். இந்தவகையில்தான் Rebecca West, Mostar ல் பெண்கள் அணியும் - பர்தாவினையொத்த - ஆடையினை விமர்சிக்கும் விதமும், Anna Leonowens சீயத்தின் அரண்மனை மகளிர் பற்றி எடுத்துக் கூறுவதும் (இவரது The English Governess at the Siamese Court நூலின் பயணக்குறிப்புக்களைத் தழுவி Anna and the King of Siam எனும் நாவல் Margaret Landon னால் எழுதப்பட்டது. பின்னர் அக்கதை திரைப்படமாக வெளியாகி பெரும் புகழ் பெற்றிருந்தது) முக்கியத்துவம் பெறுகின்றன.

"..The austere yet lubricious beauty of the coat gives a special and terrifying emphasis to the meaning inherent in all these Eastern styles of costume which hide women's faces. That meaning does not relate directly to sexual matters; it springs from a state of mind more impersonal, even metaphysical, though primitive enough to be sickening. The veil perpetuates and renews a moment when a man, being in league with death, like all creatures that must die, hated his kind for living and transmitting life, and hated woman more than himself, because she is the instrument of birth, and put his hand to the floor to find filth and plastered it on her face, to affront the breath of life in her nostrils. There is about all veiled women a sense of melancholy quite incommensurate with the inconveniences they themselves may be suffering. Even when, like the women of Mostar, they seem to be hastening towards secret and luxurious of humorous love-making, they hint of a general surrender to mortality, a futile attempt of the living to renounce life."
(Rebecca West, Black Lamb and Grey Falcon)

இத்தகைய ஆடையணிவது மடத்தனம், அல்லது மேலாதிக்கமென ஒரேயடியாக மறுக்காமல் அதன் பின்னணியிலான ஆடையின் அரசியல் குறித்து ஆராய்வது சுவாரசியமெனப் படுகிறது. அத்துடன் அசௌகரியத்தை புறவயமாக மட்டும் பார்க்காமல் அதன் பின்புலத் தோற்றப்பாடுகள் சாராம்சங்களையும் தனது அபிப்ராயமாக வெளியிடுகிறார் Rebecca West. முகத்தினை மறைத்த ஆடைகள் வெறுமனவே ஆடையென்ற நிலையையும் கடந்து ஆண்மனதின் தொன்மைவாய்ந்த தாழ்வுச்சிக்கலின் வெளிப்பாடாகத் தோன்றுகின்றன அவருக்கு. இந்தவிடத்தில், இத்தகைய ஆடைகளுக்கு ஆண்களால் அளிக்கப்பட்டு வந்த விளக்கமும் அதன் நியாய அநியாயங்களும் மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றன.

4. பயணங்கள் கட்டமைக்கும் பெண்ணிய வெளியும் தமிழ்ச்சூழலும்

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தெறிய முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்த் தேங்கித்
ததும்புகின்றன

(குட்டிரேவதி, முலைகள்)

பெண்ணுடலின் ஓர் அங்கமான முலைகள் மீதான ஆண்களின் கவர்ச்சி, காமம் சார் மதிப்பீடுகளைத் தகர்த்தெறிந்து மீந்திருக்கும் உணர்வுகளின் தடயமாய் அவற்றைப் படிமமாக்குகிறார் குட்டிரேவதி. உடல் பற்றிய பெண்ணியவெளி இதிலிருந்து உருக்கொள்கிறது. அதேபோல, உலகு பற்றிய பெண்ணியவெளியின் தோற்றத்தினை Mary Morris இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"The late John Gardner once said that there are only two plots in all of literature. You go on a jouney or a stranger comes to town. Since women, for so many years, were denied the journey, they were left with only one plot in their lives - to await the stranger...

..From Penelope to the present, women have waited - for a phone call, a proposal, or the return of the prodigal man from sea or war or a business trip. To wait like patients for a doctor, commuters for buses, prisoners for parole, is in a sense to be powerless. If we grow weary of waiting, we can go on a journey. We can be the stranger who comes to town."

(The Virago Book of Women Travellers: Edited by Mary Morris)

காத்திருத்தல் அதிகாரமற்றிருத்தலைக் குறிக்கிறது; பயணித்தல் அதனைக் கைப்பற்றிக்கொள்வதாகிறது. இதுகாலம் வரை பெண்களுக்கென விதிக்கப்பட்டிருந்த - அன்பினையோ, வேறெதனையோ நோக்கிய - காத்திருத்தலை விடவும், அதனை நாடிச் செல்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெண்களுக்கானதோர் அல்லது பெண்களது பார்வையிலான வெளியொன்றினைக் கட்டமைப்பது சாத்தியமாகிறது. சபிக்கப்பட்ட திருமண வாழ்க்கையை விட்டு விலகியோடும் பெண்ணுக்கு பயணம் விடுபடலாகிறது; எதிர்பாராதவிதமாக குடும்பத்தினரையோ உறவினரையோ இழந்தவளுக்கு ஆற்றுப்படுத்தலாகிறது; இன்னும் சிலருக்கு அறிவு; அழகு; அனுபவம்; சமயங்களில் பேருவகை. இவை அவற்றுக்காகக் காத்திராமல் அவற்றை நாடிப் பயணித்தமையாலேயே சாத்தியமாகின. இனி, அந்த வெளியானது குறித்த பெண், அவளைச் சுற்றியுள்ள மனிதர்கள், சமூகம், ஏன் நிலப்பரப்பு அனைத்தையும் சார்ந்து இயங்கத் தொடங்குகிறது. மாற்றுவெளிகள் தமக்கிடையே சமாந்தரமாகப் பயணிக்குமிடத்து மட்டுமே சமத்துவம் நிலவக்கூடும். தூர நோக்கின், இப்பயணங்கள் ஆண்-பெண் எனும் எதிர்நிலைகளுக்கிடையிலான சமாந்தரமான இயக்கத்தை நடைமுறைச் சாத்தியமாக்கவும்கூடும்.

உடலும் உலகமும் தமக்கிடையே இடைவெளிகளின்றி தொடர்ந்தும் இடையீடு செய்தபடியே இருக்கின்றன, காலந்தோறும். உலகினையூடறுத்துப் பயணிக்கையில் ஒரு பெண் தனது உடல், அது பிரதிநிதித்துவப்படுத்தும் பாலினம் மற்றும் அது வெளியிடும் கவர்ச்சி தொடர்பான விழிப்புணர்வுடனிருக்க வலியுறுத்தப்படுகிறாள். அதேபோல, உடலினையூடறுத்துப் பயணிக்கையில் உடல் பற்றிய உலகின் மதிப்பீடுகள், கட்டுப்பாடுகள், வரையறைகளனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியவளாகிறாள். தற்போதைய தமிழ்ச்சூழலில் உடல் குறித்த உரையாடல்கள் தீவிரமாக நிகழ்ந்துவருகின்ற போதும், பெண் பயணிகளின் பயணப் பதிவுகள் மிக அருமையாகவே காணக்கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்ணியப் பயணவிலக்கியங்களென நோக்கின் வெறுமையே மிஞ்சும். பெண்கள் தனித்துப் பயணித்தல் இன்னமும் முறையாகத் தாராளமயப்படுத்தப்படாத சூழலில் இவ்விலக்கியங்களை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், உடலைப் போலவே உலகமும் மிக ஆழமான நுண்ணுணர்வுடன் ஆராயப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டியதொன்றென்ற பிரக்ஞை பெண்களுக்கு இருந்தாக வேண்டியது அவசியம். மற்றையது, உலகு பற்றிய தேடலின்றி - பெண்கள் தாம் தனித்தியங்க ஏதுவான - முழுமையான பெண்ணிய வெளி சாத்தியமில்லையென்ற புரிதலும் வேண்டும்.

Sunday, February 10, 2008

புழுவென மரணமூறும் தெருக்கள்



இந்த நாள் ஒரு விசர்க்கனவோட விடிஞ்சது. அக்கா ஒரு பெரிய கட்டடத்திலையிருந்து கீழை குதிச்சு தற்கொலை செய்யுறா.. நான் கீழையிருந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறன் அவா விழுறதை.. ஒவ்வொரு மாடியாய்க் கடந்து கடந்து அவாட உடம்பு கீழை விழுந்து சிதறித் தெறிக்கிறதை பார்த்துக்கொண்டேயிருக்கிறன்.. எனக்குப் பக்கத்திலையிருந்த அப்பா அதைப் பார்க்கச் சகிக்காமல் நெஞ்சு வெடிச்சு இறந்து போறார்.. அப்பாவுக்காக அழுறதா, அக்காவுக்காக அழுறதா என்டிருக்கு எனக்கு.. இந்தா இந்த அழுகை அப்பாவுக்கு, இந்த அழுகை அக்காவுக்கென்டெல்லாம் சொல்லி வைச்சா மனுசர் அழுவினம்.. அழக்கூட திராணியில்லாமல் நான் தேம்புறன், தேம்பிக் கொண்டேயிருக்கிறன்.. அப்படியே தூக்கம் குழம்பினது.. இது வெறும் கனவுதான் என்டு நினைக்க கொஞ்சம் ஆறுதலாயிருந்தாலும், உண்மையாவே நான் தேம்பிக் கொண்டுதானிருந்திருக்கிறனென்டும் விளங்கினது.. தனியாப் படுக்கிறதும் ஒருவகையில் நல்லம்தான் போல..

............

'சுமிதாட அப்பாவை சுட்டுப்போட்டாங்கள்'
'யார் சுமிதா?'
'சுமிதாவை நினைவில்லையா, அந்த மெலிந்த கேர்ள், துர்க்காட செட்'

அண்டைக்கு நானுமிருந்தன் அந்த இடத்தில், அது நடக்கிறதுக்கு சில நிமிஷம் முன்னுக்கு.. ஏதோ கனவு காணுறதைப்போல இருக்கு.. கனவெல்லாம் உண்மை போலவும், உண்மையெல்லாம் கனவு போலவும்.. ஏதோ கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி வந்த நண்பனொருத்தன் தன்ரை கேர்ள் பிரெண்ட் க்கு கடைசியா ஏதோ குடுக்கவேண்டுமென்டு என்னட்டைக் குடுத்து அவட்ட குடுக்க சொன்னான்.. சரி சேர்ச்சில் சந்திப்பம் 7 மணிக்கென்டன்.. அவனைச் சந்திச்சு கதைச்சுத் திரும்பி வீட்டை வந்து சேர ஊடக நண்பரொருவரிட்டயிருந்து தொலைபேசியழைப்பு வருது, சேர்ச்சுக்கு முன்னுக்கு யாரையோ சுட்டுப்போட்டாங்கள், எங்கை நிக்கிறீங்களென்டு..

'நான் இப்பதானெ அங்கயிருந்து வாறன்'..
'இப்பதான் நடந்தது'..

அப்பாட உடம்பில் ஏழு சூடு, அம்மாவுக்கு ஒன்டு.. பார்த்துத்தான் குடுத்திருக்காங்கள் போல, எல்லாத்திலயும் துணைக்கு நின்டவ இதிலையும் வாங்கட்டுமென்டு.. ஏன் இப்படி குரூரமான யோசனை வருதெனக்கு.. இதைவிட்டால் வேறை எதைத்தான் யோசிக்க..

...........

'மா எங்கை பிடிக்கிறீங்கள்.. ஆள் இந்த உலகத்திலை இல்லை போல.. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பிடியுங்கோ இன்னும் தள்ளி..'

ககா மமா பப/ ககமம பபதத//

வயலின் நடு ஓட்டைக்குள்ளயிருந்து புழுவொன்டு வந்து தண்டிக்கு மேலால் ஊர்ந்து போகத் தொடங்கினது.. சீஈஈ, புழூ.. அருவருத்து முடிய முதல் குவியல் குவியலாய் புழுக்கள் ஓட்டைக்குள்ளால் வந்து வயலின் முழுக்க ஊரத் தொடங்கினது.. விரலுக்கு மேலால், வில்லுக்கு மேலால்.. மிஸ்ஸ்ஸ், புழூஊஊ...

மமா பபா தத/ மமபப ததநிநி//

பக்கத்திலை இருந்த நண்பியை முழங்கையால் இடிக்கிறன். புழு.. அவள் திரும்பிப் பார்க்கிறதாவே காணேல்லை.. மிஸ்ஸ் என்டு திரும்ப, மிஸ் இருந்த இடத்தில் கோழியொன்டிருந்து வயலினுக்கால் வழிந்த புழுக்களை கொத்திக் கொண்டிருந்தது.. வியந்துபோய் வயலினைப் பார்த்தால் வயலின் ஒரு மலைப்பாம்பாய் மாறி என்ரை கையை சுத்திக்கொள்ளத் தொடங்கினது..

அம்மாஆஆஆ..

கத்திக்கொண்டு தூக்கியெறிந்தன்.. அம்மா எனக்கு இங்கையிருக்க பயமாயிருக்கு, எனக்கு பயமாயிருக்கு.. ஏன் என்னை இங்கை கூட்டிக்கொண்டு வந்தனீங்கள்.. என்னைத் திரும்ப கூட்டிக்கொண்டு போங்கோ.. எனக்கு இங்கையிருக்க ஏலாது.. ஏலாது.. புழு.. புழு.. தெருவெல்லாம் புழு.. வயலினுக்குள்ளயும் புழு.. என்ரை கையெல்லாம் புழு.. இது என்ரை கையில்லை.. எனக்கு இந்தக் கை வேணாம்.. புழு அரிச்ச கை.. கழட்டி வீச வேணும்.. எனக்கு வேணாம்ம்ம்ம்..

...........

வகுப்பு முடிஞ்சு வாறன்.. பொலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னுக்கு அந்த ஆன்ரி..

'எங்கடை மகனை நேற்றுப் பிடிச்சுப் போட்டாங்களம்மா'
'அண்ணாவையோ ஏன், எப்ப?'
'இங்க தெரிஞ்ச பொடியன்ட வீட்டை வந்த நேரம்.. நேற்றிரவிருந்து றோட்டிலை உட்கார்ந்திருக்கிறன்.. இப்பதான் போய் சாப்பாடும் குடுத்துட்டு வந்தனான்.. இன்னும் கொஞ்ச நேரத்திலை விடுறனென்டு சொன்னவங்கள்..'
'ஐசி எல்லா வைச்சிருந்தவர் தானே..'
'ஓ.. வேலை செய்ற இடத்தின் கார்ட் எல்லாம் வைச்சிருந்தவன்'
'அப்ப கெதியா விட்டுடுவினம்.. நீங்கள் ஒன்டும் யோசிக்காதீங்கோ'
'விட வேணும்..'
'விடுவினம்'

மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் புழுக்கள் பின்னுக்காலை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கு.. ஓடப் பார்க்கிறன்.. வெள்ளம் மாதிரி அடிச்சுக்கொண்டு வந்த புழுக்களோட நானும் அள்ளுப்பட்டுக்கொண்டு போறன்.. புழுவோட புழுவாய்.. இனி நானும்.. அம்மாஆஆஆஆஆ....


Monday, December 31, 2007

அரியத்திலுருளும் உணர்வுகள்

பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்
வலியெடுத்துக் கதறுமோர்
குழந்தையின் குரலில்
செய்தவைக்காகவும்
செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்
கதைத்தவைக்காகவும்
சமயங்களில்

கதைக்க மறுத்ததற்காகவும்
சுற்றியிருக்கும் அனைவருக்கும்
வெறுப்பினையே பரிசளித்தமைக்காக
பிறர் முதுகில் சுமையிறக்கி
ஆறுதலாக இளைப்பாறியமைக்காக
புன்னகைகளைக் கிழித்தெறிந்து
கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக
இன்னமும் எனதன்பே,
விரல்கள்
நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
வெளிறச் செய்தமைக்காக.

Thursday, December 13, 2007

உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல

காலம்: இறுதித் தீர்ப்பு நாள்
இடம்:
நியாய சபை
நேரம்: விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்பு



நாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,
தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..
மௌனம் எமக்கிடையே
ஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்தது
எத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*
தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடி
காலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்
நான் கத்தியழ விரும்பினேன்
'நீ எனதும் அம்மாதானில்லையா?'
ஒரு பிடி நேசம்
சில கொத்து புன்னகை
சிறு துளி இடம் உன் மடியில்
வேறென்ன கேட்டேன் உன்னிடம்..
கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை
புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய்
இல்லாதுவிட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்திருக்க மாட்டாய்
உன்னிடத்திலோர் அரக்கி இருந்திருந்தாலும்..
ஆனால், இன்று அவர்களுன்னை அரக்கியென்கிறார்கள்
கைப்பற்றிக் கொண்டதை தங்களதாம்..
தீர்ப்பு வழங்கப்பட்டு உரலில் தலையிடிபட
சிதறும் சதைத்துணுக்குகளை தேங்காய்த் துருவலென
பொறுக்கியெடுத்து ஏப்பமிடுகின்றனர் உனது குழந்தைகள்
இது ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வேளையல்ல என்பது மட்டும் புரிகிறது


*குவேனி - இலங்கை பூர்வீகக்குடியொன்றின் அரசி. விஜயன் அவளைத் திருமணமுடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளைக் கைவிட்டு நாயக்க வம்ச அரசியொருத்தியை மறுபடி திருமணம் செய்கிறான். குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள தனது குடியினரிடம் திரும்பிச் செல்பவள் காட்டிக்கொடுத்த துரோகியெனக் கருதப்பட்டு அவர்களால் கொல்லப்படுகிறாள்.

(for the country I love, and for a life that demands us much more than it deserves..)


தலைப்பு நன்றி : அருந்ததி ரோய் - 'The silence sat between grandniece and baby grandaunt like a third person' (pg.22), The God of Small Things

Friday, December 07, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 3

See No Evil, Hear No Evil, Speak No Evil..!

Funny Boy
- Shyam Selvadurai

குழந்தைகள் தொலைந்து கொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்...

(இளங்கோ - நாடற்றவனின் குறிப்புகள்)


1.

Right and wrong, fair and unfair had nothing to do with how things really were. I thought of Shehan and myself. What had happened between us in the garage was not wrong. For how could loving Shehan be bad? Yet if my parents or anybody else discovered this love, I would be in terrible trouble. I thought of how unfair this was and I was reminded of things I had seen happen to other people, like Jegan, or even Radha Aunty, who, in their own way, had experienced injustice. How was it that some people got to decide what was correct or not, just or unjust? It had to do with who was in charge; everything had to do with who held power and who didn't. If you were powerful like Black Tie or my father you got to decide what was right or wrong. If you were like Shehan or me you had no choice but to follow what they said. But did we always have to obey? Was it not possible for people like Shehan and me to be powerful too? I thought about this, but no answer presented itself to me.
(Selvadurai, Shyam - Funny Boy pg.274)


பேசுவதற்கும் சொல்வதற்கும் எதுவுமற்றுப் போன பொழுதொன்றில், அனுமானங்கள்.. போலிகள்.. வாதங்கள்.. வாய்ப்புக்கள்.. என நீண்டுகொண்டே போகும் பரீட்சைக் குறிப்புகளைத் தூக்கியெறிந்து கட்டிலில் கால் நீட்டியபடியமர்ந்து சுவாரசியமாய் எதையும் வாசிக்க ஆரம்பித்தாலும்.., இப்படித்தான் எங்காவதோர் புள்ளியில் வாசிப்பின் தொடர்ச்சி அறுபட்டுவிட, சாளரங்களுக்கப்பால் வெளிறலாய் விரிந்திருக்கும் வானத்தை வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்துவிட வேண்டியிருக்கிறது. வீட்டினருகில் நின்ற மாமரம் வெட்டப்பட்டதில் இப்போதெல்லாம் யன்னல் முழுவதையும் நிறைத்திருப்பது அந்த வெளிறிப்போன வானம் மட்டும்தான். அம்மாமரத்துக் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சு இப்போது எங்கே தஞ்சமடைந்திருக்கும்? மயில்நீலநிற செண்பகமொன்று வந்து குரலெழுப்பியபடியிருக்குமே, அது எங்கே போயிருந்திருக்கும்? காகங்கள், குயில்கள், புழு பூச்சிகள்.. எத்தனைக்கு உறைவிடமாயிருந்திருக்கும் அம்மரம்? இன்று அதன் இருப்பைப் பறைசாற்றிப்போக எஞ்சியிருப்பது, அது இருந்த இடத்தை இப்போது நிறைத்துக் கொண்டிருக்கும் வெறுமை.. வெறுமை மட்டுமே. எதிர்வீட்டுக்காரர்கள் மரத்தை ஏன் வெட்டினார்கள், எதற்கு வெட்டினார்களென்பது பற்றி நாம் கேள்விகேட்க முடியாது.. இஷ்டத்துக்கு வெட்டித்தள்ள அதென்ன உங்கள் தனிப்பட்ட சொத்தா என வாதிடவும் முடியாது.. வாழைப் பொத்திகளாய் மனிதவுடல்கள் அறுபட்டுவிழும் தேசமொன்றில் வாழ்ந்துகொண்டு மரத்தைப் பற்றிக் கேள்வியெழுப்ப எமக்கு எந்த அருகதையுமில்லை.. ஆமாம், எதற்குமொரு தகுதி/ அதிகாரம் வேண்டும்.

Funny Boy வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்தப் புள்ளியில்தான் என் வாசிப்பு அறுபட்டது.

கொழும்பின் உயர்மட்டத் தமிழ்க் குடும்பமொன்றில் பிறந்த அர்ஜூன் (அர்ஜி) எனும் சிறுவனின் பார்வையில் 70 மற்றும் 80 களில் கொழும்பின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை - அவற்றின் அபத்தங்களை - ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சித்திருக்கிறார் ஷ்யாம் செல்வதுரை. Funny Boy என குறிப்பிடப்படும் அர்ஜி தனது Homosexuality யுடனும், இனங்களுக்கிடையே கடும் முறுகல் நிலை காணப்படும் சமூகத்தில் தனது இருப்பினை நிலைநாட்டவுமான போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறானென நீள்கிறது கதை.

பால்/ பாலினம் ஆகிய கருத்தாக்கங்கள் தொடர்பான போதிய விளக்கம் கதையுடன் தொடர்வதற்கு அவசியமாகின்றது. பால் வேறுபாடானது உயிரியல் ரீதியாகவும், பாலின வேறுபாடானது சமூக ரீதியாகவும் பெண்களையும் ஆண்களையும் வேறுபடுத்துவது இங்கு கவனிக்கத்தக்கது. பால் வேறுபாடெனப்படுவது உயிரியல் ரீதியாக, இனப்பெருக்க உறுப்புக்களின் வேறுபாடுகளினடிப்படையில், பிறப்பின் மூலம் தீர்மானிக்கப்படுவது. இங்கு உறுப்புக்களே பெண்/ ஆண் ஆகிய அடையாளங்களைத் தோற்றுவிப்பனவாக இருப்பதுடன், இவை வெறும் உடல்சார் வேறுபாடுகளாக மட்டுமே காணப்படுகின்றனவே தவிர, இக்கருத்தாக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமிருப்பதில்லை. ஆனால், நடைமுறை வாழ்வில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் அவனை விடத் தாழ்ந்தவளாகவும் காணப்படுவதான மனநிலையைக் கட்டியெழுப்புவதில் பாலினம் என்ற கருத்தாக்கத்தின் பங்கு அளப்பரியது. இது சமூகத்தில் பெண்/ ஆணின் நிலையினைத் தீர்மானிப்பதாக அமைவது. பெண்பிள்ளை காலை அகட்டி உட்காரக் கூடாது, சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது.. ஆண்பிள்ளை அழக்கூடாது.. என்பவற்றில் தொடங்கி, பெண் குழந்தைக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஆண் குழந்தைக்கு நீலநிறத்திலும் உடுப்பு தைப்பது முதல்.. சமைத்தல், கூட்டுதல், துவைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தலாகிய இன்னபிற வேலைகள் பெண்களுக்கானவை.. வேலைக்குப் போதல், சம்பாதித்தல், காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு பத்திரிகை வாசித்தல் போன்ற வேலைகள் ஆண்களுக்கானவையென்பது வரையான அனைத்தும் பாலின வேறுபாட்டுக்குள் உள்ளடங்குபவை. இதனடிப்படையில் தான், பெண்ணியமென்பது 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியதென அ.மங்கை எடுத்துக்கூறுகிறார். அந்தவகையில் ஷ்யாம் செல்வதுரையின் அர்ஜி, இந்தப் பாலின அடிப்படையில் செயற்படும் ஒட்டுமொத்தச் சமூகத்தினை கேள்விக்குள்ளாக்குமொரு கதாபாத்திரமாக விளங்குகிறான். ஆழ்ந்து சிந்திக்கையில், எமது சமூகத்தின் உயிர்நாடியான இந்தப் பாலின ஒடுக்குமுறை சார் மனப்பான்மையை வேரோடு களைவதற்கான மாற்று வழியாக (An alternative way) Homosexuality யினை முன்வைக்கலாமெனவும் எண்ணத் தோன்றுகிறது.

சிறுவயதிலேயே அர்ஜிக்கு பெண்களின் விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகம். அண்ணன்மார் விளையாடும் கிரிக்கட்டை விடவும், பெண்பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அதிகளவு புதிதாக்கும் ஆற்றலுடையதாகக் (creative) காணப்படுவது அவனை ஈர்க்கிறது. அவர்கள் விளையாடும் bride - bride (மணப்பெண்) விளையாட்டில் கற்பனைக்கு இடம் அதிகம். ஒரு திருமண வீடு எப்படியிருக்குமென கற்பனை செய்து, அதேபோல அலங்கரிப்பதும், வெளிக்கிடுவதும், அதை அப்படியே - ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக - செய்துபார்ப்பதும் என்றும் சுவாரசியமானவை. தேங்காய் சிரட்டைகளையும், காலியான தகர டின்களையும் கொண்டு திருமண கேக் ஒன்றை அலங்கரிக்கும் விதத்தை அர்ஜி கண்டுபிடிப்பதோடு, தனது கண்டுபிடிப்பு குறித்து பெருமையும் அடைகிறான். அண்ணன்மாரின் கிரிக்கட் அவனைப் பொறுத்தவரை வெறும் வறண்டுபோன விளையாட்டே, ஒரே பந்தை மாறி மாறி அடிப்பதும், பிடிப்பதுமென.. அதில் கற்பனைக்கு இடமில்லை.. சுவாரசியமுமில்லை.

சிறுவயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றன. அக்கா, நான், இன்னும் எங்கள் ஒழுங்கையில் வசித்த இரண்டு மூன்று தோழிகள் சேர்ந்து விளையாடுவதில் எனக்கு அதிகம் பிடித்தது செத்தவீடு கொண்டாட்டம். இப்போது யோசிக்கத்தான் அந்த வயதிலேயே நாங்கள் எவ்வளவு குரூரமானவர்களாக இருந்திருக்கிறோமென்பது மனதில் உறைக்கிறது. மண்ணைக் கிண்டி எறும்பு, புழு, பூச்சியெல்லாம் பிடித்து அவற்றைக் கொன்று தீப்பெட்டிகளில் அடைப்போம். இது அக்காவினதும், வயதில் மூத்த மற்ற தோழிகளினதும் வேலை. பிறகு, எல்லாருமாகச் சேர்ந்து தீப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒழுங்கை முழுக்க ஊர்வலம் போய் ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து, மலர் தூவி, ஈர்க்குக் குச்சியால் சிலுவை செய்து வைத்து, சுற்றிவர நின்று அழுவோம். யார் கூடவாய் அழுவதென்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். இப்போது நினைக்க, இந்த நாட்டில் வாழ்வதற்குத் தகுந்த விதத்தில்தான் சிறுவயதிலேயே பயிற்சி (training) எடுத்திருக்கிறோமென்பது புரிகிறது. அதுதான் இன்றும், மரணங் குறித்த எச்சலனமுமில்லாமல் நீரோ மன்னனாய் பிடில் வாசித்துக் கொண்டிருக்க முடிகிறது போலும்.

மணப்பெண் விளையாட்டில் அர்ஜி தான் மணப்பெண். சாரி உடுத்துவதும், பெண்ணாய் வெளிக்கிடுவதும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்களது விளையாட்டில் மணமகனுக்குத்தான் கடைசி இடம். யாரும் அந்தப் பாத்திரத்தை வகிக்க விரும்புவதில்லை.. அவரைச் சீண்டுவதுமில்லை. மணமகன் இல்லாமலேயே இவ்விளையாட்டைக் கொண்டுநடத்த அர்ஜி விரும்பினாலும், திருமணத்தின்போது மிகவும் இன்றியமையாத ஒருவராக மணமகன் விளங்குவதால், அது தவிர்க்க முடியாததாவது, குழந்தைகளின் உலகில் வளர்ந்த ஆண்களின் இடத்தை தெளிவாகப் புலப்படுத்துவதாக அமைகிறது. அம்மாவின் நகைகளோடு விளையாடுவதும், மாமியின் மேக்கப் சாதனங்களை பரீட்சித்துப் பார்ப்பதுமென அர்ஜியின் 'பெண்தனங்கள்' (ஏனைய உறவினர்கள் குறிப்பிடுவதுபோல) குடும்பத்தினரின் கடும் விசனத்துக்கு அவனை ஆளாக்குகின்றன. இதன் விளைவாக பெண்களுடன் விளையாடக் கூடாதெனவும், அண்ணன்மாருடன் விளையாடும்படியும் அவன் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.


மாற்றுப் பார்வையில்.., இவ்விடத்தே வெறுப்புக்காளாவதும், கேலிக்குள்ளாவதும் அர்ஜியெனும் சிறுவனோ அல்லது அவனது ஆளுமையோ அன்றி, பெண் தன்மையே எனலாம். பெண்களுக்கான தன்மையைக் கொண்டிருப்பதென்பது - அது பெண்ணாயிருக்கும் பட்சத்திலேயே Girly Girlish என கிண்டலுக்காளாகும் நிலையில் - ஒரு ஆணை சமூகத்தில் (இன்றளவும்) மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. பொண்ணையன், ponds.. இன்னபிற பட்டப்பெயர்கள் காத்துக்கொண்டிருக்க, இந்தப் பெண் தன்மையினை நிர்ணயித்தது யார்/ எதுவென்ற கேள்வி - அத்தன்மை சமயங்களில் ஆண்களுக்கானதாகவும் இருக்கையில் - எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அர்ஜியின் மற்றுமொரு சகோதரி மீனா ஆண்பிள்ளைகளுடன் கிரிக்கட் விளையாடுவதைக் கண்டுகொள்ளாத சமூகம் அர்ஜியை மட்டும் பெண்பிள்ளைகளுடன் விளையாடுவதைக் கண்டித்தது ஏன்? ஒரு பெண், ஆணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது (அதாவது சமூகம் நிர்ணயித்த வீரம், கம்பீரம், etc. etc.) பொதுவாக பெருமைக்குரியதாகவே - பாரதியாரால் கூட - கருதப்பட்டிருக்க, ஒரு ஆண், பெண்ணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது கேலிக்குள்ளாக்கப்படும் பட்சத்தில் இங்கு உண்மையில் கீழ்த்தரமாக மதிக்கப்படுவது அந்த ஆணோ, வேறெதுவுமோ அல்ல. மாறாக, பெண்களுக்குரியதென கூறப்பட்டிருக்கும் பண்புகளே. 'பெண்'ணாக இருத்தலென்பது கேவலம்.. ஆணாக இருத்தல் பெருமை.. என்றவகையில் முடிவு பெறப்படுமானால், இந்த பெண்/ ஆண்தனங்கள் இருபாலாருக்குமிடையே விரவிக்காணப்படும் பட்சத்தில் இன்னவின்னது, இன்னாருக்கானதென இவற்றை வகைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமெனவும் நினைக்கத் தோன்றுகிறது.

அன்றாட உரையாடலில் இடம்பெறும், 'அவளொரு ஆம்பிளை மாதிரி..' என்பது பாராட்டு/ ஒரு compliment ஆகவும், 'அவனா.. அவனொரு பொம்பிளை..' என்பது அதற்கெதிரான நக்கல் தொனியைக் கொண்டிருப்பதும் ஏனென்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. சராசரி மனிதர்களை விடுத்துப் பார்த்தாலும், ஆனானப்பட்ட அறிவுஜீவிகளாக, பெண்விடுதலையில் அக்கறை கொண்டவர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் பலரின் மத்தியிலும் இவ்வார்த்தைப் பிரயோகங்கள் சர்வசாதாரணமாகவிருக்க (உ+ம்:- ஆம்பிளைகள் மாதிரி ஸ்மார்ட்டாயிருக்கிறாள்), மனிதர்கள் எத்துணை சாமர்த்தியமாக தங்களது குரூர முகங்களையும், அறிவீனங்களையும் அறிவெனும் திரைக்குள் மறைத்துக்கொண்டு விடுகிறார்களென யோசிக்கையில், அறிவையே மறுதலிக்க வேண்டியிருக்கிறது. அவனொரு பொம்பிளையென எவரையாவது சுட்டிக்காட்டி எவரும் கூறுவார்களாயின், நரம்புகளைப் புடைத்துக்கொண்டு சீறியெழும் எனது கோபம் நியாயமானதுதானென அர்ஜி உணர்த்தி விட்டிருக்கிறானென்றே கூறவேண்டும். (அந்தக் கோபம் குறித்த ஆணின் மீதான பரிவினால் எழுந்ததல்ல; மாறாக, பெண்ணாய் இருப்பதென்பது அவ்வளவு கேலிக்குரியதாய்ப் போனதாவென்ற விசனத்தோடு எழுந்ததென்பதையும் கவனிக்க).

இத்தகைய - சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிகளினடிப்படையிலான - பிறழ்வுநிலைக் குணாம்சங்கள் மிக இயல்பானதும், அதிகாரத்தினை எதிர்க்கும் மாற்றுவெளியை நோக்கியதுமானதென Funny Boy எடுத்துக் காட்டுகின்றது. எமது இயல்பு அதுதானென்றால், அப்படியிருப்பதற்காக நாங்கள் வருந்தத் தேவையில்லை.., குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டியதில்லையென அர்ஜிக்கு உணர்த்தும் நண்பனாக ஷெஹான் அறிமுகமாகிறான். ஷெஹானுக்கும் தனக்குமிடையிலான உறவு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.. குடும்பத்தவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாகுமென்பது புரிந்தாலும், அவர்களைப்போல தன்னால் இருக்கமுடியாதென்ற தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது.

சரிகள் எதுவுமே எப்போதும் சரிகளாகவேயிருப்பதில்லை. அவற்றைப் பிழையாக்குவதற்கான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை பிழையாகியே தீரும். சரி பிழைகளும், நியாய அநியாயங்களும் எப்போதும் அதிகார வர்க்கத்துக்கு சார்பானவையே. சரிகள் பிழைகளாவதும், பிழைகள் சரிகளாவதும் அதிகாரத்திலிருப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டது அர்ஜிக்கு நினைவு வருகிறது. அவனது மாமி ராதா, சிங்களவர் ஒருவரை நேசிக்கிறார். இருதரப்புப் பெற்றோரின் எதிர்ப்பும், நாட்டின் முறுகல் சூழ்நிலையும் இனங்களின் பெயரால் அவர்களைப் பிரிய நிர்ப்பந்திக்கின்றன. அடுத்து, அப்பாவிடம் வேலைபார்க்கும் அவரது பால்யகாலத்துத் தோழனின் மகனான ஜெகன். முன்னர், இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததைக் காரணம் சாட்டி கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர், எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்படுகிறார். எனினும், வேலைத்தளத்தில் ஜெகனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் கூட (சிங்களவர்) அவரையோ, அவரது வார்த்தைகளையோ மதிக்கத் தயாரில்லை. அறைக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைக் கிண்டுவது, தகாத வார்த்தைகளை சுவர்களிலும், கதவுகளிலும் எழுதிவைப்பதென 'தமிழ்ப் பயங்கரவாதி' (?!) ஒருவருக்குக் கீழே வேலை பார்ப்பதற்கான தமது மறுப்பை வெளிப்படுத்துகின்றனர். தனது வியாபாரம் முடங்கிவிடுமென பயந்த அப்பா ஜெகனை வேலையிலிருந்து நீக்கி, மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கிறார். தமதேயான வழிகளில் இவர்கள் அதிகாரத்தினால் பாதிக்கப்படுகின்றனர். தமது வாழ்க்கை, தமது விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.



2.




வேறெதனையும் விட ஷ்யாம் செல்வதுரையின் இப்பிரதி உணர்வுகளோடு மிக ஒன்றித்துப் போனமைக்கு மற்றுமொரு காரணம், கொழும்பு நகரைக் களமாகக் கொண்டு இக்கதை இயங்குவது தானென்பேன். பசுமையான பின்னணியுடனான அழகிய கிராமத்துக் கதைகள் நகரங்களில் வளர்ந்த எம்மைப் போன்றவர்களுக்கு கனவுலகப் பிரதிமைகளாக மட்டுமே தோற்றமளிப்பன. நகர வாழ்வினையும், அதன் இறுக்கங்களையும், சாதக பாதகங்களையும் எடுத்தாளும் கதைகள் தமிழில் எழுந்தது மிகக்குறைவு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையோ, பெரும்பாலும் மேலைத்தேய நகரங்களைச் சார்ந்தனவாக அமைந்திருப்பதால் - எமது நகரங்களுக்கும் அவர்களுக்குமிடையேயான - பாரிய பண்பாட்டுப் பொருளாதார வேறுபாடு அவற்றுடன் அதிகம் நெருங்க அனுமதிப்பதில்லை. ஆனால், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இக்கதையில் காணும்போது - அர்ஜி நடந்த தெருக்களில் நானும் நடந்திருக்கிறேன்.. British Council, Cinnamon Gardens க்கு நானும் போயிருக்கிறேன்.. Chariot ல் அமர்ந்து Lamprais (special preparation of rice and curry that is baked in a banana leaf) சாப்பிட்டிருக்கிறேன் என - உணரும் பரவசம் எல்லையற்றது.

கதை நிகழ் காலத்தைய கொழும்பின் பதட்டமான சூழ்நிலை யதார்த்தபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இன்று அதனை மறுபடியும் வாசிக்கையில், இன்றைக்கு இரண்டு அல்லது மூன்று தசாப்தகாலத்துக்கு முன்னரிருந்த கொழும்புக்கும்,
இப்போதைக்கிருக்கும் கொழும்புக்கும் பொருளாதார தகவல் தொழினுட்ப முன்னேற்றங்களுக்கப்பால், பெரிய வேறுபாடுகளெதுவுமில்லை. அன்றைய பதட்டமும் முறுகல்நிலையும் இன்றுவரையும் தொடர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

கொழும்பு நகரம் பல்லினக் கலாசாரங்களையும் ஒன்றிணைக்குமொரு தளம். நகரங்களுக்கேயுரிய எந்திர வாழ்க்கைக்கு இது மட்டும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்டளவுகாலம் இங்கு வசிக்கும் எவரும் சக மொழியுடன் ஓரளவாவது பரிச்சயம்கொள்ளும் சூழ்நிலையை அது வழங்கிவிடும். சக இனத்தவரைப்பற்றிய குறைந்தபட்சப் புரிதலுக்காவது இது உதவக்கூடும். ஆனால், யுத்தமும் அதன் தீவிரம் நாட்டின் கேந்திர ஸ்தானம் வரை நீட்சியடைந்தமையும் ஒருவித தடித்த திரையென இனங்களைச் சூழ நிரந்தரமாக கவிந்துகொண்டு விட்டதது.

50 களில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களில் அர்ஜியின் அம்மாச்சியின் அப்பாவும் (great grand father) கொல்லப்படுகிறார். அந்தச் சம்பவம் அம்மாச்சியை சிங்களவர்களையே வெறுக்கும் தீவிர இனவாதியாக மாற்றுகிறது. வடக்கே விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்று தனித்தமிழீழம் சாத்தியமாகும் நாளில் அங்கு செல்லும் முதல் ஆளாக நானிருப்பேன் என்கிறார் அவர். தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக பிற்காலத்தில் வேலைவாய்ப்புப் பெறுவதைக் கருதி அர்ஜியை சிங்கள மொழிமூலத்தில் அவனது அப்பா படிக்க அனுமதிக்கும்போது, அவர் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதாகக் குற்றம்சாட்டவும் செய்கிறார் அம்மாச்சி. ராதா மாமியின் காதலும் அம்மாச்சியால் இவ்விதமே நிராகரிக்கப்படுகிறது. இதே காழ்ப்புணர்வு அவர்களைச் சுற்றியிருந்த சிங்களவர்கள் மத்தியிலும் காணப்பட்டபோதும், 83' கலவரத்தில் அர்ஜியின் வீடு காடையர்களால் தாக்கப்பட்டபோது அவர்களுக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பதும் சிங்கள நண்பர்களே.. மிக எளிதாக எதனையும் (இனங்களுக்கிடையிலான உறவை/ புரிதலைக்கூட) பொதுமைப்படுத்திவிட முடியாதென்பதற்கு இதுவொரு தக்க சான்று.

கலவரம் நீடித்திருந்த நாட்களின் நிகழ்வுகள் நாட்குறிப்புப் பதிவுகளாக - நேரடி சாட்சியமாக இடம்பெற்றுள்ளன. வீடுகள் முற்றுமுழுதாக தாக்கியழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டமையும், தெருக்களில் கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்பட்டுக் கிடந்தமையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் உணர்வுகளைஅதிரச் செய்வதாகவுள்ளது. கலவரத்தைத் தூண்டிவிட்டது அரசுதானென்பது தெருக்களில் தமிழர்களின் கடைகள், வீடுகள் மட்டும் சரியாகக் குறிபார்த்துத் தாக்கப்படுவதிலிருந்தும் (வாக்காளர் பதிவிலிருந்து தகவல் திரட்டியதாகக் கூறப்படுகிறது), மிக நீண்டநேரத்துக்கு அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டமையிலிருந்தும், இராணுவத்தினரும், பொலிஸாரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் தெருவில் வேடிக்கை பார்த்தபடியிருந்தமையிலிருந்தும் தெளிவாகிறது. 78' ல் சிறிமாவின் அரசாங்கம் கவிழ்ந்து ஐதேக ஆட்சியைக் கைப்பற்றியபோது நிலைமை சீரடையுமென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த அர்ஜியின் அப்பா இனியும் இந்த நாட்டில் வாழ முடியாதென முடிவெடுத்து குடும்பத்துடன் கனடாவுக்குப் புலம்பெயர முடிவெடுக்கிறார். கலவரம் தொடங்குவதற்கு சிலகாலங்களுக்கு முன்னரேயே நாட்டைவிட்டு வெளியேறுவோமென அர்ஜியின் அம்மா அடிக்கடி வலியுறுத்தி வந்தபோதும், வெளிநாட்டில் போய் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்வதா என மறுத்திருந்த அப்பா, பின்னர் அம்மா சூழ்நிலையின் தீவிரத்தை ஆரம்பத்திலேயே முன்னுணர்ந்ததை வலியுடன் வியந்து கொள்கிறார்.

புலம்பெயர்கையிலும் அவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்பா பெரிய தொழிலதிபர், ஹோட்டலொன்றும் நடாத்தி வருபவர். ஆனால், தனது சொத்துக்களையெல்லாம் கைவிட்டு வெறுங்கையோடு நாட்டைவிட்டு வெளியேற நேர்கிறது. பணமாக மாற்றிக் கையில் கொண்டுசெல்லவும் அரசாங்கம் தடைவிதித்ததுடன், ஒருவர் குறிப்பிட்டளவு பணம் மட்டுமே கையில் கொண்டுசெல்லலாமெனவும் சட்டமியற்றியிருந்தது. அனைத்தையும் கடந்து, பயணிப்பதற்கு முதல்நாள் ஷெகானைச் சந்தித்துவிட்டு வரும்வழியில் எரிந்து சேதமாகிக் கிடந்த தனது வீட்டைப் பார்க்கச் செல்கிறான் அர்ஜி. பெரும்பகுதி தீயில் கருகிக்கிடக்க, எரியாதிருந்த அனைத்துமே களவாடப்பட்டு வீடு நிர்வாணமாய் நின்றுகொண்டிருந்தது. பிறந்ததிலிருந்து இத்தனைகாலம் வாழ்ந்த அவ்வீட்டின் நிலை அவனைக் கதறச் செய்கிறது.

How naked the house appeared without its door and windows, how hollow and barren with only scraps of paper and other debris in its rooms. I felt hot, angry tears begin to well up in me as I saw this final violation. Then for the first time, I began to cry for our house. I sat on the verandah steps and wept for the loss of my home, for the loss of everything that I held to be precious. I tried to muffle the sound of my weeping, but my voice cried out loudly as if it were the only weapon I had against those who had destroyed my life.
(pg.311)

ஷ்யாம் செல்வதுரை முன்வைக்கும் அரசியல், சாதாரண மக்களுள் ஒருவராக நின்று நிகழ்வுகளை விமர்சிப்பதாலேயே அதிக கவனிப்புக்குரியதாகிறது.


3.

Sometimes I wonder if it was all worth it in the end. To have made all those sacrifices. Life is a funny thing, you know. It goes on, whatever decisions you make. Whether you married the person you loved or not seems to become less important as time passes.
(pg.81)

சுவாரசியமான கதாபாத்திரமாக இடைநடுவே வருபவர் Aunty Doris - ராதா மாமி நடிக்கும் 'The Kind and I' நாடகத்தை நெறியாள்கை செய்யும் Burgher சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை. தமிழரொருவரைத் திருமணம் முடித்து தற்போது கணவனையிழந்து வயதாகிவிட்ட நிலையில் இத்தகைய நாடக நெறியாள்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ள இவர் திருமணங்கள் குறித்து முன்வைக்கும் கருத்து குறிப்பிடத்தகுந்தது.

தமிழரொருவரை விரும்பித் திருமணம் முடித்ததால் Aunty Doris ன் அப்பா கடுங்கோபங்கொண்டு மகளுடனான தொடர்புகளை முறித்துக்கொள்ளுமாறு குடும்பத்தினரையும் நிர்ப்பந்திக்கிறார். சில காலங்களில் குடும்பத்தினர் அனைவரும் சொல்லிக்கொள்ளாமலேயே இங்கிலாந்துக்குச் சென்றுவிட, அம்மா இறந்ததைக்கூட நண்பரொருவரின் வாயிலாகவே Aunty Doris அறிந்துகொள்ள நேர்கிறது. அப்பா இறந்ததன் பிற்பாடு தனது சகோதரிகளுடன் அவரால் தொடர்புகொள்ள முடிந்தாலும், காலம் அவர்களை அந்நியர்களாக்கி விட்டமையால் முன்புபோல் நெருக்கமாகப் பழக முடியாத தனது இயலாமையையும் நொந்துகொள்கிறார். கணவரும் இறந்துவிட, வயதான காலத்தில் தனியே இருக்கும்போது, நானும் அவர்களுடன் இங்கிலாந்துக்குச் சென்றிருந்திருக்கலாமோ, இருந்தால் எனது வாழ்க்கை இன்று வேறுவிதமாக இருந்திருக்குமென்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது அவருக்கு. காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தும் இறுதியில் அவை பெறுமதியானவையா என்ற சந்தேகமும் எழுகிறது. காலப்போக்கில், நாங்கள் திருமணம் முடித்தது நாம் விரும்பியவரையா, இல்லையா என்பது முக்கியமற்றதாகவே போய்விடுமென்ற அவரது கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதே.

திருமணம் பற்றியதை விடுத்துப் பார்த்தால், இக்கதாபாத்திரத்தினூடாக மிகக் கூர்மையான அரசியல் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.


4.

இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய பாடப்பரப்பில் Funny Boy ஒரு Text book ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை - அதன் அரசியலைக் கருத்திற்கொண்டு நோக்கின் - அதிசயம்தான். அண்மைய இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு நடந்தது, அவர்கள் நடாத்தப்பட்ட விதம் அனைத்தையும் அறிந்துகொள்வதற்கான ஒரு புனைவியல் (முழுக்க முழுக்கப் புனைவல்லாத போதும்) சாட்சியமாக இதனைக் கொள்ளலாம்.

The araliya tree was bare of its flowers. They, too, must have been stolen. I was struck then by a bitter irony. These araliya flowers would probably be offered to some god as a pooja by the very people who had plucked them, in order to increase their chances of a better life in the next birth.
(pg.311)


குருடராய், செவிடராய், ஊமையாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் இதனை விடவும் அழகாக அதிகார மையங்களை, அதன் நியாய அநியாயங்களை, சமூகத்தின் முரண்நகைகளைக் கேள்விக்குட்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது.